என் மலர்tooltip icon

    கடலூர்

    குமாராட்சி அருகே உள்ள நந்திமங்கலம் கொள்ளிடம் ஆற்றில் கூலித் தொழிலாளி ஒருவர் முதலை கடித்து இறந்த சம்பவம் அந்த பகுதி பொது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே உள்ள நந்தி மங்கலம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி(வயது50). கூலித்தொழிலாளி

    இவர் நேற்று இரவு வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு அந்த பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளித்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக 2 முதலைகள் திடீரென முனுசாமியை கடித்து ஆற்றுக்குள் இழுத்து சென்றன. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். சிறிது நேரத்தில் முதலைகள் முனுசாமியின் முதுகு பகுதி, கால், தொடை, என அனைத்து பகுதிகளையும் கடித்து குதறின.

    இதில் முனுசாமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற முனுசாமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் முனுசாமியை தேடி ஆற்று பகுதிக்கு சென்றனர்.

    அப்போது ஆற்றங்கரையோரத்தில் முனுசாமி ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரது உடலைப்பார்த்து கதறி அழுதனர்.

    இதுகுறித்து குமராட்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முனுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார் கோவிலை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் முதலைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகின்றன. இப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் பலர் முதலை கடித்து காயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் கூலித் தொழிலாளி ஒருவர் முதலை கடித்து இறந்த சம்பவம் அந்த பகுதி பொது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் குமாராட்சி அருகே உள்ள நந்திமங்கலம் கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் அதிகம் உள்ள பகுதிகளில் குளிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #Tamilnews
    விருத்தாசலம் அருகே கார்-லாரி மோதிய விபத்தில் என்.எல்.சி. அதிகாரி, மனைவி பலியாகினர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடிவருகின்றனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் கணபதிபாண்டியன் (வயது 48). இவரது மனைவி சபிதா (44). இவர்களுக்கு சுவேதா வர்ஷினி (23) என்ற மகள் உள்ளார். இவர் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார்.

    கணபதிபாண்டியன் நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் 1-ல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    நேற்று காலை கணபதி பாண்டியனும், அவரது மனைவி சபிதாவும் ஒரு காரில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர்.

    அங்கு திருமண நிகழ்ச்சி முடிந்ததும் மாலையில் அவர்கள் காரில் ஊருக்கு திரும்பினர். காரை கணபதி பாண்டியன் ஓட்டி வந்தார். அவர்கள் வந்த கார் நள்ளிரவு 1 மணிக்கு விருத்தாசலம் அருகே உள்ள கோ.மங்கலம் வந்தது.

    அப்போது விருத்தாசலத்தில் இருந்து ஒரு லாரி நெல் மூட்டைளை ஏற்றி கொண்டு சேலம் நோக்கி சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் காரும்-லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் இருந்த கணபதி பாண்டியன், அவரது மனைவி சபிதா ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து நடந்தவுடன் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.

    பின்னர் விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடிவருகின்றனர்.  #tamilnews

    தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெற வேண்டும், கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் இணைந்தார்களே தவிர பிரதமர் மோடி சொன்னதால் அல்ல என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று சிதம்பரம் வந்தார். விழா முடிந்ததும் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திரமோடி சொன்னதால் தான் இரு அணிகளும் இணைந்ததாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சொன்னதாக கேட்கிறீர்கள். அ.தி.மு.க.வை தோற்றுவித்தவர் எம்.ஜி.ஆர். அவரால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தை கட்டி காத்தவர் ஜெயலலிதா.

    அவரது வழியில் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வில் உள்ள 1½ கோடி தொண்டர்களையும் ஒருங்கிணைத்து, தமிழ்நாட்டில் தொடர்ந்து ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெற வேண்டும். கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் இணைந்தார்களே தவிர பிரதமர் மோடி சொன்னதால் அல்ல.

    இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். #tamilnews

    காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் தமிழகத்துக்கான நீரின் அளவை குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    விருத்தாசலம்:

    காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் தமிழகத்துக்கான நீரின் அளவை குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் விருத்தாசலம் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர். அங்கு அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து விருத்தாசலம் ஜங்சன் சாலை, கடலூர் சாலை வழியாக விருத்தாசலம் ஸ்டேட் வங்க் வரை ஊர்வலமாக சென்றனர்.

