search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி நீர் பிரச்சனை"

    • கர்நாடகா அரசும், அம்மாநில கட்சிகளும், அரசியல் ஆதாயத்திற்காக காவிரி பிரச்சனையில் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான போக்கையே கடைப்பிடிக்கின்றன.
    • காவிரி தண்ணீரில் தமிழக மக்களின் வாழ்வாதாரமே அடங்கி இருக்கிறது. இதில் அரசியலை புகுத்துவது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை டெல்லியில் கூட இருக்கிறது. இம்முறையாவது தமிழகத்திற்கு உரிய பங்களிப்பை அளிக்க கர்நாடகா அரசிற்கு உரிய உத்தரவை ஆணையம் பிறப்பிக்க வேண்டும்.

    காவிரி மேலாண்மை ஆணையம் 28 கூட்டங்களை கூட்டியுள்ளது, ஒவ்வொரு கூட்டத்திலும் தமிழகத்திற்கு உரிய நீரை அளிக்க கர்நாடக அரசிற்கு ஆணையம் வலியுறுத்துவதும், அதை அம்மாநில அரசு மறுப்பதும் தொடர் கதையாக உள்ளது. தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இப்பிரச்சனைக்கு காவிரி மேலாண்மை ஆணையம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இரு மாநில மக்களின் தேவைக்கும், அவசியத்திற்கும் ஏற்ப உத்தரவுகளை இடவேண்டும்.

    கர்நாடகா அரசும், அம்மாநில கட்சிகளும், அரசியல் ஆதாயத்திற்காக காவிரி பிரச்சனையில் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான போக்கையே கடைப்பிடிக்கின்றன. இது சரியான செயலல்ல. காவிரி தண்ணீரில் தமிழக மக்களின் வாழ்வாதாரமே அடங்கி இருக்கிறது. இதில் அரசியலை புகுத்துவது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

    நாளை (4-ந்தேதி) நடைபெற இருக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் தமிழக மக்களின் தேவையறிந்து, கடந்த காலத்தில் இரு மாநில அரசுகளும் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய, உரிய தண்ணீரை பெற்றத்தர உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காங்கிரஸ் அரசு எடுக்கவில்லை.
    • பெங்களூருவில் இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி முழுக்க முழுக்க கர்நாடக காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வி.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

    உலகின் முன்னணி பெரு நகரங்களில் ஒன்றான பெங்களூருவில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    தண்ணீர் இல்லாததால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை, வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுறுத்தியுள்ளது. ஆனால், வீட்டிலும் தண்ணீர் இல்லாததால், வேலை செய்ய முடியாமல் ஊழியர்கள் தவித்து வருகின்றனர். கார்களை கழுவினால் ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. இதிலிருந்து நிலைமை எந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்று ஓராண்டு ஆகப்போகிறது. குடிநீர் தட்டுப்பாடு என்பது ஒரு சில நாட்களில் ஏற்பட்டுவிடும் இயற்கை பேரிடர் அல்ல. போதுமான மழை இல்லை என்பதும், அதனால் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு வரும் என்பதும் தெரிந்த விஷயம் தான்.

    ஆனாலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காங்கிரஸ் அரசு எடுக்கவில்லை. பெங்களூருவில் இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி முழுக்க முழுக்க கர்நாடக காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வி.

    கர்நாடக முதல்வர் சித்தராமையா - துணை முதல்வர் டி. கே.சிவகுமார் - காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே என முக்கோண அரசியலில் சிக்கி கர்நாடக மக்கள் தவிக்கின்றனர். இவர்கள் மூவரும் தங்களுக்குள் ஒருவரையொருவர் வீழ்த்த போட்டி போடுகின்றனரே தவிர, மக்களைப் பற்றி துளியும் கவலைப்படவில்லை. அதன் விளைவுதான் குடிநீர் பஞ்சம்.

    கர்நாடக காங்கிரஸ் அரசில் இந்த மூவர் தவிர, சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரும் தலையிடுகின்றனர். இந்த ஆறு பேரும் தலையிடுவதால் அரசு நிர்வாகம் செயலிழந்திருக்கிறது.

    காங்கிரஸ் ஆளும் மூன்று மாநிலங்களில் வளமான மாநிலம் கர்நாடகம் என்பதால் அதனை தங்களது கஜானாவாகவே காங்கிரஸ் கட்சி பார்க்கிறது. இதன் விளைவுதான் கார்களை கழுவினால் ரூ. 5,000 அபராதம் என்ற அறிவிப்பு.

    காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வியால் ஏற்பட்ட குடிநீர் பஞ்சத்தால் கர்நாடக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து மக்களைத் திசைதிருப்பவும், கர்நாடக மக்களின் உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் அடையவும், 'தமிழகத்திற்கு ஒரு சொட்டு கூட தண்ணீர் தரமாட்டோம்' என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்திருக்கிறார்.

    பெங்களூரு குடிநீர் பஞ்சத்தை காரணம் காட்டி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தர மறுக்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு. இதற்கு கடும் எதிர்ப்பை தமிழக அரசு தெரிவிக்காமல், கர்நாடக அரசுடன் போராடி நீரை பெற்று தராமல் தமிழகத்திற்கு துரோகம் செய்து வருவது கடும் கண்டனத்துக்குரியது

    காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை வாரி வழங்கியிருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, கர்நாடக முதல்வர் சித்ததராமையாவுக்கு கண்டனம் தெரிவிக்க கூட நேரம் இல்லை.

    கர்நாடக அரசு பாடத்திட்டத்தில், ஈ.வெ.ராமசாமியின் இந்து விரோத வரலாற்றை சேர்க்க, கர்நாடக காங்கிரஸ் அரசுடன் தனக்குள்ள நட்பை பயன்படுத்த தெரிந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழகத்திற்கு தண்ணீர் கேட்க முடியவில்லை.

    இனியும் தமிழக மக்களை ஏமாற்றாமல், தனது நண்பர்களான கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோருடன் பேசி தமிழகத்திற்கு வர வேண்டிய காவிரி நீரை முதல்வர் ஸ்டாலின் பெற்றுத் தர வேண்டும்.

    இல்லையெனில் வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் திமுக கூட்டணிக்கு உரிய பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, ராஜ்யசபாவில் அ.தி.மு.க. எதிர்த்து வாக்களித்து இருந்தால் இந்த சட்டமே வந்திருக்காது.
    • காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை முடிந்ததும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வரும்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கற்பகம் கூட்டுறவு பெட்ரோல் பங்கை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று திறந்து வைத்தார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மத்திய அரசு சொன்னாலும் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம் என்று சித்தராமையா கூறியுள்ளார்.

    கர்நாடகாவில் என்றைக்காவது, எந்த மந்திரியாவது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவோம் என்று கூறி கேள்விப்பட்டது உண்டா.


    எப்போது பார்த்தாலும் இப்படி தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றம் சென்று தான் நாம் தண்ணீரை பெற்றுக் கொண்டிருக்கிறோம். தண்ணீரை கர்நாடகாவிலிருந்து எப்படி பெறுவது என்று எங்களுக்கு தெரியும்.

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, ராஜ்யசபாவில் அ.தி.மு.க. எதிர்த்து வாக்களித்து இருந்தால் இந்த சட்டமே வந்திருக்காது. காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை முடிந்ததும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வரும்.

    ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசு தொடுத்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

    அது குறித்து வழக்கறிஞர்கள் பேசுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போராட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு அவரது உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர்.
    • உடனடியாக போலீசார் விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    தஞ்சாவூர்:

    காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கு ஒப்புதல் வழங்கி தீர்மானம் இயற்றி, அதனை இந்திய ஒன்றிய நீர்வள ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ள காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தரை கண்டித்து இன்று தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார். இதில் காவிரி உரிமை மீட்பு குழு பொருளாளர் மணிமொழியன், சாமி கரிகாலன், துரை ரமேசு, தமிழ் தேசிய பேரியக்கம் வைகறை, பழ. ராசேந்திரன், நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை மண்டல செயலாளர் வீர. பிரபாகரன், விவசாயிகள் சங்கம் ஜெய்சங்கர் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு அவரது உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    அப்போது மணியரசன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    காவிரியில் நமக்கான உரிமையை பாதுகாக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தன்னிச்சை தொடரும்.

    அதற்கான ஆரம்ப போராட்டம் இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது. கர்நாடகா மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அனைத்துக் கட்சிகள் தொடர்ந்து போராட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கும் தமிழக விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் மட்டுமல்லாது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும்.
    • திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பே புதிய அணை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளை காங்கிரஸ் அரசு தீவிரப்படுத்தும் என்ற கர்நாடக மாநில கவர்னரின் குடியரசு தின உரை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியும், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கும் தமிழக விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் மட்டுமல்லாது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும்.

