என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பூங்காவுக்கு வந்த வாலிபர்கள் மற்றும் காதலர்களை திரும்பிச் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
- காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பினர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இதன் அருகே அமைந்துள்ள பூங்கா சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. மேலும் உள்ளூர் மக்களுக்கும் இது சிறந்த பொழுதுபோக்கு இடமாக உள்ளது.
இங்கு வாரம் தோறும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தருகின்றனர். இது தவிர விடுமுறை நாட்களில் அதிக அளவு நபர்கள் வருகை தருவதுண்டு.
இன்று காதலர் தினம் என்பதால் காதல் ஜோடிகள் வைகை அணை பூங்காவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நுழைவு வாயில் முன்பு அதிக அளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
அவர்கள் பூங்காவுக்கு வந்த வாலிபர்கள் மற்றும் காதலர்களை திரும்பிச் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர். பொது இடங்களில் காதல் ஜோடிகளைப் பார்த்தால் அவர்களுக்கு மஞ்சள் கயிறு கொடுத்து திருமணம் செய்து வைக்கப்போவதாக பல்வேறு அமைப்புகள் தயார் நிலையில் இருந்தன.
மேலும் காதல் ஜோடிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், அவர்கள் அறிவித்திருந்தனர். இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கையாக பூங்காவுக்கு வந்தவர்களை தொடர்ந்து போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் சந்தோஷமாக பொழுதை கழிக்க வந்த காதல் ஜோடிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதே போல தேனி மாவட்டத்தின் மற்றொரு சுற்றுலா தலமாக குரங்கணி பகுதி உள்ளது. அங்கும் காதல் ஜோடிகள் குவியத் தொடங்கியதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக காதலர்கள் சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பிற இடங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
இதனிடையே காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பினர். இதனால் வைகை அணை பூங்கா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- சாலை திட்டத்தில் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பணிகள் நடைபெற்றது.
- சாலையில் கிடக்கும் ஜல்லி கற்களில் அப்பகுதி கிராமமக்கள் பயணம் செய்து வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே உள்ளது போளிவாக்கம் சத்திரம் பகுதி. இங்கு இருந்து அழிஞ்சிவாக்கம், வெள்ளகால்வா வரை உள்ள சுமார் 7 கிலோமீட்டர் சாலையை போளிவாக்கம் சத்திரம் வழியாக புதுகண்டிகை, குன்னத்தூர், பள்ளகாலனி, மேட்டு காலனி, அழிஞ்சிவாக்கம், ஆஞ்சிவாக்கம், பூவேலி குப்பம் மேட்டுச்சேரி, வெள்ளக்கால்வா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் , மருத்துவசிகிச்சை உள்ளிட்டவைக்கு செல்ல இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.
இந்த நிலையில் போளிவாக்கம் சத்திரம் பகுதியில் இருந்து அழிஞ்சிவாக்கம், வெள்ளகால்வா வரை சாலை மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பணிகள் நடைபெற்றது.
இதற்காக கடந்த ஒரு ஆண்டுகுக்கு முன்பே போளிவாக்கம் சத்திரம் பகுதியில் இருந்து வெள்ளகால்வா வரை 7 கி.மீ தூரம் ஏற்கனவே இருந்த சாலை அகற்றப்பட்டு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் அதன்பிறகு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டன.
தற்போது சாலையில் கிடக்கும் ஜல்லி கற்களில் அப்பகுதி கிராமமக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதனால் வாகனங்களின் டயர்களை சேதம் அடைந்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. ஜல்லி சாலையில் முதியோர் பள்ளி மாணவ மாணவிகள், கிராமத்தினர் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதையடுத்து சாலை அமைக்கப்படாததை கண்டித்தும், உடனடியாக சாலை அமைக்க கோரியும் போளிவாக்கம் சத்திரம் பகுதி கிராமமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- காதலர் தினத்தையொட்டி மேட்டூர் அணை பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான காதல் ஜோடிகள் வந்தனர்.
- சேலம் அண்ணா பூங்காவிலும் காலை முதலே காதல் ஜோடிகள் அதிக அளவில் குவிந்தனர்.
சேலம்:
காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காதலர்கள் தங்களது காதலர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுத்தும், வாழ்த்து தெரிவித்தும் காதலை பரிமாறிக்கொண்டனர். மேலும் காதலர்கள் இன்றைய பொழுதை மகிழ்ச்சியாக கழிக்க தங்களுக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு காலை முதலே படையெடுத்தனர்.