    அங்கு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது காவிரி தீர்ப்பில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை எதிர்த்து தமிழக எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோ‌ஷங்களை எழுப்பினர். 

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் அதிகார அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜ் தலைமை தாங்கினார். மக்கள் அதிகார அமைப்பு முருகானந்தம், செந்தாமரை கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #tamilnews

    ஸ்ரீமுஷ்ணம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

    ஸ்ரீ முஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வேலம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22) கட்டிட தொழிலாளி.

    இவர் நேற்று இரவு காட்டுமன்னார் கோவிலில் இருந்து வேலம்பூண்டிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    ரெட்டியூர் அருகே உள்ள தொட்டிபாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது மணிகண்டனின் கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து காட்டுமன்னார் கோவில் போலீசில் புகார் செய்யபட்டது. இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

    கடலூரில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் சிங்கிரிகுடி வடபுறம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 30). இவர் இன்று அதிகாலை அங்குள்ள நிலப்பகுதிக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த இளவரசன் (19) ராஜலட்சுமியை பின்தொடர்ந்து சென்றார்.

    இங்கு ஏன் வருகிறாய்? என்று ராஜலட்சுமி தட்டிக் கேட்டார். உடனே ஆத்திரம் அடைந்த இளவரசன் ராஜலட்சுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டார்.

    இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளவரசனை கைது செய்தனர். #tamilnews

    மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாக கூறும் அ.தி.மு.க .அரசு தமிழக நலனுக்கு எதுவும் செய்ய வில்லை என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். #kanimozhi

    கடலூர்:

    பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகில் நடந்தது.

    கூட்டத்துக்கு கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜா வரவேற்றார்.

    சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.கி.சரவணன், சபா.ராஜேந்திரன், கணேசன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் விஜயசுந்தரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் முல்லைவேந்தன், பால.அறவாழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம், மனித நேய மக்கள் மாவட்ட தலைவர் ஷேக்தாவூத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ராஜாரஹிமுல்லா, தி.மு.க. மாவட்ட அவை தலைவர் தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இதே மேடையை கடந்த தேர்தலுக்கு முன்னால் அமைத்து இருந்தால் இந்த கண்டன பொதுக்கூட்டத்திற்கே அவசியம் இருந்திருக்காது. இத்தனை போராட்டங்களை தமிழ்நாடு சந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் போராட்டம் நடத்தி இருக்க வேண்டிய நிலை வந்திருக்காது.

    தர்மயுத்தத்தை தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் தனக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கிடைத்ததும் அதை விட்டுவிட்டார். தலைநிமிர்ந்து நிற்க வேண்டிய தமிழ்நாடு தற்போது தலைகுனிந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

    இந்த அரசு மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாக உள்ளது. பஸ் கட்டணத்தை உயர்த்தினால் ரூ.38 கோடி லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தது தமிழக அரசு. ஆனால் நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது. மொத்தம் ரூ.28 கோடி தான் வசூல் ஆகி இருக்கிறது.

    தமிழக நலனுக்காக மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என்று கூறும் அ.தி.மு.க.வினரால் தமிழகத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரியை கூட கொண்டு வர முடியவில்லை. நீட் தேர்வை தள்ளி வைக்க முடிந்ததா? தமிழை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக கொண்டு வர முடியவில்லை.

    படித்த இளைஞர்களை பக்கோடா விற்க சொல்வது தான் பிரதமருக்கு அழகா?. இது தான் ஆட்சியா?

    தமிழ், சுயமரியாதை, பகுத்தறிவு என்று பேசினால் அதனை தேசதுரோகம் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நினைத்தால் 3 நாட்களில் எந்த பகை நாட்டையும் எதிர்த்து நிற்க முடியும். ஆனால் இந்திய ராணுவம் போருக்கு தயாராக 6 மாதங்கள் ஆகும் என்று கூறி ராணுவத்தை அவமானப்படுத்தி உள்ளார். அவர் கூறுவது, பகை நாட்டையா, இந்தியாவுக்குள்ளே போராடவா? சிறுபான்மையினருக்கு எதிராகவா? இந்த அளவுக்கு எப்படி பயிற்சி பெற்றார்கள், இதை எப்படி மத்திய அரசு அனுமதித்தது. மோகன்பகவத் கருத்துக்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும்.

