என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
- தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 10-வது நாளை எட்டி உள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கடந்த மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 10-வது நாளை எட்டி உள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை அரசு சமூகநீதிக் கண்ணோட்டத்தில் பரிசீலிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கடந்த 10 நாள்களாக தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிப் பாதுகாப்பு, ஊதியக் குறைப்புக் கூடாது, தூய்மைப் பணியைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு ஆகியவை அவர்களின் கோரிக்கைகளாகும்.
2007-ஆம் ஆண்டு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தை உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் தான்! வெள்ளத்தின் போதும், கரோனாவின் போதும் தூய்மைப் பணியாளர்கள் ஆற்றிய தொண்டு அளப்பரியது. அவர்களின் உழைப்பைப் போற்றி விருந்து வைத்து நன்றி தெரிவித்தவர் நம்முடைய முதலமைச்சர்.
பெரிதும் ஒடுக்கப்பட்ட சமூகத்தவரான உழைக்கும் மக்களே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த மக்களுக்குச் சமூகநீதியும், கல்வியும் கிடைக்க வேண்டும் என்பதையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு தான் தமிழ்நாடு அரசு செயல்பட்டுவருகிறது.
''அனைவருக்கும் அனைத்தும்' என்பதே நமது இலக்கு'' என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து உறுதிபடத் தெரிவித்து, அந்த இலக்கை நோக்கி அரசை நடத்தி வருகிறார். அவருடைய உழைப்பையும், நோக்கத்தையும், செயல்பாட்டையும் இத்தகைய பிரச்சினைகளைக் காட்டி, தி.மு.க. ஆட்சிக்கு எதிராகப் பிறர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக் கூடாது.
நகரைத் தூய்மைப்படுத்தும் பணியாளர்களின் உரிமையும், பணிப் பாதுகாப்பும், அவர்களின் நலனும் நாம் முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகளாகும். 'நகர சுத்தித் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாகவே ஆக்க வேண்டும்' என்பதே தந்தை பெரியார் அவர்களின் நிலைப்பாடாகும். நாளையும் வெள்ளம், மழை, புயல் என்று வருமேயானால், அப்போதும் முன் களத்தில் நிற்கப்போகும் பணியாளர்கள் அவர்களே!
எனவே, தமிழ்நாடு அரசு இதில் தனது சமூகநீதிப் பார்வைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; மனிதநேயத்தோடு அவர்களை அணுக வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, உடனடியாக அவர்களின் போராட்டத்தை முடித்துவைக்க வேண்டுகிறோம். இது அவசிய அவசரமாகும்" என்று தெரிவித்துள்ளார்.
- ராகுல்காந்தி அவர்கள் தேர்தல் ஆணையத்தின் மோசடிகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார்.
- தேர்தல் ஆணையம் தன்னிடம் உள்ள ஆதாரங்களை ஏன் அழிக்கிறது?
தேர்தல் ஆணையத்தை கண்டித்து நாளை கண்டன ஆர்பாட்டம் நடத்தப்போவதாக தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், " தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் தேர்தல் ஆணையத்தின் மோசடிகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார். ஆனால் அதற்கு நேரடியாக பதில் கூற முன்வராத தேர்தல் ஆணையம் ராகுல் காந்தி அவர்கள் பிரமாணம் எடுத்து குற்றச்சாட்டை கூறினால் நடவடிக்கை எடுக்க தயார் என கூறியிருக்கிறது. ஊடகங்கள் வாயிலாக திரை வெளியீட்டின் மூலம் புள்ளி விபரங்களோடு குற்றச்சாட்டுக்களை கூறிய பிறகு தேர்தல் ஆணையம் திசை திருப்புகிற வகையில் பதில் கூறுவது பொறுப்பற்ற செயலாகும். இந்நிலையில் ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் ஆணையத்தின் மீது 5 குற்றச்சாட்டுக்களை எழுப்பி இதற்கு தேர்தல் ஆணையம் பதில் கூற வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
நடைபெறவுள்ள பீஹார் சட்டமன்ற தேர்தலையொட்டி 65 லட்சம் வாக்காளர்கள் கொண்ட பட்டியலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் வந்தபோது தேர்தல் ஆணையம் வழங்க மறுத்துவிட்டது சுதந்திரமான தேர்தலுக்கு விடப்பட்ட சவாலாகும். இந்த மறுப்புக்கு பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பதாக நம்புவதற்கு இடமிருக்கிறது.
