என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- தினக்கூலி அடிப்படையிலும், தற்காலிக அடிப்படையிலும் நியமிக்கப்பட்டவர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று பல்வேறு தீர்ப்புகளில் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
- கவுரவ ஆசிரியர்களாக பணியாற்றும் 292 பேரும் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசின் பள்ளிக்கல்வித்துறையில் கவுரவ விரிவுரையாளர்கள், கவுரவ பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பால சேவிகா ஆசிரியர்களாக பணியாற்றி வரும் 292 பேர் தங்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்குக் கூட புதுவை அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது. அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டு, இட ஒதுக்கீட்டு முறைகளை பின்பற்றி, முறையான ஆள்சேர்ப்பு விதிகளின்படி ஒப்பந்த அடிப்படையிலும், தினக்கூலி அடிப்படையிலும், தற்காலிக அடிப்படையிலும் நியமிக்கப்பட்டவர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று பல்வேறு தீர்ப்புகளில் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
கவுரவ ஆசிரியர்களாக பணியாற்றும் 292 பேரும் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள். 292 கவுரவ ஆசிரியர்களையும் பணி நிலைப்பு செய்ய புதுவை அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- வனச்சரகர் வெளியிட்ட தடை உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்.
- அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 4-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மதுரை:
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி கே.குணசீலன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல் அடுத்த கன்னிவாடி மலை வடக்கு கிராமத்தில் 93 ஏக்கர் பட்டா நிலம் வைத்துள்ளேன். இதில் 53 ஏக்கரில் 'நிலம் வைத்து' இயற்கை விவசாயப் பண்ணை அமைத்து, தென்னை, அவகேடோ மற்றும் ஜாதிக்காய் போன்ற பயிர்களைச் சாகுபடி செய்து வருகிறேன்.
இந்நிலையில் நிலச்சரிவைத் தடுக்கவும், மழைநீரைச் சேமிக்கவும் தனது பட்டா நிலத்திலேயே அணை கட்ட மாவட்ட கலெக்டர் மற்றும் வேளாண் பொறியியல் துறையிடம் உரிய அனுமதி பெற்று, சுமார் 2 கோடி ரூபாய் செலவில் பணிகளை முடித்தேன். கடந்த டிசம்பர் மாதம் பண்ணைக்கு ஒரு முக்கிய நபர் வந்து சென்ற பிறகு, கன்னிவாடி வனச்சரகர் மற்றும் வனவர் ஆகியோரின் அணுகுமுறை மாறியது. அவர்கள் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், விவசாயப் பணிகளைத் தடுக்கப் போவதாக மிரட்டினர்.
எந்திரங்களைப் பயன்படுத்துவதால் யானைகள் ஊருக்குள் வருவதாக வனத்துறையினர் கூறுவது முற்றிலும் பொய், அந்தப் பகுதியில் யானைகளே இல்லை. மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்த பிறகும், வனச்சரகர் பணிகளை நிறுத்தச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியது சட்டவிரோதமானது.
எனவே வனச்சரகர் வெளியிட்ட தடை உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும். விவசாயப் பணிகளை மேற்கொள்ளவும், வனப்பகுதி வழியாகச் செல்லும் பாதையைப் பயன்படுத்தவும் வனத்துறையினர் இடையூறு செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இந்த வழக்கில் மனுதாரருக்கும் வனத்துறைக்கும் இடையே தகராறு உள்ளதாக தெரிகிறது. இருந்தாலும், ஏற்கனவே கட்டப்பட்ட அணையை எக்காரணம் கொண்டும் இடிக்கக்கூடாது. ஒருவேளை வனத்துறை அந்த அணையைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்தாலும், அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும். ஏனெனில், அந்த அணை வனவிலங்குகள் தண்ணீர் குடிக்கப் பயனுள்ளதாக இருக்கும்.