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் காதல் ஜோடிகள் வந்தனர். இன்று காலை முதலே ஏற்காட்டிற்கு மோட்டார் சைக்கிள்களிலும், கார்களிலும், சாரையாக காதல் ஜோடிகள் வந்தனர். மேலும் காதல் திருமணம் செய்தவர்களும் அங்கு குவிந்தனர். இதனால் ஏற்காட்டில் காதல் ஜோடிகள் மற்றும் இளம் ஜோடிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
ஏற்காட்டில் குவிந்த காதல் ஜோடிகள் அங்குள்ள மான் பூங்கா, அண்ணா பூங்கா, படகு குழாம், சேர்வராயன் கோவில் , பக்கோடா பாயிண்ட, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், மீன் பண்ணை உள்பட அனைத்து பகுதிகளையும் ஆனந்தமாக சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். மேலும் முக்கியமான பகுதிகளில் நின்று செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இதனால் கடைகளிலும் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் குரும்பப்பட்டியில் இயற்கை சூழலில் அனைவரையும் கவரும் வகையில், உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு பறவையினங்கள், பாலூட்டி இனங்கள், ஊர்வன, நீந்துவன என 200-க்கும் மேற்பட்ட உயிர் இனங்கள் உள்ளன. இயற்கை சூழலில் இந்த பூங்கா உள்ளதால் காதல் ஜோடிகள் இன்று காலை முதலே அதிக அளவில் அங்கு வந்தனர்.
மேலும் வண்ணத்து பூச்சி பூங்கா, செயற்கை நீர் வீழ்ச்சிகள் முன்பும் நின்று காதல் ஜோடிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக அங்குள்ள மான்கள், பாம்புகள், குரங்குகள், மயில்கள், மற்றும் பறவையினங்களை பார்த்து மகிழ்ந்ததுடன் உற்சகாமாக பொழுதை கழித்தனர்.
காதலர் தினத்தையொட்டி மேட்டூர் அணை பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான காதல் ஜோடிகள் வந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் நீராடி மகிழ்ந்தனர். தொடர்ந்து அங்குள்ள ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாட்டுகளில் ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்தனர். மேலும் அணையின் பவள விழா கோபுரத்தில் ஏறிய அவர்கள் அணையின் அழகையும் பார்த்து ரசித்தனர். தொடர்ந்து தங்களுக்கு பிடித்த மீன்கள் மற்றும் உணவுகளையும் வாங்கி ருசித்து மகிழ்ந்தனர்.
இதே போல சேலம் அண்ணா பூங்காவிலும் காலை முதலே காதல் ஜோடிகள் அதிக அளவில் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள புல் தரையில் அமர்ந்தும், செயற்கை நீரூற்று முன்பு நின்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனால் காலை முதலே அண்ணா பூங்காவில் காதல் ஜோடிகள் கூட்டம் அலைமோதியது. இதே போல சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தியேட்டர்களிலும் காதல் ஜோடிகள் திரண்டு தங்களுக்கு பிடித்த சினிமாக்களை பார்த்து மகிழ்ந்தனர்.
- ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது சாலையின் குறுக்காக திடீரென நாய் ஓடியதாக கூறப்படுகிறது.
- ஆட்டோவில் பயணித்த சுமார் 10 பள்ளி குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்பட்டன.
சிங்கை:
நெல்லை மாவட்டம் அம்பையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பிளஸ்-2 வரை உள்ள இந்த பள்ளியில் அம்பை, கல்லிடைக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவ-மாணவிகளை அழைத்து வர தனியாக பள்ளியில் பஸ்கள் இருந்தாலும், பள்ளிக்கு சற்று தொலைவில் உள்ள அடையக்கருங்குளம், அகஸ்தியர்பட்டி பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆட்டோக்களில் தினமும் வந்து செல்கின்றனர்.
அந்த வகையில் இன்று காலை வழக்கம்போல் வி.கே.புரம் அருகே உள்ள அடையக்கருங்குளத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் சுமார் 11 குழந்தைகள் பள்ளிக்கு புறப்பட்டனர்.
ஆட்டோவை அடையக்கருங்குளத்தை சேர்ந்த சுந்தர் என்பவர் ஓட்டி வந்தார். டிரைவரின் அருகே வி.கே.புரத்தை சேர்ந்த சித்திரை நாதன் என்பவரது மகன் பிரதீஷ்(வயது 10) என்ற 5-ம் வகுப்பு மாணவன் அமர்ந்திருந்தார்.
