என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • தொழிலாளர்கள் ஒரு மாத விடுமுறைக்கு பின் திருப்பூர் திரும்புவார்கள்.
    • பனியன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வது வழக்கம்.

    இந்த ஆண்டு வருகிற 24-ந்தேதி ஹோலி பண்டிகை வருவதாலும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாலும் பலர் குழுக்களாக திருப்பூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட தயாராகி உள்ளனர்.

    இது குறித்து திருப்பூரை சேர்ந்த பனியன் உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:-

    ஆண்டுதோறும் திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அவ்வாறு செல்லும் தொழிலாளர்கள் ஒரு மாத விடுமுறைக்கு பின் திருப்பூர் திரும்புவார்கள்.

    பெரும்பாலும் ஒரு குழு சென்றால் மறு குழு பண்டிகை முடிந்த ஓரிரு நாட்களில் திரும்பி விடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு ஹோலி பண்டிகை வருகிற 24-ந்தேதி முடிந்தவுடன் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.வடமாநிலங்களில் ஜூன் மாதம் வரை பல கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்ப மேலும் காலதாமத மாகும்.

    வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்புவதில் காலதாமதமாகும் என்பதால் பனியன் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பாராளுமன்ற தேர்தல் என்றாலும் 234 சட்டமன்ற சபை தொகுதிகள் வாரியாக பிரசார கூட்டம், தெருமுனை பிரசாரம் மற்றும் தேர்தல் பணி மேற்கொள்ளப்படும்.
    • கட்சி சின்னம்,கொடி, பெயர் மற்றும் தலைவர் படங்களுடன் டி-சர்ட் மற்றும் தொப்பிகள் தயாரிக்க ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    தேர்தல்களின்போது அரசியல் கட்சி பெயர்களில் டி-சர்ட் தயாரிப்பது வழக்கம். தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளில் நடைபெறும் பிரசார பயணங்களுக்கு தேவையான டி-சர்ட்கள் திருப்பூரில் கொள்முதல் செய்யப்படும்.

    தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் போன்ற கட்சியினர் மாநிலம் முழுவதும் பயன்படுத்த திருப்பூர் கட்சியினர் மூலம் ஆர்டர் கொடுத்து தயாரிப்பார்கள்.

    தற்போது தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீவிர பிரசாரத்தை தொடங்க உள்ளனர். இதையடுத்து திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பிரசாரத்திற்காக தயாரிக்கப்பட்டு இருந்த பனியன்களில் கட்சி கொடி, சின்னம், தலைவர் படங்கள் அச்சிடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இது குறித்து பனியன் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் என்றாலும் 234 சட்டமன்ற சபை தொகுதிகள் வாரியாக பிரசார கூட்டம், தெருமுனை பிரசாரம் மற்றும் தேர்தல் பணி மேற்கொள்ளப்படும். கட்சி சின்னம்,கொடி, பெயர் மற்றும் தலைவர் படங்களுடன் டி-சர்ட் மற்றும் தொப்பிகள் தயாரிக்க ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பே பிரசாரத்திற்கு தேவையான பனியன்கள் வெள்ளை உள்ளிட்ட கலர்களில் தயாரித்து வைத்து விட்டோம். தற்போது அதில் சின்னம், கொடி, தலைவர் படங்கள் அச்சடிக்கும் பணிகள் நடைபெறுகிறது. 2, 3 நாட்களில் இந்த பணிகள் முடிந்து விடும். தயாரான பனியன்கள் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
    • 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கரூர் சாலையில் உள்ளது சேனாபதிபாளையம். இங்குள்ள ரேஷன் கடை அருகில் சாலையோரம் பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்து பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராகவேந்தனுக்கு செல்போனில் தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சேனாபதிபாளையம் கிறிஸ்துவ தெருவில் மத வழிபாட்டுத்தலம் கட்ட கடந்த 4 வருடங்களாக அனுமதி கேட்டு கிடைக்கவில்லை என்றும் அரசும் அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. அதனால் தேர்தலை புறக்கணிப்பதாக தெரியவந்தது.

