search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cuddalore collector office"

    • தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.
    • நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் காலையிலிருந்து கோரிக்கை மனு அளிக்க நேரில் வந்தனர்.

    இந்நிலையில் முதியவர் ஒருவர் மனுக்களை தலையில் கட்டி வைத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். அப்போது அந்த முதியவர் நெற்றியில் பட்டை நாமம் போட்டு கொண்டு வந்தார். அவரது தலையில் இருந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டபோது தனது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்த கடிதம் என தெரிவித்தார்.

    இவர் திட்டக்குடி வட்டம் வடகிராம பூண்டி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி ஆவார். அவர் கூறும்போது, எனது நிலத்திற்கு பட்டா மாற்ற செய்வதற்காக உரிய மனு அளித்தேன். இதற்கான உத்தரவு நகல் வந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் விருத்தாச்சலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்யும் அலுவலர் ஒருவர் இந்த நகலை தர வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

    வருவாய் துறையினரும் இதற்கு ஆதரவு அளித்து வருவதோடு அரசு புறம்போக்கு இடங்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என 33 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.

    33 முறை மனு அளித்த அனைத்து கோரிக்கை மனுவையும் மூட்டையாக தலையில் வைத்து கொண்டு வந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

    • பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து அவரை பிடித்து விசாரணை செய்தனர்.
    • சம்பவத்தால் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பொது மக்கள் கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வரக்கூடிய மக்களை முகப்பு பகுதியில் போலீசார் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதித்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை வாலிபர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். பின்னர் திடீரென்று இந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து அவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் பண்ருட்டி மருங்கூர் கிராமத்தை சேர்ந்த லிங்கமூர்த்தி (வயது 27) என்பதும், இவருடைய மனைவி மற்றும் 6 மாத குழந்தையை அவரது சகோதரர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் தெரியவந்தது. இவர்களை மீட்டு தர வலியுறுத்தி தீக்குளிக்க முயற்சித்தது போலீசாருக்கு தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் அந்த நபரிடம் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தீர்வு காண வேண்டும், இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரிக்கை செய்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

    • கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து வந்தனர்.
    • கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து வந்தனர்.

    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குமாரக்குடியை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 70), விவசாயி. இவர் இன்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்திற்கு மனு அளிப்பதற்காக வந்திருந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் மனு எழுதிவிட்டு, அதனை நகல் எடுப்பதற்காக சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார்.

    இது பற்றி அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் உடனே ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ராஜதுரை, கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜதுரை இறந்து விட்டதாக தெரிவித்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கடலூர்:

    கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதிய பஸ் நிலையம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் அமைக்கப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க செம்மண்டலத்தில் ஒரு பல்லடுக்கு மேம்பாலமும் , ஜவான்ஸ் பவன் முதல் தினத்தந்தி வரை ஒரு போக்குவரத்து மேம்பாலமும் , முதுநகரில் போலீஸ் நிலையம் முதல் எம்.ஜி.ஆர் . சிலை வரை ஒரு போக்குவரத்து மேம்பாலமும் அமைத்திட வேண்டும்.

    கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் அரிசி பெரியாங்குப்பத்தில் உள்ள அரசு இடத்தில் தோட்டக்கலை பல்கலைக்கழகமும், விவசாயக் கல்லூரியும் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் புருஷோத்தமன், மனோகரன், கிருஷ்ணமூர்த்த , நடராஜனன், மாயவேல், இளங்கோவன் ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பொதுச்செயலாளர் மருதவாணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். நிர்வாகிகள் கோமதிநாயகம், கல்யாண்குமார், ஆறுமுகம், காசிநாதன், ரவிச்சந்திரன், கண்ணபிரான், கோபால், சண்முகம், ரங்கநாதன் பச்சையப்பன், ஜெகன், மாரியப்பன், மஞ்சினி, வீராசாமி, கண்ணன், அமர்நாத் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன. முடிவில் உதவி பொதுச்செயலாளர் தேவநாதன் நன்றி கூறினார்.
    போலீசாரை கண்டித்து 5 குழந்தைகளுடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்த பெண்ணால் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சிறுபாளையூர் காந்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ். தொழிலாளி. இவருடைய மனைவி சந்தியா(வயது 27). இவர் நேற்று தன்னுடைய 4 பெண் குழந்தைகள், 6 மாத ஆண் குழந்தையுடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்துக்கு வந்தார். அப்போது அவர் கொண்டு வந்த பையை அங்கிருந்த போலீசார் சோதனையிட்டனர். சோதனையில், அந்த பையில் மண்எண்ணெய் பாட்டில் இருந்தது. உடன் அந்த பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர், தனக்கு புதுச்சத்திரம் போலீசார் ஒரு பிரச்சினை தொடர்பாக தொல்லை கொடுப்பதாகவும், இது பற்றி கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து அவரை போலீசார் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதித்தனர். பின்னர் அவர் கலெக்டர் அலுவலகத்தில் மனுவை பதிவு செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி எங்கள் ஊரை சேர்ந்த ஒருவர் மதுபோதையில், எனது கணவரிடம் புகையிலை பொருள் கேட்டார். அதற்கு எனது கணவர் இல்லை என்று கூறியதால், அவரை அந்த நபர் அடிக்க வந்தார். இதில் தவறி கீழே விழுந்த அவருக்கு காயம் ஏற்பட்டது. ஆனால் அவர் எனது கணவர் அடித்து விட்டதாக கூறி புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே எனது கணவர் வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் புதுச்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் எனது கணவரை தேடி வீட்டுக்கு வந்தனர்.

    ஆனால் அவர் வீட்டில் இல்லாததால் என்னை திட்டி, உங்களை குடும்பத்தோடு சிறையில் அடைத்து விடுவேன் என்று மிரட்டினர். அதன்பிறகு எனது கணவரை வரவழைத்து போலீஸ் நிலையத்துக்கு சென்றேன். அங்கு எனது கணவர் மீது புகார் கொடுத்தவருக்கு ரூ.80 ஆயிரத்தை கொடுக்குமாறு போலீசார் கூறினர்.

    இதற்கு மறுத்ததால் அந்த நபர், போலீசாருடன் தினமும் வீட்டிற்கு வந்து திட்டி, மிரட்டுகிறார். தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதால் நாங்கள் உயிரை விடுவதை தவிர வேறு வழியில்லை. ஆகவே அந்த நபர் மற்றும் போலீசார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    மணிமண்டபத்தை கட்டி முடித்ததற்கு பணம் தராததால் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கட்டிட தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் புதிய கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக அளித்தனர்.

    விருத்தாசலம் அருகே உள்ள புதுப்பேட்டையை சேர்ந்தவர் ராஜாராம். கட்டிட தொழிலாளி. இவர் கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனுவுடன் இன்று வந்தார்.

    கலெக்டர் அலுவலக வளாகத்தில் அவர் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை பாட்டிலை எடுத்து திடீரென்று உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கு விரைந்து வந்து ராஜாராம் வைத்திருந்த மண்எண்ணை பாட்டிலை பறித்தனர். தொடர்ந்து அவர் உடல் மீது தண்ணீரை ஊற்றினர். இது குறித்து ராஜாராமிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டம் நான்கோட்டிமுனை என்ற கிராமத்தில் உள்ள ஒருவரின் தாய்க்கு மணிமண்டபம் கட்டும் பணியை என்னிடம் ஒப்படைத்தனர்.

    அதற்கு அவர்கள் முன்பணமாக ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்தனர். மீதி பணத்தை நீங்களே போட்டு வேலையை முடியுங்கள். கடைசியில் நாங்கள் அந்த பணத்தை கொடுத்து விடுகிறோம் என்றனர். அவர்கள் சொன்னபடி நான் பலரிடம் கடன் வாங்கி அந்த மணிமண்டபத்தை கட்டி முடித்து கொடுத்தேன். ஆனால், அவர்கள் இது வரை எனக்கு தரவேண்டிய மீதி பணத்தை கொடுக்கவில்லை.