    நாம் போராடி பெற்றது வாக்குரிமை. அதை யாருக்கும் அடகு வைத்து விடாதீர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வர அதை பயன்படுத்துங்கள்.

    முன்னதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மணி வாசகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் சிந்தனைசெல்வன், காங்கிரஸ் கட்சி வக்கீல் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். #tamilnews #kanimozhi

    குறிஞ்சிப்பாடி அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்தி வீட்டை சூறையாடியது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மண்டபம்மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு(வயது 42). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    நேற்று தங்கராசு வயலுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது செல்வமும், அதே பகுதியை சேர்ந்த லட்சுமணனும் சேர்ந்து தங்கராசுவை தாக்கினர்.

    இதுகுறித்து அவர் தனது உறவினர்களிடம் கூறினார். உடனே அவரது உறவினர்கள் ராஜேந்திரன், அருள்மொழி, ராஜசேகர் உள்பட 11 பேர் மண்டபம் மேட்டுக்குப்பம் பகுதியில் திரண்டனர். அவர்கள் அங்குள்ள செல்வம், லட்சுமணன் ஆகியோர் வீடுகளின் ஓடுகளை அடித்து உடைத்தனர்.

    பின்னர் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த டி.வி, பிரிட்ஜ் மற்றும் அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடிவிட்டு சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் செல்வம், லட்சுமணன் ஆகியோர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வீடுகளை சூறையாடிய ராஜேந்திரன், அருள்மொழி, ராஜசேகர், அரிதாஸ், சேதுபதி உள்பட 11 பேரை கைது செய்தனர்.

    இதேபோல் தங்கராசு கொடுத்த புகாரின்பேரில் சசிதரன், தாமோதரன், சண்முகம், மாயவேல் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    அமைச்சர் எம்.சி.சம்பத் ஆதரவாளர்களுக்கும், அவைத்தலைவர் அய்யப்பனின் ஆதரவாளர்களுக்கும் இடையே பனிப்போர் வெடிக்க தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் அ.தி.மு.க.வினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான எம்.சி. சம்பத் தலைமையில் நேற்று முன்தினம் கடலூரில் ஜெயலலிதா பிறந்தநாள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அவைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அய்யப்பன் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் கடலூர் அ.தி.மு.க.வினரிடையே சல சலப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பன் தலைமையில் அ.தி. மு.க. நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் தனியாக வழங்கும் விழா நேற்று நடந்தது.

    அமைச்சர் நடத்திய கூட்டத்தில் அமைச்சரின் ஆதரவாளர்களும், அய்யப்பன் நடத்திய கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    இது குறித்து அமைச்சரின் ஆதரவாளர்களிடம் கேட்டபோது, மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பனுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் தகவல் தெரிவித்தோம். ஆனால், அவர்கள் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றனர்.

    அதுபோல அய்யப்பன் ஆதரவாளர்களிடம் கேட்டபோது, இரு அணிகளும் இணைந்த பிறகு எங்களுக்கு யாரும் சரியான முறையில் கட்சி நிகழ்ச்சிகள் குறித்து தகவல் தெரிவிப்பதில்லை. அமைச்சர் எம்.சி.சம்பத் மாவட்ட செயலாளர் என்ற முறையில் கட்சிப்பணிகள் குறித்து எந்தவித ஆலோசனைகளையும் செய்ய வில்லை. எங்களிடம் பேசுவதும் இல்லை.

    மேலும் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை கட்சியில் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் நிர்வாகிகளுக்கு கொடுக்கலாம் என்பதால் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் வழங்கினர் என்றனர்.

    இதற்கிடையே இன்று கடலூர் வடக்கு ஒன்றிய பகுதிகளுக்கு மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பன் தலைமையில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி ரெட்டிச்சாவடியில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதனை தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் அந்த மண்டபம் முன்பு திரண்டனர். இந்த நிலையில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளரான முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் ஏழுமலை தலைமையில் அ.தி.மு.க. வினரும் அங்கு திரண்டனர்.

    அப்போது அங்கு வந்த மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பன், மண்டபத்துக்குள் நுழைந்தார். உடனே அங்கிருந்த அமைச்சரின் ஆதரவாளர்கள், எங்களை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏன் அழைக்க வில்லை? என்று கேட்டனர்.

