என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இந்தியாவில் இருக்கக்கூடிய மக்கள் இந்தியா கூட்டணியை ஆதரிக்கின்றனர்.
    • அகதிகள் என்ற வார்த்தையை எடுத்து விட்டு மறுவாழ்வு முகாம் என்ற பெயரை கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே லெம்பலக்குடியில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் அவர்களுக்கென புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு புதிய குடியிருப்புகளை திறந்துவைத்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் இலங்கை தமிழர்களின் முகாம்கள் 106 இருக்கின்றன. அந்த முகாம்களின் உள்ள 20 ஆயிரம் குடும்பங்களுக்கும் அதில் உள்ள 60 ஆயிரம் மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அகதிகள் என்ற வார்த்தையை எடுத்து விட்டு மறுவாழ்வு முகாம் என்ற பெயரை கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு.

    கடல் தான் நம்மை பிரித்துள்ளது.தமிழர் என்ற உறவு நம்மை எப்போதும் இணைத்துதான் உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசிடம் அனுப்பியுள்ளோம். முதல் கட்டமாக இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 200 பேரை தேர்வு செய்து இலங்கை அரசு கொடுக்கப்பட்ட குடியுரிமை மூலம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

    மீண்டும் தமிழ்நாட்டின் சார்பில் முதல் கட்டமாக வந்தவர்களுக்கு உரிமைகள் வழங்குவதற்கான குழு அமைத்து சட்டத்துறை அமைச்சர் ஆலோசனைப்படி சட்ட குழு ஒன்று அமைத்து தீர்வு காணப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்ததை முடிப்பவர். அவர் எடுக்கின்ற எல்லா முயற்சிகளும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற முயற்சிக்கு மக்கள் ஆதரவாக இருக்கின்றனர். அதேபோல் இந்தியாவில் இருக்கக்கூடிய மக்கள் இந்தியா கூட்டணியை ஆதரிக்கின்றனர்.

    எதிர்காலத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமையை பெற்று தரவும். இலங்கை தமிழர்களில் உள்ள மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கும். வேளாண்மை கல்லூரியில் சேர்வதற்கும் அனுமதி வழங்கும்.

    மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கு தான் சட்ட சிக்கல் இருக்கின்றது. அதை மிக விரைவில் மத்தியில் அரசியல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நீட் தேர்வு என்ற அரக்கனை அகற்றிவிட்டு அதில் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் விடிவுகாலம் வரும்போது நம்மோடு இருக்கின்ற இலங்கை தமிழர்களுக்கும் விடிவுகாலம் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

    • அமுதவல்லி தன்னுடைய விருப்பப்படி, ஆடைகள் தயாரிக்கும் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமுதவல்லி நன்றி கூறி மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கரூர் மாவட்டம், ஆண்டான் கோவிலைச் சேர்ந்தவர் கே. அமுதவல்லி. அவர் வீடுகளுக்குப் பயன்படும் ஆடைகள் தயாரிக்கும் சிறு தொழிலில் ஈடுபட ஆர்வம் கொண்டிருந்தார். அந்த ஆர்வத்துடன், மாவட்டத் தொழில் மையத்தை அணுகி தான் சுயமாகத் தொழில் புரிவதற்குக் கடன் உதவி புரியுமாறு கேட்டுக் கொண்டார்.

    அமுதவல்லியின் தொழில் ஆர்வத்தின் அடிப்படையில், அவர் செய்ய விரும்பும் சிறு ஜவுளித் தொழிலை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் அவருக்கு உதவி செய்திட மாவட்டத் தொழில் மையம் முன் வந்தது. அதன் பரிந்துரையுடன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமுதவல்லிக்கு அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டத்தின்கீழ் 9 லட்சத்து 87 ஆயிரம், ரூபாயை தொழில் கடனாக வழங்கியது. அதில் 35 சதவிகிதத் தொகை 3 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் அரசு மானியமாக அமுதவல்லிக்கு கிடைத்தது.

    மேலும், வங்கிக் கடன் தொகைக்குரிய வட்டியில் 6 சதவிகித வட்டித் தொகையையும் அரசு மானியமாக அவருக்கு அளித்தது.