அகஸ்தியர்பட்டியில் தனியார் ஓட்டல் அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது சாலையின் குறுக்காக திடீரென நாய் ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் டிரைவர் சுந்தர் 'பிரேக்' பிடித்துள்ளார்.
இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவரின் அருகே அமர்ந்திருந்த பிரதீஷ் ஆட்டோவின் அடியில் சிக்கி கொண்டான்.
இதில் அவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். ஆட்டோவில் பயணித்த சுமார் 10 பள்ளி குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்பட்டன. ஆட்டோ டிரைவரும் காயம் அடைந்தார். இந்த விபத்தில் ஆட்டோவின் கண்ணாடிகள் நொறுங்கியது.
தகவல் அறிந்து வி.கே. புரம் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உயிரிழந்த மாணவன் பிரதீஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த குழந்தைகள் அம்பை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் ஆனந்த் 50 அடி தூரத்திற்கு சாலையில் இழுத்து செல்லப்பட்டார்.
- போலீசார் மினி லாரியை ஓட்டி வந்த டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி:
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது38). இவர் பல்வேறு இடங்களுக்கு சென்று சீன பீங்கானால் செய்யப்பட்ட அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள வென்னிமலை முருகன் கோவில் மாசி திருவிழாவையொட்டி அழகு சாதன பொருட்களை விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். நேற்று மாலை பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் விலக்கு அருகே நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தென்காசியில் இருந்து நெல்லைக்கு பார்சல் ஏற்றி கொண்டு ஒரு மினி லாரி சென்றது. அதனை நெல்லை பழைய பேட்டையை சேர்ந்த ஜெயராமன் (42) என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் ஆனந்த் 50 அடி தூரத்திற்கு சாலையில் இழுத்து செல்லப்பட்டார். இதில் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஆன்ந்த் உயிரிருக்கு போராடினார்.
சம்பவ இடத்திற்கு சென்ற பாவூர்சத்திரம் போலீசார், ஆனந்தை மீட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். நீண்ட நேரம் காத்திருந்தும் வராததால் அங்கிருந்தவர்கள் உயிருக்கு போராடிய ஆனந்தை மீட்டு மினி லாரியில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் மினி லாரியை ஓட்டி வந்த டிரைவர் ஜெயராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பருவம் தவறி பெய்த மழை காரணமாக மலைப்பூணடு விளைச்சல் பாதிக்கப்பட்டது.
- தேவை அதிகரித்துள்ள நிலையில் அதற்கேற்ற விளைச்சல் விவசாயிகளால் எடுக்க முடியவில்லை.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை, வில்பட்டி, பள்ளங்கி, பூண்டி, கிளாவரை போளூர், கூக்கால், புதுப்புத்தூர், பழம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய பயிராக மலைப்பூண்டு விவசாயம் நடைபெற்று வருகிறது.
புவிசார் குறியீடு பெற்ற இந்த மலைப்பூண்டு விவசாயத்தில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கொடைக்கானலில் நிலவும் தட்பவெப்பநிலை, மண்ணின், தன்மை, மலையின் உயரம் போன்ற காரணிகளால் இந்த மலைப்பூண்டுக்கு கடந்த 2018ம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
இருந்தபோதும் பல சமயங்களில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்து வந்தனர். தற்போது மலைப்பூண்டுக்கு கூடுதல் விலை கிடைத்து வருவது அவர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
1 கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்கப்பட்டு வந்த மலைப்பூண்டு தற்போது ரூ.600 முதல் ரூ.650 வரை விற்கப்பட்டு வருகிறது. கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் கூடுதல் பரப்பளவில் மலைப்பூண்டு விவசாயம் செய்யப்படவில்லை.
வடமாநிலங்களில் இருந்து வரும் வெள்ளைப்பூண்டு வரத்து அடியோடு நின்று விட்டது. இதனால் கொடைக்கானலில் இருந்து மட்டுமே வெள்ளைப்பூண்டு தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு செல்கிறது.