    அரசுக்கு சொந்தமான இடத்தில் மத வழிபாட்டுதலம் கட்ட அனுமதி கேட்டு அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து பொது இடத்தில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த தேர்தல் புறக்கணிப்பு பேனரை அகற்றுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அகற்றாததால் அதிகாரிகளே பேனரை அகற்றி தக்க நடவடிக்கை எடுக்குமாறு வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து பேனர் வைத்ததாக சேனாதிபாளையத்தைச் சேர்ந்த வினோத்குமார் (வயது 27), இசக்கி (27), சிலம்பரசன் (35), சைமன் (35), பிரவீன் (31), மேத்யூ (29) ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்டுப் பதிவு செய்ய 12டி படிவத்தில் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.
    • ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், வீட்டில் இருந்தபடியே ஓட்டளிக்கலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் 12,760 மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட 30,822 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள், வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்டுப் பதிவு செய்ய 12டி படிவத்தில் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.

    ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று, தபால் ஓட்டு பதிவு செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளி, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு படிவம் 12டி வழங்குகின்றனர்.

    இதுதொடர்பாக ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி மற்றும் மூத்த வாக்காளருக்கு விருப்ப படிவம் வழங்குவது குறித்த கூட்டம், சப்- கலெக்டர் சவுமியா தலைமையில் நடைபெற்றது. இதில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்களுக்கு படிவம் 12டி வழங்கப்பட்டது.

    • தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் விவரங்களை, சம்பந்தப்பட்ட கட்சியினர் ஆன்லைனில் தான் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
    • பிரசார வாகனத்தின் வண்ண புகைப்படம், பதிவுச்சான்றிதழ், வாகனக் காப்பீடு இவையெல்லாம் இருக்க வேண்டும்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் தங்களது பிரசாரத்தை தொடங்க உள்ளனர்.

    இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் விவரங்களை, சம்பந்தப்பட்ட கட்சியினர் ஆன்லைனில் தான் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறும்போது, தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கான வாகன அனுமதியை பல்வேறு கட்சிகளும் அணுகக்கூடும். இது ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. பிரசார வாகனத்தின் வண்ண புகைப்படம், பதிவுச்சான்றிதழ், வாகனக் காப்பீடு மற்றும் வாகனத்தின் தற்காலிக புகை அளவு சான்றிதழ்கள் இவையெல்லாம் இருக்க வேண்டும். இவை இல்லாதபோது, அந்த வாகனங்கள் பிரசாரத்துக்கு அனுமதிக்கப்படாது.

    பொதுவாகவே அனைவரும் பதிவுசான்றிதழ் வைத்திருப்பார்கள். ஆனால் காப்பீடு, தற்காலிக புகை அளவு சான்றிதழ் உள்ளிட்டவை இருக்காது. ஆகவே அப்படிப்பட்ட வாகனங்களுக்கு தேர்தல் பிரசாரத்தில் அனுமதி கிடையாது. கடைசி நேரத்தில் பலரும் எங்கள் வாகனங்களுக்கு, பிரசாரத்தில் அனுமதி தரப்படவில்லை என்பதற்கான காரணங்களில் மேற்கண்ட ஏதேனும் ஒரு காரணம் இருக்கக்கூடும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அவினாசியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மோகனா தலைமையிலான குழுவினர் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • பணத்தை ரஹ்மத்து ல்லாஹ் எங்கு கொண்டு சென்றார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அவினாசி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டம் அவினாசியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மோகனா தலைமையிலான குழுவினர் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அவினாசி ரவுண்டானா பகுதியில் சோதனை செய்தபோது, சென்னையில் இருந்து கோவை சென்ற ஆம்னி பஸ்சில் வந்திறங்கிய மதுரை சிவகங்கை பகுதியை சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் (வயது 27) என்பவரின் பையை சோதனை செய்தனர். அதில் 500 ரூபாய் பண்டலாக ரூ.14 லட்சத்து 94 ஆயிரம் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான ஆவணங்களை கேட்டபோது ரஹ்மத்துல்லாஹிடம் இல்லை.

    இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் அந்த பணத்தை ரஹ்மத்து ல்லாஹ் எங்கு கொண்டு சென்றார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன.
    • ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    அவற்றிற்கு தேவையான உணவு தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளும், தண்ணீர் தேவையை அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளும் பூர்த்தி செய்து தருகின்றன. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை அதிகம் நம்பி உள்ளது.

    தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன. இதனால் வனவிலங்குகளுக்கான உணவு தண்ணீர் தேவை பூர்த்தி அடைவதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவாரப்பகுதிக்கு வந்துவிட்டன.

    அமராவதி அணையில் நீர்இருப்பு உள்ளதால் அணைப் பகுதிக்குள் வனவிலங்குகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் அவற்றுக்கான உணவு தண்ணீர் தேவை தற்காலிகமாக பூர்த்தி அடைந்து உள்ளது.

    மேலும் யானைகள் காலை நேரத்தில் உடுமலை - மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது. அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள். இதன் காரணமாக யானைகள் மிரண்டு வாகனஓட்டிகளை துரத்திச் சென்ற சம்பவமும் நிகழ்ந்து உள்ளது.

    இதனால் உடுமலை மூணாறு-சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். யானைகள் அங்கிருந்து செல்லும் வரை ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீதுகற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அத்துடன் உடுமலை மூணாறு- சாலை மலைஅடிவாரப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வீட்டை விட்டு வெளியே வராதவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
    • பிரதமர் வருகையால் தி.மு.க. கூட்டணியினர் தோல்வி பயத்தில் உள்ளனர்.

    திருப்பூர்:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று திருப்பூரில் கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தின் தலைவர் பெஸ்ட் ராமசாமியை நேரில் சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கேட்டதுடன், சேலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொது கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

    வீட்டை விட்டு வெளியே வராதவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். பிரதமர் கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழகத்திற்கு வருகை தருகிறார். அவையெல்லாம் தேர்தலை மனதில் வைத்து அல்ல. பிரதமர் வருகையால் தி.மு.க. கூட்டணியினர் தோல்வி பயத்தில் உள்ளனர்.

    கோவையில் பிரதமரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு திமு.க. தடை விதிக்க நினைத்தது. எல்லா மாநிலத்திலும் பிரதமர் மக்களை சந்திக்கிறார்


    பி.எம்ஸ்ரீ., பள்ளி திட்டத்திற்கு கையெழுத்து போடுவார்கள். ஆனால் புதிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என சொல்வது ஏற்கத்தக்கதல்ல. தேர்தல் முடிந்ததும் வேறு காரணம் சொல்லி ஏற்றுக்கொள்வர்.

    ஆ. ராசா 2 ஜி வழக்கில் ஏப்ரல் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தீர்ப்பு வரலாம். தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் மோடி வருகை புரிய வேண்டும் என்பது எங்கள் விருப்பம். தேதி கொடுக்க பிரதமரும் தயாராக இருக்கிறார். இந்தியா கூட்டணிக்கு எங்கேயும் எழுச்சி இல்லை. நாடு முழுவதும் ஜெய்ஸ்ரீராம் கோஷம்தான் எழுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தோனேசியா, மலேசியா பாமாயிலுக்கு மானியம் வழங்குவதை கண்டித்தும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    ரேசன் கடைகளில் தேங்காய்-கடலை எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும். இந்தோனேசியா, மலேசியா பாமாயிலுக்கு மானியம் வழங்குவதை கண்டித்தும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருப்பூர் வித்யாலயம் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • படுகாயம் அடைந்த செல்வக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • செல்வக்குமார் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே பழைய கோட்டை ஊராட்சிக்குட்பட்ட, மேலப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். (வயது 58) விவசாயி. இவர் கடந்த 12-ந்தேதி இரவு 7 மணி அளவில் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகே வடபழனியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த செல்வக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வக்குமாருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதுபற்றி மருத்துவமனை டாக்டர்கள் செல்வக்குமார் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்து வேறு சிலரது உயிர்களை காப்பாற்ற உதவ வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து செல்வக்குமார் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

