என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பேட்டிங்க்கும், பந்துவீச்சுக்கும் சம நிலையான போட்டி இருக்க வேண்டும்.
    • சில காலம் கழித்து இந்தியாவில் பந்து வீச இளைஞர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

    இந்திய அணி முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் கடினமாக இருந்துள்ளது. குறிப்பாக தொடரின் முதல் பாதி மிகுந்த சிரமத்தை கொடுத்தது.

    பந்துவீச்சாளர்களை பாதுகாக்க சில மாற்றங்களை செய்ய வேண்டும். இந்தியாவில் இருக்கும் எல்லா மைதானத்தின் எல்லைகளும் அதிகரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மைதானத்திலும் பவுண்டரி எல்லையை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும். முதல் கட்டமாக, பவுண்டரி எல்லையை ஒட்டி அணியினர் அமர்ந்திருக்கும் டக் அவுட்டை நீங்கள் மைதானத்தில் ரசிகர்கள் இருக்கும் பகுதிக்கு நகர்த்தலாம். மேலும் பந்தின் தையல் கொஞ்சம் பெரிதாக இருக்கும் படி பார்த்துக் கொள்வது, பந்தில் கொஞ்சம் அசைவு இருப்பதற்கு உதவி செய்யும். பேட்டிங்க்கும், பந்துவீச்சுக்கும் சம நிலையான போட்டி இருக்க வேண்டும். எனவே இத்தகைய மாற்றங்களை செய்தாக வேண்டும். இல்லையென்றால் சில காலம் கழித்து இந்தியாவில் பந்து வீச இளைஞர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். 20 ஓவர் உலகக்கோப்பையில் அயர்லாந்துக்கு எதிரான இந்தியாவின் முதல் ஆட்டத்தில் எந்த சுழற்பந்து வீச்சாளர் இடம் பெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் குல்தீப் யாதவ் நிச்சயம் இருப்பார். குல்தீப் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் என்பதால் இந்தியாவின் நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளராக இருப்பார் என்று நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
    • சென்னை அணியின் பந்து வீச்சு முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்.

    பெங்களூரு:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் கடந்த மார்ச் 22-ந்தேதி சென்னையில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இப்போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இதுவரை 66 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சி உள்ள உள்ளன.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முன்னேறியது.

    நேற்று ஐதராபாத்-குஜராத் அணிகள் மோத இருந்த ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஐதராபாத் 3-வது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    பிளே-ஆப் சுற்றுக்கு 4-வது அணியாக தகுதி பெறப் போவது யார்? என்பது நாளை தெரியும். பெங்களூருவில் நாளை நடக்கும் 68-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    14 புள்ளிகளுடன் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலும் சென்னை அணி தகுதி பெற்று விடும்.

    ஒருவேளை தோற்கும்பட்சத்தில் அது மோசமான தோல்வியாக இருக்கக் கூடாது. இது போன்ற சூழ்நிலையை தவிர்க்க வெற்றி பெற வேண்டியது சென்னை அணிக்கு கட்டாயம்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பலமாக இருக்கிறது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், டேரில் மிட்செல், ஷிவம் துபே ஆகியோர் உள்ளனர். ஆல்-ரவுண்டர் ஜடேஜா நல்ல நிலையில் உள்ளார். கடைசி கட்டத்தில் டோனி அதிரடியாக விளையாடுகிறார்.

    சென்னை அணியின் பந்து வீச்சு முன்னேற்றம் காண வேண்டியது அவசியம். பதிரனா, முஸ்தாபிசுர் ரகுமான் ஆகியோர் இல்லாதது பாதிப்பை காட்டுகிறது. எனவே பந்து வீச்சில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது முக்கியம்.

    பெங்களூரு அணி 12 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு நாளைய போட்டியில் கண்டிப்பாக தகுதி பெற முடியும். தோற்றாலும் அல்லது மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலும் பெங்களூரு அணி வெளியேறி விடும்.

    மேலும் பெங்களூரு அணி வெற்றி பெற்றாலும் சென்னை அணியின் ரன்-ரேட்டை முந்த வேண்டும். பெங்களூரு முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுத்தால், 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் அல்லது 2-வது பேட்டிங் செய்தால் 11 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெல்ல வேண்டும். ஒருவேளை மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டால் பெங்களூரு அணிக்கு கடினமாக அமையும்.