பருவம் தவறி பெய்த மழை காரணமாக மலைப்பூணடு விளைச்சல் இங்கு பாதிக்கப்பட்டது. இதனால் தேவை அதிகரித்துள்ள நிலையில் அதற்கேற்ற விளைச்சல் விவசாயிகளால் எடுக்க முடியவில்லை. இங்கிருந்து பெரியகுளம், வடுகபட்டி சந்தைக்கு மலைப்பூண்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த சந்தை தனியார் வசம் உள்ளதால் அவர்களே அதிக லாபம் அடைந்து வருவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில்தான் மலைப்பூண்டை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு வியாபாரிகள், இடைத்தரகர்கள் தங்கள் லாபத்துக்கு ஏற்றவாறு விலையை நிர்ணயம் செய்து விற்று வருகின்றனர். இதனால் கஷ்டப்பட்டு விளைவிக்கும் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை. அறுவடை செய்யக்கூடிய பூண்டு அனைத்தும் ஓரளவு பதப்படுத்தப்பட்டு 150 கி.மீ தூரத்தில் வாகனத்தில் எடுத்துச் சென்ற பிறகுதான் வடுகபட்டி சந்தையில் சந்தைப்படுத்தும் நிலை உள்ளது.
இதனால் விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவு அதிகரித்து வருகிறது. எனவே கொடைக்கானலில் மலைப்பூண்டுக்கு சந்தை மற்றும் பதப்படுத்தும் கிடங்கு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குருத்தோலைகளை எரித்து சாம்பல் எடுத்து வைக்கப்பட்டு இருந்தது.
- ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை.
நாகப்பட்டினம்:
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3-ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதன் வழிபாடு நடந்தது. இதையொட்டி, நாகை மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி இன்று காலையில் நிறைவேற்றப்பட்டது. குருத்தோலைகளை எரித்து அதில் இருந்து சாம்பல் எடுத்து வைக்கப்பட்டு இருந்தது.
திருப்பலியில் வைக்கப்பட்டிருந்த சாம்பல் அடங்கிய கிண்ணங்கள் புனிதம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பேராலய அதிபர் இருதயராஜ், உதவி பங்குத்தந்தை டேவிட் தன்ராஜ் ஆகியோர் திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் பூசினர்.
தவக்காலம் தொடங்கியதை யொட்டி பேராலயத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்து கொண்டனர்.
- கடந்த சில ஆண்டுகளாக ஹாலோ பிளாக் தயாரிக்கும் மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- ஹாலோ பிளாக் கற்களின் விலையை கணிசமாக உயர்த்த வேண்டிய நிலை உள்ளது.
கோபி:
தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கோபி, நம்பியூர் ஆகிய தாலுகாவில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் நிறுவனங்கள் நாள்தோறும் 2 லட்சத்து 50 ஆயிரம் ஹாலோ பிளாக் கற்களை உற்பத்தி செய்து ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கட்டுமான பணிக்காக லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஹாலோ பிளாக் தயாரிக்கும் மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு யூனிட் கிரஷர் மண் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரூ.4 ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஹாலோ பிளாக் கற்களின் விலையை கணிசமாக உயர்த்த வேண்டிய நிலை உள்ளது.
6 அங்குல அளவுள்ள ஒரு ஹாலோ பிளாக் கல் தற்போது 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் மூலப்பொருள் விலை உயர்வு காரணமாக 40 முதல் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டால் மட்டுமே இழப்புகளை சமாளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு விலையை உயர்த்தினால் 3 மாவட்டங்களிலும் கட்டுமான தொழில் முழுமையாக பாதிக்கப்படும் என்பதோடு கட்டிடத்தின் மதிப்பீட்டில் கூடுதலாக 20 முதல் 30 சதவீதம் செலவு அதிகரிக்கும். இதனால் கட்டிட உரிமையாளர்கள் முதல் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஹாலோ பிளாக் கற்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருளாக உள்ள கிரஷர் மண், ஜல்லி, சிமெண்டு போன்றவற்றின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் கோபி, நம்பியூர் தாலுகாவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் 3 நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கியுள்ளனர்.
மேலும் இவர்கள் கோபியில் லாரிகளை நிறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹலோ பிளாக்கல் உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 3-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக நாள் ஒன்றுக்கு ஒரு கோடி மதிப்பிலான ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தி முடங்கிப் போய் உள்ளது என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- அனைத்து மாநிலங்களிலுமே டேட்டிங் செயலிகளை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- சுமார் 40 சதவீத பேர் ஆன்லைன் மூலமாக காதல் டேட்டிங்குகளில் ஈடுபட்டு வருவதும் கண்டறியப்பட்டு உள்ளது.