    பின்னர் அரசு உடல் உறுப்பு தானம் திட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி ஈரோடு தனியார் மருத்துவமனையில் செல்வக்குமார் உடலில் இருந்து கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் ஆகியவை அகற்றப்பட்டு கோவை மருத்துவமனைக்கு தானமாக அனுப்பப்பட்டது.மேலும் காங்கயம் வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவினர் முன்னிலையில் முழு அரசு மரியாதையுடன் செல்வக்குமார் உடல் தகனம் செய்யப்பட்டது. செல்வகுமாருக்கு ஜானகி என்ற மனைவியும், சதீஷ்குமார் என்ற மகனும், கல்பனாதேவி என்ற மகளும் உள்ளனர்.

    • நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும்.
    • நூல் விலை கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள்.

    இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும். நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது.

    நடப்பு மாதத்திற்கான (மார்ச்) நூல் விலையை நூற்பாலைகள் மாத தொடக்கத்தில் அறிவித்தனர். இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்தது. இந்தநிலையில் இன்று நூற்பாலைகள் நூல் விலையை அறிவித்தன. இதில் நூல் விலை கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நூல் விலையானது தற்போது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.192-க்கும், 16-ம் நம்பர் ரூ.202 க்கும், 20-வது நம்பர் ரூ.260 -க்கும், 24-வது நம்பர் ரூ.272-க்கும், 30-வது நம்பர் ரூ.282-க்கும், 34-வது நம்பர் ரூ.300-க்கும், 40-வது நம்பர் ரூ.320-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.257-க்கும், 24-வது நம்பர் ரூ.267-க்கும், 30-வது நம்பர் ரூ.277-க்கும், 34-வது நம்பர் ரூ.290-க்கும், 40-வது நம்பர் ரூ.310-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
    • சீன நாட்டின் லோன் செயலி நிறுவனத்துக்கு அர்ஜூன்குமார் வேலை செய்து வந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது செல்போனில், லோன் செயலி மூலம் ரூ.3 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். அந்த பணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் அவரால் செலுத்த முடியவில்லை. அதன்பிறகு பணம் முழுவதையும் கட்டி முடித்தார். ஆனால் அதன்பிறகு அவருடைய செல்போன் எண்ணுக்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், கடனுக்கான தொகையை வட்டியுடன் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதன்பிறகு அந்த வாலிபர், கூடுதல் பணத்தை கட்டவில்லை. இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் சிறுமி ஒருவருடன் ஆபாசமாக இருப்பது போன்ற புகைப்படத்தை அந்த வாலிபரின் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். இதைப்பார்த்து அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பீகார் மாநிலம் மதுபானியை சேர்ந்த ரோஷன்குமார் காமத் (வயது 22) என்பவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை ஹரியானாவில் வைத்து கடந்த மாதம் கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவத்தில் மற்றொரு நபரை போலீசார் தேடி வந்தனர். மேலும் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது ரபீக் சிக்கந்தர் தலைமையிலான தனிப்படையினர் பீகார் விரைந்தனர்.

    அங்கு பாட்னாவில் பதுங்கி இருந்த அர்ஜூன்குமார் (26) என்பவரை பிடித்தனர். அவர் சீன நாட்டின் லோன் செயலி நிறுவனத்துக்கு அர்ஜூன்குமார் வேலை செய்து வந்தார். அவர் கடன் வசூலிப்பு பிரிவில் குழு தலைவராக செயல்பட்டுள்ளார். ஆபாச படத்தை சித்தரித்து அனுப்பியது தொடர்பாக அர்ஜூன் குமாரை போலீசார் கைது செய்து பின்னர் திருப்பூர் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். 

    ×