    இந்தக் கடன் உதவியோடு, அமுதவல்லி தன்னுடைய விருப்பப்படி, ஆடைகள் தயாரிக்கும் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டார். அதன் மூலம் ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய்க்கு மேல் அவர் தயாரித்த ஆடைகள் விற்பனையாயின. இதில் அவருக்கு 8 லட்சம் ரூபாய் லாபமாக கிடைத்தது.

    குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயல்படுத்தும் முதலமைச்சரின் திட்டம் சாதாரண ஒரு பெண்மணியைப் புதிய தொழில் முகவராக மாற்றிச் சாதனை படைத்துள்ளது.

    மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் தன்னைத் தொழில் முதலாளியாக உயர்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமுதவல்லி நன்றி கூறி மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க.வின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.
    • மனுதாரர் சிவில் நீதிமன்றத்தை அணுகுமாறு சென்னை ஐகோர்ட் அறிவுரை வழங்கியது.

    சென்னை:

    திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் முறையாக நடக்கவில்லை, சர்வாதிகார முறையில் நடைபெற்றது. இதனால் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அ.தி.மு.க.வின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.

    இதனையடுத்து நீதிபதி, அ.தி.மு.க.வில் உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்து பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால், எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.

    மேலும் மனுதாரர் சிவில் நீதிமன்றத்தை அணுகுமாறு சென்னை ஐகோர்ட் அறிவுரை வழங்கியது.

    • பல்வேறு ஐ.டி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
    • துர்நாற்றமும் வீசி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    வேளச்சேரி:

    சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் பகுதி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

    பெரும்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு ஐ.டி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் தற்போது அதிக அளவில் குடியிருப்புகள் பெருகி மக்கள் தொகை அதிகரித்து உள்ளது. இதே போல் வாகன போக்குவரத்தும் பல மடங்கு உயர்ந்து விட்டது. இந்த நிலையில் பெரும் பாக்கம் ஊராட்சியின் பின் பகுதியில் ஜல்லடியான் பேட்டை பிரதான சாலையில் உள்ள காலி இடம் குப்பைகளை சேகரிக்கும் இடமாக மாற்றப்பட்டு உள்ளது. இங்கு சேகரிக்கப் படும் குப்பைகள் பின்னர் அங்கிருந்து வாகனங்கள் மூலம் ஓரகடம் அருகே உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. சுற்றிலும் குடியிருப்புகள் உள்ள நிலையில் குப்பை சேகரிக்கும் இடம் தற்போது குப்பை கிடங்காக மாறி விட்டது. இங்கு கொட்டப்படும் குப்பை கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படாமல் அங்கேயே குவிந்து கிடப்பதால் தெருநாய்கள் மற்றும் மாடுகள் அந்த பகுதியில் அதிக அளவில் சுற்றி வருகின்றன.

    நாய்கள் கழிவுகளை இழுத்து சாலையோரம் போட்டு செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். கடும் துர்நாற்றமும் வீசி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இங்கு கொட்டப்படும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி கிடங்கிற்கு மாற்ற ஊராட்சி நிர்வாகம் கடும் சிரமம் அடைந்து வருகிறது. இதனால் அப்பகுதி குப்பை மேடாக மாறி உள்ளது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, முறையாக பராமரிக்கப்படாத குப்பை கொட்டும் நிலையத்துக்குள் தெருநாய்கள், கால்நடைகள் அதிக அளவில் சுற்றி வருவதால் பெரும்பாக்கத்தில் இருந்து பள்ளிக்கரணை செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பெரும்பாலான நாட்களில், சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளில் பாதி மட்டுமே குப்பை கிடங்கிற்கு மாற்றப்படுகிறது. எனவே இந்த பகுதியில் உள்ள குப்பை சேகரிப்பு மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றனர்.

    • பேருந்தில் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து விபத்து.
    • ஓட்டை வழியே கீழே விழுந்த பெண் சிறிது தூரம் தொங்கியபடியே சென்றார்.

    சென்னையில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட ஓட்டையில் பெண் பயணி சரிந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் செல்லும் தடம் எண் 59 பேருந்து அமைந்தகரை அருகே சென்றபோது பேருந்தில் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து விபத்துக்குள்ளானது.

    ஓட்டையில் சறுக்கியபடி கீழே விழுந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது. பேருந்தின் ஓட்டை வழியே கீழே விழுந்த பெண் சிறிது தூரம் தொங்கியபடியே சென்றுள்ளார்.

    இதில் அந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    • பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் வந்து செல்கிறார்கள்.
    • பூங்காக்களை நகராட்சி நிர்வாகம் பராமரிப்பதே இல்லை.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் 21-வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பல பூங்காக்கள் முறையான பராமரிப்பு இன்றியும், விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் பழுதடைந்தும், புதர் மண்டியும், விஷ புச்சிகள் குடியிருக்கும் இடமாகவும் மாறி வருகிறது.

    குறிப்பாக பூந்தமல்லி நண்பர்கள் நகரில் உள்ள நகராட்சி பூங்கா பொது மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

    இந்த பூங்காவுக்கு தினந்தோறும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளவும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் வந்து செல்கிறார்கள்.

    ஆனால் இங்கு ராட்டினம், சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்ட குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் அனைத்தும் உடைந்து கிடக்கின்றன. இதனை குழந்தைகள் ஏக்கத்துடன் பார்த்து செல்கிறார்கள். மேலும் ஏற்கனவே இருந்த குடிநீர், கழிப்பறை வசதிகள் அனைத்தும் இப்போது இல்லை. கழிவறைகள் உடைந்தும், குடிநீர் குழாய் துருபிடித்தும் காணப்படுகிறது. பூங்காவை சுற்றி நடந்து செல்லும் பாதையும் பல இடங்களில் இடிந்து கிடப்பதால் அதில் செல்லும் வயதானவர்கள் அடிக்கடி தடுமாறி விழும் நிலையும் நீடித்து வருகிறது.

    எனவே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் நண்பர்கள் நகரில் உள்ள நகராட்சி பூங்காவை முறையாக பராமரித்து குழந்தைகள் விளையாட்டு சாதனங்களை புதிதாக அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    பூந்தமல்லி நகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்களை நகராட்சி நிர்வாகம் பராமரிப்பதே இல்லை. குறிப்பாக நண்பர்கள் நகரில் உள்ள பூங்காவில் குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் குழந்தைகள் விளையாடும் போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும் முறையான பராமரிப்பு இல்லாததால் குப்பை கழிவுகள், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் விஷ பூச்சிகள் வசிக்கும் இடமாகமாறி வருவதால் பொதுமக்கள் வந்து செல்லவே அச்சம் அடைந்து உள்ளனர்.

    இதனால் பூங்காக்களை பயன்படுத்த தயங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்த அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதேபோல் சின்னப்பா நகரில் உள்ள பூங்காவும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செய்துள்ளார்.
    • காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்று நாளை (7-ந் தேதி) காலை தாயகம் திரும்பும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை விமான நிலையத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர்-அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் தங்களது தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளார்.

    தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்குவதற்காக ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செய்துள்ளார்.