இறு காதலர் தினம்.
உலகம் முழுவதிலும் உள்ள காதலர்கள் பிப்ரவரி 14-ந்தேதி காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இதன்படி இன்று காதலர்கள் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர்கள், மால்கள் ஆகியவற்றில் திரண்டு காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
காதலர் தினத்தில் தங்களது மனதை கொள்ளை கொண்ட மங்கையர்களுக்கு பிடித்தமான பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்த வாலிபர்கள் பலர் இந்த நாளை மறக்க முடியாத நாளாக எப்போதும் மனதில் வைத்திருக்கும் வகையிலும் பல்வேறு மகிழ்ச்சியான விஷயங்களில் ஈடுபட்டனர்.
இப்படி காதலர் தினத்தைப் பற்றி ரசனையோடு சொல்லிக்கொண்டே செல்லலாம். அந்த வகையில் நேரில் பார்த்து பழகி காதலிப்பவர்களுக்கு மத்தியில் பார்க்காமலேயே ஆன்லைனில் பழகி காதலிப்பவர்களும் தற்போது அதிகரித்து வருகிறார்கள்.

ஆனால் இதுபோன்ற காதல் கடைசியில் மோசடி காதலாகவே முடிந்து விடுவதாக போலீசார் எச்சரித்துள்ளனர். டேட்டிங் செயலிகள் மூலமாக பேசி பழகுவது என்பது இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் ஒருவித போதையாகவே மாறிப் போய் இருக்கிறது.
டேட்டிங் செயலிகளை பதிவிறக்கம் செய்து கொண்டு அதன் மூலமாக பெண்களுக்கு வலை விரிப்பதற்காகவே ஒரு கும்பல் இணைய தளங்களை 24 மணி நேரமும் பயன்படுத்தி வருகிறது.
அதே நேரத்தில் பெண் குரலில் பேசி வாலிபர்களை மயக்கி அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்திருப்பதாக கூறிவிட்டு பின்னர் சுங்கஇலாகா அதிகாரி போல பேசி மிரட்டி பணத்தை பறித்து விடுகிறார்கள்.
குறிப்பிட்ட தொகையை லட்சங்களில் சொல்லி இந்த பணத்தை அனுப்பாவிட்டால் நீங்கள் சிறை செல்வது உறுதி. உங்களுக்கு வந்திருக்கும் பார்சலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் உள்ளன. நாங்கள் சொல்லும் வங்கி கணக்கில் இத்தனை லட்சங்களை நீங்கள் உடனடியாக அனுப்ப வேண்டும்.
இல்லையென்றால் உங்கள் வீட்டுக்கு அடுத்த சில நிமிடங்களில் போலீஸ் வரும் என்று கூறியதைக் கேட்டு இன்று பல இளைஞர்களும் இளம்பெண்களும் லட்சங்களை வாரி இறைத்து விட்டு அதனைத் திரும்பப் பெறுவதற்கு வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறிய பிறகே டேட்டிங்கில் நம்மோடு பழகிய நபர் மோசடி ஆசாமி என்பது சம்பந்தப்பட்ட வாலிபர்களுக்கோ இளம்பெண்களுக்கோ தெரிய வருகிறது. இதனால் டேட்டிங்கில் யாருடன் பழகுகிறோம் என்பதை நேரில் சந்தித்து உறுதி செய்து கொண்ட பின்னரே தங்களது காதலை இன்றைய வாலிபர்களும் இளம்பெண்களும் தொடர வேண்டும் என்றும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாம் பின்னர் சந்திக்கலாம் சில மாதங்கள் என்னால் நேரில் வர இயலாது. அதன் பிறகு நாம் இருவரும் சந்தித்து பேசிக் கொள்ளலாம் என்று ஆன்லைனில் பழகும் ஆணோ, பெண்ணோ கூறினால் அதனை முழுமையாக நம்பி விட வேண்டாம் என்றும் அது போன்ற நபர்கள் நிச்சயம் பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது டேட்டிங் செயலிகள் இன்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விதவிதமான பெயர்களில் பல்வேறு டேட்டிங் செயலிகள் இன்று பயன்பாட்டில் உள்ளன. இந்த செயலிகள் மூலமாகவே மோசடி பேர் வழிகள் காதலன் போலவோ அல்லது காதலி போலவோ போலியான புகைப்படங்களை உருவாக்கி வைத்துக் கொண்டு மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குறிப்பாக மோசடியில் ஈடுபடும் வாலிபர்கள் பெண் குரலில் பேசுவதுடன் அழகான புகைப்படங்களை டி.பி.யாக வைத்துக் கொண்டும் இளம்பெண்களுக்கு வலை விரிக்கிறார்கள். இதுபோன்று தமிழகத்திலும் பல்வேறு மோசடி சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. அனைத்து மாநிலங்களிலுமே டேட்டிங் செயலிகளை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

70 சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் டேட்டிங் செயலிகளை பயன்படுத்தி அதன் மூலமாக பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்து உள்ளது. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை நம்பி பலர் ஏமாந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. 26 சதவீத இந்தியர்களில் ஒருவர் இது போன்ற மோசடியை எதிர்கொண்டுள்ளார்.