அதன்படி, முதல் கேள்வியாக டிஜிட்டல் வடிவத்தில் உள்ள வாக்காளர் பட்டியலை இந்திய மக்கள் படிக்கிற வகையில் ஏன் வெளியிட முன்வரவில்லை?. இரண்டாவதாக, தேர்தல் ஆணையம் தன்னிடம் உள்ள ஆதாரங்களை ஏன் அழிக்கிறது?. மூன்றாவதாக, தேர்தல் ஆணையம் பெருமளவில் வாக்காளர் பட்டியலில் மோசடி செய்வது ஏன்?. நான்காவதாக, எதிர்க்கட்சிகள் கூறுகிற குற்றச்சாட்டுக்கு பதில் கூறாமல் மிரட்டுவது ஏன்?. ஐந்தாவது கேள்வியாக, பாஜகவின் ஏஜென்ட் ஆக தேர்தல் ஆணையம் செயல்படுவது ஏன்? என்று பகிரங்கமாக ராகுல் காந்தி கேள்விக்கணைகளை தொடுத்திருக்கிறார்.
டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வழங்கினால் 30 வினாடிகளில் போலி வாக்காளர்களை கண்டுபிடித்து விடலாம் என்று ராகுல் காந்தி கூறியதற்கு பிறகு அதை வழங்க மறுப்பது பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு தேர்தல் ஆணையம் துணைபோகிறது என்ற குற்றச்சாட்டு உறுதியாகிறது. எனவே தேர்தல் முறைகேடு குற்றங்களுக்கு வாக்காளர் பட்டியல் ஆதாரமாக இருப்பதால் அதை டிஜிட்டல் வடிவத்தில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். ஒரு கோடி போலி வாக்காளர்கள் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வாக்களித்துள்ளனர் என்று ஆதாரத்தோடு எதிர்க்கட்சித் தலைவர் ஊடகங்கள் வாயிலாக பகிரங்கமாக எழுப்பிய கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் கூற வேண்டும்.
தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தோலுரித்து காட்டிய தேர்தல் ஆணையத்தின் மோசடிகளையும், பாஜகவின் வெற்றிக்கு துணை போவதையும் கண்டிக்கிற வகையில் எனது தலைமையில் நாளை (11.08.2025) திங்கட்கிழமை மாலை 04:00 மணியளவில் சென்னை, சைதாபேட்டை, பனகல் மாளிகை அருகில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் முன்னின்று நடத்தும் கண்டன ஆர்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று குரல் எழுப்ப வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
- பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரு மூர்த்தி மலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில் அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் பின்பு இயல்புநிலை திரும்புவதுமாக உள்ளது.
இந்தநிலையில் அருவியின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக இன்று பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. விடுமுறை நாளான இன்று அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
- கமல்ஹாசன் எம்.பி. சென்னையில் நடந்த ஒரு விழாவில் சனாதனம் பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
- கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமல்ஹாசன் எம்.பி. சென்னையில் நடந்த ஒரு விழாவில் சனாதனம் பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் துணை நடிகரான ரவி என்பவர் பேட்டி அளித்துள்ளார். அதில் கமல்ஹாசனின் சங்கை அறுப்போம் என்று கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.
இதனை கண்டித்து மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் துணைத்தலைவர் மவுரியா மற்றும் நிர்வாகிகள் கவிஞர் சினேகன், முரளி அப்பாஸ், மயில்வாகனன், அர்ஜுனர் ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர்.
அதில் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
- தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 10-வது நாளை எட்டி உள்ளது.
- தூய்மைப் பணியாளர்களின் போராட்டக் குழுவுடன் அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கடந்த மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 10-வது நாளை எட்டி உள்ளது.
இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களின் போராட்டக் குழுவுடன் அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.
இதற்கு முன்பு ஆறு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், தற்போது அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் தூய்மைப் பணியாளர்களுடன் 7-வது கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதில் சுமுகமான முடிவு எட்டப்படாததால், போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், தி.மு.க. கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கொரோனா காலத்தில் எங்கள் பணியை முதல்வர் பாராட்டினார், இப்போது கேவலமாக தெரிகிறோமா? என்று தூய்மைப் பணியாளர்கள் போராட்டக் குழு தெரிவித்துள்ளது.
- சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
- ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிவவுகிறது. இதன் காரணமாக வருகிற 15-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் இன்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- அரசு பள்ளிகளில் கல்வித்தரம் சீரழிந்து வருகிறது.
- பணம் இருந்தால் மட்டும் தான் தனியார் பள்ளிகளில் சேர்ந்து ஓரளவு தரமானக் கல்வியைக் கற்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு புதிய வண்ணம் பூசியுள்ள மாநிலக் கல்விக் கொள்கை, 11ம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து, எண்மக் கல்வி, காலநிலை மாற்றக் கல்வி போன்ற சில திட்டங்களை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த எந்தத் திட்டமும் அறிவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.
மாநிலக் கல்விக் கொள்கையின் எந்தப் பக்கத்திலும் தமிழ்க் கட்டாயப் பாடம் என்ற அறிவிப்பு இடம்பெறவில்லை. அரசு பள்ளிகளில் கல்வித்தரம் சீரழிந்து வருகிறது; பணம் இருந்தால் மட்டும் தான் தனியார் பள்ளிகளில் சேர்ந்து ஓரளவு தரமானக் கல்வியைக் கற்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.
இந்த நிலையை மாற்றும் வகையில் புரட்சிகரமானதொரு மாநிலக் கல்விக் கொள்கையை தயாரிப்பதற்கு பதிலாக அரசு பள்ளிகளின் மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு திருப்பி விடும் கொள்கையை தமிழக அரசு தயாரித்திருக்கிறது. அரசு பள்ளிகள் மேலும் சீரழியவே இது வழிவகுக்கும். தாய்மொழியை ஊக்குவிக்காத, தாய்மொழி வழிக் கல்வியை ஊக்குவிக்காத மாநில கல்விக் கொள்கையால் பயனில்லை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- முப்படை தளபதிகளும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தோம்.
- உரி மற்றும் பாலகோட் போன்ற முந்தைய பதிலடி தாக்குதலில் இருந்து ஆபரேஷன் சிந்தூர் வேறுபட்டது.
சென்னை:
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா அதிரடி நடவடிக்கை எடுத்தது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத் தப்பட்டு அழிக்கப்பட்டன. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சண்டை 4 நாட்கள் நடந்தது. இதில் பாகிஸ்தானின் ராணுவ கட்டமைப்புகளை இந்தியா தாக்கி அழித்தது.
இதற்கிடையே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று இந்திய விமானப்படை தளபதி அமர்பிரித் சிங் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி முதல் முறையாக பேசினார். ஐ.ஐ.டி மெட்ராசில் இந்திய ராணுவ ஆராய்ச்சிப் பிரிவான 'அக்னிசோத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் உபேந்திர திவேதி பங்கேற்றார்.
அப்போது பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பதிலடி கொடுக்க இந்தியா எவ்வாறு திட்டமிட்டது என்பது குறித்து அவர் கூறினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
ஏப்ரல் 22-ந்தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மறுநாளே ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. முப்படை தளபதிகளும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் கூட்டத்தில் பங்கேற்றோம். அப்போது ராஜ்நாத்சிங், பொறுத்தது போதும் என்று முதல் முறையாக கூறினார்.
முப்படை தளபதிகளும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தோம். என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்ற முழு சுதந்திரம் எங்களுக்கு வழங்கப்பட்டது.
அந்த வகையான நம்பிக்கை, அரசியல் திசை மற்றும் அரசியல் தெளிவை நாங்கள் முதன்முறையாக பார்த்தோம். முப்படைக ளுக்கும் அரசாங்கம் அளித்த அரசியல் தெளிவு மன உறுதியை அதிகரிக்க உதவி யது. அதுதான் நமது ராணுவத் தளபதிகள் களத்தில் இருந்து அவர்க ளின் விருப்பப்படி செயல் பட உதவியது.
இந்த சந்திப்புக்கு 2 நாட்களுக்கு பிறகு பயங்கரவாத இலக்குகளை எவ்வாறு தாக்குவது என்பது குறித்து ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. ஏப்ரல் 25-ந்தேதி நாங்கள் வடக்கு கட்டளைப் பகுதியைப் பார்வையிட்டோம்.
பின்னர் தாக்குதல் நடத்தப்பட வேண்டிய இலக்குகளை முடிவு செய்தோம். திட்டமிடப்பட்ட 9 இலக்குகளில் 7 முக்கிய இலக்குகளை முற்றிலும் அழித்தோம். இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஏப்ரல் 29 -ந்தேதி நாங்கள் பிரதமர் மோடியை சந்தித்தோம். ஆபரேஷன் சிந்தூர் என்ற சிறிய பெயர் முழு நாட்டையும் எவ்வாறு இணைக்கிறது என்பது முக்கியம். அதுதான் முழு நாட்டையும் உற்சாகப்படுத்தியது. அதனால்தான் முழு தேசமும் நீங்கள் ஏன் நிறுத்திவிட்டீர்கள் என்று கேட்டது. அதற்கு போதுமான பதில் அளிக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, சதுரங்க விளையாட்டு போல் இருந்தது. ஏனென்றால் எதிரியின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும், என்ன செய்யப் போகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. இது சாம்பல் மண்டலம் என்று அழைக்கப்படுகிறது.
சாம்பல் மண்டலம் என்பது நாம் வழக்கமான நடவடிக்கைகளை செய்ய போவதில்லை என்பதாகும். நமது வழக்கமான நடவடிக்கையை விட வித்தியாசமானது. நாங்கள் சதுரங்க நகர்வுகளைச் செய்து கொண்டிருந்தோம். எதிரிகளும் சதுரங்க நகர்வுகளைச் செய்து கொண்டிருந்தனர். எங்கோ நாங்கள் அவர்களுக்கு செக்மேட்டைக் கொடுத்துக் கொண்டிருந்தோம்.
உரி மற்றும் பாலகோட் போன்ற முந்தைய பதிலடி தாக்குதலில் இருந்து ஆபரேஷன் சிந்தூர் வேறுபட்டது. உரி நடவடிக்கையின்போது, ஏவுதளங்களை குறி வைப்பதில் கவனம் செலுத்தப்பட்டது.
2019-ம் ஆண்டு பாலகோட் தாக்குதல்களில், பதிலடி கொடுக்கும் விதமாக ஜம்மு-காஷ்மீர் வழியாக ஊடுருவி பாகிஸ்தானுக்குள் பயிற்சி முகாம்களைத் தாக்குவதே நோக்கமாக இருந்தது. ஆப ரேசன் சிந்தூர் நடவடிக்கையில் எதிரி பிரதேசத்திற்குள் ஆழமாக சென்று தாக்குதல் நடத்தப்பட்டது. நாங்கள் எதிரியின் மையப்பகுதியை அடைந்தது இதுவே முதல் முறை. இதுதான் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மோதலில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அந்நாடு ஒரு கதையை சொல்லி கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு பாகிஸ்தானியரிடம் தோற்றீர்களா அல்லது வென்றீர்களா என்று கேட்டால், அவர் எங்கள் ராணுவ தளபதிக்கு பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதனால்தான் எங்கள் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷலாக மாறிவிட்டார் என்று கூறுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- குமரேசனும்-அனுசுயாவும் திருச்சி தனியார் விடுதியிலேயே சில நாட்கள் தங்கியிருந்தனர்.
- தெருமுனையில் காரை நிறுத்திய குமரேசன் தனது நண்பர்கள் 3 பேரை அனுப்பினார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த செங்கராயன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் அனுசியா (வயது 23). இவர் சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்துள்ள மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். அனுசியாவுக்கும், குமரேசனுக்கும் 'இன்ஸ்டாகிராம்' மூலம் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது நாளடைவில் காதலாக மாறியது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் நேரில் சந்தித்தனர். பின்னர் இளைஞரின் சொந்த ஊரான மாங்குடி கிராமத்திற்கு சென்ற காதல் ஜோடியை குமரேசனின் பெற்றோர் ஏற்க மறுத்து திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து குமரேசனும்-அனுசுயாவும் திருச்சி தனியார் விடுதியிலேயே சில நாட்கள் தங்கியிருந்தனர். இந்த தகவலை அறிந்த குமரேசனின் பெற்றோர், அனுசுயாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
செங்கராயன் கட்டளை கிராமத்திலிருந்து திருச்சி சென்ற அனுசுயாவின் உறவினர்கள், அவரை சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். மேலும் அனுசுயாவை கண்டித்து அவரது செல்போனையும் வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
பின்னர் அனுசுயாவை, சின்ன பட்டாக்காடு கிராமத்தில் உள்ள தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் இல்லத்தில் கடந்த 10 நாட்களாக தங்க வைத்தனர். சின்ன பட்டாக்காடு கிராமத்தில் இருந்தபடியே அனுசியா, இந்த தகவலை தனது காதலனுக்கு செல்போன் மூலம் ரகசியமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து காதலன் குமரேசன் வாடகை கார் மூலம் அரியலூர் மாவட்டம் சின்ன பட்டாக்காடு கிராமத்திற்கு தனது நண்பர்களுடன் வந்தார்.
தெருமுனையில் காரை நிறுத்திய குமரேசன் தனது நண்பர்கள் 3 பேரை அனுப்பினார். அங்கு 3 பேரும் அனுசுயா தங்கி இருக்கும் வீட்டில் திருமண அழைப்பிதழ் கொடுப்பதுபோல் கையில் மஞ்சள் பை ஒன்றை பிடித்தபடியே நடந்து சென்றனர்.
காதலனின் நண்பர்களை கண்டதும், அக்கா குழந்தையுடன் விளையாடி கொண்டிருந்த அனுசியா குழந்தையை அப்படியே விட்டு விட்டு எழுந்து ஓட ஆரம்பித்தார். காரில் காத்திருந்த காதலன் குமரேசனுடன் கைகோர்த்த அவர், சட்டென்று ஏறி வண்டியில் அமர்ந்து கொண்டார். உடனே அவரது நண்பர்களுடன் காரில் ஏறி நொடிப் பொழுதில் தப்பிச் சென்றனர். தனது சகோதரி காரில் ஏறி தப்பி செல்வதைக் கண்ட ஐஸ்வர்யா சத்தம் போட்டு கத்தி கூச்சலிட்டார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வருவதற்குள் அனுசியாவை காருக்குள் அழைத்து சென்றதோடு தடுக்க முயன்றவர்களை கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு காரில் தப்பி சென்றுவிட்டனர். அனுசுயா காரில் ஏறி நொடிப் பொழுதில் தப்பிச்செல்வதை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
மேலும் இந்த களேபரத்தில் அனுசியாவின் அக்கா மகளான மித்ராவின் காதுப்பகுதியில் இளைஞர்கள் எடுத்து வந்த கத்தி பட்டதில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளிவந்தது. இதனால் குழந்தை மித்ரா கதறி அழும் காட்சிகளும், மின்னல் வேகத்தில் கார் கிராமத்தினுள் பறந்து செல்லும் காட்சிகளும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உடனடியாக குழந்தை மித்ரா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அனுசியாவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீசார், விசாரணை செய்து தப்பிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.
இதனிடையே அனுசியாவுக்கும், குமரேசனுக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டதாகவும், அவர்கள் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கை, உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார்.
- உடுமலை நகர தி.மு.க. அலுவலக புதிய கட்டிடத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
உடுமலை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கள ஆய்வுப்பணி மேற்கொள்கிறார்.
இதற்காக இன்று மாலை 5.25 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் திருப்பூர் மாவட்டம் உடுமலை செல்கிறார்.
2026 சட்டமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கை, உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார். இரவு உடுமலை அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு உடுமலை நகராட்சி சார்பில் வாரச்சந்தை வளாகத்தில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் முழு உருவ வெண்கல சிலைகளை திறந்து வைக்கிறார். பின்னர் உடுமலை நேதாஜி மைதானத்தில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.949 கோடியே 53 லட்சம் மதிப்பில், 61 முடிவுற்ற பணிகளை திறந்து வைப்பதுடன், ரூ.182 கோடியே 6 லட்சம் மதிப்பில் 35 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
நகராட்சித்துறையின் சார்பில் ரூ.34 கோடியே 80 லட்சம் மதிப்பில் திருப்பூர் மாநகராட்சி கோவில் வழி யில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையம், திருப்பூர் வேலம்பாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.41 கோடி மதிப்பில் 100 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம், திருமுருகன்பூண்டியில் ரூ.39.44 கோடி மதிப்பில் கட்டப் பட்டுள்ள டைடல் பூங்கா ஆகியவற்றை காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.
மேலும் ரூ.295 கோடியே 29 லட்சம் மதிப்பில் 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
பின்னர் 11.30 மணிக்கு உடுமலை நகர தி.மு.க. அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். பகல் 12 மணிக்கு கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு புறப்பட்டு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சி யில் உள்ள பரம்பிக்குளம் ஆழியார் திட்ட வளாகத்தில் பி.ஏ.பி., பாசன திட்டம் அமைய காரணமானவர்களான காமராஜர், சி.சுப்பிர மணியம், வி.கே.பழனிச்சாமி கவுண்டர், பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரின் முழு உருவ சிலைகளை திறந்து வைக்கிறார்.
அதன்பிறகு பரம்பிக்குளம் ஆழியாறு அணை கட்டுமான பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் நினை வரங்கத்தை திறந்து வைக்கிறார். மதியம் 2 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
உடுமலையில் 2 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். கோவை, மடத்துக்குளம், உடுமலை உள்ளிட்ட இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
- தமிழக பா.ஜ.க. கட்சிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
- தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்த வகையில் தமிழக பா.ஜ.க. கட்சியும் அ.தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி உள்ளது. பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் ஏற்கனவே தமிழகம் வந்து மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக் கூறியுள்ளனர்.
மத்திய மந்திரி அமித்ஷா தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வெற்றி பெறுவதற்கான வியூகங்களையும் எடுத்துக் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து சட்டசபை தேர்தல் பணிகளை முடுக்கி விடுவதற்காக பா.ஜ.க. கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் சென்னை வந்துள்ளார். கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மகளிர் தேசிய செயலாளர் வானதி சீனிவாசன், முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன், மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதா கிருஷ்ணன் மற்றும் முன்னணி நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழக பா.ஜ.க. கட்சிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். மாநில துணை தலைவர்கள், துணை செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர தமிழகம் முழுவதும் 66 மாவட்ட தலைவர்களும் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர். மொத்தம் 175 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பா.ஜ.க. நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் தேசிய செயலாளர் பி.எல்.சந்தோஷ் பேசும்போது, நிர்வாகிகள் அனைவரும் எப்படி பணியாற்ற வேண்டும், தேர்தலை சந்திப்பதற்கு என்னென்ன விஷயங்களை கையில் எடுக்க வேண்டும் என்பது பற்றி விரிவாக விளக்கி கூறினார்.
கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். காலை 10 மணி அளவில் தொடங்கிய பயிற்சி முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இந்த கூட்டத்துக்கு பின்னர் பா.ஜ.க. தலைவர்கள், கட்சியின் வளர்ச்சி பணிகள் பற்றியும், சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாகவும் முக்கிய தகவல்களை வெளியிடுகிறார்கள்.
தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளை கூட்டணியில் தக்க வைத்துக் கொள்வது பற்றியும், ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாகவும் பா.ஜ.க. தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக பா.ஜ.க. கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும் போது, "தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி வலிமை பெறுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகனுடன் அவரது காரில் ஒன்றாக வந்து இறங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் அனைவருக்கும் பெண்கள் ராக்கி கயிறு கட்டி அட்சதை தூவி வரவேற்றனர். இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை வழக்கத்துக்கு மாறாக கலர் சட்டை அணிந்து வந்திருந்தார்.
இன்றைய கூட்டத்தில் பங்கேற்றவர்கள் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டு பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அடையாள அட்டையை பார்த்த பிறகே அனைத்து நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலையை நடிகை நமீதா சால்வை அணிவித்து வரவேற்றார்.
பா.ஜ.க. அலுவலகம் முன்பு கொடி, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வாழை மரங்களும் கட்டப்பட்டு பா.ஜ.க. அலுவலக சாலை விழாக்கோலம் பூண்டிருந்தது.
- போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப்பணியாளர்களை சந்தித்து சீமான் ஆதரவு தெரிவித்தார்.
- மாநகரத்தை தூய்மைப்படுத்தும் பணியை தனியாரிடம் ஒப்படைத்தால் மேயர் பதவி எதற்கு?
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கடந்த மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இப்படி தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்களின் போராட்டம் இன்று 10-வது நாளை எட்டி உள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப்பணியாளர்களை சந்தித்து பேசிய சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* நகரை சுத்தமாக்கும் தூய்மை பணியை தனியார் இடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
* தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் குப்பை அள்ளும் பணியை கூட தனியாரிடம் என்றால் அரசுக்கு என்ன வேலை?
* எல்லாம் தனியார் மயம் எனில் மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தி உறுப்பினர்களை தேர்வு செய்வது ஏன்?
* மாநகரத்தை தூய்மைப்படுத்தும் பணியை தனியாரிடம் ஒப்படைத்தால் மேயர் பதவி எதற்கு?
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.