    அந்த அணி தொடர்ந்து 5 வெற்றி பெற்றுள்ளதால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

    பெங்களூரு அணி பேட்டிங்கில் விராட்கோலி நல்ல நிலையில் உள்ளார். அவர் இதுவரை 661 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். மேலும் டுபிளிசிஸ், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் ஆகிய பேட்ஸ் மேன்களும் உள்ளனர்.

    பந்து வீச்சில் முகமது சிராஜ், யஷ் தயாள், பெர்குசன், கரண் சர்மா ஆகியோர் உள்ளனர். பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் சிறிது என்பதால் இரு அணிகளும் ரன்களை குவிக்க முயற்சிக்கும்.

    மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக இழந்து விட்டன. டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளின் வாய்ப்புகள் ஏறக்குறைய முடிந்து விட்டது.

    இன்று மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ வெற்றி பெற்றாலும் அந்த அணியின் ரன்ரேட் (-0.787) மிகவும் மோசமாக இருப்பதால் அந்த வெற்றி பலன் அளிக்காது.

    • களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
    • பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளனர்.

    ரோம்:

    களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் கிரேக்க வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், சிலியின் நிக்கோலஸ் ஜாரி உடன் மோதினார்.

    இதில் சிட்சிபாஸ் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். அவர் 2வது செட்டை 5-7 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் சிட்சிபாஸ் 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    இறுதியில் சிட்சிபாஸ் 6-3, 5-7, 4-6 என்ற புள்ளிக்கணக்கில் நிக்கோலஸ் ஜாரியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

    • முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாட டோனியை போன்று வேறு யாரும் இல்லை.
    • காயத்தில் இருந்து மீண்டு வந்து இருப்பதால் தான் இறுதியில் பேட்டிங் செய்ய வருகிறார்.

    பெங்களூரு:

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹஸ்சி அளித்த ஒரு பேட்டியில், 'டோனி தொடர்ந்து விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம்.

    அவர் தற்போதும் நன்றாக பேட்டிங் செய்து வருகிறார். பயிற்சி முகாமுக்கு முன்னதாகவே வந்து நிறைய பந்துகளை எதிர்கொண்டு தயாராகிறார்.

    கடந்த ஐ.பி.எல். தொடருக்கு பிறகு அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து இருப்பதால் அவரது பணிச் சுமையை சரியாக நிர்வகிக்க வேண்டும். அவர் நடப்பு தொடரில் தொடக்கத்தில் இருந்து உடல் தகுதியை சரியாக கவனித்து விளையாடி வருகிறார்.

    காயத்தில் இருந்து மீண்டு வந்து இருப்பதால் தான் அவர் இறுதி கட்டத்தில் பேட்டிங் செய்ய வருகிறார். முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாட டோனியை போன்று வேறு யாரும் இல்லை என்று நினைக்கிறேன். அவர் தனித்திறமை மிக்க வீரர். அவர் அடுத்த இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவார் என்று நம்புகிறேன்.

    ஆனால் நாம் அதனை காத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இந்த விஷயத்தில் அவர் மட்டுமே முடிவு எடுக்க முடியும். இது குறித்து அவர் உடனடியாக முடிவு எடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை' என்று தெரிவித்தார்.

    • லக்னோ அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் இருக்கிறது.
    • இரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 67-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. 5 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் பெருத்த தடுமாற்றத்தை சந்தித்ததுடன் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை முதல் அணியாக பறிகொடுத்தது.

    அந்த அணி இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 9 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கேப்டன் மாற்றத்தால் வீரர்கள் இடையே ஏற்பட்ட புகைச்சல் அந்த அணியின் சறுக்கலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    மும்பை அணியில் பேட்டிங்கில் திலக் வர்மா (3 அரைசதம் உள்பட 416 ரன்), ரோகித் சர்மா (ஒருசதம் உள்பட 349 ரன்), சூர்யகுமார் யாதவ் (1 சதம், 3 அரைசதம் உள்பட 345 ரன்), இஷான் கிஷன் (306 ரன்), டிம் டேவிட் என்று பெரிய பட்டாளமே அணிவகுத்து நிற்கிறது. பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பியுஷ் சாவ்லா, நுவன் துஷாரா ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.

