என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகை மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.
நாளை முதல் 15-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
11 மற்றும் 12-ந்தேதிகளில் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- கட்சிக்காக நான் உழைத்ததை எத்தனை முறை சொல்லி காட்ட வேண்டியுள்ளது.
- தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளோம்.
திண்டிவனம்:
பா.ம.க.வில் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் கருத்து மோதல் நீடித்து வருகிறது. கட்சிக்கு சொந்தம் கொண்டாடி இருவரும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். ஆனால் தேர்தல் ஆணையம் 2026 ஆகஸ்டு மாதம் வரை அன்புமணி தான் பா.ம.க. தலைவர் என கூறியது. தேர்தல் ஆணையத்தை கண்டித்து ராமதாஸ் தரப்பிரனர் டெல்லி தேர்தல் ஆணையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கட்சிக்காக நான் உழைத்ததை எத்தனை முறை சொல்லி காட்ட வேண்டியுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளோம். இதில் சம்பந்தமே இல்லாமல் பொய்மூட்டைகளுடன் அன்புமணி தரப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளது.
கட்சி எங்களுக்கே என்று சொல்ல எனக்கு வெட்கமாக உள்ளது. கட்சி எங்களுக்கு இல்லை சொல்ல எனக்கு ஒரு பிள்ளை. தேவையென்றால் அன்புமணி தனிக்கட்சி தொடங்கி கொள்ளட்டும். இனி என் பெயரையோ, படத்தையோ அன்புமணி பயன்படுத்த கூடாது. அதற்கு அவருக்கு உரிமை இல்லை. என் வீட்டில் ஒட்டு கேட்பு கருவி வைத்தது தொடர்பாக புகார் அளித்து எந்த வித நடவடிக்கையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து மேலூர் தாலுகாவில் இருந்து மதுரை மாநகர் வரை பிரமாண்ட பேரணி நடந்தது.
மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி உட்பட முக்கிய கனிம தொகுதிகளில் ஏலம் விடுவது குறித்து தமிழ்நாடு அரசுக்கு 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி கடிதம் எழுதியதாக மத்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்தது. இதற்கு 2023-ம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்ததாக தெரிவித்துள்ள மத்திய அரசு, அதில் முக்கியமான கனிமங்களை ஏலம் விடும் அதிகாரம் மாநில அரசுகளிடமும் இருக்க வேண்டும் அவர் கோரியதாக குறிப்பிட்டது.
2023-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி மதுரை நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதி உட்பட ஏலத்திற்கு விடப்பட உள்ள 3 முக்கியமான கனிமத் தொகுதிகளின் விவரங்களை வழங்க கோரி தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது. 2024 பிப்ரவரி 8-ந்தேதி அந்த விவரங்களை தமிழ்நாடு புவியியல், சுரங்கத் துறை ஆணையர் வழங்கியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்த கனிமத் தொகுதி, 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கூட்டு உரிமமாக ஏலத்திற்கு முன்மொழியப்பட்டது.
நவம்பர் 7-ந்தேதி, அரிட்டாபட்டியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலையை வெட்டி டங்ஸ்டன் எடுக்க வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
டங்ஸ்டன் சுரங்க திட்டம் கொண்டுவரப்பட்டால் அந்த பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் அழியும் என்றும், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கூறி அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் போராட்டத்தை தொடங்கினர்.

அரிட்டாபட்டி பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால் வன விலங்குகள் பாதிக்கப்படும். இயற்கை சூழல் கெடுவதோடு விவசாயம், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும். எனவே டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நவம்பர் 29-ந்தேதி இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதில், பிரதமர் உடனே தலையிட்டு மத்திய அரசு வழங்கி உள்ள உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
டிசம்பர் 9-ந்தேதி டங்ஸ்டன் சுரங்க உரிம ஏலத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர், எக்காரணம் கொண்டும், தமிழ்நாட்டிற்குள் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மாநில அரசு அனுமதிக்காது. நான் முதல்வராக உள்ளவரை இந்த திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டேன். டங்ஸ்டன் சுரங்க திட்டம் வந்தால் ராஜினாமா செய்யவும் தயார். டங்ஸ்டன் சுரங்கம் அமையும் சூழல் ஏற்பட்டால் நான் முதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று கூறினார்.