    காவிரியின் குறுக்கே கால் நூற்றாண்டுக்கும் மேலாகவே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டிருந்தாலும், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பே புதிய அணை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    போதிய நீர் இருப்பு இருந்தும் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசினாலும், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் உரிய நீரை பெற்றுத்தர முடியாத திமுக அரசினாலும் டெல்டா பகுதி விவசாயிகள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

    எனவே, தமிழகத்தை பாலைவனமாக்கும் நோக்கில் கட்டப்படும் மேகதாது அணைக்கான பூர்வாங்கப் பணிகளை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்தி, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

    • காவிரியில் இருந்து கர்நாடகம் எவ்வளவு நீர் திறந்து விட வேண்டும் என்பதை ஆணையத்துக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்து வருகிறது.
    • ஜனவரி மாதம் முதல் நாளிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1,003 கன அடி நீர் திறக்கவும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 92-வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது. அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலி காட்சி மூலம் நடக்கும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்நாடு சார்பில் காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்றுள்ளார்.

    காவிரியில் இருந்து கர்நாடகம் எவ்வளவு நீர் திறந்து விட வேண்டும் என்பதை ஆணையத்துக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்து வருகிறது.

    கடந்த டிசம்பர் 19-ந்தேதி நடந்த கூட்டத்தில், காவிரியில் வினாடிக்கு 3,128 கனஅடி நீர் திறக்க ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்திருந்தது. மேலும் ஜனவரி மாதம் முதல் நாளிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1,003 கன அடி நீர் திறக்கவும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போது நடைபெறும் கூட்டத்தில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய நீரின் அளவு குறித்து பரிந்துரைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தங்களால் தண்ணீர் திறந்துவிட முடியாது என்ற கருத்தை கர்நாடகா அரசு முன்வைத்தது.
    • கர்நாடகா 14 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்திருந்தது.

    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 91-வது கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.

    காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் வினித் குப்தா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநில அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.

    4 நீர்த்தேக்கங்களில் 52.84 சதவீதமாக மொத்த வரத்து குறைந்துள்ளது. இதனால் தங்களால் தண்ணீர் திறந்துவிட முடியாது என்ற கருத்தை கர்நாடகா அரசு முன்வைத்தது.

    கர்நாடகா 14 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்திருந்தது.

    இருதரப்பு கருத்துக்களையும் கேட்டுக்கொண்ட காவிரி ஒழுங்காற்றுக்குழு, டிசம்பர் இறுதி வரை தமிழகத்திற்கு 3128 கனஅடி வீதமும், ஜனவரி மாதம் 1030 கனஅடி வீதமும் நீர் திறக்க கர்நாடகாவிற்கு பரிந்துரை செய்துள்ளது.

    • காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வதற்காக ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது.
    • காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை மறுதினம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது.

    இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்துள்ளன.

    இந்நிலையில், நாளை மறுதினம் 90-வது காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெறவுள்ளது. காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 3-ம் தேதி நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் 23-ம் தேதி வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

    நாளை மறுதினம் நடக்கும் கூட்டத்தில் ஆணையத்தின் உத்தரவுபடி கர்நாடக மாநிலம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துள்ளதா என்பது பற்றி கணக்கீடு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • கடந்த திங்கட்கிழமை காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் அதன் தலைவர் வினித்குப்தா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
    • மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 52.43 அடியாக இருந்தது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறக்கப்படாததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது.

    இதையடுத்து குடிநீர் மற்றும் மீன்வளத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந்தேதி காலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டது. குடிநீருக்காக மட்டும் தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையே கடந்த அக்டோபர் மாதம் 15-ந் தேதியில் இருந்து 31-ந் தேதி வரை தமிழகத்துக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனாலும் கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் மட்டுமே சொற்ப அளவில் வெளியேற்றப்பட்டு வந்தது. கர்நாடக அணைகளில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள விவசாயிகள், அரசியல்வாதிகளும் போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையே கடந்த திங்கட்கிழமை காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் அதன் தலைவர் வினித்குப்தா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் அடுத்து வரும் நாட்களுக்கான தண்ணீர் பங்கீடு தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

    இதில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு வழங்கவேண்டிய 13 டி.எம்.சி. தண்ணீர் மற்றும் ஏற்கனவே நிலுவையில் உள்ள 3 டி.எம்.சி. தண்ணீர் என மொத்தமாக 16 டி.எம்.சி. தண்ணீரை திறக்க பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஆனால் கர்நாடகா தரப்பில் தங்கள் மாநிலத்தில் மழை பற்றாக்குறை நிலவுவதாகவும், இதனால் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாகவும் எனவே தண்ணீர் திறந்து விட இயலாது என்று கூறினர்.

    2 தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட காவிரி ஒழுங்காற்றுக் குழு தமிழகத்திற்கு நவம்பர் 1-ந்தேதியான இன்று முதல் வருகிற 15 நாட்களுக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என பரிந்துரை செய்தது. ஆனால் வழக்கம்போல் கர்நாடக அணைகளில் இருந்து இன்றும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 196 ஆக இருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வெறும் 300 கனஅடியே திறக்கப்பட்டு வருகிறது.