    குறிப்பாக சரக்கு முனையங்கள் மற்றும் சரக்குகளை கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமான ஹைபக் லாய்டு நிறுவனத்துடன் 2,500 கோடி ரூபாய் முதலீட்டில், 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    இதுபோன்று ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க முன்வரும் படியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் புதிய தொழில்களை தொடங்க தொழில் முதலீடுகளை ஈர்த்துவிட்டு வெற்றிகரமாக தாயகம் திரும்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (7-ந் தேதி) காலை 8.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையம் முன்பு காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் மாபெரும் தொழில் புரட்சியை செய்து வரும் தொழில் புரட்சி நாயகர் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது "நமது கடமை, நமது உரிமை" என்ற அந்த உணர்வோடு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து கழகத் தோழர்கள் அனைவரும் தமது கரங்களில் கழகத்தின் இருவண்ண கொடிகளையும், வரவேற்பு பதாகைகளையும் ஏந்தி, மேள-தாளம், பேண்ட் வாத்தியம் முழங்க மிகவும் கோலாகலமான முறையில் எழுச்சியான வரவேற்பு அளித்திடும் படி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தேர்தல் அறிக்கை என்பது நம்முடைய உரிமைகளை மீட்பதற்கான ஒரு தேர்தல் அறிக்கை.
    • நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்து மக்களை ஒற்றுமையாக முன்னேற்ற பாதையில் அழைத்துச்செல்வோம்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் நடந்த தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் கருத்து கேட்பு கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு சந்திப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருக்கக்கூடிய பல துறைகளை சார்ந்த சங்கங்களை சார்ந்த அத்தனை பேருக்கும் எங்களுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களை சந்தித்து மக்களுடைய கருத்துக்களை, கோரிக்கைகளை கேட்டு எழுதப்படக்கூடிய மக்களுடைய தேர்தல் அறிக்கையாகத்தான் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இருக்கும்.

    இப்போது அந்த வழியில் தொழிலாளர்கள், நம்முடைய முதலமைச்சர் கழக தலைவர் தளபதி அவர்களுடைய கட்டளைக்கு இணங்க தேர்தல் சார்ந்து தொழிலாளர், விவசாயிகள், மீனவர்களை சந்தித்து அவர்களுக்கு இருக்கக்கூடிய கோரிக்கைகளை எல்லாம் தேர்தல் அறிக்கையாக உருவாக்கக்கூடிய வாய்ப்பை நாங்கள் பெற்று இருக்கிறோம்.

    இந்த தேர்தல் அறிக்கை என்பது நம்முடைய உரிமைகளை மீட்பதற்கான ஒரு தேர்தல் அறிக்கை. மத்தியில் இருக்கக்கூடிய அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாநில உரிமைகளை சிதைத்து கொண்டிருக்கிறது.

    அதேபோல் மக்களை பிரித்தாளக்கூடிய ஒரு மனப்பான்மையோடு நம்முடைய ஒற்றுமையை சிதைத்து, ஒவ்வொரு மாநிலத்தின் அடையாளங்களை எல்லாம் அழித்து, மக்களுக்கு இடையே பிரச்சனைகளை உருவாக்கி, வேறு பிரச்சனைகளை கொண்டு வந்து அதை முன்வைத்து, மக்கள் அன்றாடம் சந்திக்கும் வேலைவாய்ப்பு இல்லாமை, விவசாய பிரச்சனை, மீனவர்களுடைய உரிமைகளை பறிக்கப்படுவதை மறக்கடிக்க செய்து வேறு ஒரு புதிய மதக்கலவரத்தையோ ஜாதி பிரச்சனைகளையோ தூண்டி அதில் அரசியல் செய்யலாம் என்ற நிலைப்பாடு உடையவர்கள் தான்.

    அதனால் இதை நாம் சரியாக புரிந்து கொண்டு மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வுகளை காண நம்முடைய முதலமைச்சர் கட்டளைதான் இந்த தேர்தல் குழு. உங்களுக்கு இருக்கக்கூடிய கோரிக்கை, அது மாநில அரசு சார்ந்ததாகவும் இருக்கலாம். மத்தியில் ஆட்சி நிச்சயமாக மாறும் என்ற நம்பிக்கையோடு, நாம் அந்த ஆட்சி மாற்றத்திற்கான உழைப்பை முதலில் செய்து கொண்டிருக்கிறோம்.

    அந்த ஆட்சி மாற்றம் வந்த பிறகு நம்முடைய உரிமைகளை மீட்பதற்காக நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அதையும் நீங்கள் எங்களிடம் வழங்க வேண்டும். நிச்சயமாக நம்முடைய முதலமைச்சரால் உங்களுடைய வழிகாட்டுதலின் வழியே ஒரு ஆட்சி மாற்றம் இந்த நாட்டிலே உருவாகும். அந்த ஆட்சி மாற்றம் மூலம் இந்த நாட்டை மீட்டெடுப்போம். நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்து மக்களை ஒற்றுமையாக முன்னேற்ற பாதையில் அழைத்துச்செல்வோம்.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

    • சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்தார்.
    • விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 15 கி.மீ. சுற்றளவில் வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (45) தொழில் அதிபரான இவர் தந்தையுடன் சேர்ந்து மனித நேய பயிற்சி மையத்தை கவனித்து வருகிறார்.