    இது குறித்து போலீசில் புகார் செய்தும் எந்தவித பயனும் இல்லை. மேலும் விருத்தாசலம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளேன். அதுவும் நிலுவையில் உள்ளது.

    இந்த சம்பவத்தால் மிகுந்த மனம் உடைந்த நான் கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றேன்.

    இவ்வாறு அவர் போலீ சாரிடம் கூறினார்.

    பின்னர் அவரை சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.15 லட்சம் வரை கட்டண பாக்கி உள்ளதால் மின் இணைப்பை துண்டிக்க மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர். இதானால் பணிகள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன.
    கடலூர்:

    கடலூர் செம்மண்டலம் பகுதியில் புதிய கலெக்டர் அலுவலகம் உள்ளது. இங்கு வருவாய்த்துறை, பஞ்சாயத்துத்துறை, தமிழ்த்துறை, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு துறைகள் உள்ளன.

    இங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்குள்ள துறைகளில் கம்ப்யூட்டர்கள் மூலம் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் இந்த அலுவலகத்தில் மின் இணைப்புக்கான கட்டணம் பல மாதங்களாக கட்டப்படாமல் இருந்தது. ரூ.15 லட்சம் வரை கட்டண பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்துக்கு மின்வாரியம் சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனால் அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளவில்லை.

    மின்சார கட்டணம் கட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து மின் இணைப்பை துண்டிக்க மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று மாலை மின்வாரிய ஊழியர்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் அந்த கட்டிடத்திற்கான மின் இணைப்பை துண்டித்தனர். உடனே அங்கிருந்த அதிகாரிகள் மின் ஊழியர்களிடம், மின் இணைப்பை ஏன் துண்டித்தீர்கள் என கேட்டனர்.

    அதற்கு அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பல மாதங்களாக மின் கட்டணம் கட்டப்படாமல் இருந்தது. அதனால் மின் இணைப்பை துண்டித்துள்ளோம் என்றனர்.

    மின் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டதால் கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் இயங்கிய பல துறைகளின் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இன்று 2-வது நாளாகவும் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. பணிகள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர்கள் அனைத்தும் செயலிழந்தன. ஊழியர்கள் பணியில் ஈடுபட முடியாமல் தவித்து வருகிறார்கள். #tamilnews
    விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட கடும் கட்டுப்பாடு விதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி இந்து முன்னணி கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று கடலூர் நகர இந்து முன்னணி கட்சி ஒருங்கிணைப்பாளர் மகாராஜன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

    விநாயகர் சதுர்த்தி வருகிற 13-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் மற்றும் சிலைகள் கரைப்பதில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    இது இந்துக்களுக்கு மதவழிபாட்டு உரிமையை மறுப்பதுபோல் உள்ளது. தற்போது போலீசார் விநாயகர் சதுர்த்தி விழா சம்பந்தமாக கலெக்டர் மற்றும் சப்-கலெக்டரிடம் அனுமதி வாங்கி விட்டு கொண்டாட முடியும் என கூறியுள்ளனர்.

    இதனால் அடிதட்டு மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விழாவை எளிதாகவும், கட்டுப்பாடு இல்லாமலும் பொதுமக்கள் கொண்டாட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு கிராமத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக அளித்தனர்.

    பண்ருட்டி அருகே உள்ள மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் மேல்மாம்பட்டு கிராமத்தில் கடந்த 9 மாதங்களாக கடுமையான குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் செய்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    புறம்போக்கு நிலத்துக்கு பட்டா கேட்டு கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மனு கொடுப்பதற்காக பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தீவிர சோதனை நடத்திய பின்னரே கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதித்தனர்.

    அப்போது கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி (வயது 29) என்பவர் தனது குடும்பத்தினருடன் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தார். அவர்களை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் பெட்ரோல் கேன் இருந்ததை கண்டு பிடித்தனர். உடனே அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் ராமசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கூறியதாவது:-

    எங்கள் (ராயர்பாளையம்) பகுதியில் உள்ள 3½ ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் எங்களது கால் நடைகளை மேய்த்து பராமரித்து வருகிறோம். தற்போது திட்டக்குடியை அடுத்த குடிகாடு பகுதியை சேர்ந்த ஒருவர் இந்த நிலத்தை நான் பராமரிக்க போகிறேன். இந்த நிலத்தை இனிமேல் நீ பராமரிக்கக்கூடாது என்று கூறி மிரட்டல் விடுத்தார். கால்நடைகளை நம்பியே எங்களது வாழ்வாதாரம் உள்ளதால் கால்நடைகளை பராமரிக்க வழியில்லாமல் தவித்து வருகிறோம்.