வனச்சரகர் பிறப்பித்த நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அணை ஏதேனும் இடிக்கப்பட்டிருந்தால், அதனை உடனடியாக வனத்துறையே மீண்டும் கட்டித்தர வேண்டும். இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 4-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
- தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
நாளை தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
5-ந்தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதற்கிடையே இன்று முதல் 5-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
6 மற்றும் 7-ந்தேதிகளில் உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 1-2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- நியாய விலைக்கடைகளை முதலமைச்சர் திறந்து வைத்து, அப்பகுதி மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
சென்னை:
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம், ஜெகநாதன் தெருவில் 11.74 கோடி ரூபாய் செலவில் தரைதளம் மற்றும் நான்கு தளங்களுடன் 21,850 சதுர அடி கட்டடப் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இம்மையத்தின் தரைத் தளத்தில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகனங்கள் நிறுத்தும் வசதிகள், வரவேற்பு அறை, மின்தூக்கி லாபி, 5 சிந்தாமணி நியாய விலைக் கடைகள் மற்றும் 1 அமுதம் நியாய விலைக் கடை என 6 நியாய விலைக் கடைகள், சாய்வுதளம், மின் தூக்கி (பயணிகள் மற்றும் ஸ்ட்ரெச்சர் வசதியுடன்) மற்றும் கழிப்பறை வசதிகள்.
முதல் தளத்தில் பிசியோதெரபி, உடற்பயிற்சி வசதிகள், எலெக்ட்ரோதெரபி அறைகள், அல்ட்ரா சவுண்ட் பிரிவு, உடற்சிகிச்சைக்கான வசதிகள், காத்திருப்பு அறை, மின்தூக்கி மற்றும் கழிப்பறை வசதிகள்;
2-ம் தளத்தில் செயற்கை மூட்டு (கை,கால்) மையம், மின் தூக்கி மற்றும் கழிப்பறை வசதிகள்;
3-ம் தளத்தில் டயாலிசிஸ் சிகிச்சைக்கான அத்தியாவசிய வசதிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், நோயாளிகள் சிகிச்சைக்கான 15 படுக்கை வசதிகள், மின் தூக்கி மற்றும் கழிப்பறைகள்;
4-ம் தளத்தில் மருத்துவ ஆலோசனை அறைகள், நோயாளிகள் காத்திருப்பு அறை, பணியாளர்கள் உடைமாற்றும் அறை, உணவு அருந்தும் இடம், மின்தூக்கி மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அகரம், ஜெகநாதன் தெருவில் கட்டப்பட்டுள்ள கொளத்தூர் ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மைய வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள 6 நியாய விலைக் கடைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, அப்பகுதி மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
கொளத்தூர், ரெட்டேரி சந்திப்பு அருகில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.4.98 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு உள்ள கொளத்தூர் ஏரிக்கரை பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இப்பூங்காவில் நடைபாதை வசதி, குழந்தைகள் விளையாடும் இடம், இசை பூங்கா, இருக்கை வசதிகள், அமரும் படிக்கட்டுகள், ஒப்பனை அறை, நவீன கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள், கண்காணிப்பு அறை, மின் அறை மற்றும் ஊஞ்சல் இருக்கைகள் போன்ற பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன.
வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை சந்திப்பு, எஸ்.ஆர்.பி காலனி 8-வது தெருவில் 39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 310 திறந்தவெளி மின் மாற்றி கட்டமைப்புகளை, பாதுகாப்பான வளைதள மின் மாற்றிகளாக மாற்றி அமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.
முன்னதாக, ஜவகர் நகரில் உள்ள கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, கல்வி உபகரண பொருட்கள், மடிக்கணினிகள், பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, மாவு அரவை எந்திரங்கள், சலவை பெட்டிகள், காதொலி கருவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை 248 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- எதிரிகள் யார் துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.
- ஒவ்வொரு குடும்பத்தினரும் தமிழக மக்களும் அம்மாவின் ஆட்சி எப்படி இருந்தது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் சசிகலா இன்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள் துரோகிகளையும் எதிரிகளையும் வீழ்த்தி சசிகலா தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர்.
இது தொடர்பாகவும் சட்டமன்றத் தேர்தலை தனிக்கட்சி தொடங்கி சந்திக்க போகிறீர்களா? என்பது பற்றி நிருபர்கள் அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
எதிரிகள் யார் துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். இது பற்றி நான் தெளிவாக சொல்ல வேண்டியதில்லை. வருகிற சட்டமன்றத்தேர்தலில் எனது தலைமையில் நிச்சயம் அம்மா ஆட்சியை அமைப்போம். அது எப்படி நடக்கும் என்பதை நீங்களே விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என்றார்.
இதனிடையே அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என்று நடிகர் விஜய் விமர்சித்துள்ளாரே என்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, அ.தி.மு.க. ஆட்சி எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு குடும்பத்தினரும் தமிழக மக்களும் அம்மாவின் ஆட்சி எப்படி இருந்தது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். எனவேதான் இப்போதும் அம்மா ஆட்சி மீண்டும் மலரும் என்று அனைவரும் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இணைந்திருப்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு முடிவு இருக்கும். அதன் அடிப்படையில் அவர்கள் செயல்பட்டு இருப்பார்கள். அது பற்றி எல்லாம் எப்படி கருத்து தெரிவிக்க முடியும் என்றார்.
