search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    எடப்பாடி ஆட்சியில் தமிழகம் வெற்று நடை தான் போடுகிறது- மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழகம் வெற்றி நடைபோடவில்லை என்றும் வெற்று நடைதான் போடுகிறது என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    திருப்பூர்:

    உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்  பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இன்று 3-வது நாளாக திருப்பூர்-காங்கயம் பிரிவில் உள்ள ராக்கியாபாளையம் பிரிவு பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    திருப்பத்தை ஏற்படுத்த கூடிய ஊர் தான் திருப்பூர். ஒரு காலத்தில் ‘டாலர் சிட்டி’ என்று அழைக்கப்பட்டு வந்த திருப்பூர் தற்போது நடைபெறும் ஆட்சியால் ‘டல்’ சிட்டியாக மாறிவிட்டது.

    இந்தியாவிலேயே முதன் முதலாக உள்ளாட்சி துறையில் திருநங்கைகளுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்து, பதவியில் அமர்த்தி அழகு பார்த்த கட்சி தி.மு.க. இதுதவிர திருநங்கைகளுக்கு என தனி வாரியம் அமைத்ததும் தி.மு.க தான்.

    தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் திருநங்கைகளின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். தமிழகத்தில் ஆளுங்கட்சியினர் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க ஆட்சி அமைத்தவுடன் மேற்கு மண்டலத்தில் உள்ள தொழில் வளர்ச்சிக்கு என தனிகவனம் செலுத்தப்படும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வருகிறது என்ற காரணத்தினாலேயே அது தள்ளுபடி, இது தள்ளுபடி என மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அறிவித்து வருகிறார். கடந்த 10 வருடமாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசு மக்களுக்கு இதுவரை எதுவும் செய்ததில்லை.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெயரில் மட்டும் தான் ஸ்மார்ட் உள்ளது. ஊழல் திட்டத்திற்கு மறுபெயர் தான் ஸ்மார்சிட்டி திட்டம். அதன் பெயரிலேயே பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகின்றனர். பழைய கட்டிடத்திற்கு பச்சை பெயிண்ட் அடித்து தான் மினி கிளினிக் என அழைத்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் 4 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி எதுவும் செய்யாமல், ஆட்சி முடிய போகும் கடைசி நேரத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். திட்டங்களை தொடங்கி வைப்பதோடு மட்டுமில்லாமல் அதிகளவில் வேலைவாய்ப்பு உருவாகும் என்றெல்லாம் பேசி வருகிறார். நான் கேட்கிறேன் எடப்பாடி பழனிசாமியா? அல்லது மந்திரவாதி பழனிசாமியா?.

    அ.தி.மு.க ஆட்சி அமைத்ததில் இருந்து வெறும் வாய்ஜாலம் மட்டுமே நிகழ்த்தி வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா மிஷன் 2020 என்ற திட்டத்தை அறிவித்தார். அதில் தனிநபர் வருமானம் அதிகரிக்கப்படும், 15 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். தமிழகத்தில் 2 மருத்துவ நகரங்கள் அமைக்கப்படும் என்றெல்லாம் அறிவித்தார். ஆனால் கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இதுவரை எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இப்போது முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி அந்த திட்டங்களை நிறைவேற்றினாரா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

    அ.தி.மு.க ஆட்சியில் 2 முறை உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முதலீடுகளை ஈர்த்ததாகவும், லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர். ஆனால் இதுவரை எதுவுமே நடந்தபாடில்லை. இப்படி கொடுத்த வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றாதவர் என்றால் அது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டும் தான். பொய்கள் சொல்வதில் பழனிசாமிக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம்.

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி தான். ஆனால் ஏதோ இந்த திட்டத்தை தாங்கள் நிறைவேற்றி விட்டதாக இந்த பகுதியில் பெருமை சொல்லி வருகிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
    தி.மு.க ஆட்சி அமைந்ததும் அத்திக்கடவு-அவினாசி திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டு வரும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழகம் வெற்றி நடைபோடவில்லை. வெற்று நடைதான் போடுகிறது. தற்போதைய அரசை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர். அ.தி.மு.க அரசு அனைத்து துறைகளையும் சீரழித்து விட்டது. திருப்பூரில் பின்னலாடை தொழில் மற்றும் சிறு, குறு தொழில்கள் பின்தங்கியதற்கு மத்திய, மாநில அரசுகளின் தவறான பொருளாதார கொள்கையே காரணம். எனவே தி.மு.க ஆட்சி அமைத்ததும் சிறு, குறு தொழில்களுக்கு என சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்திற்கு வந்த மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் தி.மு.கவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசார  கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த மு.க.ஸ்டாலினுடன் அங்கு கூடியிருந்த மக்கள் போட்டி போட்டு செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர். மு.க.ஸ்டாலின் பொதுமக்களுடன் கைகுலுக்கினார்.

    பின்னர் பிரசார மேடைக்கு சென்ற மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

    அதனை தொடர்ந்து- மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்த வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது.

    அதன்பின் ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியை திறந்து அதில் இருந்து ஒவ்வொரு மனுக்களாக எடுத்து படித்து, மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அந்த குறைகளுக்கான தீர்வை தங்கள் ஆட்சி அமைந்தவுடன் தீர்த்து வைப்பதாகவும் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

    மக்களின் குறைகள் அனைத்தையும் கேட்டு முடித்த ஸ்டாலின் அந்த பெட்டியை பூட்டி சீல் வைத்தார். உடனடியாக அந்த பெட்டி அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது. 
    Next Story
    ×