காதலர் தினத்தை ஒட்டி காதலர் தின பரிசு தருவதாக கூறி மோசடி கும்பல் டேட்டிங் செயலிகள் மூலமாக வலை விரித்து இருப்பதும் அதன் மூலமாக பலர் தங்களது பணத்தை இழந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அனைவரும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களை குறி வைத்து இந்த ஆன்லைன் டேட்டிங் செயலி செயல்படுவதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் இணையதள பாதுகாப்பு தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலமாகவே இந்த காதல் மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சுமார் 40 சதவீத பேர் ஆன்லைன் மூலமாக காதல் டேட்டிங்குகளில் ஈடுபட்டு வருவதும் கண்டறியப்பட்டு உள்ளது. வரும் காலங்களில் இந்த ஏ.ஐ தொழில்நுட்பமும் டேட்டிங் செயலிகளும் மேலும் பல்வேறு மோசடிகளை அரங்கேற்றலாம் என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதுபோன்ற டேட்டிங் செயலிகள் மூலமாக அரங்கேறும் மோசடிகள் 400 சதவீத அளவுக்கு அதிகரித்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இப்படி டேட்டிங் செயலிகளை பயன்படுத்தி மூன்று விதமான மோசடிகளை திரை மறைவில் இருந்தபடியே மோசடிக்காரர்கள் அரங்கேற்றி வருகிறார்கள்.
ஆன்லைனில் உருகி உருகி காதலிப்பதாக கூறிவிட்டு தான் காதலிக்கும் பெண்ணுக்கு அவரது முகவரியில் பரிசு பொருள்களையும் அனுப்பி விட்டு பின்னர் சுங்கத்துறையில் இருந்து பேசுவதாக கூறி பார்சலில் வந்திருப்பது தடை செய்யப்பட்ட பொருள் எனக் கூறி அடுத்த நிமிடமே ஆன்லைன் காதலன் வில்லனாக மாறிவிடும் சம்பவங்களும் அரங்கேறி உள்ளன.
டேட்டிங் செயலிகளை பயன்படுத்தும்போது மிகவும் உஷாராக இருப்பது அவசியம் என்று எச்சரிக்கிறார்கள் போலீசார். இந்த மோசடி ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க... வேறு வகையான மோசடியையும் போலீசார் குறிப்பிடுகிறார்கள்.
சில சேமிப்பு திட்டங்களை கூறி அதில் நீங்கள் முதலீடு செய்தால் பணம் கொட்டும் என்றும் மனதுக்கு பிடித்தவர்களிடம் ஆசைவார்த்தைகளை கூறி பின்னர் இரக்கமின்றி பழகியவர்களை அதில் சிக்க வைக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இப்படி மோசடி சம்பவங்கள் ஆன்லைனில் அரங்கேறி வரும் நிலையில் பல பெண்கள் தங்களது கற்பையும் பறிகொடுத்து விட்டு நிற்கிறார்கள் என்பதே வேதனையின் உச்சமாகும். ஆன்லைன் மூலமாக பேசி பழகும் வாலிபர்கள் பலர் தங்களது வேலை முடிந்ததும் இளம்பெண்களை கழற்றி விட்டு விட்டு தலைமறைவாகிவிடும் சம்பவங்களும் அரங்கேறி இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.
இதுபோன்று பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் புகார் அளித்து மோசடி பேர்வழிகள் மீது கற்பழிப்பு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இப்படி டேட்டிங் செயலிகள் பல நேரங்களில் வேட்டு வைப்பதாகவே மாறி இருக்கின்றன.