    புதிய உறுப்பினர் படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சிதான் இங்கு நடக்கிறது. இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை அ.தி.மு.க.வினருக்கு யார் வேண்டுமானாலும் வழங்கலாம் என்று அய்யப்பன் ஆதரவாளர்கள் கூறினர்.

    அப்போது திடீரென்று அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும், அய்யப்பன் ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருதரப்பினரையும் சமரசம் செய்தனர். அதன் பின்பு அமைச்சரின் ஆதரவாளர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

    சிறிது நேரம் கழித்து அய்யப்பன் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

    கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் ஆதரவாளர்களுக்கும், அவைத்தலைவர் அய்யப்பனின் ஆதரவாளர்களுக்கும் இடையே பனிப்போர் வெடிக்க தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் அ.தி.மு.க.வினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

    தன்னுடைய நிலத்தை 4 பேர் கொண்ட கும்பல் அபகரித்து விட்டதால் மனவேதனை அடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கணிசம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 59), விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் அந்த பகுதியில் உள்ளது.

    அந்த நிலத்தை 4 பேர் கொண்ட கும்பல் அபகரித்து விட்டதாக தெரிகிறது. இந்த நிலத்தை மீட்டுத்தரக் கோரி கிருஷ்ணமூர்த்தி அதிகாரியிடம் பலமுறை மனுக்கள் கொடுத்திருந்தார். ஆனால், அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் மனவேதனை அடைந்தார்.

    இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி (திங்கட்கிழமை) கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் தன்னிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்கக்கோரி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்தார்.

    அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மனு கொடுக்க வந்த பொதுமக்களை சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். கிருஷ்ணமூர்த்தி வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் வி‌ஷப்பாட்டில் இருந்ததை கண்டு அதை பறிக்க முயன்றனர்.

    ஆனால், கிருஷ்ண மூர்த்தி அந்த வி‌ஷப்பாட்டிலை எடுத்து வி‌ஷத்தை குடித்து விட்டார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.

    அவரை போலீசார் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச் சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் கடந்த 6 நாட்க ளாக தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் கிருஷ்ண மூர்த்தி பரிதாபமாக இறந்தார்.

    இந்த தகவல் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தெரிய வந்தது. ஆஸ்பத்திரிக்கு வந்த அவர்கள் கதறி அழுதனர்.

    இதற்கிடையே தவறான சிகிச்சையால் கிருஷ்ணமூர்த்தி இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் ஆஸ்பத்திரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. #tamilnews

    காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த காட்டுக் கூடலூரை சேர்ந்தவர் கலைசெல்வன். இவர் சென்னையில் உள்ள தனியார் கட்டுமான கம்பெனி ஒன்றில் எலக்ட்ரி‌ஷனாக வேலை செய்து வருகிறார். இவர் இதற்கு முன்பு விருத்தாசலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அப்போது அதே மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்த கருங்குழியை சேர்ந்த சவுந்தர்யா(வயது 24) என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

    இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சவுந்தரி நேற்று காட்டுக் கூடலூரில் உள்ள தனது கணவன் வீட்டில் தனியாக இருக்கும் போது வீட்டில் உள்ள பெட்ரூமில் தூக்கில் பிணமாக தொங்கினார். மகள் சாவில் சந்தேக இருப்பதாக கூறி சவுந்தர்யாவின் தாய் சாவித்திரி முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார்.

    இதுபற்றி தகவலறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் குமாரய்யா, முத்தாண்டிடிக்குப்பம் சப் இன்ஸ்பெபெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று சவுந்தர்யாவின் பிணத்தை கைப்பற்றி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் சவுந்தரி தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீஸ் சப்-கலெக்டர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து திடீர் திருப்பமாக கலைசெல்வனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

    காட்டுமன்னார்கோவில் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள எய்யலூர் பகுதியை சேர்ந்தவர் ஏழைமுத்து (வயது 51). கூலித் தொழிலாளி.

    இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில தினங்களாகவே மன உளைச்சலுடன் இருந்து வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த ஏழைமுத்து நேற்று இரவு வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றார்.

    தூக்கில் தொங்கி கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார் கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டும் செல்லும் வழியிலேயே ஏழைமுத்து பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து காட்டுமன்னார் கோவில் போலீ சில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்- இன்ஸ் பெக்டர் சிவராமன் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

    தற்கொலை செய்து கொண்ட ஏழை முத்துவுக்கு அழகம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். #tamilnews

    ×