என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மாணவி நிரஞ்சானாவின் நிலை கண்டு சக மாணவிகள் கண்கலங்கினர்.
- சக மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
திருச்சி:
திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே கோணப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முரளி (51). உரக்கடை நடத்தி வந்தார். இவரது மகள் நிரஞ்சனா தா.பேட்டையில் செயல்படும் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு நிரஞ்சனாவின் தந்தை முரளி மாரடைப்பு காரணமாக இறந்து போனார். இந்நிலையில் இன்று பத்தாம் வகுப்பு அரசு தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவி நிரஞ்சனா தனது தந்தையின் இழப்பை மனதளவில் ஏற்று கொண்டு தா.பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு வந்தார்.
சமூகஅறிவியல் தேர்வு எழுதுவதற்காக மாணவி தனது உறவினருடன் விழி நிறைய கண்ணீருடன் மனதில் சோகத்தை சுமந்து கொண்டு வந்த மாணவி நிரஞ்சானாவின் நிலை கண்டு சக மாணவிகள் கண்கலங்கினர்.
மாணவி நிரஞ்சனாவிற்கு பள்ளி ஆசிரியர்களும், தேர்வு மைய மேற்பார்வையாளர் சிவானந்தம் ஆகியோரும் ஆறுதல் கூறி தேர்வை நல்ல முறையில் எழுதுமாறு ஆலோசனை வழங்கினர்.
தந்தையின் உடலுக்கு உறவினர்கள் வீட்டில் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் மாணவி தந்தையை இழந்த துயரத்துடன் தேர்வு எழுதியது ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
- தேர் ஓடும் ரத வீதிகள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
- பால் குடம், தீச்சட்டி, பறவைக் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மண்ணச்சநல்லூர்:
சக்தி தலங்களில் முதன்மையான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கிலும், இரவு 8 மணி அளவில் பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளினார்.
நேற்று இரவு சமயபுரம் தெப்பக்குளம் அருகே உள்ள சூரப்பநாயக்கர் மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மண்டகப்படி உபயம் கண்டருளினார். பின்னர் வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது. இதையொட்டி காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் மிதுன லக்னத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார்.
அதைத்தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி பராசக்தி கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் ஓடும் ரத வீதிகள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
எங்கு பார்த்தாலும் மஞ்சள் ஆடை அணிந்த பெண் பக்தர்கள் திரண்டிருந்தனர். தேருக்கு முன்பாக ஏராளமான பக்தர்கள் பால் குடம், தீச்சட்டி, பறவைக் காவடி ஆகியவற்றை எடுத்து வந்து, தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
தேரோட்ட விழாவை காண நேற்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாகவும், வாகனங்களிலும் பக்தர்கள் வந்து குவிந்தனர். பாதயாத்திரையாக வந்த பக்தர்களூக்கு திருவானைக்காவல், கொள்ளிடம் டோல்கேட், பளூர், சமயபுரம் உள்ளிட்ட இடங்களில், பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் நீர்மோர், குளிர்பானங்கள், குடிநீர், அன்ன தானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
கோவில் ராஜகோபுரம், மேற்கு, தெற்கு, வடக்கு கோபுரங்கள் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் தலைமையில் 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 16 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 31 போலீஸ் இன்ஸ்பெ க்டர்கள், 1263 போலீசார், 275 ஊர்க்கால் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கொள்ளாமல் இருக்க 'பாக்ஸ் டைப்' அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தனர். 2 இடங்களில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டிருந்தது.

தேர் சுற்றி வரும்போது மின்வாரிய ஊழியர்களை ஆங்காங்கே நியமித்து மின்சாரத்தை உரிய நேரத்தில் தடை செய்தும், மின் கம்பங்களில் இருந்து செல்லும் மின் கம்பிகளை அகற்றியும் எவ்வித இடையூறும் இல்லாமல் தேர் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது.
3 வெடிபொருள் சோதனை மற்றும் கண்காணிப்பு படைகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். 4 டிரோன் கேமராக்கள் மூலம் சமயபுரம் மாரியம்மன் கோவிலை சுற்றி வெவ்வேறு பகுதிகளில் இருந்து கழுகு பார்வையின் மூலம் கண்காணிக்கப்பட்டது. 50 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் அமைத்து கண்காணிக்கப்பட்டது.
