என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.
    • மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுக்கு தரவேண்டிய நிதியை தராமல் காலம் தாழ்த்தி வருகிறது.

    அவினாசி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் மாவட்டம் அவினாசி சட்டமன்ற தொகுதி தி.மு.க. பாக முகவர்கள், செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    பாசிச பா.ஜனதா ஆட்சியை எதிர்வரும் தேர்தலில் முறியடிக்கும் சக்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு. பாராளுமன்றத்தில் நடைபெறும் கேள்வி நேரத்தில் கலந்து கொள்ளாத ஒரே பிரதமர் நரேந்திர மோடிதான். வரும் பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.

    அதற்காக அனைவரும் ஒன்றுபட்டு தேர்தலில் பணியாற்ற வேண்டும். நமது வெற்றியை முதலமைச்சருக்கு காணிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.


    தமிழகத்தில் இதற்கு முந்தைய ஆட்சி செய்த அ.தி.மு. க.வினர் தமிழக அரசின் கஜானாவை காலி செய்து விட்டு சென்றனர்.

    அதன் பிறகு ஆட்சி பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 மாதத்தில் பல்வேறு தொழில் முதலீட்டுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இதன் மூலம் ரூ. 8 லட்சம் கோடி முதலீடு தொழில் துறையில் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுக்கு தரவேண்டிய நிதியை தராமல் காலம் தாழ்த்தி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோடை வெப்பத்தின் தாக்கம் முன்கூட்டியே தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பாசன பரப்புகளில் வறட்சி ஏற்பட்டு உள்ளது.
    • திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் சரிந்து வருவது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்டு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி. திட்டத்தின் கீழ் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் வகையில் பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அதை ஆதாரமாக கொண்டு முதலாம் மண்டல பாசனத்திற்கு கடந்த மாதம் 12-ந்தேதி முதல் 100 நாட்களுக்கு உரிய இடைவெளி விட்டு 2½ சுற்றுகள் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    அதே போன்று பழைய ஆயக்கட்டு பாசனமான தளி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் கோடை வெப்பத்தின் தாக்கம் முன்கூட்டியே தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பாசன பரப்புகளில் வறட்சி ஏற்பட்டு உள்ளது.

    அத்துடன் திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதனால் அணை மண் திட்டுக்களாகவும், கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக மாறியும் வருகிறது. ஆனாலும் காண்டூர் கால்வாயின் உதவியால் பாசனத்திற்கு தண்ணீரும், அடிப்படை அத்தியாவசிய தேவையான குடிநீரும் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்து வருகிறது. தற்போது முதலாம் மண்டல பாசனத்தில் முதல் சுற்று தண்ணீர் நிறைவடைந்து 2-ம் சுற்றுக்காக தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட அணையில் 36.31 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 724 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 119 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் சரிந்து வருவது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆடு மேய்த்து விட்டு வீட்டுக்கு திரும்பிய புஷ்பலதா பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • சம்பவம் தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே புத்தரச்சல் வேலப்பகவுண்டம்பாளையம் பிரிவில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவரது மனைவி புஷ்பலதா. இவர்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து தங்களுக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர்.

    புஷ்பலதா மற்றும் அவரது மருமகள் ஆகியோர் தோட்டத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த மோதிரம், தங்க சங்கிலி உட்பட 10 பவுன் நகைகளையும், 5000 ரூபாய் ரொக்க பணத்தையும் திருடி சென்றுள்ளனர். ஆடு மேய்த்து விட்டு வீட்டுக்கு திரும்பிய புஷ்பலதா பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்களின் உதவியோடு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் புத்தரச்சல் பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களையும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் 10 பவுன் நகைகளை வீட்டுக்குள் புகுந்து மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை உடன் வைத்துக்கொண்டு குழாய்கள் உடைக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.
    • உடைப்பை சரி செய்யாமல் அதற்கு மேலே ரோடு போடும் பணி இன்று காலை நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் தாராபுரம் சாலையிலிருந்து காங்கேயம் சாலை செல்லக்கூடிய மாநகராட்சிக்கு உட்பட்ட 44 வது வார்டு பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

    சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளும் முன்பாகவே சாலை அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும்போது மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை உடன் வைத்துக்கொண்டு குழாய்கள் உடைக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    ஆனால் இதனை பொருட்படுத்தாமல் நேற்று இரவு பணிகள் மேற்கொண்ட போது சுமார் 2000 வீடுகளுக்கு செல்லக்கூடிய 8 மெயின் குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களும் உடைக்கப்பட்டது. அந்த உடைப்பை சரி செய்யாமல் அதற்கு மேலே ரோடு போடும் பணி இன்று காலை நடைபெற்றது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் 44 வது வார்டு கவுன்சிலர் கண்ணப்பன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் கிடைத்ததும் அங்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலர் கண்ணப்பன் கூறும்போது, நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக தொடர்ந்து அப்பகுதியில் குடிநீர் குழாய்கள் உடைக்கப்படுவதாகவும் இதனால் கடந்த ஒரு மாத காலமாக முறையாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது. நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தியும் கூட நெடுஞ்சாலை துறையினர் கண்டும் காணாமல் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதே நிலை தொடருமானால் நெடுஞ்சாலை துறை மற்றும் ஒப்பந்ததாரரை கண்டித்து மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.

    • கொழுமம், குமரலிங்கம், சாமராயப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
    • முதலைகளை பாா்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனா்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் மூலம் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீா் வசதி பெற்று வருகின்றன.

    குடிநீா் மற்றும் பாசன தேவைகளுக்காக அணையில் இருந்து அமராவதி ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் அமராவதி அணையில் இருந்து வெளியேறிய சில முதலைகள் கரையோரத்தில் நடமாடி வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனா். மேலும் உடுமலையை அடுத்துள்ள கொழுமம் கிராமத்தில் உள்ள சோதனைச்சாவடி அருகே பெரிய முதலை சாலையில் ஊா்ந்து சென்றுள்ளது. இதனைப்பார்த்த இளைஞர்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூகவலை தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    அதனைப்பார்த்த கொழுமம், குமரலிங்கம், சாமராயப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

    இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது:- அமராவதி அணையில் ஏராளமான முதலைகள் உள்ளன. வழக்கமாக பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடும்போது அணையில் உள்ள முதலை கள் பிரதான ஷட்டா் வழியாக அமராவதி ஆற்றில் சென்று விடும் நிலை ஏற்பட்டு வருகிறது. பொது மக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம்.

    முதலைகளை பாா்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனா்.

    • விசைத்தறி துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது.
    • வரி இல்லாமல் நூல் இறக்குமதி செய்ய சலுகை அளிக்க வேண்டும்.

    பல்லடம்:

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2.50 லட்சம் விசைத்தறிகள், 50 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    தற்போது நூல் விலை உயர்ந்து இருப்பதால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி முழுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனால் பல்லடம் பகுதியில் ரூ.600 கோடி மதிப்பிலான விசைத்தறி துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதுகுறித்து பல்லடம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக விவசாயத்திற்கு அடுத்தப்படியாக விசைத்தறி ஜவுளித் தொழில் உள்ளது. இந்த தொழில் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் ஜவுளித்தொழில் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த வாரத்தில் பஞ்சு விலை உயர்வு காரணத்தால், நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 25 வரை விலையேற்றம் ஆனது. ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிக்கு இன்னும் உரிய விலை கிடைக்கவில்லை.


    பஞ்சு மற்றும் நூல் விலை உயர்கிறது. ஆனால் அதில் உற்பத்தி செய்யப்படும் துணி விலை உயரவில்லை. தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் ஜவுளி உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட சுமார் ரூ. 600 கோடி மதிப்புள்ள காடா ஜவுளி துணிகள் தேங்கி கிடக்கிறது. உரிய விலை கிடைக்காததாலும், வெளிநாட்டு ஆர்டர்கள் இல்லாததாலும் காடா ஜவுளிகள் தேங்கி கிடக்கின்றன.

