என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.
    • புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நிதி முறைகேடு புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எம்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

    டெண்டர் முறைகேடு குறித்து கோவை மாநகராட்சி துணை ஆணையராக இருந்த காந்திமதிக்கு எதிராக வழக்கு தொடர அரசு அனுமதித்ததாக விஜிலெசன்ஸ் தெரிவித்துள்ளது.

    அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    மேலும், அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் ஏன் இவ்வளவு கால தாமதம் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    முன்னாள் அமைச்சர்கள் மீதான நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் காவல்துறையினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • இடத்தை தேர்வு செய்ய 4 மாதங்களுக்கு முன் தமிழக அரசு உத்தரவு.
    • 500 முதல் 600 ஏக்கர் நிலம் போதுமானதாக இருக்கும் என டிட்கோ அறிவிப்பு.

    ராமநாதபுரத்தில் விமான நிலையத்திற்கு இடம் தேர்வு செய்ய 4 மாதங்களுக்கு முன் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் விமான நிலையம் அமைக்க கீழக்கரை, உச்சிப்புளி ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ராமநாதபுரம் விமான நிலையத்திற்கு 500 முதல் 600 ஏக்கர் நிலம் போதுமானதாக இருக்கும் டிட்கோ அறிவித்துள்ளது.

    • தமிழகத்தில் இருந்தும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முக்கிய தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.
    • தமிழ்நாடு காவல்துறை சிறப்பான காவல்துறை. விரைவில் சரியான குற்றவாளியை கைது செய்வார்கள்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வருகிற 7-ந் தேதி வாக்கு திருட்டை தடுப்போம், வாக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது.

    பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே உள்ள மைதானத்தில் நடைபெறும் இந்த மாநாடு இடத்தை இன்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லையில் நடைபெற உள்ள வாக்கு திருட்டை தடுப்போம், வாக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுப்போம் மாநாட்டுக்கு கால் கோள் நாட்டு விழாவில் பங்கேற்றுள்ளேன்.

    இந்த மாநாடு ஒரு திருப்பு முனையான மாநாடாக அமையும். இந்த மாநாட்டில் ஒரு லட்சம் தொண்டர்கள் திரள்வார்கள். டெல்லியில் இருந்து மேலிட தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்தும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முக்கிய தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.

    அ.தி.மு.க. ஆட்சியிலும், பொறுப்பு டி.ஜி.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது ஒன்றும் புதிது அல்ல. உத்தரபிரதேசத்தில் இதுவரை 5 முறை பொறுப்பு டி.ஜி.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழக முதலமைச்சரிடம் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கிறார்கள். பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் போது கூட வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர் பிரதமர் மோடி. அவர் வெள்ளை அறிக்கை விடட்டும். அதன் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் இதுவரை துப்பு துலக்கப்படவில்லை. ஒரு வருடத்தை கடந்துவிட்டது. இது தொடர்பாக காவல்துறையினரிடம் கேட்கும்போது இந்த கொலை வழக்கில் சரியான கொலைக் குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டி உள்ளது. அதனால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாடு காவல்துறை சிறப்பான காவல்துறை. விரைவில் சரியான குற்றவாளியை கைது செய்வார்கள்.

    இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. இணக்கமாக உள்ளது. இந்த கூட்டணி 5 தேர்தல்களில் வெற்றி கண்ட கூட்டணி. தமிழகத்திற்கு கல்வி நிதியை மத்திய அரசு வழங்கக்கோரி சசிகாந்த் செந்தில் எம்.பி. உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரது உடல்நலம் கருதி தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்க நடத்தும் அவரது போராட்டம் வரவேற்கத்தக்கது. ஆனாலும் அவரது உடல் நலம் முக்கியம்.

    ஜி.கே.மூப்பனார் ஒரு காலமும் பாரதீய ஜனதா கட்சியை ஆதரித்தது கிடையாது. சமீபத்தில் அவரது நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது கூட காங்கிரஸ் திடலில் தான்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க., தே.மு.தி.க., ஓ.பி.எஸ். வெளியேறி உள்ளனர். ஆனால் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வழிபாட்டின் முடிவில் பார்வதிக்கு காட்சி தந்தார், சிவபெருமான்.
    • சிவராத்திரி விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம்.

    மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் மலையில் இருப்பதாலும், மலையை சுற்றி வனப்பகுதி என்பதாலும் வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும். இதை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள்.

    அதன்படி தினந்தோறும் மாலை 4 மணிக்கு மேல் சாமியை தரிசிக்க மலையேற அனுமதி இல்லை. மாலை 4.30 மணிக்கு நடை அடைக்கப்படும் வரை மட்டுமே பக்தர்கள் சிவனை தரிசனம் செய்ய முடியும். இரவு நேரங்களில் சுவாமியை தரிசிக்க முடியாது.

    அதற்கு ஒரே ஒரு நாள் மட்டும் விலக்காக உள்ளது. அதுதான் மகா சிவராத்திரி அன்று மட்டும் விடிய, விடிய பக்தர்கள் மலையேறி கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அன்று இரவு விடிய, விடிய கோவிலில் பூஜைகள் நடக்கிறது. மொத்தம் 4 கால பூஜைகள் நடக்கின்றன. கடந்த மகாசிவராத்திரி அன்று 12 ஆயிரம் பக்தர்கள் இரவில் மலையேறி தர்மலிங்கேஸ்வரரை தரிசனம் செய்துள்ளனர்.

    மகத்துவம் வாய்ந்த மகா சிவராத்திரி

    மகா சிவராத்திரி நாளில் சிந்தையில் அமைதியுடன் ஐந்தெழுத்து மந்திரமான 'சிவாய நம' என்ற மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும்.; ஒரு பிரளய காலத்தின்போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் பரம்பொருளுக்குள் அடங்கின. இதையடுத்து அன்றைய இரவுப் பொழுதில் பார்வதி தேவி, சிவபெருமானை நினைத்து பூஜை செய்தாள். அதோடு நான்கு ஜாமங்களிலும் ஆகம விதிப்படி அர்ச்சனையும் செய்தாள். சூரிய அஸ்தமன நேரம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரை, பார்வதிதேவி பூஜை செய்த காலமே, 'மகா சிவராத்திரி' என்று அழைக்கப்படுகிறது.

     

    வழிபாட்டின் முடிவில் பார்வதிக்கு காட்சி தந்தார், சிவபெருமான். அவரிடம் பார்வதிதேவி, "ஐயனே.. சிவராத்திரி தினத்தில் நான்கு ஜாமம் முழுவதும் தங்களை (சிவன்) நினைத்து வழிபடுபவர்களுக்கு, சகல சவுபாக்கியங்களும் தந்தருள வேண்டும். மேலும் அவர்களின் வாழ்நாள் இறுதியில் முக்தியையும் அளிக்க வேண்டும்" என்றாள். ஈசனும், அதன்படியே பார்வதிக்கு அருள் செய்தார்.

    மாதம்தோறும் சிவராத்திரி தினம் வந்தாலும், அம்பிகையால் வழிபடப்பட்ட மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை 'மகா சிவராத்திரி' என்று கொண்டாடுகிறோம்.

    ஒரு முறை மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் இடையே 'தங்களில் யார் பெரியவர்?' என்ற போட்டி உருவானது. அப்போது சிவபெருமான், அடிமுடி காண முடியாத ஜோதிப் பிளம்பாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார். 'ஈசனின் முடியையோ, அடியையோ யார் முதலில் காண்கிறார்களோ, அவர்களே பெரியவர்' என்று சொல்லப்பட்டது.

    இதையடுத்து அன்னப் பறவை உருவம் எடுத்த பிரம்மன், ஈசனின் முடியைத் தேடியும், வராக வடிவம் எடுத்த மகாவிஷ்ணு, பாதாளத்தைத் தோண்டியபடி ஈசனின் அடியைத் தேடியும் புறப்பட்டனர். இந்த கோலத்தையே, 'லிங்கோத்பவர் கோலம்' என்பார்கள். மகாசிவராத்திரி நாளில்தான், இந்த திருக்காட்சி காணக் கிடைத்தது என்கிறார்கள்.

    சிவராத்திரி விரதம் இருப்பதால், தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே செய்த பாவங்களும் நம்மை விட்டு நீங்கும் என்பது ஐதீகம். சிவராத்திரி விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். வருடம் முழுவதும் விரதம் மேற்கொள்வது, நூறு அஸ்வமேத யாகம் செய்வது, பலமுறை கங்கையில் நீராடுவது ஆகியவை கூட, ஒரு மகா சிவராத்திரி விரதத்திற்கு ஈடாகாது. அந்த அளவுக்கு மகாசிவராத்திரி விரதம், மகத்துவம் வாய்ந்தது.

    விரதம் இருப்பது எப்படி?

    சிவராத்திரிக்கு முன்தினம் ஒரு வேளை மட்டுமே உணவருந்த வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரிய உதயத்தின் போது வீட்டில் பூஜையை முடிக்க வேண்டும். அதன் பின் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று, மூலவர் சிவலிங்கத்தை வணங்கிவர வேண்டும். மாலையில் வீட்டில் பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து, சிவனுக்கு அர்ச்சனை செய்வதற்கான பொருட்களுடன் சிவன் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

    அங்கு நான்கு கால பூஜையிலும் கலந்து கொண்டு, சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேகம், அலங்காரங்களை கண்டுகளிக்க வேண்டும். அப்போது இறைவனின் திருநாமத்தைத் தவிர வேறு எதையும் உச்சரிக்கக் கூடாது. இரவு முழுவதும் கண் விழித்து இருக்க வேண்டும். ஆலயத்திற்குச் சென்றுதான் கண்விழித்து இருக்க வேண்டும் என்று கிடையாது.

    வீட்டிலும் கூட மகா சிவராத்திரி அன்று, நான்கு ஜாமங்களிலும் முறைப்படி பூஜை செய்து, ஈசனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது உரிய பலனைத் தரும். இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். சிந்தையில் அமைதியுடன், சிவபுராணத்தை பாடிக் கொண்டிருக்க வேண்டும்.

    பற்றற்று இருப்பதுடன், பேராசைகளைக் கைவிட்டு, பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருக்க வேண்டும். ஐந்தெழுத்து மந்திரமான 'சிவாய நம' என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். பூக்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களை கோவில்களுக்கு வாங்கிக் கொடுப்பதும் நன்மையை அளிக்கும்.

    வீட்டில் மகா சிவராத்திரி பூஜை செய்யும் போது, சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா, பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து, இறைவனை பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோவிலுக்குச் சென்று வழிபடுபவர்கள், ஆலயத்தை வலம் வந்து, சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

    நான்கு ஜாம பூஜைகளும் முடிந்த பிறகு, மறுநாள் காலையில் நீராடி, காலையில் செய்யும் காரியங்களையும், உச்சிகாலத்தில் முடிக்க வேண்டிய காரியங்களையும் அப்போதே முடிக்க வேண்டும். பின்னர் இறைவனுக்கு படைத்த நைவேத்தியங்களை தானம் அளித்து, விரதம் இருப்பவர்களும் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

    சிவராத்திரி நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத் துதிகளைச் சொல்லியும், சிவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டும், அந்த இரவை கழிக்கலாம். தொடர்ச்சியாக 24 வருடங்களுக்கு சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், சிவகதி அடைவார்கள் என்பது ஐதீகம். அத்துடன் அவர்களின் 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து, முக்தி கிடைக்கப்பெறும் என்கிறார்கள்.

    நான்கு கால பூஜைகள்

    மகாசிவராத்திரி நாளில், இரவு முழுவதும் கண் விழித்து, நான்கு கால பூஜைகள் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு கால பூஜையிலும், சிவபெருமானுக்கு அபிஷேகம், ஆராதனை, நெய்வேத்தியம் போன்றவை செய்யப்படும்.

    முதல் காலம்:மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, இரண்டாம் காலம்:இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை, மூன்றாம் காலம்:நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை, நான்காம் காலம்:அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை இந்த நான்கு கால பூஜைகளும் சிவபெருமானின் அருளைப் பெறவும், பாவங்கள் நீங்கவும், முக்தி அடையவும் செய்யப்படுகின்றன.

    • டாக்டர் அன்புமணிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பட்டுள்ளது.
    • அன்புமணி ராமதாஸ் டாக்டர் ராமதாசை சந்தித்து அவர் சொல்வதை கேட்டு செயல்தலைவராக செயல்படுவேன் என கூற வேண்டும்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது.

    இதில் கலந்து கொள்ள வந்த பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் சேலம் அருள் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    டாக்டர் அன்புமணிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் பதில் அளித்திருக்கிறாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. இது குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் 9 பேருடன் இன்று தைலாபுரத்தில் கூட்டம் நடைபெறுகிறது.

    இதில் 9 நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு கட்சியின் நிறுவன தலைவர் ராமதாசிடம் ஒப்படைத்த பின்னர் அவர் முடிவு செய்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வரும் என்று கூறி வருகிறாரே என்ற கேள்விக்கு, டாக்டர் ராமதாஸ் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவோம். அவர் எந்த கூட்டணியில் அங்கம் வைக்க முடிவு செய்கிறாரோ அந்த கூட்டணி தான் வெற்றி பெறும். அவர்கள் தான் அடுத்து ஆட்சி அமைப்பார்கள். மக்கள் எதிர்பார்க்கும் கூட்டணியை ராமதாஸ் வைப்பார் என தெரிவித்தார்.

    அன்புமணி ராமதாஸ் டாக்டர் ராமதாசை சந்தித்து அவர் சொல்வதை கேட்டு செயல்தலைவராக செயல்படுவேன் என கூற வேண்டும் என பா.ம.க. தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.அந்த நாளுக்காக காத்திருப்பதாகவும் வெகு விரைவில் அது நடைபெறும் என அருள் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    • எல்லா இளைஞர்களும், கோபாலபுரம் குடும்பத்தினரைப் போல, எந்தத் தகுதியும் இன்றி மேலே வர வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல.
    • கடுமையாக உழைக்கும் இளைஞர்களை அவமானப்படுத்தும் போக்கை, திமுக அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பணிக்குத் தேர்வாவது, பல லட்சம் இளைஞர்களின் கனவாக இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, TNPSC தேர்வுகளைக் குறித்த நேரத்தில் நடத்தாமலும், தேர்வு முடிவுகளை முறையாக வெளியிடாமலும், பல முறைகேடுகளாலும், குளறுபடிகளாலும், தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவு சிதைந்து கொண்டிருக்கிறது.

    நேற்றைய தினம், இளநிலை உதவி வரைவாளர் பணிக்காக நடைபெற்ற TNPSC தேர்வில், அய்யா வைகுண்டர் குறித்த கேள்வியின் ஆங்கில மொழி பெயர்ப்பில், முடிசூடும் பெருமாள் என்ற அய்யா வைகுண்டரின் பெயரை, "the god of hair cutting" என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். தமிழக அரசுப் பணிக்கான தேர்வில், பல கோடி மக்கள் வணங்கும் அய்யா வைகுண்டரின் மற்றொரு பெயரை, இத்தனை கவனக்குறைவாகவும், பொறுப்பின்றியும் மொழிபெயர்த்திருப்பது, கடுமையான கண்டனத்துக்குரியது.

    அதோடு மட்டுமல்லாமல், மற்றொரு கேள்வியில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சரியான கூற்றுகளை கண்டறியவும் என கேள்விக்கு, '2024 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து விருதை பெற்றது' என்பதை,

    "It Begged the United Nations award"- பிச்சை எடுத்தார்கள் என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

    திமுக தலைவர்கள் காலகாலமாக, இல்லாத விருதுகளை வாங்கியதாக கூறிவருவதாலும், ஆஸ்திரியா ஸ்டாம்ப், ஆக்ஸ்போர்டு புகைப்படம் என, பணம் கொடுத்து வாங்குவதை எல்லாம் விருதுகள் என்று பொய் கூறி ஏமாற்றி வருவதாலும், இந்தக் கேள்வியைத் தயாரித்தவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

    எனினும், அரசுப் பணி தேர்வுகளுக்கான கேள்விகளைத் தயார் செய்யும்போது, இது போன்று கவனக்குறைவாக இருப்பது, திமுக அரசு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை எத்தனை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது என்பதையே காட்டுகிறது.

    எல்லா இளைஞர்களும், கோபாலபுரம் குடும்பத்தினரைப் போல, எந்தத் தகுதியும் இன்றி மேலே வர வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல. அரசுப் பணித் தேர்வுகளுக்காகக் கடுமையாக உழைக்கும் இளைஞர்களை அவமானப்படுத்தும் போக்கை, திமுக அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அண்ணாமலை அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • நான் துரோகியா? கட்சி கட்டுப்பாட்டை மீறினேனா?
    • துரை வைகோவை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    ஒரே நாளில் விளக்க கடிதமும் கட்சியில் இருந்து நீக்குவது குறித்து நடவடிக்கையும் எடுக்க முடியுமா? என்னுடைய விளக்கத்தை பெறாமலேயே தற்காலிக நீக்கம் செய்திருக்கிறீர்கள். இது ஜனநாயக படுகொலை அல்லவா? மரண தண்டனை கைதிக்கு கூட தண்டனையை நிறைவேற்றும் முன்கால அவகாசம் வழங்கப்படும்.

    ஆனால் என் பொருட்டு அந்த அவகாசம் தர ஏன் தங்களுக்கு மனம் வரவில்லை. இந்த நடவடிக்கைக்கு பின்னால் உங்கள் மகன் துரை வைகோ இருக்கின்றார் என்பது தானே உண்மை.

    நான் துரோகியா? கட்சி கட்டுப்பாட்டை மீறினேனா? துரை வைகோவை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

    உங்கள் மீது எவ்வளவு அவதூறுகள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது, எதையும் நாங்கள் நம்பாமல் கண் மூடித்தனமாக வாழ்வது என்றாலும் வீழ்வது என்றாலும் வைகோ ஒருவருக்காகவே என்று உங்களைப் பின்பற்றி வந்தோம்.

    ஆனால் நீங்கள் எங்களைப் பற்றி யாராவது புறம் பேசினால் அதை நம்புவீர்கள். 32 ஆண்டுகளாக எங்கள் உழைப்பை உறிஞ்சி சக்கையாக தூக்கி எறிய துடிக்கும் உங்கள் பூர்ஷ்வா அரசியலை நாடு பார்க்கிறது. அதற்கான விலையை நிச்சயம் நாட்டு மக்கள் உங்களுக்கு வழங்கியே தீருவார்கள்.

    இவ்வாறு மல்லை சத்யா விளக்கம் அளித்துள்ளார்.

    • தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக 10-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.
    • ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை ஹெலிபேடு தளத்தை தஞ்சாவூர் ஹெலிபேடு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    திருச்சி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வருகிறார். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், நாளை மறுநாள் (புதன்கிழமை) சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு காலை 10.55 மணிக்கு வருகிறார்.

    அவரை மாவட்ட கலெக்டர் வே.சரவணன், அமைச்சர்கள் வரவேற்கின்றனர். தொடர்ந்து, பகல் 12.10 மணியளவில் ஹெலிகாப்டரில் திருவாரூர் சென்று, தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக 10-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.

    பின்னர், அவர் திருவாரூரில் இருந்து மாலை 4.30-க்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றின் பஞ்சக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து காரில் மாலை 5.20-க்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்யும் திரவுபதி முர்மு, மாலை 6 மணிக்கு கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றடைகிறார். திருச்சி விமான நிலையத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டு, இரவு 7 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை ஹெலிபேடு தளத்தை தஞ்சாவூர் ஹெலிபேடு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம், ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை, ரெங்கநாதர் கோவில் மற்றும் அவர் காரில் செல்லும் வழிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    • டிஜிபி அலுவலகத்தில் வைத்து முறைப்படி பொறுப்பு ஏற்றுக்கொண்டார் வெங்கட்ராமன்.
    • ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

    தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையொட்டி புதிய டிஜிபியாக நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்து வந்த டிஜிபி வெங்கட்ராமனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.

    நேற்று அவர் டிஜிபி அலுவலகத்தில் வைத்து முறைப்படி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

    சென்னை டிஜிபி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் உயர் போலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஆனால், சென்னை காவல் ஆணையர் அருண், வெட்கட்ராமன் பொறுப்பேற்றபோது நேரில் செல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், பொறுப்பு டிஜிபி வெங்கடராமனை சென்னை காவல் ஆணையர் அருண் சந்தித்துள்ளார்.

    சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் நேரில் சென்று அவர் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    • அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும் என்ற சசிகலாவின் கருத்தை வரவேற்கிறேன்.
    • வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.

    தென்காசி மாவட்டம் நெற்கட்டும்சேவலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும் என்ற சசிகலாவின் கருத்தை வரவேற்கிறேன்.

    * பிரிந்து கிடக்கும் சக்தியை ஒன்று சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறேன்.

    * வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.

    * சட்டசபை தேர்தலில் விஜயுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அவர் கூறினார்.

    • அதிகபட்சமாக நெல்லையில் 333 மி.மீ. மழை கூடுதலாக பெய்துள்ளது.
    • தென்மேற்கு பருவமழை காலம் செப்டம்பர் மாதம் வரை உள்ளது.

    சென்னை:

    நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக வெள்ளம் நிலச்சரிவு ஏற்பட்டன. இதனால் கடுமையான உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வடமாநிலங்களில் செப்டம்பர் மாதம் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது.

    வடகிழக்கு, கிழக்கு இந்தியாவின் சில பகுதிகள், கடைக்கோடி தென்தீபக்கற்ப பகுதிகளை தவிர்த்து நாடு முழுவதும் பரலாக அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 209.7 மில்லி மீட்டர் பெய்ய வேண்டும். ஆனால் 214 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 6 மில்லி மீட்டர் அதிகமாகும். மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 19 மாவட்டங்களில் சராசரி மழை அளவை விட கூடுதலாக பெய்துள்ளது.

    அதிகபட்சமாக நெல்லையில் 333 மி.மீ. மழை கூடுதலாக பெய்துள்ளது. தென்காசியில் 88 மி.மீ., கோவை 52 மி.மீ. மயிலாடுதுறை 49 மி.மீ. திருவள்ளூர் 44 மி.மீ., தேனி 41 மி.மீ., ராணிப்பேட்டை 40 மி.மீ., சென்னையில் 23 மி.மீ. கூடுதலாக மழை பெய்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை காலம் செப்டம்பர் மாதம் வரை உள்ளது. ஆனால் கடந்த 3 மாதங்களில் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 19 மாவட்டங்களில் இயல்பைவிட மழை குறைவாக பெய்துள்ளது. இந்த மாதம் பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • மலைக்கோவில் சாலையை சீரமைக்க கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் படிக்கட்டு வழியாக நடந்து செல்கிறார்கள்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    பெரும்பாலான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு கார், பஸ், வேன், ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் மூலம் செல்வது வழக்கம். வாகனங்கள் மலைக்கோவிலுக்கு சென்று வருவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில், திருத்தணி -அரக்கோணம் சாலையில் இருந்து மலைப்பாதை உள்ளது.

    இந்த ஒரே பாதையில் அனைத்து வாகனங்களும் மலைக்கோவிலுக்கு சென்று வருவதால் கடந்தசில மாதங்களாக சாலை சேதமடைந்து காணப்பட்டது. இதனை சரிசெய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் மலைக்கோவில் சாலையை சீரமைக்க கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மலைக்கோவில் பாதையில் சாலை அமைக்கும் பணி இன்று தொடங்கியது. நெடுஞ்சாலைத் துறை மூலம் நடைபெறும் இந்த பணி நாளை வரை நடக்கிறது.

    இதனால் மலைக் கோவிலுக்கு வாகனங்கள் செல்ல இன்றும், நாளையும் என 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    கோவில் சார்பில் இயக்கப்படும் பஸ்கள் மூலம் மட்டும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

    இதனால் கோவில் பஸ்சில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் படிக்கட்டு வழியாக நடந்து செல்கிறார்கள். நாளை (செவ்வாய்க்கிழமை) மலைக்கோவிலுக்கு மோட்டார் சைக்கிள்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    பக்தர்கள் வசதிக்காக 4 பஸ்கள் மட்டும் மலைக்கோவிலுக்கு இயக்கப்படுகிறது. பிற எந்தவித வாகனங்களுக்கும் மலைப்பாதையில் செல்வதற்கு இன்றும் நாளையும் அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    ×