ஜனவரி 7-ந்தேதி டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து மேலூர் தாலுகாவில் இருந்து மதுரை மாநகர் வரை பிரமாண்ட பேரணி நடந்தது.
இதற்கிடையே, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி விவசாயிகள் குழுவினர் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக விவசாயிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது மத்திய இணைய அமைச்சர் எல். முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
இதையடுத்து டங்ஸ்டன் திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, அரிட்டாபட்டி கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் சாலைகளில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மக்கள் ஆனந்தமாக கொண்டாடினர். இது அரிட்டாபட்டி மக்களுக்கு மறக்க முடியாத வெற்றியாகும்.
இதுகுறித்து கூறிய அரிட்டாபட்டி மக்கள், "எங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மத்திய அரசு திட்டத்தை கைவிட்டுள்ளது. வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ வழி செய்திருக்கிறார்கள். அரிட்டாபட்டி மக்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த மற்ற கிராம மக்களுக்கும் நன்றி. டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்றும் தெரிவித்தனர்.
டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அரிட்டாபட்டி மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா நடத்தினர். முதல்வர் ஸ்டாலின் அங்கு சென்று, "இந்த விழா உங்களுக்கானது, மக்களுக்கான வெற்றி" என்று கூறி, மக்களுக்கு நன்றி தெரிவித்து, திட்டம் ரத்து செய்யப்பட்டது மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார், இது மக்களை மகிழ்வித்தது.

அரிட்டாபட்டிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வல்லாளப்பட்டியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்று பேசுகையில்,
மக்களின் அன்பு கட்டளையை ஏற்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். இந்த பாராட்டு விழா உங்களுக்கானது. டங்ஸ்டன் திட்டம் ரத்து நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. போராட்டத்தை முன்னெடுத்த மக்களுக்கு தான் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். மக்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவாக தான் நான் பார்க்கிறேன். எனக்கு எதற்கு பாராட்டு விழா ? அது எனது கடமை. பதவியை பற்றி எனக்கு கவலை இல்லை. மக்களை பற்றி தான் எனக்கு கவலை. டங்ஸ்டன் தீர்மானத்தை ஆதரித்த அனைத்து கட்சியினருக்கும் நன்றி. என்றுமே உங்களில் ஒருவனாக இருந்து பணியாற்றுவேன் என்று கூறினார்.
- தமிழக அரசியலில் பா.ஜ.க. தன்னை வளர்த்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
- தமிழக தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தவே தேர்தல் கமிஷன் எஸ்.ஐ.ஆர். பணியை நடத்துகிறது.
கோவை:
கோவையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில தலைவர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் நலச்சட்டம், தொழிலாளர் உரிமைகளுக்கு எதிராக உள்ளது. இந்த சட்டத் தொகுப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராடியது போல் தொழிலாளர் போராட்டம் நடக்கும்.
தமிழக அரசியலில் பா.ஜ.க. தன்னை வளர்த்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அவர்களால் மதம் சார்ந்த கொள்கைகளை சொல்லி கட்சி வளர்க்க முடியவிலலை. அயோத்தி ராமர் கோவில் பிரச்சனை போல் இங்கு எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் கடவுளின் பெயரால் பிரச்சனை செய்து அரசியல் நடத்தும் முயற்சியில் இறங்கி உள்ளனர். அதன் அடிப்படையில் தான் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை அரசியல் ஆக்கி வருகின்றனர். கலவரத்தை உருவாக்கி பா.ஜ.க. அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறது.
இதே பிரச்சனை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வந்தபோது அதை அவர் நிராகரித்தார். இதற்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பும் வந்தது. ஆனால் கொள்கை வேறு, கூட்டணி வேறு என்ற சொன்ன அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி இதை ஆதரிக்கிறார். பா.ஜ.க. என்ன சொன்னாலும் அதற்கு தலையாட்டும் நிலையில் இருக்கிறார்.
தி.மு.க. உடனான இந்திய கம்யூனிஸ்டு கூட்டணி கொள்கை அடிப்படையில் உருவானதாகும். தொகுதி உடன்பாடு அடிப்படையில் உருவானதல்ல. அதனால் தான் கடந்த 10 ஆண்டுகளாக இந்த கூட்டணி தொடர்கிறது.
இந்த தேர்தலில் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்கும்போது, நாங்களும் கூடுதல் தொகுதிகளை கேட்போம். எத்தனை என்பது பிறகு முடிவு செய்யப்படும்.
தமிழக தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தவே தேர்தல் கமிஷன் எஸ்.ஐ.ஆர். பணியை நடத்துகிறது. அதனால் தமிழகத்தில் முறையாக தேர்தல் நடத்தப்படுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நேற்று சற்று குறைந்த வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
- பார் வெள்ளி 1 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையிலேயே நீடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,000-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
நேற்று சற்று குறைந்த வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 199 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
08-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
07-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
06-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
05-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,000
04-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,160
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
08-12-2025- ஒரு கிராம் ரூ.198
07-12-2025- ஒரு கிராம் ரூ.199
06-12-2025- ஒரு கிராம் ரூ.199
05-12-2025- ஒரு கிராம் ரூ.196
04-12-2025- ஒரு கிராம் ரூ.200
- மானாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்க இருக்கிறோம்.
- ஒவ்வொரு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கழகத் தொண்டர்களும் திரண்டு பொதுச்செயலாளர் நாளைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பிரமாண்டமாக வரவேற்கிறோம் .
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழு- செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நாளை காலை 10 மணி அளவில் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
மண்டபத்தின் நுழைவு வாயில் அருகே உள்ள காலி மைதானத்தில் உணவு தயாரிப்பு கூடம், உணவு அருந்தும் கூடம், வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எல்.இ.டி திரைகள் அமைக்கும் பணிகள் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் தலைமையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த பணியை தலைமை கழக மேலாளர் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்து செல்லும் பாதை கழக நிர்வாகிகள் உணவருந்தும் இடம் உணவு தயாரிப்பு கூடம் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் அமருமிடம் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு ஏற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் கூறியதாவது:-
கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் இந்த கழகத்தின் செயற்குழு பொதுக்குழு ஆண்டுதோறும் நடைபெறுவது போன்று இல்லாமல் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு வித்திடும் வகையில் நடைபெற உள்ளது. கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவள்ளூர் மத்திய மாவட்டத்தின் எல்லையான கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
மானாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்க இருக்கிறோம். சாலை எங்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோர் உருவம் பொறித்த வரவேற்பு பதாகைகள் மாஇலை தோரணங்களுடன் கூடிய பிரமாண்ட வரவேற்பும் அளிக்கப்படுகிறது.
கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம், நெற்குன்றம், மதுரவாயல், வானகரம் என ஒவ்வொரு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கழகத் தொண்டர்களும் திரண்டு பொதுச்செயலாளர் நாளைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பிரமாண்டமாக வரவேற்கிறோம் .
இதற்கான பணிகள் கடந்த ஒரு வாரமாக விறுவிறுப்பாக நடைபெற்று உள்ளது.
இவ்வாறு பெஞ்சமின் தெரிவித்தார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடைபெற உள்ள இந்த பொதுக்குழு கூட்டம் அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- உதகமண்டலம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து, குந்தா மற்றும் பந்தலூர் என 2 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கப்பட்டுள்ளன.
- 26 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி உதகை ஊராட்சி, 12 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி குந்தா ஊராட்சி என பிரிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உதகமண்டலம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து, குந்தா மற்றும் பந்தலூர் என 2 புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
26 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி உதகை ஊராட்சி, 12 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி குந்தா ஊராட்சி என பிரிக்கப்பட்டுள்ளது. கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து பந்தலூர் ஊராட்சி ஒன்றியம் என புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.
- கூட்டணியில் குழப்பம் என யாராவது காங்கிரசில் இருந்து கூறினார்களா?
- தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் உடன் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி கடந்த வாரம் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜயின் இல்லத்தில் இச்சந்திப்பானது நடைபெற்றது.
இதற்கு முன்னதாக, முன்னதாக திருச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமியுடன் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரான திருநாவுக்கரசரை செங்கோட்டையனும் சந்தித்து பேசியதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து காங்கிரஸ் தலைவர்களுடன் த.வெ.க.வினரின் சந்திப்பு அக்கட்சியுடன் த.வெ.க இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், விஜயை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை என்று ராகுல்காந்தியின் வியூக அமைப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஆங்கில இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த பிரவீன் சக்ரவர்த்தி கூறியிருப்பதாவது:-
* எல்லா சந்திப்புகளுக்கும் பின்னால் ஒரு திட்டம் இருக்க வேண்டிய அவசியமில்லை.
* இட்லி, வடை, தோசை சாப்பிடுவது ஒரு சாதாரண சந்திப்பாகவோ அல்லது திரைப்படங்களைப் பற்றிப் பேசுவதற்கான சந்திப்பாகவோ கூட இருந்திருக்கலாம்.
* த.வெ.க தலைவர் விஜயை நான் சந்தித்ததில் எந்த தவறும் இல்லை.
* த.வெ.க.வில் இணையும் எண்ணம் கொஞ்சமும் இல்லை.
* விஜயுடனான தனது சந்திப்பால் தி.மு.க. கூட்டணியில் குழப்பம் என்பது தவறு.
* கூட்டணியில் குழப்பம் என யாராவது காங்கிரசில் இருந்து கூறினார்களா?
* தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.
* த.வெ.க- காங்கிரஸ் கூட்டணி என ஊடகங்கள் மட்டுமே பேசி வருவதாக கூறினார்.
- சோனியா காந்திக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- சோனியா காந்திக்கான கொள்கை பாதை இந்தியாவிற்கான நமது கூட்டு முயற்சிகளை வலுப்படுத்தட்டும்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில்,
காங்கிரஸ் பாராளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது வாழ்க்கை தியாகம், தன்னலமற்ற பொதுப் பயணம், மதச்சார்ப்பின்மை மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கான உறுதியான உறுதியை பிரதிபலிக்கிறது.
சோனியா காந்திக்கான கொள்கை பாதை இந்தியாவிற்கான நமது கூட்டு முயற்சிகளை வலுப்படுத்தட்டும் என்று கூறியுள்ளார்.
- ஏப்ரல் மாதம் தனது பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகினார்.
- அண்ணாமலைக்கு பிறகு நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. மாநில தலைவராக பணியாற்றி வருகிறார்.
கர்நாடகாவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் அண்ணாமலை. இவர் பா.ஜ.க. மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக அக்கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார்.
இதனால் பா.ஜ.க. தமிழக மாநில துணைத்தலைவராக 2020-ம் ஆண்டு பதவியேற்றார். அதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு தலைவராக பதவியேற்றார். இதன் பிறகு தமிழக பா.ஜ.க. அரசியல் களத்தில் மும்முரமாக செயல்பட்டு வந்தது. இருப்பினும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை சந்தித்தது. இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இடம்பெறாததே காரணம். அதற்கு அண்ணாமலையே காரணம் என ஒரு சாரார் குற்றம்சாட்டினர்.
பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு பல திடுக்கிடும் சம்பவங்களை செய்து அண்ணாமலை பேசும்பொருளானார். அதில் ஒன்று, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும் கூறி, தமிழக அரசை கண்டித்து அண்ணாமலை ஒரு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார். கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தனக்குத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டம், தமிழக அரசியல் களத்தில் முதல்முறை எனக் கூறப்படும் ஒரு நூதன முறையாக இருந்ததுடன், பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

மேலும், தி.மு.க. ஆட்சியில் இருந்து அகற்றப்படும் வரை காலணி அணியாமல் வெறும் காலுடன் நடப்பேன் என்று சபதம் எடுத்த அண்ணாமலை சில மாதங்கள் செருப்பு அணியாமல் நடந்து வந்தார். இதன்பின் ஏப்ரல் 12-ந்தேதி அன்று தனது சபதத்தை முடித்துக்கொண்டு மீண்டும் காலணி அணியத் தொடங்கினார்.