- கல்லூரி பஸ் இன்று காலை 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் சோளிங்கர்-வாலாஜா சாலையில் வந்தது.
- தகவல் அறிந்த கொண்டபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
புலிவலம்:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி பஸ் இன்று காலை 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் சோளிங்கர்-வாலாஜா சாலையில் வந்தது.
பெருங்காஞ்சி ஏரிக்கரை பகுதியில் வந்தபோது எதிரே வந்த தனியார் நிறுவனத்தின் லாரி கட்டுப்பாட்டை இழந்து கல்லூரி பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் கல்லூரி பஸ்சில் வந்த மாணவிகள், 2 டிரைவர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கொண்டபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- விஜய்யின் பேச்சை பார்த்து அ.தி.மு.க.வினர் ஏமாற மாட்டார்கள்.
- தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாகவே தி.மு.க. ஆட்சி உள்ளது.
சென்னை:
அண்ணா நினைவிடத்தில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
த.வெ.க. தலைவர் விஜய் அ.தி.மு.க. தலைவர்களான எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் ரோல் மாடல் என்று கூறிக்கொண்டு அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என்று விமர்சிக்கிறார்.
இது பற்றி அவரது கட்சியில் சேர்ந்து உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் அவர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். 1988-ம் ஆண்டு அ.தி.மு.க. பிளவுபட்ட போது 1989-ம் ஆண்டு தேர்தலில் எங்கள் வாக்குகள் ஜெயலலிதா அணிக்கும் ஜானகி அணிக்கும் தான் சென்றது.
இப்போதும் அ.தி.மு.க. வாக்குகள் என்றும் எங்களுக்குதான் கிடைக்கும். விஜய் நினைப்பதை போல அவருக்கு கிடைக்காது. விஜய்யின் பேச்சை பார்த்து அ.தி.மு.க.வினர் ஏமாற மாட்டார்கள். தேர்தலுக்குப் பிறகு எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரை அமைச்சர்களாக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதே நேரத்தில் அதற்காக எந்த அழுத்தமும் கொடுக்கப்போவது இல்லை.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் எனது அருமை அண்ணன்தான். எடப்பாடி பழனிசாமி எப்படி எனக்கு அருமை அண்ணனோ அதே போன்று தான் ஓ.பன்னீர் செல்வமும். செங்கோட்டையன் கூட எனக்கு அருமை அண்ணன் தான்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாகவே தி.மு.க. ஆட்சி உள்ளது. தமிழகம் கஞ்சா சந்தையாக விளங்கி வருகிறது. போதை பொருள் புழக்கம் பட்டி தொட்டி எங்கும் இருக்கிறது. யாருக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
வருகிற தேர்தலில் உறுதியாக தி.மு.க. ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி முடிவுக்கு கொண்டு வரும். தி.மு.க. ஆட்சி மீது மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளார்கள். தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் முடிவு செய்து விட்டார்கள். அதனால் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என தி.மு.க.வினர் எண்ணுகிறார்கள்.
காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறதா? இல்லையா? என்பதே தெளிவாக தெரியவில்லை. ஆனால் தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளதை போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.
எங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை எல்லாம் மறந்துவிட்டு தி.மு.க.வை வீழ்த்தவே அனைவரும் ஒன்றிணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் முழு மனதுடன் இணைந்துள்ளோம்.
விஜய் தி.மு.க.வை வீழ்த்தும் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். விஜய் எங்களுக்கு எதிரி அல்ல. எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான்.
தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பது தான் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் எங்களுக்கும் சொல்லி கொடுத்த பாடம். அதை தான் நாங்கள் செயல்படுத்த உள்ளோம்.
இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல. ஜெயலலிதா ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்றார்.
- பள்ளிக் குழந்தைகள் இப்படி போதையில் மூழ்கித் தடம் புரள்வதைக் கண்டும் காணாமல் கடந்து போவது அலட்சியத்தின் உச்சம்.
- இப்படிப்பட்ட ஒரு சுயநல ஆட்சியை அகற்றினால் மட்டுமே தமிழகம் நிம்மதிப் பெருமூச்சு விடும்!
