என் மலர்tooltip icon

    செய்திகள்

    • 12 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு 10 மையங்களில் தொடங்கியது.
    • பாஜக வேட்பாளர்கள் சுமன்குமார் குப்தா, தனிகா ஜெயின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    டெல்லி சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆம்ஆத்மியிடம் இருந்து ஆட்சியை கைப் பற்றியது.

    டெல்லி மாநகராட்சியில் உள்ள 12 வார்டுகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 3-ந்தேதி நடைபெற்றது. இதில் 9 வார்டு பாஜக வசமும், எஞ்சிய 3 வார்டுகள் ஆம்ஆத்மி வசமும் இருந்தன.

    12 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு 10 மையங்களில் தொடங்கியது.

    இதில் பா.ஜனதா, ஆம் ஆத்மி ஆகியவை தலா 2 வார்டுகளில் வெற்றி பெற்றன. காங்கிரஸ், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிகள் தலா 1 வார்டுகளை கைப் பற்றியது. மற்ற சில வார்டு களில் பா.ஜனதா முன்னி லையில் உள்ளன.

    பாஜக வேட்பாளர்கள் சுமன்குமார் குப்தா, தனிகா ஜெயின் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    அகண்டா ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது.

    தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலையா). இவர் நடித்து கடந்த 2021-ல் வெளியான படம் அகண்டா. இப்படம் ஹிட் அடித்தநிலையில், இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. போயபதி ஸ்ரீனு படத்தை இயக்கியுள்ளார்.

    ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இதில், சம்யுக்தா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதி வில்லன் ரோலில் நடித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ள இப்படம் டிச.5-ல் வெளியாகிறது. 

    இந்நிலையில், அகண்டா ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா பேசியதாவது:-

    அகண்டா ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. சொந்த வீட்டிற்கு வந்ததுபோல் உணர்கிறேன்.

    என் உயிருக்கு மேலான தமிழ் அன்பர்களே.. திரைத்துரை ரசிகர்களுக்கு எனது வணக்கம். சென்னை எனது ஜென்மபூமி.. தெலுங்கானா எனது கர்ம பூமி, ஆந்திரா எனது ஆத்ம பூமி.

    அகண்டா முதல் பாகம் கொரோனா காலத்தில் வெளியானது. லாக்டவுனுக்கு பிறகு வெளியான முதல் சூப்பர் ஹிட் படம்.

    இதைதொடர்ந்து, அகண்டா 2ம் பாகம் எடுத்தோம். 130 நாட்களில் படிப்பிடிப்பு முடிந்து படம் வெளியாகிறது. தெய்வ சக்தியின் ஆசிர்வாதம் இல்லாமல் எதுவும் நடக்காது.

    இந்து சனாதன தர்மத்தை, நம் கலாசாரத்தை உலகத்திற்கு அறிவிக்கப்படும் ஒரு யாகம் இந்த அகண்டா தாண்டவம். நம் சக்தியை தூண்டும் ஒரு தாண்டவம்.

    இந்த படத்தை பார்த்தால், சனாதன தர்மம் என்றால் என்ன? சனாதனம் என்பது சக்தி.. அது அடுத்த தலைமுறைக்கும் தெரிய வரும்.

    நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. நான் திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவாகிவிட்டது. 50 ஆண்டுகளாக ஹீரோவாக நடிக்கிறேன். தெய்வத்தின் அனுகிரகத்தால், தாய், தந்தையின் ஆசிர்வாதத்தால் இது நடக்கிறது.

    வரும் 5ம் தேதி முதல் திரைக்கு வருகிறது. அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு செனஅறு பார்க்க வேண்டும்.

    இவ்வாறு குறிப்பிட்டார்.

    • சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
    • இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது.