இதனிடையே, பாராளுமன்ற தேர்தலில் அடைந்த தோல்வியை போல் சட்டமன்ற தேர்தலிலும் தோல்வி ஏற்படக்கூடாது என்று கருதிய டெல்லி மேலிடம் அ.தி.மு.க.வை அணுகியது. அதற்கு அ.தி.மு.க. தரப்பில் தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நீடிக்கும் வரை கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து, ஏப்ரல் மாதம் தனது பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகினார். அண்ணாமலைக்கு பிறகு நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. மாநில தலைவராக பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையே, அண்ணாமலை பதவியில் இருந்து விலகியதற்கு எடப்பாடி பழனிசாமி போட்ட கண்டிஷன் மட்டுமே காரணம் இல்லை என்று கூறப்படுகிறது. அதற்கு வேறொரு காரணம் சொல்லப்படுகிறது.

அதாவது, கோயம்புத்தூரில் அண்ணாமலை வாங்கிய நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய் என்றும், அது சட்டவிரோதமாக வாங்கப்பட்டதாகவும், மாதத்திற்கு ரூ. 6 லட்சம் வாடகை செலுத்தி வருவதாகக் கூறப்பட்ட நிலையில், இவ்வளவு பெரிய தொகைக்கு நிலத்தை வாங்குவதற்கு நிதி எப்படி வந்தது என பல கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்கு அண்ணாமலை தரப்பில், ஜூலை 12, 2025 அன்று விவசாய நிலம் வாங்கியது உண்மைதான். அனைத்து நடைமுறைகளும் சட்டப்பூர்வமாகப் பின்பற்றப்பட்டன. நிலத்தை வாங்கத் தனது மற்றும் தனது மனைவியின் சேமிப்பு மற்றும் வங்கிக் கடன் பயன்படுத்தப்பட்டதாகக் கூறினார்.
நிலப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வைக்காக ரூ. 40.59 லட்சம் மாநில அரசுக்குச் செலுத்தப்பட்டுள்ளது. இயற்கை விவசாயம் மற்றும் பால் பண்ணை அமைப்பதற்காகவே நிலம் வாங்கப்பட்டது என்றும், இதற்காக பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடனுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுவே தான் வாங்கிய முதல் அசையா சொத்து என்றும், அடுத்த ஆண்டு வருமான வரி அறிக்கையில் அனைத்து விவரங்களும் தெரியவரும் என்றார்.

முன்னதாக, அண்ணாமலை பா.ஜ.க. மாநில தலைவராக பதவி வகித்த போது ஆளும் கட்சிக்கு எதிரான கண்டனங்களையும், போராட்டங்களையும் தீவிரமாக முன்னெடுத்து வந்தார். மேலும், பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர் புதிய பா.ஜ.க. தலைவரான நயினார் நாகேந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால் சில மாதங்கள் ஆக்டிவாக இல்லாமல் இருந்த அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை அண்ணாமலை பா.ஜ.க.வில் தான் நீடிக்கிறார். ஆனால் 2026-ம் ஆண்டிலும் அண்ணாமலை பா.ஜ.க.வில் தான் இருப்பாரா? அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுமா? இல்லை அதிருப்தியில் தனிக்கட்சி தொடங்குவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- நாடே இதுவரை கண்டிராத அளவுக்கு விமான போக்குவரத்தில் மிகப்பெரிய பிரச்சனை எழுந்துள்ளது.
- சென்னையில் இன்று 23 புறப்பாடு, 18 வருகை என 41 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இந்தியாவின் விமான போக்குவரத்தில் இண்டிகோ நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது. அந்த நிறுவனத்திடம் 434 விமானங்கள் உள்ளன. இதன் மூலம் உள்நாட்டு சேவைகள் 1,840-ம், சர்வதேச சேவைகள் 460-ம் என அந்த நிறுவனம் இயக்கி வருகிறது. அதன்படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு விமான சேவையில் இண்டிகோ நிறுவனத்தின் பங்கு மட்டும் 55 சதவீதம் முதல் 68 சதவீதம் வரை உள்ளது.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இந்தியாவின் உள்நாட்டு விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாடே இதுவரை கண்டிராத அளவுக்கு விமான போக்குவரத்தில் மிகப்பெரிய பிரச்சனை எழுந்துள்ளது.
இதனால், நாடு முழுவதும் இன்று 8-வது நாளாக இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் 7-வது நாளாக இன்றும் இண்டிகோ விமானங்கள் ரத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 23 புறப்பாடு, 18 வருகை என 41 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.
சென்னை:
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகிற 14-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






