என் மலர்
செய்திகள்

கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத்-அய்யப்பன் ஆதரவாளர்கள் திடீர் மோதல்
கடலூர்:
கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான எம்.சி. சம்பத் தலைமையில் நேற்று முன்தினம் கடலூரில் ஜெயலலிதா பிறந்தநாள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அவைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அய்யப்பன் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் கடலூர் அ.தி.மு.க.வினரிடையே சல சலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பன் தலைமையில் அ.தி. மு.க. நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் தனியாக வழங்கும் விழா நேற்று நடந்தது.
அமைச்சர் நடத்திய கூட்டத்தில் அமைச்சரின் ஆதரவாளர்களும், அய்யப்பன் நடத்திய கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
இது குறித்து அமைச்சரின் ஆதரவாளர்களிடம் கேட்டபோது, மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பனுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் தகவல் தெரிவித்தோம். ஆனால், அவர்கள் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றனர்.
அதுபோல அய்யப்பன் ஆதரவாளர்களிடம் கேட்டபோது, இரு அணிகளும் இணைந்த பிறகு எங்களுக்கு யாரும் சரியான முறையில் கட்சி நிகழ்ச்சிகள் குறித்து தகவல் தெரிவிப்பதில்லை. அமைச்சர் எம்.சி.சம்பத் மாவட்ட செயலாளர் என்ற முறையில் கட்சிப்பணிகள் குறித்து எந்தவித ஆலோசனைகளையும் செய்ய வில்லை. எங்களிடம் பேசுவதும் இல்லை.
மேலும் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை கட்சியில் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் நிர்வாகிகளுக்கு கொடுக்கலாம் என்பதால் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் வழங்கினர் என்றனர்.
இதற்கிடையே இன்று கடலூர் வடக்கு ஒன்றிய பகுதிகளுக்கு மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பன் தலைமையில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி ரெட்டிச்சாவடியில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் அந்த மண்டபம் முன்பு திரண்டனர். இந்த நிலையில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளரான முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் ஏழுமலை தலைமையில் அ.தி.மு.க. வினரும் அங்கு திரண்டனர்.
அப்போது அங்கு வந்த மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பன், மண்டபத்துக்குள் நுழைந்தார். உடனே அங்கிருந்த அமைச்சரின் ஆதரவாளர்கள், எங்களை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏன் அழைக்க வில்லை? என்று கேட்டனர்.
புதிய உறுப்பினர் படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சிதான் இங்கு நடக்கிறது. இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை அ.தி.மு.க.வினருக்கு யார் வேண்டுமானாலும் வழங்கலாம் என்று அய்யப்பன் ஆதரவாளர்கள் கூறினர்.
அப்போது திடீரென்று அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும், அய்யப்பன் ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருதரப்பினரையும் சமரசம் செய்தனர். அதன் பின்பு அமைச்சரின் ஆதரவாளர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
சிறிது நேரம் கழித்து அய்யப்பன் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் ஆதரவாளர்களுக்கும், அவைத்தலைவர் அய்யப்பனின் ஆதரவாளர்களுக்கும் இடையே பனிப்போர் வெடிக்க தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் அ.தி.மு.க.வினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews






