தந்தை இறந்த நிலையில் கண்ணீருடன் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி

மாணவி நிரஞ்சானாவின் நிலை கண்டு சக மாணவிகள் கண்கலங்கினர்.சக மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
தந்தை இறந்த நிலையில் கண்ணீருடன் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி
Published on

திருச்சி:

திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே கோணப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முரளி (51). உரக்கடை நடத்தி வந்தார். இவரது மகள் நிரஞ்சனா தா.பேட்டையில் செயல்படும் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு நிரஞ்சனாவின் தந்தை முரளி மாரடைப்பு காரணமாக இறந்து போனார். இந்நிலையில் இன்று பத்தாம் வகுப்பு அரசு தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவி நிரஞ்சனா தனது தந்தையின் இழப்பை மனதளவில் ஏற்று கொண்டு தா.பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு வந்தார்.

சமூகஅறிவியல் தேர்வு எழுதுவதற்காக மாணவி தனது உறவினருடன் விழி நிறைய கண்ணீருடன் மனதில் சோகத்தை சுமந்து கொண்டு வந்த மாணவி நிரஞ்சானாவின் நிலை கண்டு சக மாணவிகள் கண்கலங்கினர்.

மாணவி நிரஞ்சனாவிற்கு பள்ளி ஆசிரியர்களும், தேர்வு மைய மேற்பார்வையாளர் சிவானந்தம் ஆகியோரும் ஆறுதல் கூறி தேர்வை நல்ல முறையில் எழுதுமாறு ஆலோசனை வழங்கினர்.

தந்தையின் உடலுக்கு உறவினர்கள் வீட்டில் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் மாணவி தந்தையை இழந்த துயரத்துடன் தேர்வு எழுதியது ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. 

X

Maalai Malar
www.maalaimalar.com