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

    இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    துணை கேப்டனாக சுப்மன் கில் அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், அவரது உடல்தகுதியை பொறுத்து போட்டிகளில் விளையாடுவது முடிவு செய்யப்படும் என பிசிசிஐ கூறியுள்ளது

    இந்திய அணி விவரம்:-

    சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (WK), சஞ்சு சாம்சன் (WK), ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரானா, வாஷிங்டன் சுந்தர்.

     

    • டிச. 9 மற்றும் 11 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • மொத்தம் 25 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர்.

    கேரளாவில் வரும் டிச. 9 மற்றும் 11 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அதிமுக போட்டியிடுவதாக கடந்த மாதம் அறிவித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேட்பாளர்கள் பெயரையும் அறிவித்தார். இந்நிலையில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

    முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம். ஆனந்தன் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இடுக்கி மாவட்டத்தில் 19 இடங்கள், பாலக்காடு மாவட்டத்தில் 4 இடங்கள், திருவனந்தபுரம் மாநகராட்சியில் 2 இடங்கள் என மொத்தம் 25 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர். 

    கேரள மாநிலத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கட்சியின் தொண்டர்களும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறந்த முறையில் தேர்தல் பணியாற்றி, கட்சி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

    • பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நேற்று முன்தினம் (டிசம்பர் 1) தொடங்கியது.
    • எதிர்க்கட்சிகள் SIR குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர்.

    பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நேற்று முன்தினம் (டிசம்பர் 1) தொடங்கியது.

    எதிர்க்கட்சிகள் SIR குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டதால் 2 நாட்களாக இரு அவைகளும் முடங்கியது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் தோள்பட்டை வலியால் தவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ராகுல் காந்தி தோள்பட்டை பிடித்து விட்டார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    • இந்திய தரப்பில் ருதுராஜ், விராட் கோலி சதம் அடித்தனர்.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.

    இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - ரோகித் களமிறங்கினர். இதில் ரோகித் 8 பந்தில் 14 ரன்னிலும் ஜெய்ஸ்வால் 22 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து ருதுராஜ்- விராட் கோலி ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

    ருதுராஜ் 105 ரன்னிலும் விராட் கோலி 102 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

    இதனை தொடர்ந்து கேஎல் ராகுல் - ஜடேஜா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். சிறப்பாக விளையாடிய ராகுல் அரை சதம் கடந்தார்.

    இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் சேர்த்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ யான்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

    • டியூட் பட விவகாரத்தில் இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டது
    • டைட்டில் கார்டில் இளையராஜாவுக்கு நன்றி தெரிவிக்கப்படும்.

    நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்த 'டியூட்' திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த 'கருத்த மச்சான்', '100 வருஷம்' ஆகிய பாடல்கள் அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில், இந்த பாடல்கள் மீதான உரிமையை எக்கோ நிறுவனத்திடம் இருந்து சோனி நிறுவனம் பெற்றுள்ளது. சோனி நிறுவனத்திடம் இருந்து தாங்கள் அனுமதி பெற்றோம் என்று கூறப்பட்டது.

    அதற்கு இளையராஜா தரப்பு, ''படம் வெளியானதும் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது" என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, நீதிபதிகள், இளையராஜா பாடல்களின் புனிதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 'கருத்த மச்சான்' பாடலை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில் டியூட் பட விவகாரத்தில் இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டது என்றும் டைட்டில் கார்டில் நன்றி தெரிவிக்கப்படும் என மைத்திரி மூவி மேக்கர் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்தது.

    இரு தரப்பினரும் சமரசத்திற்கு ஒப்புக்கொண்டதால், வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    • இணைய உலகில் உள்ள மோசடியாளர்களிடம் இருந்து குடிமக்களுக்கு உதவுவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • இதுவரை 1.4 கோடி பயனர்கள் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்

    இந்தியாவின் அனைத்து மொபைல் உற்பத்தி நிறுவனங்களும் புதிய சாதனங்களில் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. சஞ்சார் செயலியை கட்டாயம் பதிவிறக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இந்த முடிவு திரும்ப பெறப்பட்டுள்ளது. ஆனால் செயலிக்கு கிடைத்த வரவேற்பு காரணமாகவே "கட்டாயம்" என்ற முடிவை திரும்ப பெற்றதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

    இதுதொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

    "அனைத்து குடிமக்களுக்கும் இணைய பாதுகாப்பை வழங்கும் நோக்கத்துடன், அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டது. இந்த செயலி பாதுகாப்பானது மற்றும் இணைய உலகில் உள்ள மோசடியாளர்களிடம் இருந்து குடிமக்களுக்கு உதவுவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இது மக்கள் பங்கேற்புடன் அனைத்து பயனர்களையும் பாதுகாப்பதோடு, சைபர் மோசடி பற்றிய புகார் அளிக்க உதவுகிறது. எப்போது வேண்டுமானாலும் இந்த செயலியை நீக்கலாம் என்று அரசால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    இதுவரை 1.4 கோடி பயனர்கள் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர் மற்றும் ஒரு நாளைக்கு 2,000 மோசடி சம்பவங்கள் குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. கடந்த ஒருநாளில் 6 லட்சம் குடிமக்கள் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்ய பதிவு செய்துள்ளனர். இதன் பயன்பாடு 10 மடங்கு அதிகரித்துள்ளது. இது இந்த செயலியில் குடிமக்கள் நம்பிக்கையுடன் இருப்பதை  உறுதிப்படுத்துகிறது.

    சஞ்சார் சாத்தி செயலிக்கு வரவேற்பு அதிகரித்து வருவதால், செல்போன் உற்பத்தியாளர்களுக்கு முன் நிறுவலை கட்டாயமாக்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சஞ்சார் சாத்தி என்றால் என்ன?

    கடந்த 2023ஆம் சஞ்சார் சாத்தி என்ற வெப் போர்ட்டலை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. தற்போது அதே பெயரில் செயலியில் தொடங்கப்பட்டுள்ளது. சஞ்சார் செயலி டிஜிட்டல் மோசடிக்கு எதிரான பாதுகாப்பு கருவி என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொலைபேசியின் ஐஎம்இஐ எண், மொபைல் எண் மற்றும் நெட்வொர்க் தொடர்பான தகவல்களின் உதவியுடன் வாடிக்கையாளரின் பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறப்படுகிறது. சஞ்சார் சாத்தி இணையதளத்தின் தகவல்படி, இந்த செயலி நமக்கு தெரியாமல் நமது தனிப்பட்ட தகவல்களை சேகரிக்காது.   

    • இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது.
    • இம்ரான் கான் நலமுடன் இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளாக சிறையில் உள்ள இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது.

    இதனால் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து இம்ரான்கானின் சகோதரிகள் மற்றும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இம்ரான் கான் நலமுடன் இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது.

    இதற்கிடையே இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறைக்கு சென்று இம்ரான்கானை சந்தித்தார். பின்னர் வெளியே வந்த உஸ்மா கூறும்போது,"இம்ரான்கான் நலமுடன் உள்ளார். ஆனால் அவருக்கு மனரீதியான துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது" என்றார்.

    இந்தநிலையில் தனது சகோதரியை சந்தித்த பிறகு இம்ரான்கான் அளித்த அறிக்கையை அவரது கட்சி வெளியிட்டது.

    அதில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. அவர்களுக்கு தற்போது என்னைக் கொலை செய்வதுதான் பாக்கி இருக்கிறது. எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது.

    மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியைப் போன்ற சூழ்நிலையில் நான் அடைக்கப்பட்டுள்ளேன். எனக்கு ஏதாவது நடந்தால், ராணுவத் தலைவரும், உளவுப்பிரிவு டி.ஜி.யும் பொறுப்பாவார்கள்.

    நான் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு விலங்குகளை விட மோசமாக நடத்தப்பட்டேன். 5 நாட்கள் என் அறைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 10 நாட்கள் நான் அறையில் அடைக்கப்பட்டேன். இங்குள்ள நிலைமைகள் மனிதாபிமான மற்றவைகளாக உள்ளன.