    லக்னோ அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் (-0.787) மிகவும் பின்தங்கி இருக்கும் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்து விட்டது. லக்னோ தனது கடைசி 3 ஆட்டங்களில் கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி அணிகளிடம் அடுத்தடுத்து வீழ்ந்தது பெருத்த சரிவாக அமைந்தது.

    வெற்றியுடன் விடைபெறுவது யார்?

    லக்னோ அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல் (3 அரைசதத்துடன் 465 ரன்), நிகோலஸ் பூரன் (2 அரைசதத்துடன் 424 ரன்), மார்கஸ் ஸ்டோனிஸ் (1 சதம், 2 அரைசதத்துடன் 360 ரன்), குயின்டான் டி காக்கும், பந்து வீச்சில் நவீன் உல்-ஹக், யாஷ் தாக்குர், மொசின் கான், ரவி பிஷ்னோய், குருணல் பாண்ட்யாவும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் ஆடும் இரு அணிகளும் வெற்றியுடன் விடைபெறுவதுடன், புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காண எல்லா வகையிலும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் லக்னோ 4 ஆட்டங்களிலும், மும்பை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    மும்பை: ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்),நேஹல் வதேரா, டிம் டேவிட், பியுஷ் சாவ்லா, ஜெரால்டு கோட்ஜீ, ஜஸ்பிரித் பும்ரா, நுவன் துஷாரா.

    லக்னோ: லோகேஷ் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிகோலஸ் பூரன், குருணல் பாண்ட்யா, ஆயுஷ் பதோனி, அர்ஷத் கான் அல்லது மொசின் கான், யுத்விர் சிங், ரவி பிஷ்னோய், நவீன் உல்-ஹக்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் முதலிடத்தில் நீடிக்கிறார்.
    • ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா 7-வது இடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    டி20 கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.

    இந்நிலையில், பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 861 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார்.

    இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 2-வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் (781 புள்ளி) 3-வது இடத்திலும் உள்ளனர்.

    மற்றொரு இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 714 புள்ளிகள் பெற்று 6-வது இடம் பிடித்துள்ளார்.

    பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 726 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இலங்கை வீரர் ஹசரங்கா 2-வது இடமும், வெஸ்ட்இண்டீஸ் வீரர் அகில் ஹூசைன் 3-வது இடமும் பிடித்துள்ளனர். இந்திய வீரர்கள் அக்ஷர் பட்டேல் 4-வது இடமும், ரவி பிஷ்னோய் 5-வது இடமும் பிடித்துள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இலங்கை வீரர் ஹசரங்கா மற்றும் வங்காளதேச வீரர் ஷகிப் உல்-ஹசன் ஆகியோர் 228 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி 3-வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா 7-வது இடம் பிடித்துள்ளார்.

    • இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்துவருகிறது.
    • இந்தத் தொடரில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    ரோம்:

    களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதியில் 2 முறை சாம்பியனும், நம்பர் 1 வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காஃப் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று அதிகாலை நடைபெற்ற 2-வது அரையிறுதியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்காவின் டேனில் காலின்சுடன் மோதினார்.

    இதில் சபலென்கா 7-5, 6-2 என்ற நேர் செட்டில் வென்று இறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்வியாடெக், சபலென்கா மோதுகின்றனர்.

    • பிளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி பெற்றன.
    • அடுத்த சுற்றுக்கு முன்னேற சென்னை - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில், தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. அந்த வகையில், பிளே ஆஃப் சுற்றுக்கு நான்காவது அணியாக தகுதி பெறப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    வருகிற 18 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற இருக்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற முடியும்.

    அந்த வகையில், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிக்கு தயாராகும் வகையில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் டோனி இன்று பயிற்சியில் ஈடுபட்டார். சி.எஸ்.கே. அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டராக இருக்கும் டோனி இன்றைய பயிற்சியின் போது பந்துவீசினார். இது தொடர்பான வீடியோவை சி.எஸ்.கே. அணி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் பகிர்ந்து இருக்கிறது. 