    இவர் இமாச்சலபிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்று இருந்தார். அங்கிருந்து திரும்பும்போது சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்தார். வெற்றி துரைசாமியுடன் சென்ற உதவியாளர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டார்.

    காரில் பயணம் செய்த வெற்றி மாயமானார். அவரை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் மாயமான வெற்றி துரைசாமியை கண்டுபிடிக்க இந்திய கடற்படையின் உதவியை கின்னூர் மாவட்ட நிர்வாகம் நாடி உள்ளது.

    இதைத்தொடர்ந்து சென்னை அடையார் கடற்படை தளத்திலிருந்து, சிறப்பு பயிற்சி பெற்ற கடற்படை வீரர்கள் இமாச்சல் விரைந்துள்ளனர்.

    விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 15 கி.மீ. சுற்றளவில் வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மாயமான வெற்றி துரைசாமி குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என்று வெற்றி துரைசாமியின் தந்தை சைதை துரைசாமி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தே.மு.தி.க.வும் விருப்ப பட்டியல் கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • பிரேமலதாவுடன் தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தனது தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்க தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே அந்த கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அவரது ஆதரவாளர்களும், டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சியும் இடம் பெற்று இருக்கின்றன.

    என்றாலும் பாரதிய ஜனதா கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பிரேமலதா விஜயகாந்தின் தே.மு.தி.க. ஆகிய இரண்டும் இடம் பெறுமா? என்பதில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் ஓசையின்றி நடத்தி வருகிறார்கள். ஏ.சி.சண்முகம் போட்டியிடும் தொகுதியை உறுதி செய்து விட்டனர். அதுபோல ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தென் தமிழகத்தில் கொடுக்க வேண்டிய தொகுதிகளையும் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. சார்பில் 22 தொகுதிகள் கொண்ட ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல தே.மு.தி.க.வும் விருப்ப பட்டியல் கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதன் மூலம் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவது உறுதியாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.


    விஜயகாந்த் மரணம் அடைந்தபோது அடுத்தடுத்து பிரதமர் மோடி புகழாரம் சூட்டியது பிரேமலதாவை நெகிழ்ச்சி அடையவைத்தது. மேலும் பத்ம விருது கொடுத்து விஜயகாந்தை கவுரவித்ததின் மூலம் மிகப்பெரிய அந்தஸ்தை பா.ஜ.க. தந்திருப்பதாக பிரேமலதா கருதினார்.

    இந்த நிலையில் பிரேமலதாவுடன் தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.வை இணைத்துக் கொள்ள பிரேமலதா ஒப்புக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.

    தே.மு.தி.க. சார்பில் பா.ஜ.க.விடம் பட்டியல் ஒன்று கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் தே.மு.தி.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் இடம் பெற்று உள்ளன. இது தொடர்பாக பிரேமலதாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது:-


    பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது என்ற பட்டியலை பாரதிய ஜனதாவிடமும், அ.தி.மு.க.விடமும் கொடுக்கப்பட்டது. எந் தெந்த தொகுதிகளில் போட்டியிட தே.மு.தி.க. விரும்புகிறது என்ற விவரமும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது போல 4 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பாராளுமன்ற மேல்-சபைக்கு ஒரு எம்.பி. இடம் தர வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது. இதற்கு பாரதிய ஜனதா தரப்பில் இருந்து சாதகமான பதில் வந்து உள்ளது.


    இதையடுத்து தே.மு.தி.க. மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (புதன் கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.

    கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் பிரேமலதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து முடிவுகளை வெளியிடுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தே.மு.தி.க. தரப்பில் கள்ளக்குறிச்சி, மதுரை உள்பட 4 தொகுதிகள் கேட்கப்படுகிறது. இதில் பிரேமலதாவின் இளைய சகோதரர் எல்.கே.சுதீஷ் கள்ளக்குறிச்சியில் வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என்று தெரிகிறது.