    எனவே அந்த புறம்போக்கு நிலத்துக்கு எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். எங்களுக்கு மிரட்டல் விடுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினைக்காக இன்று கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தோம். எங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் தற்கொலை செய்ய முடிவு எடுத்து கையில் பெட்ரோல் கேன் கொண்டு வந்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெட்ரோல் கேனுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வாலிபர் ஒருவர் வந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சத்துணவு அமைப்பாளர் பணியை தனக்கு தரக்குகோரி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கணவருடன் இளம்பெண் திடீரென உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தனிச பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40). இவரது மனைவி ரேவதி (32). இன்று காலை கணவனும் மனைவியும் கடலூர் புதிய கலெக்டர் அலவலகம் வந்தனர்.

    பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து திடீரென்று உண்ணாவிரதம் இருந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுநகர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உண்ணாவிரதம் இருந்த ரேவதி மற்றும் பாஸ்கரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ரேவதி போலீசாரிடம் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் தனிசபாக்கத்தில் வசித்து வருகிறோம். இந்த பகுதி அண்ணாகிராமம் ஒன்றியத்துக்கு உட்பட்டதாகும். கடந்த பிப்ரவரி மாதம் அண்ணாகிராம ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர் பணிக்காக நேர்முக தேர்வு நடைபெற்றது. இதில் நான் கலந்து கொண்டேன்.

    என் கணவர் தலையில் அடிப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னுடன் நேர்முகதேர்வு எழுதிய பலருக்கு வேலை கிடைத்துவிட்டது. ஆனால் எனக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இந்த பகுதியில் உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியை எனக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் ரேவதியை கலெக்டர் அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர். பின்னர் அவர் அங்கிருந்த அதிகாரியிடம் தனது கோரிக்கை மனுவை கொடுத்தார். 

    அபகரிக்கப்பட்ட தனது நிலத்தை மீட்டுத் தரக்கோரி 13 கிலோ மனுக்களை தலையில் சுமந்தபடி மூதாட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில்நேற்று குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆண்களும், பெண்களும் கையில் மனுக்களுடன் வந்திருந்தனர்.

    அப்போது விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுகா கூத்துக்குடி புதுக்காலனியை சேர்ந்த மூதாட்டி குண்டுப்பிள்ளை(வயது 62) என்பவர், தனது மகன் குமாரவேலுவுடன் 13 கிலோ எடை கொண்ட கோரிக்கை மனுக்களை தலையில் சுமந்தபடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

    பின்னர் அவர்கள் மனு நகல்களின் மூட்டையையும், புதிதாக கொடுக்க இருந்த மனுவையும் கலெக்டர் தண்டபாணியிடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவரிடம் விசாரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா, ஐவதுகுடி கிராமத்தில் எனக்கு சொந்தமான 2 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்து விட்டனர். இதை மீட்டு தரக்கோரி 11 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள், அமைச்சர்கள் என இதுவரை நான் கொடுத்த மனுக்களின் மொத்த எடை 13 கிலோ ஆகும்.

    இதோ அந்த மனுக்களின் நகல்கள். நல்லது நடக்க வேண்டும் என்றால் தீக்குளிக்கத்தான் செய்யணும். 11 ஆண்டுகளுக்கு முன்பு நான் குண்டாக இருந்தேன். மனுகொடுக்க அலைந்து மெலிந்து விட்டேன் என்றார்.

    உடனே கலெக்டர் தண்டபாணி, தீக்குளித்து விடாதீர்கள், மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்றார். பின்னர் அந்த மூதாட்டி மகனுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
    ×