என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலக காரணம் என்ன?
கோவை:
தமிழ்நாட்டில் பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்ற பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் 72 பேர் நியமிக்கப்பட்டனர்.
இதில் பா.ஜ.க. முன்னாள் தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலைக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிங்காநல்லூர், மதுரை தெற்கு, காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கு அண்ணாமலை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் அந்த தேர்தல் பொறுப்பாளர் பணிகளை தன்னால் நிறைவேற்ற முடியாது என அண்ணாமலை அறிவித்துள்ளார். தந்தையின் உடல்நிலை காரணமாக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.
இதுதொடர்பாக அண்ணாமலை கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவீர்களா என கேட்கிறீர்கள். தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார்நாகேந்திரனிடம் நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன். எனது தந்தையின் உடல் நிலை காரணமாக அவரை பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதனால் தான் தற்போது கோவை பகுதியில் உள்ளேன். எனது தந்தை டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ளார். அவரை பார்த்துக் கொள்ள வேண்டும். அது எனது முதல் கடமை. அதனால் தற்போது தேர்தல் அடிப்படை வேலைகள் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே அதிக தூரம் பயணம் செய்ய முடியாது என வேண்டுகோள் வைத்துள்ளேன். கட்சியும் அதை ஏற்றுக்கொண்டு வேறு, வேறு பொறுப்பாளர்களை நியமிப்பார்கள்.
அதேசமயம் பா.ஜ.க., அடுத்தடுத்த பிரசாரத்துக்கு வேறு என்ன சொல்கிறார்களோ அதற்கு தயாராக இருக்கிறேன். கட்சிக்கு என்ன வேலை செய்ய வேண்டும். கூட்டணிக்கு என்ன வேலை செய்ய வேண்டும். இங்கு இருக்கும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு என்ன வேலை செய்ய வேண்டும். அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் என்ன வேலை செய்ய வேண்டும் என்று கட்சி சொல்கிறதோ அந்த வேலையை செய்வேன். இப்போதைக்கு அதிகம் பயணம் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது.
அதனையும் கட்சியும் புரிந்து கொண்டது. நான் தேர்தலில் நிற்கவேண்டுமா, வேலை செய்ய வேண்டுமா என்பதை கட்சி சொன்னால் அதன்பிறகு பேசுகிறேன். சிங்காநல்லூர் தொகுதிக்கு வேறு ஒரு பொறுப்பாளரை கட்சி நியமிக்கும். வேறு ஒரு தலைவர்கள் வருவார்கள். 6 தொகுதிகளுக்கும் வேறு பொறுப்பாளர்கள் வருவார்கள். அதற்கான காலமும், சூழ்நிலையும் நிறைய இருக்கிறது.
கோவையில் பா.ஜ.க.வுக்கு ஒரு எம்.எல்.ஏ. உள்ளார். அவர் மீண்டும் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்ல வேண்டும். அதேபோன்று கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அதிகளவில் வெற்றி பெற்று மெஜாரிட்டியுடன் சட்டசபைக்கு செல்ல வேண்டும். அதற்குரிய பணிகளில் ஒரு தொண்டராக ஈடுபடுவேன்.
விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அதனை வரவேற்கிறோம். என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அதற்கு இ.வி.எம். எந்திரம் பதில் சொல்லும். ஆனால் விஜய்யிடம் என்ஜின் இருக்கிறதா என்று தெரியவில்லையே. எங்களிடம் என்ஜின் இருக்கிறது. டபுள் என்ஜின் இருக்கிறது. விஜய்யிடம் என்ஜின் இருக்கிறதா, கார்ப்பரேட்டர் இருக்கிறதா? அந்த என்ஜினை ஸ்டார்ட் பண்றதுக்கு ஆள் இருக்கிறதா? வண்டி இல்லை, என்ஜின் இல்லை, அதற்கு போட பெட்ரோல் இல்லை, டீசல் இல்லை. எனவே விஜய் என்ஜினை பற்றி பேசக்கூடாது.
தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை சந்திக்கிறது. அந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தலைமையில் களத்துக்கு செல்கிறோம். இதனை எங்கள் தலைவர்கள் முடிவு செய்து விட்டனர். பிரசாரமும் தொடங்கி விட்டது. தொண்டர்கள் வீதி, வீதியாகச் சென்று பணியாற்றி வருகிறார்கள். ஆனால் விஜய் பேச்சு மக்களை சிந்திக்க வைக்கும் வகையில், அர்த்தங்கள் நிறைந்ததாக இல்லை. விசிலுக்காகவும், கைதட்டலுக்காக மட்டுமே அவர் அப்படி பேசி வருகிறார்.
நாட்டின் வளர்ச்சியை கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே பட்ஜெட்டின் நோக்கம் ஆகும் என்றார்.
அண்ணாமலை பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகிக் கொண்டது பா.ஜ.க.வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 6 தொகுதிகளில் மட்டுமே தான் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது அண்ணாமலைக்கு மன வருத்தத்தை தந்ததாகவும், அதனாலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.