    எனவே மத்திய, மாநில அரசுகள் உள்நாட்டில் ஜவுளித் தொழில் சீராகும் வரை நூல், கழிவுப்பஞ்சு மற்றும் பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். ஆண்டு முழுவதும் நூல் விலை சீராக இருக்கும் வகையில் நூல் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். வரி இல்லாமல் நூல் இறக்குமதி செய்ய சலுகை அளிக்க வேண்டும். வங்கதேசத்தில் இருந்து குறைந்த விலையில் துணிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனை தவிர்க்க தமிழகத்தில் பருத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசார் சிகிச்சை பெற்று வரும் 3 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தினர்.
    • 120 வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 20 முதல் 30 வயது வரையிலான 3 வாலிபர்கள் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால் உடல் நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் சிகிச்சை பெற்று வரும் 3 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் உதவி கமிஷனர் அணில் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் திருப்பூர் மாநகரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது காலேஜ் ரோடு, மாஸ்கோ நகர், பாறைக்குழி ஆகிய பகுதிகளில் வலி நிவாரண மாத்திரைகளை சிலர் மருந்து கடைகளில் இருந்து வாங்கி அதனை போதைக்காக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக திருப்பூர் காங்கயம் ரோட்டை சேர்ந்த மயில்சாமி (வயது 55), அவரது மகன் சதீஷ் குமார்(30) மற்றும் முகமது இக்பால் (25), சூர்ய நாராயணன் (23), சூர்ய பிரகாஷ்(25) மற்றும் சிவக்குமார் (23) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 120 வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • தகராறில் ராமகிருஷ்ணன், விக்னேஷ் இருவரும் சேர்ந்து மது பாட்டிலால் சாமிதுரையை தாக்கியுள்ளனர்.
    • சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குமரலிங்கம் போலீசார் ராமகிருஷ்ணன், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் பகுதியில் உள்ள பழைய ராஜவாய்க்கால் கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழிலாளி ஒருவர் இறந்து கிடந்தார்.

    உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த நபர் சாளரப்பட்டியைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவரது மகன் சாமிதுரை (வயது 42) என்பது தெரியவந்தது.

    பிரேத பரிசோதனை அறிக்கையில் சாமிதுரையின் தோள்பட்டையில் எலும்பு முறிவு இருப்பது தெரியவந்தது. அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்ததால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் பாட்டான் என்கிற ராமகிருஷ்ணன் (34), பாலபூபதி என்பவரது மகன் விக்னேஷ் (26) ஆகியோர் சாமிதுரையை அடித்துக்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. கட்டிடத் தொழிலாளர்களான இவர்கள் 3 பேரும் நண்பர்களாக இருந்துள்ளனர். சம்பவத்தன்று ராஜவாய்க்கால் கரையில் அமர்ந்து மூவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

    அப்போது ஏற்பட்ட தகராறில் ராமகிருஷ்ணன், விக்னேஷ் இருவரும் சேர்ந்து மது பாட்டிலால் சாமிதுரையை தாக்கியுள்ளனர். மயங்கி விழுந்த சாமிதுரையை அங்கேயே விட்டு விட்டு சென்றுள்ளனர். பலத்த காயமடைந்த சாமிதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குமரலிங்கம் போலீசார் ராமகிருஷ்ணன், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

    • சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்.
    • மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைந்து உள்ளதா என்பது குறித்து கவர்னர் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

    திருப்பூர்:

    பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களுக்கு மத்திய அரசின் சார்பாக சூரஜ் திட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் நாளை (புதன்கிழமை) 600 மாவட்டங்களில் மத்திய அரசு திட்டத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இதனை தொடங்கி வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சி திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாளை மாலை 3.45 மணிக்கு நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார். 300க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைந்து உள்ளதா என்பது குறித்தும் கவர்னர் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

    • கோவை மாவட்டத்துடன் இணைந்து இருந்த திருப்பூர், கடந்த 2008-ம் ஆண்டு தனியாக புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
    • காங்கயம், தாராபுரம் ஈரோடு பாராளுமன்ற தொகுதியிலும் இணைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    பின்னலாடை தொழில் வளர்ச்சியின் மூலமாக உலக நாடுகளை தன்பக்கம் ஈர்த்த மாநகரம் திருப்பூர். நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் திருப்பூர் மாநகருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்ட தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் வெளிமாநில தொழிலாளர்களும் வசிக்கும் மாவட்டம் இதுவாகும்.

