search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    மோடியை தனிப்பட்ட முறையில் தவறாக பேசவில்லை- கோர்ட்டில் ஆஜரான ராகுல் விளக்கம்

    பிரதமர் மோடி குறித்து தனிப்பட்ட முறையில் தவறாக எதுவும் பேசவில்லை என்று சூரத் கோர்ட்டில் ஆஜரான ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.

    சூரத்:

    பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடந்தபோது பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்து பேசினார்.

    குறிப்பாக மோடியை திருடன் என்று குறிப்பிட்டார். சூரத் நகரில் அவர் பேசுகையில், ‘‘ நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திரமோடி என்று எல்லா திருடர்களும் எப்படி மோடி என்ற பொது பெயரில் உள்ளனர்? என்று கூறினார்.

    ராகுலின் இந்த பேச்சுக்கு பா.ஜனதா தலைவர்களும் மோடி சமுதாய மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் சூரத் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி சூரத் கோர்ட்டில் ராகுல் மீது வழக்கு தொடர்ந்தார்.

    இந்திய தண்டனை சட்டம் 499, 500 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் ராகுல் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கான சம்மன் சமீபத்தில் ராகுலுக்கு அனுப்பப்பட்டது. அதை பெற்றுக்கொண்ட ராகுல் கோர்ட்டில் ஆஜராக முன் வந்தார். இன்று காலை அவர் டெல்லியில் இருந்து புறப்பட்டு குஜராத் சென்றார்.

    சூரத் கோர்ட்டில் அவர் நீதிபதி முன்பு ஆஜர் ஆனார். அப்போது அவர் தனது தேர்தல் பிரசார உரை பற்றி விளக்கம் அளித்தார்.

    பிரதமர் மோடி

    “பிரதமர் மோடி குறித்து தனிப்பட்ட முறையில் தவறாக எதுவும் பேசவில்லை” என்று ராகுல் கூறினார். இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் மாதம் 10-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    முன்னதாக கோர்ட்டுக்கு வந்த ராகுலுக்கு சூரத் காங்கிரசார் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ராகுல் மராட்டிய மாநிலத்துக்கு புறப்பட்டு செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் அவர் தங்கி இருப்பார் என்று தெரிய வந்துள்ளது.

    நாளை (வெள்ளிக்கிழமை) காலை ராகுல் மீண்டும் குஜராத் செல்ல உள்ளார். நாளை ஆமதாபாத் கோர்ட்டில் ராகுல் ஆஜராக உள்ளார்.

    கடந்த ஏப்ரல் மாதம் ஆமதாபாத் நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவை ‘‘கொலை குற்றவாளி’’ என்று பேசினார். இதனால் ராகுல் மீது ஆமதாபாத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்குக்காக 12-ந்தேதியும் ராகுல் கோர்ட்டில் ஆஜர் அவார் என்று தெரிகிறது. கோர்ட்டு அவமதிப்பு வழக்குக்காக வரும் ராகுலை வரவேற்க குஜராத் காங்கிரசார் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    Next Story
    ×