    ராணுவ தளபதி அசிம் முனீர் வரலாற்றில் மிகவும் கொடுங்கோல் சர்வாதிகாரி. மனநிலை சரியில்லாதவர். எனக்கு அளிக்கப்படும் சித்ரவதைக்கு அசிம் முனீர் தான் காரணம்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    மேலும், மின்சாரம் அல்லது சூரிய ஒளி, உணவு, சுத்தமான குடிநீர், மருத்துவ உதவி மற்றும் கைதிகளுக்கு பொதுவாகக் கிடைக்கும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இம்ரான் கான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று அவரது கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

    • இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது.
    • தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், கார்த்திகை தீப விழா நடைபெறும் திருவண்ணாமலையில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது

    மழை பெய்து வரும் நிலையில் திருவண்ணாமலையில் குடையுடன் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது.

    • ஒருநாள் கிரிக்கெட்டில் ருதுராஜ் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் 14 ரன்களிலும் ஜெய்ஷ்வால் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்ததாக ஜோடி சேர்ந்த விராட் கோலி - ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது.

    அதிரடியாக விளையாடிய ருதுராஜ் 77 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 12 பவுண்டரிகள், 2 சிக்சருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் ருதுராஜ் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 105 ரன்கள் அடித்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து ருதுராஜ் ஆட்டமிழந்தார்.

    மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய கோலி தனது 53 ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்து புதிய சாதனை படைத்தார். 90 பந்துகளில் கோலி சதமடித்தார். 

    38 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் அடித்துள்ளது. 

    • புத்தாண்டு நெருங்கிவரும் நிலையில், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சாமராஜ்பேட்டை தபால் நிலையத்தில் பார்சலில் வந்த 8 கிலோ ஹைட்ரோ கஞ்சா பறிமுதல்

    புத்தாண்டு நெருங்கிவரும் நிலையில், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருவில் மூன்று வெவ்வேறு சோதனைகளின்போது ரூ.28.8 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், சம்பிகேஹள்ளி பகுதியில் பெங்களூரு நகர போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது தான்சானிய நாட்டை சேர்ந்த 29 வயதான நான்சி ஓமரியை கைது செய்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த 9 கிலோ டையாக்ஸிமெத்தபெட்டமனையும் பறிமுதல் செய்தனர். இவை ரூ.18.5 கோடி மதிப்பு கொண்டவை எனவும் தெரிவித்தனர்.

    2023 ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் டெல்லி வந்த நான்சி, பெங்களூருவுக்கு குடிபெயர்ந்து பியூட்டிசியனாக பணிபுரிந்துகொண்டே, போதைப்பொருள் விற்பனையிலும் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. பெங்களூருவின் சித்தபுராவில் நடந்த மற்றொரு நடவடிக்கையில், 28 வயதான நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் அரின்சே என்பவர் கைது செய்யப்பட்டார். 2021 ஆம் ஆண்டு வணிக விசா மூலம் இந்தியா வந்த அரின்சே 2022 ஆம் ஆண்டு பெங்களூருக்கு குடிபெயர்ந்தார்.

    டெல்லி, கோவா மற்றும் பிற வெளிநாட்டு வியாபாரிகளிடமிருந்து MDMA-வை வாங்கி விநியோகம் செய்துவந்துள்ளார். இவர் முன்னரே போதைப்பொருள் விற்பனை தொடர்பாக கோவிந்தபுரா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது ஜாமினில் வெளிவந்த நிலையில் மீண்டும் கைதாகியுள்ளார்.

    இந்த சம்பவங்களை தொடர்ந்து பெங்களூரு சாமராஜ்பேட்டையில் உள்ள வெளிநாட்டு தபால் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக பார்சல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 8 கிலோ ஹைட்ரோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சி.சி.பி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த பார்சலை அனுப்பியது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    ×