    கோவை மாவட்டத்துடன் இணைந்து இருந்த திருப்பூர், கடந்த 2008-ம் ஆண்டு தனியாக புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருப்பூர் பாராளுமன்ற தொகுதி 2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கோபிச்செட்டிப்பாளையம் பாராளுமன்ற தொகுதியில் இருந்து பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், பெருந்துறை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளையும், கோவை பாராளுமன்ற தொகுதியில் இருந்த திருப்பூரை திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு என 2 சட்டமன்ற தொகுதிகளாக பிரித்து, திருப்பூர் பாராளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது.

    இதில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தொகுதி திருப்பூர் மாவட்டத்திலும், பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், பெருந்துறை ஆகிய சட்டமன்ற தொகுதிகள் ஈரோடு மாவட்டத்திலும் உள்ளன.

    மேலும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி சட்டமன்ற தொகுதி நீலகிரி பாராளுமன்ற தொகுதியிலும், பல்லடம் கோவை பாராளுமன்ற தொகுதியிலும் இணைக்கப்பட்டுள்ளது. இதேப்போல் உடுமலை, மடத்துக்குளம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியிலும், காங்கயம், தாராபுரம் ஈரோடு பாராளுமன்ற தொகுதியிலும் இணைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் இருந்தாலும் திருப்பூர் வடக்கு, தெற்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் மட்டுமே திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வாக்களிக்க உள்ளனர். மற்ற 6 சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் நீலகிரி, ஈரோடு, பொள்ளாச்சி, கோவை ஆகிய பாராளுமன்ற தொகுதி உறுப்பினரை தேர்ந்தெடுக்க வாக்களிக்க உள்ளனர்.

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை திருப்பூர் வடக்கு தொகுதியில் 3 லட்சத்து 90 ஆயிரத்து 152 வாக்காளர்களும், திருப்பூர் தெற்கு தொகுதியில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 788 வாக்காளர்களும், பெருந்துறை தொகுதியில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 338 வாக்காளர்களும், பவானி தொகுதியில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 909 வாக்காளர்களும், அந்தியூர் தொகுதியில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 123 வாக்காளர்களும், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 133 வாக்காளர்களும் உள்ளனர்.

    பாராளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 86 ஆயிரத்து 475 பேரும், பெண் வாக்காளர்கள் 8 லட்சத்து 11 ஆயிரத்து 718 பேரும், 250 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 15 லட்சத்து 98 ஆயிரத்து 443 வாக்காளர்கள் உள்ளனர். திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் 6 லட்சத்து 56 ஆயிரத்து 940 வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஈரோடு மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் 9 லட்சத்து 41 ஆயிரத்து 503 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

    எனவே திருப்பூர் தொகுதி எம்.பி. பதவிக்கு போட்டியிடுபவர்கள் தங்கள் வெற்றிக்கு ஈரோடு மாவட்ட வாக்காளர்களையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. திருப்பூர் பாராளுமன்ற தொகுதி என்று பெயர் இருந்தாலும் ஈரோடு மாவட்ட மக்களை பிரசாரம் செய்து கவர்ந்தால் மட்டுமே வெற்றி கை கூடும் நிலை இருக்கிறது. இதனால் பிரதான கட்சிகள் திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது 2 மாவட்ட மக்களுக்கும் நன்கு அறிமுகமான நபர்களை தேர்ந்தெடுக்கும் நிலை இருக்கிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம்(தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,58,786 வாக்காளர்கள் உள்ளனர். காங்கயத்தில் 2,59,652, அவினாசியில் (தனி) 2,83,771, பல்லடத்தில் 3,92,836, உடுமலைபேட்டையில் 2,60,684, மடத்துக்குளத்தில் 2,32,141 வாக்காளர்கள் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 23, 44,810 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் பாராளுமன்ற தேர்தலில் வெவ்வேறு தொகுதிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டியது இருப்பதால் மிகவும் குழப்பத்தில் தவித்து வருகின்றனர்.