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை வியாசர்பாடியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்கு கஞ்சா எடுத்துச் சென்ற சம்பவம் இந்த போதை மாடல் அரசின் அவல ஆட்சிக்கான உதாரணம். பள்ளி மாணவர்கள் கைகளில் கஞ்சாவும், பைகளில் பட்டாக் கத்தியும் புழங்கும் நிலையில், "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்று விளம்பர விழா எடுக்க தி.மு.க. அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
"அப்பா" என்ற அடைமொழிக்கு ஆசைப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது கண்முன்னே பள்ளிக் குழந்தைகள் இப்படி போதையில் மூழ்கித் தடம் புரள்வதைக் கண்டும் காணாமல் கடந்து போவது அலட்சியத்தின் உச்சம். "அரசுப்பள்ளி எனது கோட்டை" என்று முழங்கிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அரசுப்பள்ளிகளில் இத்தனை அக்கிரமங்கள் நடக்கையில் எங்கே போனார் என்ன ஆனார் என்று தெரியவில்லை.
பதின்ம வயது பள்ளி மாணவனுக்கு கூட கஞ்சா விற்கப்படுகிறது என்றால் திமுகவின் ஏவல்துறை எந்தளவிற்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வேண்டும்? தங்களின் அவல ஆட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீதும் தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடுபவர்கள் மீதும் பொய் வழக்கு போடுவதில் மட்டுமே திமுக அரசு அதீத கவனம் செலுத்திக் கொண்டிருந்தால், நமது சமூகக் கட்டமைப்பை அரித்துக் கொண்டிருக்கும் போதைப் பொருட்களை எப்படி ஒழிக்க முடியும்? இப்படிப்பட்ட ஒரு சுயநல ஆட்சியை அகற்றினால் மட்டுமே தமிழகம் நிம்மதிப் பெருமூச்சு விடும்! என்று கூறியுள்ளார்.
- செஞ்சி அருகே பாக்கம்-கெங்கவரம் காப்புக்காடு 1897-ம் ஆண்டு காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது.
- அழிந்துவரும் வனவிலங்குகளையும், இயற்கையையும் பாதுகாக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பாக்கம்-கெங்கவரம் காப்புக்காடு 1897-ம் ஆண்டு காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது. இக்காடு கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு கொண்ட இக்காட்டில் சிறுத்தை, கரடி, அரியவகை சிலந்திகள், அழிந்துவரும் நிலையில் உள்ள பாம்புகள், பெரிய அணில், லங்கூர் குரங்குகள், எறும்பு திண்ணி, தங்கப்பல்லி, புல்புல் ரேசர் ஸ்னேக் என்கிற அரியவகை பாம்பு, 15 குடும்பங்களைச் சேர்ந்த 56 வகை பாம்புகள், தவளைகள், தேரைகள் உள்ளது என்று உள்நாட்டு பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்துள்ளது.
எனவே நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து பேசி முடிவெடுத்து வருகின்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பாக்கம்-கெங்கவரம் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும் என அறிவித்து அழிந்துவரும் வனவிலங்குகளையும், இயற்கையையும் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
- கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்தவர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கி அனுமதிக்கப்படுகின்றனர்.
- கடந்த டிசம்பர் 27-ந்தேதி முதல் ஜனவரி மாதம் வரை சுமார் 25 ஆயிரம் பேர் விக்டோரியா பொது அரங்கை பார்வையிட்டுள்ளனர்.
சென்னை:
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் விக்டோரியா மகால் அமைக்கப்பட்டது. கடந்த 1883-ம் ஆண்டு சீன செராமிக் கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த அரங்கம் தற்போது ரூ.32.62 கோடியில் அரசால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா மகாலை பொதுமக்கள் பார்ப்பதற்கு தனி இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்து பொதுமக்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு ஸ்லாட் இருக்கும் வகையில் 60 பேர் அனுமதிக்கப்படுகிறார்கள். முன்பதிவு செய்யாமல் வருவோரும் மகாலை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. கியூ.ஆர்.கோடு மூலம் பெயர் பதிவு செய்யும் வசதி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்தவர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கி அனுமதிக்கப்படுகின்றனர்.
கடந்த டிசம்பர் 27-ந்தேதி முதல் ஜனவரி மாதம் வரை சுமார் 25 ஆயிரம் பேர் விக்டோரியா பொது அரங்கை பார்வையிட்டுள்ளனர்.