ஆன்லைனில் காதலிப்பவரா நீங்கள்? நிச்சயம் உஷாராக இருக்க வேண்டும் என்பது சைபர் கிரைம் போலீசாரின் வேண்டுகோளாக உள்ளது.
காதலர் தினமான இன்று யாருடன் பழகுகிறோம் என்பதை இளம்பெண்கள் பலமுறை யோசித்து பார்க்க வேண்டும் அப்போதுதான் காதல் மோசடி வலையை விரித்திருக்கும் கும்பலில் பிடியில் இருந்து தப்ப முடியும் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.
- பதினெட்டாம் படி ஏறுவதற்காக இருமுடியுடன் காத்திருந்தனர்.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்றுமாலை திறக்கப்பட்டது. இதையடுத்து சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் திரண்டனர். பதினெட்டாம் படி ஏறுவதற்காக இருமுடியுடன் காத்திருந்தனர்.
- எடப்பாடி பழனிசாமி அருகில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் பின் வரிசையில் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் தள்ளப்பட்டார்.
- ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. 4-வது வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் இருக்கை அருகே ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கையும் இருந்தது.
இருவரும் அ.தி.மு.க.வில் ஒன்றாக இருந்த வரை இருக்கை பிரச்சனை எழவில்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் புதிய எதிர்கட்சி துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கையை மாற்றி விட்டு அந்த இடத்தில் ஆர்.பி. உதயகுமாரை அமர வைக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் கொடுத்தார். இது தொடர்பாக பலமுறை வலியுறுத்தவும் செய்தார். ஆனாலும் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காமல் நிலுவையில் வைத்திருந்தார்.
இதற்கிடையில் பா.ஜனதாவை எதிர்த்து தி.மு.க. கடுமையான அரசியல் செய்து வரும் நிலையில் பா.ஜனதாவுக்கு ஆதரவாகவும், அந்த கூட்டணியில் இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையை சாதுர்யமாக கையில் எடுத்த எடப்பாடி பழனிசாமி சட்டசபை விவாதத்தின்போது சபாநாயகர் முறையாக முடிவெடுப்பதில்லை. நான் 4 முறை எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக கடிதம் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
மு.க.ஸ்டாலினும் உடனே குறுக்கிட்டு எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை சபாநாயகர் பரிசீலிக்க வேண்டும் என்றார்.
அவர் சொன்ன மறுநாளே இருக்கை மாற்றம் அதிரடியாக நடந்தது. அதாவது எடப்பாடி பழனிசாமி அருகில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் பின் வரிசையில் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் தள்ளப்பட்டார்.
அந்த வரிசையில் இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. 4-வது வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த வரிசையில் இருந்த மற்றவர்கள் ஒவ்வொரு இருக்கை நகர்ந்து அமர்ந்தனர். கடைசியில் முன்னாள் சபாநாயகர் தனபால் இருந்த 207-வது இருக்கை ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் இதுவரை அமர்ந்திருந்த இடத்தில் ஆர்.பி.உதயகுமார் அமர வைக்கப்பட்டார்.
- மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் மாசித்திருவிழா இன்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. காலை 4.52 மணிக்கு கோவில் செப்பு கொடி மரத்தில் மாசித்திரு விழா கொடியேற்றம் நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஓம் முருகா சரண கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடை பெற்றது.தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

நிகழ்ச்சியில் திருவாவடு துறை ஆதீனம் வேலப்ப தம்பி ரான் சுவாமிகள், இணை ஆணையர் கார்த்திக், இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் டாக்டர் அரசு ராஜா, இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன், சார்பு நீதிபதி வஷித்குமார்,ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் தக்கார் கருத்துப்பாண்டி நாடார், நகராட்சி துணை தலைவர் ஏ.பி.ரமேஷ், சைவ வேளாளர் ஐக்கிய சங்க முன்னாள் தலைவர் ஜெயந்திநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் முக்கிய விழாவான 5-ம் திருவிழாவான 18-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் குடவரு வாயில் தீபாராதனை நடக்கிறது.
7-ம் திருநாளான 20-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனை யும் நடக்கிறது. 4.30 மணிக்கு உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.
மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
8-ம் திருநாள் அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். அன்று பகல் 11 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சி யான 10-ம் திருநாளான 23-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.
11-ம் திருநாளான 24-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமியும், அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.