    மதுரை தொகுதியில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகர் தே.மு.தி.க. வேட்பாளராக களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. தே.மு.தி.க. அளித்துள்ள வேண்டுகோள்கள் அனைத்தையும் பா.ஜ.க. நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளது.

    இதன் காரணமாக தே.மு.தி.க. நிர்வாகிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    • இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தலைமைச் செயலகம் வந்ததும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
    • இன்று மதியம் தலைமைச் செயலகத்தில் மற்ற துறை உயர் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.

    சென்னை:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற மே மாதம் நிறைவு பெற உள்ளது.

    இதையடுத்து புதிய அரசை தேர்வு செய்வதற்காக நாடு முழுவதும் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த ஆயத்தமாகி வருகிறது.

    இதற்காக பாராளுமன்ற தேர்தலுக்கான அட்டவணையை இந்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரம் வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது.

    அதற்கு முன்னதாக நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.

    இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாநிலத்தின் சூழ்நிலைகளை ஆராய்ந்து தேர்தல் தேதிகளை முடிவு செய்வதற்கான பூர்வாங்க பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

    இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், வாக்காளர் பட்டியல் புதுப்பித்தல், வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை, சட்டம் ஒழுங்கு நிலவரம் ஆகியவை குறித்து அந்தந்த மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வந்தனர். அதுமட்டு மின்றி தலைமைத் தேர்தல் அதிகாரிகளை டெல்லிக்கு அழைத்தும் ஆலோசித்து வந்தனர்.

    கடந்த மாதம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு டெல்லி சென்று இந்திய தேர்தல் ஆணையத்தில் தமிழக நிலவரம் குறித்து எடுத்து கூறி இருந்தார்.

    இந்த நிலையில் தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான தேதியை முடிவு செய்யவும், தேர்தல் முன்னேற்பாடு குறித்து ஆய்வு செய்யவும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வந்தனர்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அயஜ் பாதூ, தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் மலய் மல்லிக் ஆகியோர் இன்று காலை 11 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்களை தேர்தல் அதிகாரிகள் வரவேற்றனர்.

    விமான நிலையத்தில் இருந்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தலைமைச் செயலகம் வந்ததும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    தமிழகத்தில் இதுவரை தேர்தலுக்காக என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது? வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க மேலும் புதிதாக விண்ணப்பங்கள் வந்துள்ளதா? எந்த அளவில் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதையும் கேட்டறிந்தனர்.

    இதுவரை தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகவே பாராளுமன்றத் தேர்தல் நடந்திருப்பதால் இப்போது நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து விரைவில் அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது தவிர வாக்குப்பதிவு எந்திரங்கள் கையிருப்பு விவரம், எவ்வளவு மின் னணு எந்திரங்கள் இன்னும் தேவைப்படும் போன்ற விவரங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சுமார் 1 மணிநேரம் தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து இன்று மதியம் தலைமைச் செயலகத்தில் மற்ற துறை உயர் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருமான வரித்துறை, காவல்துறை, வருவாய் புலனாய்வுத் துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

    அப்போது தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக என்னென்ன தேவைப்படும். மத்திய ரிசர்வ் போலீஸ் படை, வருமான வரித்துறையினர் எவ்வளவு பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும்.

    கூட்டம் முடிந்ததும் சென்னையில் தங்கும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாளை காலை மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர்.

    இதில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளான மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் களுடன் காணொலி வாயிலாக தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கின்றனர். குறிப்பாக வாக்காளர் பட்டியல் முழுமையாக உள்ளதா?

    திருத்தங்கள், பெயர் சேர்த்தல் ஆகியவை சரிவர செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து கேட்டறிகிறார்கள். நாளை மாலை வரை இந்த ஆலோசனை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன் பிறகு நாளை இரவு 9 மணிக்கு டெல்லி புறப்படுகின்றனர். அதன் பிறகு தமிழக நிலவரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.