    • குஜராத் அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது.
    • ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத்தில் நடைபெற இருந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இன்றைய போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்பே மழை குறுக்கிட்டதால், டாஸ் போடப்படாமலேயே போட்டி கைவிடப்பட்டது. இந்த போட்டி கைவிடப்பட்டதை அடுத்து புள்ளிகள் அடிப்பைடையில் ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு மூன்றாவது அணியாக தகுதி பெற்றுள்ளது.

    முன்னதாக குஜராத் அணி விளையாட இருந்த போட்டி இதே போன்று மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து அந்த அணி நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஐபிஎல் போட்டி 26-ந்தேதி முடிவடையும் நிலையில், உலகக்கோப்பை போட்டி தொடங்க ஒரு வாரம் கூட இல்லை.
    • வழக்கமாக ஒவ்வொரு அணிகளும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடும்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இருக்கும் 20 நாடுகள் தங்கள் அணியில் இடம்பெறும் வீரர்களை பட்டியலை வெளியிட்டுள்ளது. வங்காளதேச அணி அமெரிக்கா புறப்பட்டுள்ளது.

    பொதுவாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கு முன்பு ஒவ்வொரு அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும். அந்த வகையில் இந்தியா இரண்டு பயற்சி ஆட்டத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மே 26-ந்தேதி முடிவடைகிறது. ஜூன் 1-ந்தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இரண்டிற்கும் இடையில் ஒரு வார இடைவெளி கூட இல்லை.

    இந்த நிலையில் இந்தியா ஒரேயொரு பயிற்சி ஆட்டத்தில் மட்டும் விளையாடும் எனத் தெரிகிறது. நியூயார்க்கில் நடைபெறும் அந்த பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் (ஜூன் 1-ந்தேதி) அமெரிக்கா கனடாவை எதிர்கொள்ள இருக்கிறது.

    இந்தியா விளையாடும் லீக் போட்டிகள் நியூயார்க்கில் உள்ள மைதானத்தில் நடைபெற இருக்கிறது. பயணத்தை தவிர்க்க பயிற்சி ஆட்டமும் அங்கேயே நடைபெற வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் டல்லாஸ், நியூயார்க் மற்றும் மியாமி அருகில் உள்ள போர்ட் லார்டர்ஹில் ஆகிய மூன்று இடங்களில் மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    34 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கும் ஐசன்ஹோவர் பார்க் மைதானத்தை அதிகவேக ஒட்டப்பந்தைய வீரர் உசைன் போல்ட் அதிகாரப்பூர்வமாக இன்று திறந்து வைத்தார்.

    சில நாட்களுக்கு முன்பு தரம்சாலாவில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ரிலீ ரோசோவ் அதிரடியாக விளையாடி அசைச்சத்தம் அடித்தார். அவர் அரைசதம் அடித்ததை வானத்தை நோக்கி துப்பாக்கி சுடுவது போன்று சைகை காட்டி கொண்டாடினார்.

    அதன்பின்பு கரண் சர்மா பந்துவீச்சில் ரிலீ ரோசோவ் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது விராட் கோலி துப்பாக்கி சுடுவது போன்று ஆக்ஷன் காட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது.

    இந்நிலையில், ஸ்போர்ட்ஸ்டார் மீடியாவில் ரிலீ ரோசோவ் பேட்டியளித்தார். அப்போது, "எல்லா டி20 போட்டிகளிலும் நல்ல ஸ்கோரை அடிக்க வேண்டும் என எல்லாரும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் நீங்கள் விராட் கோலியாக இல்லாத வரை, அது நடக்கவே நடக்காத ஒன்று" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த ஐபிஎல் தொடரில் 13 ஆட்டங்களில் 5 அரை சதங்கள் மற்றும் ஒரு அபார சதத்துடன் 661 ரன்களுடன் அதிக ரன் குவித்தவர் பட்டியலில் கோலி தற்போது முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது.
    • ஐதராபாத் அணி வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.

    ஏழு மணியில் இருந்து டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மைதானத்தில் இன்னமும் மழை நீடிப்பதால் டாஸ் குறித்த அடுத்த அப்டேட் விரைவில் அறிவிக்கப்படும்.

    ×