மேலும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு, போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மண்ணச்சநல்லூர் செல்லும் சாலையில் சக்திநகர், கரியமாணிக்கம் பிரிவு ரோடு உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.
விழாவை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்திலும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அம்மன் முத்துப்பல்லக்கிலும் புறப்பாடாகிறார்.
18-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்த மண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாராதனை நடைபெறுகிறது. தேர் முடிந்து எட்டாம் நாளான 22-ந்தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார்.
- அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
- கோபத்தில் இருக்கும் தமிழக மக்களை மடைமாற்றம் செய்யவே மாநில சுயாட்சி குறித்து முதலமைச்சர் பேசியுள்ளார்.
தமிழக சட்டசபையில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறி எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், மாநில சுயாட்சி குறித்து தி.மு.க. அரசுக்கு திடீர் ஞானோதயம் வந்துள்ளதால் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது.
கோபத்தில் இருக்கும் தமிழக மக்களை மடைமாற்றம் செய்யவே மாநில சுயாட்சி குறித்து முதலமைச்சர் பேசியுள்ளார்.
மத்தியில் ஆளும் அரசுடன் கூட்டணியில் இருந்தபோது பேசியிருந்தால் மக்கள் நம்புவார்கள், இதுமுழுவதும் ஏமாற்று வேலை என்றார்.
- கண்ணாடி பாலம் கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது.
- பராமரிப்பு பணிகள் வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம்- திருவள்ளுவர் சிலை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலம் கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது.
அன்றைய தினம் முதல் கண்ணாடி பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள அந்த பாலத்தை சுற்றுலாப் பயணிகள் மிகவும் ஆர்வமாக பார்வையிட்டு வந்தனர்.
இந்தநிலையில் கண்ணாடி பாலத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 19-ந்தேதி வரை 5 நாட்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி கண்ணாடி பாலத்தில் பராமரிப்பு பணிகள் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் முன்னிலையில் இன்று தொடங்கியது.
இந்த பராமரிப்பு பணிகள் வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது. இதனால் இன்று கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
பராமரிப்பு பணிகள் நடக்கும் 5 நாட்களும் கண்ணாடி பாலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கண்ணாடி பாலத்தின் நுழைவு வாயி லில் கயிறுகள் கட்டி தடுப்பு கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பராமரிப்பு பணிகள் நடப்பது தொடர் பாகவும், அதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறித்த அறிவிப்பும் பாலத்தின் நுழைவு பகுதியில் வைக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் சுற்றி பார்த்துவிட்டு திருவள்ளுவர் சிலைக்கு கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலமாகும்.
- குறிப்பிட்ட நாட்களுக்கு மீன்பிடிக்க தடை செய்யப்படுவது வழக்கமாகும்.
சென்னை:
கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்கக் கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். எனவே இந்த கால கட்டங்களில் எந்திரப்படகுகள் மூலம் மீன் பிடித்தால் மீன் குஞ்சுகள் வலையில் சிக்கி அழிந்து விடும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாக நாள டைவில் தமிழக கடலோர பகுதிகளில் மீன்வளம் குறையும் நிலை ஏற்பட்டு விடும். இதை கருத்தில் கொண்டு தமிழக கடலோர பகுதியில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு எந்திரப் படகுகள் மூலம் மீன்பிடிக்கச் செல்வது தடை செய்யப்படுவது வழக்கமாகும்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. தமிழகம் முழுவதும் மீனவர்கள் நேற்று நள்ளிரவு முதல் எந்திர படகுகளில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டு செல்லவில்லை.

தங்களது எந்திர படகுகளை மீனவர்கள் தாங்கள் வழக்கமாக நிறுத்தும் பகுதிகளில் பாதுகாப்புடன் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த மீன்பிடி தடை காலம் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை அமலில் இருக்கும்.
மொத்தம் 61 நாட்களுக்கு தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த 61 நாட்களும் தமிழகம் முழுவதும் மீனவர்கள் எந்திர படகுகளில் மீன் பிடிக்கச் கடலுக்குச் செல்ல அனுமதி கிடையாது.
இது குறித்து சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுக உதவி இயக்குனர் பா.திருநாகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்த ஆண்டு இன்று அதிகாலை முதல் எந்த ஒரு எந்திரப்படகும் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் செல்ல அனுமதி இல்லை. ஆனால் 20 குதிரை சக்திக்கு குறைவான பைபர் படகுகள், கட்டுமரங்களில் மீன்பிடிக்க எவ்வித தடையும் இல்லை.
சென்னை காசிமேடு துறை முகத்தில் மட்டும் சுமார் 1,100 எந்திரப்படகுகள் நிறுத்தி வைக்கப்படும். தமிழகம் முழுவதும் மொத் தம் உள்ள 4,500 எந்திரப் படகுகளில் கன்னியாகுமரி முதல் நிரோடி வரையிலான அரபிக் கடலோரப் பகுதிகள் நீங்கலாக 4 ஆயிரம் எந்திரப் படகுகளும் இயங்காது.
இந்தத் தடைக்காலத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் சார்பு தொழிலாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.8 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
நாட்டுப் படகுகள் ஆந்திர பகுதிக்குச் செல்ல வேண்டாம். தமிழகத்தில் எந்திரப் படகுகளில் மட்டுமே மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் பொருத்தப்பட்ட செயற்கை இழை படகுகள் நாட்டுப் படகுகள் மீன்பிடிக்கத் தடையில்லை. ஆனால், ஆந்திர மாநிலத்தில் அனைத்து வகை படகுகளுக்கும் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழக மீனவர்கள் எந்த வகை படகாக இருந்தாலும் ஆந்திர கடல் பகுதிக்கு சென்று நட வடிக்கைகளுக்கு ஆளாக வேண்டாம். அவ்வாறு தடையை மீறி சென்றால் அதனால் ஏற்படும் நடவடிக்கைகளுக்கு படகு உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
அரசின் உத்தரவுகளை மீறி செயல்படும் படகுகளின் மீன் பிடி உரிமமும் ரத்து செய்யப்படும். அதை மீறிக் கடலுக்குச் சென்றால் மீன்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே விதிமுறைகளை மீனவர்கள் மீறிச் செயல்படக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் தொடங்கி இருப்பதால் வழக்கம் போல உணவுக்கு மீன்கள் கிடைக்காது. கடலோரப் பகுதிகளில் சாதாரண படகுகளில் சென்று வலைவீசி பிடிக்கும் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வரும்.
இதன் காரணமாக மீன்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும். இதையடுத்து மீன்கள் விலை கணிசமான அளவுக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற தருவைகுளம் பகுதியை சேர்ந்த விசைப்படகுகள் அனைத்தும் இன்று கரை திரும்பின.
இதைத்தொடர்ந்து தருவைக்குளம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் அனைத்தும் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று தூத்துக்குடி விசைப்படகு மீன் பிடி துறைமுகம் வேம்பார் மீன்பிடித் துறைமுகம் ஆகியவற்றிலும் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 600 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
- நீட் தேர்வின் காரணமாக பல மாணவர்களின் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம்.
- மும்மொழி கொள்கை மூலம் தமிழக மாணவர்களிடம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்கிறது.
சென்னை:
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* தேசியக் கல்வி கொள்கையை ஏற்காததால் ரூ.2,500 கோடியை மத்திய அரசு கொடுக்கவில்லை.
* கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டியது இன்றியமையாதது.
* மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு மருத்துவ கல்வி கொள்கையை நீர்த்துப் போக செய்துவிட்டது.
* நீட் தேர்வின் காரணமாக பல மாணவர்களின் மருத்துவக்கனவு சிதைந்துள்ளது.
* நீட் தேர்வின் காரணமாக பல மாணவர்களின் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம்.
* இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் போது தமிழக அரசுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.
* மாநில அரசுகளின் தீவிர மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு மத்திய அரசு தண்டனை வழங்கியுள்ளது.
* மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை திணிக்க முயற்சி நடைபெறுகிறது.
* கல்விக் கொள்கையில் தமிழக மாணவர்களின் நலனை மட்டுமே முதன்மையாக கொள்கிறது திராவிட மாடல் அரசு
* நாம் இயற்றிய சட்டமுன்வடிவுகள் மீது கவர்னர் காலம் தாழ்த்திய விவகாரத்தில் வரலாற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
* மாநிலங்களின் நியாமான உரிமைகளை பாதுகாக்க குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும்.
* மாநில உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசு உடனான உறவுகளை மேம்படுத்திட ஆய்வு செய்து உயர்மட்டக்குழு அறிக்கை அளிக்கும்.
* உயர்நிலைக்குழு ஜனவரியில் இடைக்கால அறிக்கையும், 2 ஆண்டுகளில் இறுதி அறிக்கையும் வழங்கும் என்றார்.
- மாநில அரசின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது. இதனால் மாநிலங்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
- மும்மொழி கொள்கை மூலம் தமிழக மாணவர்களிடம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்கிறது.
சென்னை:
சட்டசபையில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முன்மொழிந்தார்.
தி.மு.க.வின் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்று மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி. முதலமைச்சர்கள் கொடியேற்றுவது தொடங்கி மாநில உரிமைகளை தி.மு.க. பல சமயங்களில் நிலைநாட்டியதோடு தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதே சமயம் மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு மாநில உரிமைகள் பறிக்கப்படுவதாக தொடர்ச்சியாக தி.மு.க. குற்றம்சாட்டி வருகிறது.
நீட் விவகாரம், மும்மொழிக்கொள்கை, நிதி பகிர்ந்தளிப்பு, பேரிடர் நிவாரணம், திட்டங்கள் என பல வகைகளில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்தும் விமர்சனங்கள் வைத்துள்ளார். மாநிலப் பட்டியலில் உள்ள விவகாரங்களிலும் மத்திய அரசு கைவைப்பதாக விமர்சனம் செய்து வருகிறார்.
குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை செயல்படவிடாமல் கவர்னர்கள் மூலம் மத்திய அரசு போட்டி அரசு நடத்துவதாக குற்றம்சாட்டினார்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு கவர்னர் அனுமதி வழங்காத நிலையில், அதற்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் கவர்னரின் செயல் சட்ட விரோதம் என அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர், கவர்னர்களுக்கு காலக்கெடுவும் விதித்தது.
இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமைகளை நிலைநாட்டினால் தான் தமிழ் மொழியை காக்க முடியும். தமிழ் இனத்தையும் உயர்த்த முடியும். இதனை உறுதி செய்திடும் வகையில் இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்" என்று தகவல் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டசபை இன்று கூடியது. அப்போது மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்க வலியுறுத்தும் வகையில், மாநில சுயாட்சி தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
மாநில அரசின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது. இதனால் மாநிலங்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை மத்திய அரசு அதை ஏற்கவில்லை. நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
நீர் தேர்வை அமல்படுத்துவதன் மூலம் கல்வி கொள்கை முழுவதையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறது. கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும்.
மும்மொழி கொள்கை மூலம் தமிழக மாணவர்களிடம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்கிறது. மும்மொழி கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.2 ஆயிரம் கோடி நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு பொதுவாகவே நிதி குறைவாகவே பகிரப்படுகிறது. மாநில அரசுக்கு இத்தகைய காரணங்களால் கடும் பாதிப்புகள் ஏற்படுகிறது.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார்.
அதன்பிறகு ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் இதன் மீது பேசினார்கள். இறுதியாக உறுப்பினர்களின் வாக்கெ டுப்புக்குப் பிறகு அது நிறைவேறியது.
மாநில உரிமைகள் தொடர்பான விவாதங்கள் இந்திய அளவில் எழுந்துள்ள நிலையில் முதல்-அமைச்ச ரின் இந்த கோரிக்கை முக்கி யத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
- அதிரடி மாற்றங்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
- கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
அ.தி.மு.க.வுக்கு மீண்டும் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
குறிப்பாக 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை இலக்காக கொண்டு அ.தி.மு.க. நிர்வாக அமைப்புகளில் அதிரடி மாற்றங்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து எதிர்கொள்ள அ.தி.மு.க. உடன்பாடு செய்துள்ளது. இதன் காரணமாக அ.தி.மு.க.வில் உள்ள சிறுபான்மையின நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சற்று அதிருப்தி அடைந்து உள்ளனர்.
அவர்களை சமரசம் செய்யும் நடவடிக்கைகளை அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் செய்து வருகிறார்கள். சிறுபான்மையின மக்களுக்கு எதிராக அ.தி.மு.க. ஒருபோதும் நடந்து கொள்ளாது என்று உறுதி அளிக்கப்பட்டு வருகிறது.
பா.ஜ.க.வுடன் குறைந்தபட்ச பொது செயல் திட்டம் உருவாக்கப்படும் போது சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அ.தி.மு.க. செயல்படும்என்றும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
இது தவிர தேர்தலுக்கு ஆயத்தமாகும் பணிகளையும் இப்போதே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுபற்றி எல்லாம் ஆலோசனை நடத்த எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
அதன்படி அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அ.தி.மு.க. செயற்குழுவை கூட்ட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 2.5.2025 (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் கழக அவைத் தலைவர் டாக்டர் அ.தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.
கழக செயற்குழு உறுப்பினர்களான, தலைமைக் கழக செயலாளர்க்ள, மாவட்டக் கழக செயலாளர்கள், பிற மாநிலக் கழக செயலாளர்கள், கழக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.
உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிததோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓட்டம்.
- கைதானவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரத்தை அடுத்த தேரிப்பனை பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி வசந்தா (வயது 70).
இவர்களது மகள் சபீதா, மகன் வினோத் ஆகியோர் கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மற்றொரு மகனான விக்ராந்த் சாத்தான்குளம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
விக்ராந்த் ஆனந்தபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஜெயபால் இறந்துவிட்டதால் வசந்தா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
நேற்று சபீதா தனது தாயாருக்கு போன் செய்தார். வெகுநேரமாகியும் வசந்தா அழைப்பை ஏற்கவில்லை. இதனால் அவர் தனது தம்பி விக்ராந்துக்கு போன் செய்து விபரத்தை கூறினார்.
உடனே விக்ராந்த் தேரிப்பனையில் உள்ள தனது உறவினர் ஒருவரை வீட்டுக்கு அனுப்பினார். அவர் வசந்தா வீட்டுக்கு சென்றபோது முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது.
அதே நேரம் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. அதன்மூலம் வீட்டுக்கு சென்றபோது வசந்தா இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தலையணையால் அமுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. வசந்தா அணிந்திருந்த நகைகள் அறுத்து எடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து அவரது மகன் விக்ராந்த் மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், டி.எஸ்.பி.க்கள் சுகுமார், மகேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

தொடர்ந்து நடந்த விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் செல்வரதி (24) என்பவர் நேற்று வசந்தா வீடு அருகே சந்தேகத்திற்கிடமாக நடமாடியதும், இதனால் அவரை வசந்தா கண்டித்ததும் தெரியவந்தது.
எனவே இந்த விரோதத்தில் செல்வரதி வசந்தாவை கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதினர். இதைத்தொடர்ந்து செல்வரதியை போலீசார் தேடியபோது அவர் கணவர் ஊரான மீரான்குளத்துக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் செல்வரதியை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் வசந்தாவை தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு வசந்தா அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி வந்தது உறுதியானது.
இதையடுத்து போலீசார் செல்வரதியை கைது செய்தனர். அவரிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே நகைக்காக சிறுவனை கடத்தி கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக ஒரு வழக்கு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலையில் செல்வரதியுடன் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேற்றிரவு 1 மணி நேரத்திற்கு மேல் கன மழையாக கொட்டியது.
- அதிக பட்சமாக ஓமலூரில் 38 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினர். பின்னர் மாலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் இரவு 9 மணியளவில் திடீரென வானில் கரு மேகங்கள் திரண்டன.
பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் க ன மழை பெய்தது. குறிப்பாக ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு 1 மணி நேரத்திற்கு மேல் கன மழையாக கொட்டியது.
இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதிகளில் தண்ணீர் காடாக காட்சி அளித்தது
சேலம் மாநகரில் நேற்றிரவு 10 மணியளவில் திடீரென இடி, மின்னலுடன் கன மழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொது மக்கள் நிம்மதியாக தூங்கினர்.
ஏற்காட்டில் நேற்றிரவு 9 மணியளவில் தொடங்கிய மழை சுமார் அரை மணி நேரம் சாரல் மழையாக பெய்தது. இதனால் அங்கு இன்றும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கறது. மேலும் இந்த கோடை மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
மாவட்டத்தில் அதிக பட்சமாக ஓமலூரில் 38 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மேட்டூர் 26.2, சேலம் மாநகர் 10.6, ஏற்காடு 7.6, சங்ககிரி 4, எடப்பாடி 2.6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 89 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தமிழ்நாடு மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் தொண்டர்கள், பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும் என கட்சி தலைமை தெரிவித்துள்ளது.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டு வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியை நியமித்து அக்கட்சியின் மாநில தலைவரான ஆனந்தன் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்த பொற்கொடி மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் இனி கட்சி பதவிகளில் ஈடுபட மாட்டார் என்றும் தனது குழந்தையையும் குடும்பத்தையும் மட்டுமே இனி கவனித்துக் கொள்வார் என்றும் கட்சி தலைமை அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் தொண்டர்கள், பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும் என கட்சி தலைமை தெரிவித்துள்ளது.
- ஒரு கட்சி மீது குற்றம் சாட்டும் அரசியல்வாதி அவர் முதலில் நேர்மையாக இருக்க வேண்டும்.
- தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதால் அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் மன்னிப்பது தான் தமிழனின் பண்பு.
நாகப்பட்டினம்:
நாகையில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் 30-வது தேசிய மாநாடு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. மாநாடு பணிகள் குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பார்வையிட்டார்.
இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இருந்தே பா.ஜ.க.வுடன் எக்காலத்திலும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை, கூட்டணி வைக்கப்போவதும் இல்லை என எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கூறி வந்தனர்.
ஆனால் திடீரென பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து இதுதான் விடியல் கூட்டணி என்றும், இந்த கூட்டணியால் தான் மக்களுக்கு எதையும் செய்ய முடியும். அதனால் என்ன விளைவுகள் வந்தாலும் அதை எதிர்கொள்வோம் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். இந்த கூட்டணி அ.தி.மு.க தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை.
நிர்பந்தம், அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து தான் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார். சரத்பவார் கட்சி, சிவசேனா கட்சியின் நிலை என்ன ஆனது. பா.ஜ.க தன்னுடன் கூட்டணி வைத்துள்ள கட்சியை நயவஞ்சகமாக அழித்துவிடும். தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் மத்திய அரசை தமிழக மக்களே எதிர்க்கின்றனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீது ஊழல் குற்றச்சாட்டு கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஊழல் குறித்து அண்ணாமலை பேசினார். இன்று கூட்டணி வைத்துள்ள காரணத்தால் அ.தி.மு.க.வினர் ஊழல் செய்யவில்லை என பேசுவார்களா?.
ஒரு கட்சி மீது குற்றம் சாட்டும் அரசியல்வாதி அவர் முதலில் நேர்மையாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அ.தி.மு.க போன்ற கரை படிந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, ஊழல் பற்றி பேச உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தகுதியில்லை. மேலும் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதால் அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் மன்னிப்பது தான் தமிழனின் பண்பு.
ஆட்சி, அதிகாரத்தை பிடிக்கவே அனைவரும் அரசியல் கட்சி நடத்துகின்றனர். கம்யூனிஸ்டு கட்சியும் ஒரு நாள் தமிழகத்தையும், இந்தியாவையும் ஆளும். அப்போது கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் முதலமைச்சராகவும், பிரதமராகவும் ஆவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






