search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.எஸ்.அழகிரி
    X
    கே.எஸ்.அழகிரி

    ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும்- கே.எஸ்.அழகிரி

    பாரதிய ஜனதாவின் ஊதுகுழலாக மாறிய ராஜேந்திர பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைகிறவரை வாய்மூடி மவுனிகளாகவும், கொத்தடிமைகளாகவும் இருந்த அமைச்சர்கள் இன்றைக்கு வரம்பு மீறி அநாகரீகமாகப் பலகுரல்களில் பேசுகிற சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இவர்களை கட்டுப்படுத்துகிற அதிகாரம் இல்லாதவராக இருக்கிறாரா?

    இத்தகைய அநாகரீகப் பேச்சுகள் நடைபெறுவதற்கு மறைமுகமாக ஊக்கம் தருகிறாரா? இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பத்திரிகையாளர்களிடம் வாய்க்கு வந்தபடி கீழ்த்தரமான அநாகரீகமான வார்த்தைகளை சமீபத்தில் அள்ளி வீசியிருக்கிறார்.

    தமிழக அரசு கேட்பதையெல்லாம் நரேந்திர மோடி அரசு வாரி வழங்குவதாக கூறிய ராஜேந்திர பாலாஜி, மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கியிருப்பதை குறிப்பிடுகிறார். மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை நிரப்புவது யார்? தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் தேர்வு காரணமாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வெளிமாநில மாணவர்கள் தான் அந்த இடத்தை நிரப்பி வருகிறார்கள் என்பதை ராஜேந்திர பாலாஜி அறிவாரா?

    தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவிற்கு மோடி அரசிடமிருந்து இதுவரை ஒப்புதல் பெற முடியாத அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் பா.ஜ.க.விற்கு பல்லக்கு தூக்குவது ஏன்? தமிழக மாணவர்களின் எதிர் காலத்தைப் பாழடித்து வருகிற நீட் தேர்வு திணிக்கப்படுவதை தடுக்கமுடியாத நிலையில் இருக்கிற அ.தி.மு.க. அமைச்சர்கள் இப்படி பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது?

    திருச்சியில் பா.ஜ.க. நிர்வாகி கொல்லப்பட்டதற்கு தனிப்பட்ட பகைதான் காரணமே தவிர மதமோ, அரசியலோ காரணமல்ல என்பதை காவல்துறையினர் தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள். கொலையாளிகளை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

    ஆனால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ இந்த கொலைக்குக் காரணம் இஸ்லாமியப் பயங்கரவாதம் என்று பேசியிருப்பது அப்பட்டமான சட்டவிரோதப் பேச்சாகும். அவரது பேச்சுக்கு என்ன ஆதாரம்? ஒரு அமைச்சரே, ஒரு கொலை குறித்து ஆதாரமற்ற கருத்துக்களை பொறுப்பற்ற முறையில் கூறினால் காவல்துறையினரின் விசாரணையை பாதிக்காதா? சமீபகாலமாக பா.ஜ.க.வின் ஊதுகுழலாக ராஜேந்திர பாலாஜி மாறியது ஏன்?

    எதைப் பேசுவது, எதைப் பேசக் கூடாது என்கிற அடிப்படை நாகரீகம் கூட அறியாத வகையில் அனைத்துக் கட்சிகளின் மீதும் சேற்றை வாரி இறைத்திருக்கிறார்.

    இவரது பேச்சை ஆய்வு செய்கிற எவரும் இனி ஒரு நிமிடம் கூட இவர் அமைச்சரவையில் நீடிப்பதற்கு தகுதியற்றவர் என்ற முடிவுக்குத்தான் வருவார்கள். ஏனெனில், இவரது பேச்சு மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்ற வகையிலும், மதங்களிடையே வன்மத்தை வளர்த்து கலவரத்தை உருவாக்குகிற வகையிலும் இருப்பதை எவரும் மறுக்கமுடியாது.

    ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதால் ஊடக வெளிச்சமும் கூடுதலாக கிடைக்கிறது. இதில் மயக்கமுற்று கிடக்கிற அவர், ஆக்கப்பூர்வமாக பேசுவதற்கு அருகதை இல்லாத காரணத்தால் ஒரு மனநோயாளியின் உளறலாகவே அவரது பேச்சு இருந்து வருகிறது. இது குறித்து முதல்-அமைச்சர் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

    மதநல்லிணக்கத்தை குலைத்து, வன்முறையைத் தூண்டுகிற முறையில்; இவரது பேச்சு இருப்பதால் உடனடியாக ராஜேந்திர பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். இப்பேச்சு அரசமைப்புச் சட்டப்படி எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு எதிரானதாகும். எனவே, முதலமைச்சர் இவரை பதவியை விட்டு நீக்க வேண்டும். இல்லையென்றால், ஆளுநர் தலையிட்டு இவரை அமைச்சரவையிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஏனெனில், இவரது பேச்சு அப்பட்டமான சட்ட விரோதமாக அமைந்திருப்பதால் அமைச்சரவையில் இவர் தொடர்ந்து நீடிப்பாரேயானால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மதக்கலவரங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உருவாகிவிடுமென எச்சரிக்க விரும்புகிறேன்.

    தமிழகத்தில் ரத்தக் களறியை உருவாக்குவதுதான் ராஜேந்திர பாலாஜியின் நோக்கம் என்றால் அதை முறியடிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஜனநாயக மதச்சார்ப்பற்ற சக்திகளுக்கு இருக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×