search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம்- திருமாவளவன்
    X

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம்- திருமாவளவன்

    தமிழக எம்.பி.க்கள் ஒட்டு மொத்தமாக தங்களது பதவியை ராஜினாமா செய்வது மட்டுமே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உத்திரவாதமாக இருக்கும் என திருமாவளவன் கூறினார். #CauveryManagementBoard

    திருச்சி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக அளிக்கப்பட்ட கால அவகாசத்திற்கான கடைசி நாள் இன்று. கோர்ட்டு விதித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறது.

    மத்திய அரசின் இந்த செயல் ஒட்டுமொத்த தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம். இந்த சூழ்நிலையில் தமிழக அரசு நேற்று மாலை அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளது. அந்த கூட்டத்தில் தெளிவான எந்த ஒரு முடிவும் எடுத்ததாக தகவல் இல்லை.

    தமிழக அரசு மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம். ஆனால் அதுபோன்ற நடவடிக்கை ஒருபோதும் காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுத்தராது.


    பாராளுமன்றத்தில் நவநீத கிருஷ்ணன் எம்.பி. தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தற்கொலை செய்துகொள்வோம் என்று கூறியிருப்பது உணர்ச்சிவசப்பட்ட வார்த்தையாக மட்டுமே பார்க்கப்படுவதோடு, மக்கள் அதனை ஒரு நாடகம் என்றே நினைக்க தோன்றும்.

    காவிரி இறுதி தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ஸ்கீம் என்பதன் பொருள் என்ன என்று கேட்டு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்ய உள்ளது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இருந்து காலம் தாழ்த்தும் நடவடிக்கையாகும்.

    தமிழக எம்.பி.க்கள் ஒட்டு மொத்தமாக தங்களது பதவியை ராஜினாமா செய்வது மட்டுமே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உத்திரவாதமாக இருக்கும். அதுவே நேர்மையான அணுகுமுறையாகும்.

    50 எம்.பி.க்கள் ராஜினாமா செய்தால் அது அரசியலைப்பு சட்டத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்துவதோடு, மத்திய அரசின் கவனத்தையும் ஈர்க்கும். அனைத்து கட்சி நடைபெற்றதில் இருந்தே நான் இதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

    இன்னும் 10 முதல் 25 ஆண்டுகளில் தமிழகம் குடி நீருக்கு அலையும் மாநிலமாக மாறிவிடும். ஹைட்ரோ கார்பன் போட்ட திட்டங்களால் ஒட்டுமொத்த டெல்டா மாவட்டத்தையும் மத்திய அரசு வேட்டையாட பார்க்கிறது. நெற்களஞ்சியமாக திகழும் மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும்.

    அங்கு வாழும் விவசாய மக்கள் புலம்பெயரும் நிலை ஏற்படும். நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து வைகோ நடத்தும் நடைபயணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்துகொள்ளும்.

    கூட்டுறவு சங்க தேர்தலுக்காக பல்வேறு இடங்களில் மோதல்கள் நடந்து வருகிறது. என்னை பொறுத்தவரை கூட்டுறவு சங்க தேர்தலே தேவையற்றது. ஆளுங்கட்சியினரையே கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவிகளில் நியமிக்கலாம்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினையை திசை திருப்பவே ஸ்டெர்லைட் பிரச்சினை தூண்டிவிடப்பட்டுள்ளதாக கூறுவதை ஏற்கமுடியாது. ஏனென்றால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது. மதவாத பிரச்சினையை தூண்டி விடவும் தயங்காது.

    காவிரி பிரச்சினையில் கேரளா மாநிலம் மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருக்கிறது. அவர்களை விட காவிரி பிரச்சினை நமக்குத்தான் அதிகம். முன்னாள் அமைச்சர் கே.என்.ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்பட வில்லை.

    சி.பி.ஐ. நடத்தி வரும் விசாரணையில் குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள் என நம்புகிறேன். ஒரு சில வழக்குகளில் சி.பி.ஐ.யும் மெத்தனம் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #CauveryManagementBoard #thirumavalavan

    Next Story
    ×