search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த அ.தி.மு.க. தோழமை கட்சிகள்
    X

    சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த அ.தி.மு.க. தோழமை கட்சிகள்

    மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக முதலமைச்சரின் பதில் திருப்தி அளிக்காததால் அ.தி.மு.க. தோழமை கட்சிகள் தமிழக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.

    மத்திய அரசு 25-5-2017 அன்று மாடு விற்பனை தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது சிறுபான்மை மக்களையும், விவசாயிகளையும், தனி மனித உரிமையையும் பாதிக்கும் அறிவிப்பு. இறைச்சிக்காக மாடுகளை விற்க கூடாது என்று கூறியிருப்பது பொருளாதார அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளும், பல்வேறு மாநிலங்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இது மாநில அரசின் உரிமையை பாதிக்கிறது.

    கேரள அரசு 8.6.17 அன்று சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்துள்ளது. மேகாலயாவில்  12-6-17 அன்று இந்த உத்தரவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் 16-6-17 அன்று எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    பா.ஜனதா ஆட்சி நடைபெறும் கோவாவில் அந்த மாநில முதல்வர் தனி மனித உரிமையை பாதிக்கும் என்று கருத்து தெரிவித்து உள்ளார். அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார். பா.ஜனதா ஆளும் வேறு சில மாநிலங்களிலும் முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ஆனால் அ.தி.மு.க. ஆட்சி நடைபெறும் இங்கு ஏன் மவுனம் சாதிக்கிறார்கள். அதற்காக ஒரு சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.

    கே.ஆர்.ராமசாமி (காங்):- இந்திய நாட்டில் யார் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது தனி மனித உரிமை. அது பாதிக்கப்படக் கூடாது. ஆனால் மத்திய அரசு தனி மனித உரிமையையும், சிறுபான்மை மக்களையும் பாதிக்கும் விதத்தில் இந்த உத்தரவை பிறப்பித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு அதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    அபுபக்கர் (மு.லீக்):- மத்திய அரசின் உத்தரவு தனி மனித உரிமையை பாதிக்கிறது. இது தாழ்த்தப்பட்ட சிறு பான்மை மக்கள் பயன்படுத்தும் உணவு. இதை அரசியல் ஆக்கி ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள். இந்த உத்தரவால் சிறு வியாபாரிகளின் வணிகம் பெருமளவில் பாதிக்கிறது. ஆனால் பெரும் முதலாளிகளின் மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

    உத்தரப்பிரதேசத்தில் இந்த பிரச்சனையால் ஒரு சகோதரர் கொலை செய்யப்பட்டுள்ளார். குஜராத்திலும் வன்முறை ஏற்பட்டு இருக்கிறது. மாடுகளை கோ சாலை இல்லத்தில் பாதுகாக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

    ஆனால் 1926-ம் ஆண்டு மகாத்மா காந்தி கோ சாலையில் பசு மாடுகள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டி இருக்கிறார். எனவே மத்திய அரசின் உத்தரவை ஏற்க கூடாது. தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்.

    தமிமுன் அன்சாரி (மனித நேய ஜனநாயக கட்சி):-

    இந்தியா என்பது கதம்ப நாடு. 1954-ம் ஆண்டு பசுக்கள் பாதுகாப்பு சட்டம் பற்றிய விவாதம் வந்த போது இது போன்ற ஒரு கோரிக்கையை அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு ஏற்க மறுத்து விட்டார். இது சட்டமாகி அமல்படுத்தப்பட்டால் கால்நடை வியாபாரம் அடியோடு பாதிக்கும். ஏழை, சிறுபான்மையினர் பெருமளவில் பாதிக்கப்படுவர்.

    மோடி பிரதமர் ஆன பிறகு சீனா, பிரேசில் நாடுகளை அடுத்து மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. ஆனால் ஏழைகளை பாதிக்கும் வகையில் மத்திய அரசு இதை கொண்டு வந்திருக்கிறது. எனவே தமிழக அரசு எதிர்க்க வேண்டும்.

    தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை):- உணவு உண்பது அவரவர் விருப்பம். அந்த உரிமையை மத்திய அரசின் அறிவிப்பு பாதிக்கிறது. ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். தற்போது கிராம மக்களின் வாழ்வாதாரமாக இருந்த மாட்டு வியாபாரம் அடியோடு பாதிக்கிறது. மத்திய அரசின் முடிவை தமிழக அரசு எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு பேசினார்.

    தொடர்ந்து கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை) பேச அனுமதி கேட்டார். முதலிலேயே இதுபற்றி அவர் சபாநாயகரிடம் எழுதி கொடுத்து அனுமதி பெறாததால் பேச அனுமதிக்கப்படவில்லை.

    இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசினார். ஆனால் முதல்வரின் பதில் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று கூறி தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் அதன் கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் வெளிநடப்பு செய்தனர்.

    அதோடு அ.தி.மு.க.  கூட்டணியில் உள்ள கொங்கு இளைஞர் பேரவை, மனித நேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை ஆகியவையும் வெளிநடப்பு செய்தனர்.
    Next Story
    ×