41 பேரை காப்பாற்ற முடியாத விஜய் 7 கோடி மக்களை எவ்வாறு காப்பாற்றுவார்? - அமைச்சர் பெரியசாமி

எங்களை பொறுத்தவரை விஜய் அரசியல்வாதியே கிடையாது. 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி எங்கே சென்றார் என தெரியவில்லை.
41 பேரை காப்பாற்ற முடியாத விஜய் 7 கோடி மக்களை எவ்வாறு காப்பாற்றுவார்? - அமைச்சர் பெரியசாமி
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் பேரறிஞர் அண்ணா நினைவுதினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக மீண்டும் அமர்வார். பனையூரில் இருந்து அரசியல் செய்யும் விஜய் வெளியே வர வேண்டும். இந்த அரசியல் வெகு நாட்களுக்கு எடுபடாது. சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் அரசியல் செய்ய முடியாது. எல்லா அரசியலையும் பார்த்து விட்டோம். இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். தி.மு.க.வுக்கு 70 சதவீத மக்கள் ஆதரவு உள்ளது. திருக்குறளை மாற்றிக்கூறி விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது.

அரசியல் ரீதியாக விமர்சனம் செய்தால் நாங்களும் விமர்சனம் செய்வோம். தி.மு.க.வை முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி வளர்த்ததைப் போல தற்போது மு.க.ஸ்டாலினும் வளர்த்து வருகிறார். எங்களை பொறுத்தவரை விஜய் அரசியல்வாதியே கிடையாது. அவரை மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள்.

கரூரில் 41 பேர் கூட்ட நெரிசலில் தண்ணீர் இல்லாமல் இறந்து விட்டனர். அவர்கள் துக்கத்தில் கலந்துகொள்ள மனமில்லை. இவர் எவ்வாறு 7 கோடி மக்களை காப்பாற்றுவார்? ஏதோ நடித்துப்பார்க்கிறார். டான்ஸ் ஆடிப்பார்க்கிறார். இந்த டான்ஸ், டப்பாங்குத்து நம்ம ஊரிலும் ஆடலாம். இது எப்படி அரசியல் தலைவருக்கு அழகாகும்.

கூட்டணி கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்பது அவர்களின் உரிமை. வெற்றி வாய்ப்பை பொறுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதிகளை ஜனநாயக ரீதியில் வழங்குவார். கனிமொழி எம்.பி. ராகுல் காந்தியிடம் கெஞ்சுவதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். நாங்கள் பல ஆண்டுகளாக ஒரே அணியில் நீடித்து வருகிறோம். இந்த கூட்டணிதான் வருகிற தேர்தலில் மாபெரும் வெற்றி பெறப் போகிறது. சட்டமன்ற தேர்தலைத் தொடர்ந்து நடைபெறும் பஞ்சாயத்து தேர்தல், பாராளுமன்ற தேர்தல் ஆகிய அனைத்திலும் தி.மு.க. கூட்டணியே வெற்றிபெறும். 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி எங்கே சென்றார் என தெரியவில்லை. தற்போதுதான் அவர் மக்களை சந்தித்து வருகிறார். ஆனால் மக்கள் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைவாரா என்பது குறித்து எனக்கு தெரியாது. அவர் தி.மு.க.வுக்கு வந்தால் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்.

அண்ணாமலை திடீர் திடீர் என ஏதாவது ஒரு கருத்தை வெளியிடுவார். தற்போது பழனியில் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக கூறியுள்ளார். பழனிக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com