    • கருத்து கேட்பு கூட்டத்தின்போது ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் கோஷ்டி மோதல் பிரச்சினைகளும் பூதாகரமாக வெடித்தது.
    • பட்டியலை இன்னும் ஓரிரு நாளில் தயாரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் குழு வழங்கும் என தெரிகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் யார்-யாரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று தி.மு.க. ஒரு சர்வே எடுத்து வைத்துள்ளது.

    இந்நிலையில் ஒவ் வொரு மாவட்ட நிர்வாகிகளையும் அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து கடந்த சில நாட்களாக கருத்து கேட்டு வந்தது.

    தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்றிருந்த முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தினமும் காலை, மாலை என இரு நேரமும் நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

    இந்த கருத்து கேட்பு கூட்டத்தின்போது ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் கோஷ்டி மோதல் பிரச்சினைகளும் பூதாகரமாக வெடித்தது.

    ஆனாலும் உங்கள் பிரச்சினைகளை பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகு பேசி தீர்த்து கொள்ளலாம். இப்போது மேலிடம் அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள். தொகுதிக்கு எவ்வளவு ஓட்டு கிடைக்கும் என்று கேட்டறிந்தனர்.

    28-ந் தேதி தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் அடுத்த கட்டமாக ஒவ்வொரு தொகுதிக்கும் யார்-யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற உத்தேச பட்டியலை இந்த குழு தயாரிக்க உள்ளது.

    இந்த பட்டியலை இன்னும் ஓரிரு நாளில் தயாரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் குழு வழங்கும் என தெரிகிறது.

    இதற்கிடையே தி.மு.க.வில் யார்-யாருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.

    1 மத்திய சென்னை-தயாநிதிமாறன், 2 வட சென்னை-கலாநிதி வீராசாமி, 3 தென்சென்னை-தமிழச்சி தங்கபாண்டியன், 4 ஸ்ரீபெரும்புதூர்-டி.ஆர்.பாலு, 5 காஞ்சிபுரம்-செல்வம், 6 அரக்கோணம்-ஜெகத்ரட்சகன், 7 வேலூர்-கதிர் ஆனந்த் (அமைச்சர் துரைமுருகனின் மகன்) 8 திருவண்ணாமலை-அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன், இவர் மாநில மருத்துவ அணி துணைத் தலைவராக உள்ளார். 9 கள்ளக்குறிச்சி-கவுதம் சிகாமணி (அமைச்சர் பொன்முடியின் மகன்), 10 கடலூர்-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன், 11 சேலம்-வீரபாண்டி ஆறுமுகம் பேரன் டாக்டர் தருண் அல்லது உதயநிதி ரசிகர் மன்ற மாநிலச் செயலாளர் பி.கே.பாபு, 12 நீலகிரி-முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, 13 பொள்ளாச்சி-சண்முக சுந்தரம் எம்.பி. அல்லது மக்கள் நீதி மய்யத்தில் இருந்து இணைந்த மகேந்திரன், 14 பெரம்பலூர்-அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண், 15 தர்மபுரி-முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அல்லது டாக்டர் செந்தில் குமார், 16 திண்டுக்கல்-வேலுசாமி எம்.பி., 17 தூத்துக்குடி-தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., 18 நெல்லை-மகளிரணி ஹெலன் டேவிட்சன் அல்லது கிரகாம்பெல், 19 தென்காசி-தனுஷ் எம்.குமார் எம்.பி., 20 தஞ்சை-முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.

    தி.மு.க. வசம் உள்ள இந்த தொகுதிகளில் சிலவற்றை காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் கேட்டு பட்டியல் கொடுத்துள்ளதால் தொகுதிகளை மாற்றிக் கொடுக்க வாய்ப்புள்ளது.

    மேலும் சில தொகுதிகள் கூட்டணி வசம் இருப்பதால் அந்த தொகுதிகளில் சிலவற்றை தி.மு.க. கேட்டு பெறும் என தெரிகிறது. அதற்கேற்ப பட்டியல் மாற்றமும் இருக்கும் என்று நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

    ×