    இதே போல் கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.44 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 531 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. குடிநீருக்காக மட்டும் வாய்க்காலில் வினாடிக்கு 567 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 52.43 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 968 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • வரும் 3-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது.
    • சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

    சென்னை:

    சென்னை கோட்டூர்புரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரியில் 13 ஆயிரம் கனஅடி நீர் திறக்க நாங்கள் கோரிக்கை வைத்தோம். 2,600 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.

    வரும் 3-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது. 13ஆயிரம் கனஅடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்துவோம்.

    காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது என்று சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் இவ்வளவு பிடிவாதமாக கூறி இருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஏதோ எதிரிநாட்டோடு மோதுவது போல் நினைக்கிறார்கள். உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மதிக்காமல் இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

    இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

    • கர்நாடகத்தில் உள்ள நடிகர்கள் நிர்பந்தத்திற்காக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
    • மக்களின் வேதனைகளை புரிந்து கொண்டு அரசு செயல்பட வேண்டும்.

    கே.கே.நகர்:

    சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு வலுவாக இருந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என கூறும் நேரத்தில் ஒரே நாட்டிற்குள் இருக்கும் காவிரி பிரச்சனையை தீர்க்க முடியாமல் இருப்பது வேடிக்கையானது.

    காவிரி விவகாரத்தில் அதிகமான தண்ணீர் இருக்கும்போது கர்நாடகா அரசு திறந்து விட்டு விடுகிறார்கள். ஆனால் முறைப்படி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசு கூறினால் வழங்க மறுத்து வருகிறார்கள்.

    நடிகர்கள் தற்போது எல்லாம் மாநிலங்களுக்கும் சென்று நடித்து வருகிறார்கள். எனவே அவர்கள் தான் இந்த விவகாரத்திற்கு குரல் கொடுக்க வேண்டும் என்று இல்லை. காவிரி பிரச்சனையை சரி செய்ய வேண்டியது அரசு தான்.

    கர்நாடகத்தில் உள்ள நடிகர்கள் நிர்பந்தத்திற்காக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ஆனால் எல்லோரும் அப்படி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று இல்லை.

    இங்கிருக்கும் ஆட்சியாளர்களுக்கு சாதகமான அரசு கர்நாடகத்தில் இருந்தாலும் அவர்கள் தண்ணீர் கொடுப்பதாக இல்லை.

    2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தான் நாங்கள் அதிகம் பயணிக்கிறோம். அதற்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல் குறித்து வருகிற டிசம்பர் 9-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் எங்களுடைய கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் சேர்ந்து முடிவை அறிவிப்போம்.

    தேர்தல் சூடு பிடிக்க இன்னும் ஒன்று அல்லது 2 மாதங்கள் ஆகலாம் எனவே பொறுத்து இருந்து தான் பார்க்க முடியும்.

    பாராளுமன்ற தேர்தல் பண நாயகமாக தான் இருக்கும். எம்.பி. தேர்தலில் நின்றால் ரூ.100 கோடி வேண்டும் என்கிறார்கள். சட்டசபை தேர்தல் என்றால் ரூ.25 கோடி வேண்டும் என்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா என தெரியவில்லை.

    5 சதவீத வாகனங்களுக்கான வரியை உயர்த்தி இருப்பது வருத்தம் அளிக்கின்றது. மக்களின் வேதனைகளை புரிந்து கொண்டு அரசு செயல்பட வேண்டும்.

    தேர்தலில் தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் தான் போட்டி என அண்ணாமலை கூறி இருப்பது அவருடைய கருத்து. அதற்கு நான் பதில் அளிக்க வேண்டியதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரில் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர்.
    • வாட்டல் நாகராஜை கண்டித்தும், கர்நாடக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    காவிரியில் உரிய தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசு மற்றும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் , கர்நாடகாவில் போராட்டத்தை தூண்டி விடும் பா.ஜ.க. மற்றும் கன்னட அமைப்பு நிர்வாகிகளை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில் தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரில் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர்.

    பின்னர் அவர்கள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என கர்நாடகாவில் போராட்டம் நடத்தி வரும் கன்னட அமைப்பு தலைவர் வாட்டல் நாகராஜ் உருவப்படம் அடங்கிய பேனருக்கு மலர் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது பேனர் முன்பு நின்று ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாட்டல் நாகராஜை கண்டித்தும், கர்நாடக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த நூதன போராட்டத்தால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×