தற்போது பொதுமக்கள் காத்திருந்து பார்க்கக்கூடிய சூழல் நிலவி வருவதால் காத்திருப்பு அறை புதிதாக கட்டப்பட்டுள்ளது. மழை, வெயில் பாதிப்பு இல்லாமல் பார்வையாளர்கள் அரங்கிற்கு செல்வதற்கு முன்னதாக குளு குளு வசதியுடன் கூடிய காத்திருப்பு அறையில் தங்க வைக்கப்படுகின்றனர். இந்த நவீன காத்திருப்போர் அறை 4 அமைக்கப்பட்டு இருப்பதால் அங்கு வரக்கூடிய பார்வையாளர்கள் அதில் சிறிது நேரம் தங்க வைக்கப்படுகின்றனர். ஒரு அறையில் 20 பேர் வரை அமரலாம். இந்த வசதியை பொதுமக்கள் வரவேற்று இருப்பதோடு வெயில் மற்றும் மழையில் இருந்து விலகி பாதுகாப்பாக காத்திருந்து செல்வதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக பாராட்டுகின்றனர்.
கோவை:
தமிழ்நாட்டில் பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்ற பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் 72 பேர் நியமிக்கப்பட்டனர்.
இதில் பா.ஜ.க. முன்னாள் தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலைக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிங்காநல்லூர், மதுரை தெற்கு, காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கு அண்ணாமலை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் அந்த தேர்தல் பொறுப்பாளர் பணிகளை தன்னால் நிறைவேற்ற முடியாது என அண்ணாமலை அறிவித்துள்ளார். தந்தையின் உடல்நிலை காரணமாக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.
இதுதொடர்பாக அண்ணாமலை கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவீர்களா என கேட்கிறீர்கள். தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார்நாகேந்திரனிடம் நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன். எனது தந்தையின் உடல் நிலை காரணமாக அவரை பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதனால் தான் தற்போது கோவை பகுதியில் உள்ளேன். எனது தந்தை டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ளார். அவரை பார்த்துக் கொள்ள வேண்டும். அது எனது முதல் கடமை. அதனால் தற்போது தேர்தல் அடிப்படை வேலைகள் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே அதிக தூரம் பயணம் செய்ய முடியாது என வேண்டுகோள் வைத்துள்ளேன். கட்சியும் அதை ஏற்றுக்கொண்டு வேறு, வேறு பொறுப்பாளர்களை நியமிப்பார்கள்.
அதேசமயம் பா.ஜ.க., அடுத்தடுத்த பிரசாரத்துக்கு வேறு என்ன சொல்கிறார்களோ அதற்கு தயாராக இருக்கிறேன். கட்சிக்கு என்ன வேலை செய்ய வேண்டும். கூட்டணிக்கு என்ன வேலை செய்ய வேண்டும். இங்கு இருக்கும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு என்ன வேலை செய்ய வேண்டும். அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் என்ன வேலை செய்ய வேண்டும் என்று கட்சி சொல்கிறதோ அந்த வேலையை செய்வேன். இப்போதைக்கு அதிகம் பயணம் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது.
அதனையும் கட்சியும் புரிந்து கொண்டது. நான் தேர்தலில் நிற்கவேண்டுமா, வேலை செய்ய வேண்டுமா என்பதை கட்சி சொன்னால் அதன்பிறகு பேசுகிறேன். சிங்காநல்லூர் தொகுதிக்கு வேறு ஒரு பொறுப்பாளரை கட்சி நியமிக்கும். வேறு ஒரு தலைவர்கள் வருவார்கள். 6 தொகுதிகளுக்கும் வேறு பொறுப்பாளர்கள் வருவார்கள். அதற்கான காலமும், சூழ்நிலையும் நிறைய இருக்கிறது.
கோவையில் பா.ஜ.க.வுக்கு ஒரு எம்.எல்.ஏ. உள்ளார். அவர் மீண்டும் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்ல வேண்டும். அதேபோன்று கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அதிகளவில் வெற்றி பெற்று மெஜாரிட்டியுடன் சட்டசபைக்கு செல்ல வேண்டும். அதற்குரிய பணிகளில் ஒரு தொண்டராக ஈடுபடுவேன்.
விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அதனை வரவேற்கிறோம். என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அதற்கு இ.வி.எம். எந்திரம் பதில் சொல்லும். ஆனால் விஜய்யிடம் என்ஜின் இருக்கிறதா என்று தெரியவில்லையே. எங்களிடம் என்ஜின் இருக்கிறது. டபுள் என்ஜின் இருக்கிறது. விஜய்யிடம் என்ஜின் இருக்கிறதா, கார்ப்பரேட்டர் இருக்கிறதா? அந்த என்ஜினை ஸ்டார்ட் பண்றதுக்கு ஆள் இருக்கிறதா? வண்டி இல்லை, என்ஜின் இல்லை, அதற்கு போட பெட்ரோல் இல்லை, டீசல் இல்லை. எனவே விஜய் என்ஜினை பற்றி பேசக்கூடாது.
தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை சந்திக்கிறது. அந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தலைமையில் களத்துக்கு செல்கிறோம். இதனை எங்கள் தலைவர்கள் முடிவு செய்து விட்டனர். பிரசாரமும் தொடங்கி விட்டது. தொண்டர்கள் வீதி, வீதியாகச் சென்று பணியாற்றி வருகிறார்கள். ஆனால் விஜய் பேச்சு மக்களை சிந்திக்க வைக்கும் வகையில், அர்த்தங்கள் நிறைந்ததாக இல்லை. விசிலுக்காகவும், கைதட்டலுக்காக மட்டுமே அவர் அப்படி பேசி வருகிறார்.
நாட்டின் வளர்ச்சியை கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே பட்ஜெட்டின் நோக்கம் ஆகும் என்றார்.
அண்ணாமலை பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகிக் கொண்டது பா.ஜ.க.வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 6 தொகுதிகளில் மட்டுமே தான் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது அண்ணாமலைக்கு மன வருத்தத்தை தந்ததாகவும், அதனாலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- எங்களை பொறுத்தவரை விஜய் அரசியல்வாதியே கிடையாது.
- 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி எங்கே சென்றார் என தெரியவில்லை.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் பேரறிஞர் அண்ணா நினைவுதினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக மீண்டும் அமர்வார். பனையூரில் இருந்து அரசியல் செய்யும் விஜய் வெளியே வர வேண்டும். இந்த அரசியல் வெகு நாட்களுக்கு எடுபடாது. சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் அரசியல் செய்ய முடியாது. எல்லா அரசியலையும் பார்த்து விட்டோம். இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். தி.மு.க.வுக்கு 70 சதவீத மக்கள் ஆதரவு உள்ளது. திருக்குறளை மாற்றிக்கூறி விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது.
அரசியல் ரீதியாக விமர்சனம் செய்தால் நாங்களும் விமர்சனம் செய்வோம். தி.மு.க.வை முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி வளர்த்ததைப் போல தற்போது மு.க.ஸ்டாலினும் வளர்த்து வருகிறார். எங்களை பொறுத்தவரை விஜய் அரசியல்வாதியே கிடையாது. அவரை மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள்.
கரூரில் 41 பேர் கூட்ட நெரிசலில் தண்ணீர் இல்லாமல் இறந்து விட்டனர். அவர்கள் துக்கத்தில் கலந்துகொள்ள மனமில்லை. இவர் எவ்வாறு 7 கோடி மக்களை காப்பாற்றுவார்? ஏதோ நடித்துப்பார்க்கிறார். டான்ஸ் ஆடிப்பார்க்கிறார். இந்த டான்ஸ், டப்பாங்குத்து நம்ம ஊரிலும் ஆடலாம். இது எப்படி அரசியல் தலைவருக்கு அழகாகும்.
கூட்டணி கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்பது அவர்களின் உரிமை. வெற்றி வாய்ப்பை பொறுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதிகளை ஜனநாயக ரீதியில் வழங்குவார். கனிமொழி எம்.பி. ராகுல் காந்தியிடம் கெஞ்சுவதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். நாங்கள் பல ஆண்டுகளாக ஒரே அணியில் நீடித்து வருகிறோம். இந்த கூட்டணிதான் வருகிற தேர்தலில் மாபெரும் வெற்றி பெறப் போகிறது. சட்டமன்ற தேர்தலைத் தொடர்ந்து நடைபெறும் பஞ்சாயத்து தேர்தல், பாராளுமன்ற தேர்தல் ஆகிய அனைத்திலும் தி.மு.க. கூட்டணியே வெற்றிபெறும். 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி எங்கே சென்றார் என தெரியவில்லை. தற்போதுதான் அவர் மக்களை சந்தித்து வருகிறார். ஆனால் மக்கள் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைவாரா என்பது குறித்து எனக்கு தெரியாது. அவர் தி.மு.க.வுக்கு வந்தால் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்.
அண்ணாமலை திடீர் திடீர் என ஏதாவது ஒரு கருத்தை வெளியிடுவார். தற்போது பழனியில் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக கூறியுள்ளார். பழனிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






