search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுசீந்திரம் அருகே குடிபோதை தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை- 2 பேர் கைது
    X

    சுசீந்திரம் அருகே குடிபோதை தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை- 2 பேர் கைது

    • கைது செய்யப்பட்ட கணேசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • கொலை செய்யப்பட்ட பாலன் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது‌.

    என்.ஜி.ஓ.காலனி:

    நெல்லை தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலன் என்ற பாலமுருகன் (வயது 35). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    பாலன், குமரி மாவட்டம் சுசீந்திரம் ஆஞ்சநேயர் நகர் பகுதியில் உள்ள பர்னிச்சர் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அதே பர்னிச்சர் கடையில் இடலாக்குடி நெடுந்தெருவை சேர்ந்த கணேஷ் (39) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் வேலை முடிந்து இரவு பர்னிச்சர் கடையில் தங்குவது வழக்கம்.

    நேற்று இரவு பாலன், கணேஷ் இருவரும் பர்னிச்சர் கடையில் தங்கி இருந்தனர். அப்போது இருவரும் மது அருந்தினர். கணேசின் நண்பர் பட்டாரியர் நெடுந்தெருவை சேர்ந்த ஜெகதீசனும் அங்கு வந்தார். 3 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்தனர். அப்போது பர்னிச்சர் கடையில் வேலை செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. பாலன் தான் அதிக வேலை செய்வதாகவும் கணேஷ் சோம்பேறியாக உள்ளதாகவும் கூறினார்.

    இது கணேசுக்கும் அவரது நண்பர் ஜெகதீசுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாலன் திடீரென ஜெகதீசை சரமாரியாக தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் மற்றும் ஜெகதீஷ் சேர்ந்து பாலனை கம்பால் தாக்கினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

    இவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பாலனையும் படுகாயத்துடன் நின்று கொண்டிருந்த ஜெகதீசையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் பாலன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஜெகதீசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் ஜெகதீஷ், கணேஷ் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கணேசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட பாலன் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது.

    பாலன் கொலை செய்யப்பட்ட தகவல் தச்சநல்லூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களும் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தனர். குடிபோதை தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சுசீந்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×