search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலூர் கலெக்டர் அலுவலகம்"

    • தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.
    • நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் காலையிலிருந்து கோரிக்கை மனு அளிக்க நேரில் வந்தனர்.

    இந்நிலையில் முதியவர் ஒருவர் மனுக்களை தலையில் கட்டி வைத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். அப்போது அந்த முதியவர் நெற்றியில் பட்டை நாமம் போட்டு கொண்டு வந்தார். அவரது தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.

    இவர் திட்டக்குடி வட்டம் வடகிராம பூண்டி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி ஆவார். அவர் கூறும்போது, எனது நிலத்திற்கு பட்டா மாற்ற செய்வதற்காக உரிய மனு அளித்தேன். இதற்கான உத்தரவு நகல் வந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் விருத்தாச்சலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்யும் அலுவலர் ஒருவர் இந்த நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

    வருவாய் துறையினரும் இதற்கு ஆதரவு அளித்து வருவதோடு அரசு புறம்போக்கு இடங்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என 33 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.

    33 முறை மனு அளித்த அனைத்து கோரிக்கை மனுவையும் மூட்டையாக தலையில் வைத்து கொண்டு வந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

    • பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து அவரை பிடித்து விசாரணை செய்தனர்.
    • சம்பவத்தால் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பொது மக்கள் கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வரக்கூடிய மக்களை முகப்பு பகுதியில் போலீசார் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதித்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை வாலிபர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். பின்னர் திடீரென்று இந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து அவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் பண்ருட்டி மருங்கூர் கிராமத்தை சேர்ந்த லிங்கமூர்த்தி (வயது 27) என்பதும், இவருடைய மனைவி மற்றும் 6 மாத குழந்தையை அவரது சகோதரர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் தெரியவந்தது. இவர்களை மீட்டு தர வலியுறுத்தி தீக்குளிக்க முயற்சித்தது போலீசாருக்கு தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் அந்த நபரிடம் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தீர்வு காண வேண்டும், இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரிக்கை செய்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

    • கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து வந்தனர்.
    • கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து வந்தனர்.

    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குமாரக்குடியை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 70), விவசாயி. இவர் இன்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்திற்கு மனு அளிப்பதற்காக வந்திருந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் மனு எழுதிவிட்டு, அதனை நகல் எடுப்பதற்காக சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார்.

    இது பற்றி அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் உடனே ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ராஜதுரை, கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜதுரை இறந்து விட்டதாக தெரிவித்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • ஒரு பெண் வழக்கம்போல் மனுவை வழங்கி விட்டு, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
    • கூடுதல் ஆட்சியர் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் மனுக்கள் பெற்றுவந்தார். அப்போது அங்கு வந்த ஒரு பெண் வழக்கம்போல் மனுவை வழங்கி விட்டு, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

    அப்போது அங்கிருந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அலுவலக வளாகத்தில் இருந்து அழைத்து வெளியில் வரப்பட்டு, பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில், சிதம்பரம் பள்ளிப்படை பகுதியை சேர்ந்த சத்தியவேணி. நான் வசிக்கக்கூடிய பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக வீடு கட்டி இருந்து வருகின்றேன்.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 4 பேர் திடீரென்று என் வீட்டை இடித்து விட்டனர். மேலும் எனது மகன் மற்றும் மகளை அடித்து துன்புறுத்தி வருகின்றனர். இது மட்டுமன்றி வீட்டிலிருந்த ஒரு லட்சத்து 27 ஆயிரம் பணத்தையும் திருடி சென்று விட்டனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது போலீசார் கூறுகையில், உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தால் உரிய நடவடிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுப்பார்கள் ஆகையால் இது போன்ற நடவடிக்கையில் இனி வருங்காலங்களில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூடுதல் ஆட்சியர் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×