    எனவே தொகுதி மறுசீரமைப்பு செய்யும் போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளும் திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குள் அமையும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 49-வது குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
    • ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி அங்காளம்மனை வழிபட்டனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் புகழ்பெற்ற அங்காளம்மன் கோவிலில் 49-வது குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடை பெற்றது.

    முன்னதாக குண்டம் திருவிழாவானது கடந்த 7-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கிராம சாந்தியுடன் தொடங்கியது. தொடர்ந்து கொடியேற்றம், யாகசாலை பூஜை, மகாசிவராத்திரி, மயான பூஜை, சக்தி விந்தை அலகு தரிசனம், மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

    நேற்று மாலை அக்னி குண்டம் வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 2 அடி அகலம்,45 அடி நீளம் கொண்ட குண்டத்தில் வேப்பமரங்களை போட்டு அக்னி வளர்க்கப்பட்டது.சுமார் 10 மணி நேரம் அக்னி வளர்த்து குண்டம் தயார் செய்யப்பட்டது.

     இன்று காலை 7 மணி முதல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் கோவில் பூசாரிகள் மற்றும் நிர்வாகிகள் குண்டத்தில் இறங்கினர். பின்னர் ஓம்சக்தி, பராசக்தி கோஷம் விண்ணதிர கைக்குழந்தைகளுடன் பெண்கள், சிறுவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி அங்காளம்மனை வழிபட்டனர்.

    காலை 8 மணிக்கு அக்னி அபிஷேகம், பொங்கல் வைத்தல், பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது. பல்லடம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • நகரங்களை காட்டிலும், புறநகர் பகுதிகளான கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் கவனம் செலுத்தி களமிறங்கி வேலை செய்கின்றனர்.
    • பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழில்துறையினருடன் கலந்தாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்தனர்.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் வெற்றிக்கனியை பறிக்கும் நோக்கில் திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க., வினர் பல்வேறு தேர்தல் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர். நகரங்களை காட்டிலும், புறநகர் பகுதிகளான கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் கவனம் செலுத்தி களமிறங்கி வேலை செய்கின்றனர். அதன்படி தினமும் மண்டலம், சக்தி கேந்திரம், பூத் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

    தொழில் நகரமான திருப்பூரில் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட், ராஜஸ்தான் என பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு தங்கி பல்வேறு பனியன் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிமாநில தொழிலாளர்கள், தொழில் துறையினரின் ஓட்டுக்களை வளைக்கும் நோக்கில், பா.ஜ.க., பிறமொழி பிரிவினர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அவ்வகையில், சில நாட்களுக்கு முன் திருப்பூரில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழில்துறையினருடன் கலந்தாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்தனர்.

    அதில், ராஜஸ்தான் மாநில எம்.பி., ராஜேந்திரகுமார் கெலாட் பங்கேற்று கலந்துரையாடினார். இரண்டாம் கட்டமாக, மற்றொரு கூட்டத்தை பா.ஜ.க.,வினர் வரும் 12-ந் தேதி திருப்பூரில் ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து பா.ஜ.க., நிர்வாகிகள் கூறியதாவது:-திருப்பூரில் வாழும் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி வருகின்றோம். இப்பணி பா.ஜ.க., பிறமொழி பிரிவினர் நடத்தி வருகின்றனர். தற்போது, இரண்டாம் கட்டமாக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். திருப்பூருக்காக நீங்கள், உங்களுக்காக திருப்பூர், எங்களுடன் நீங்கள், உங்களுடன் நாங்கள் என பல தலைப்புகளில் அவர்களை சந்தித்து தேர்தல் பிரசாரத்தை துவக்கியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×