என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பீலா வெங்கடேசன் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர்.
    • ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று 1997-ம் ஆண்டு செப்டம்பரில் பீகார் மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

    தமிழக எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் (வயது 55). அவருக்கு மூளையில் புற்றுநோய் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக விடுமுறை எடுத்து சென்னையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு அவர் மரணம் அடைந்தார்.

    அவரது இறுதிச்சடங்கு சென்னையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பீலா வெங்கடேசன். இவர் வெங்கடேசன்-ராணி வெங்கடேசன் தம்பதியின் மகள். வெங்கடேசன் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்து விட்டார். ராணி வெங்கடேசன் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார்.

    பீலா வெங்கடேசன் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர். பின்னர் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று 1997-ம் ஆண்டு செப்டம்பரில் பீகார் மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

    பீகாரைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ராஜேசை பீலா வெங்கடேசன் திருமணம் செய்தார். ராஜேஷ் தமிழ்நாட்டின் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்ததால், பீலா வெங்கடேசனும் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரியாக மாறுதல் பெற்று வந்தார். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்ட சப்-கலெக்டர், முதலமைச்சர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி, சுகாதாரத்துறை செயலாளர் உள்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

    கொரோனா காலகட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றினார்.

    இந்நிலையில் உடல்நலக்குறைவால் மரணமடைந்த தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

    கொட்டிவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பீலா வெங்கடேசன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    • விஜய் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
    • அக்டோபர் மாதம் 11-ந்தேதி கடலூர் மாவட்டத்திற்கு விஜய் வந்து மக்களை நேரில் சந்தித்து பேசுகிறார்.

    கடலூர்:

    தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய், தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக அவர் திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கினார். 2-வது கட்டமாக அவர் நாகை, திருவாரூரில் பிரசாரம் மேற்கொண்டர். நடிகர் விஜய் வருகிற 11-ந் தேதி கடலூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை த.வெ.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர். விஜய் பேசுவதற்காக கடலூரில் 2 இடங்களை தேர்வு செய்துள்ளனர். இது தொடர்பாக நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.

    தமிழகம் முழுவதும் வெற்றி பேரணியில் தமிழ்நாடு, வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்பதை வலியுறுத்தி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்களை நேரில் சந்தித்து வருகிறார்.

    இந்த நிலையில் அக்டோபர் மாதம் 11-ந்தேதி கடலூர் மாவட்டத்திற்கு விஜய் வந்து மக்களை நேரில் சந்தித்து பேசுகிறார்.

    கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தம் மற்றும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை பகுதியில் மதியம் 2 மணிக்கு தலைவர் விஜய் மக்களை சந்தித்து பேச உள்ளார். அப்போது ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வார்கள். ஆகையால் 2 இடங்களில் விஜய் பேசுவதற்கு அனுமதி அளித்து உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. 

    • நமது முன்னணி தலைவர்கள் 9 பேரைக் கொண்ட போராட்டக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
    • வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை, தேர்தலுக்கு முன்பாகவே வழங்கிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் நேரில் சந்தித்தும், பலமுறை கடிதங்கள் மற்றும் அறிக்கைகள் வாயிலாகவும் சாதிவாரி கணக்கீட்டை விரைவாக நடத்தி மக்கள்தொகை அடிப்படையில், வன்னியர்களின் எண்ணிக்கைக்கேற்ப சரியான அளவிலான இடப்பங்கீட்டை அதிகப்படுத்தி தர வேண்டும் என்றும், அதுவரையில் 10.5 சதவீத தனி ஒதுக்கீட்டை உடனே பெறுகின்ற வகையில் நீதிமன்றத்தில் போதுமான தரவுகளை அளித்து தடையாணையை நீக்கிட வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தும் இதற்காக அறவழியில் போராட்டங்கள் நடத்தி அரசின் கவனத்தை பல முறை ஈர்த்தும் இருக்கின்றோம்.

    ஆனால் நம்முடைய நியாயமான கோரிக்கைக்கும், கூக்குரலுக்கும், இன்றைய தமிழக அரசு, இதுநாள்வரை செவி சாய்க்கவில்லை என்பது, மிகவும் வருத்தத்துக்கும், கடும் கண்டனத்துக்கும் உரியது.

    சாதிவாரி கணக்கு எடுப்பு மற்றும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு நியாயத்தை, தமிழக மக்களிடம் கொண்டு சேர்த்து தெளிவுபடுத்தவ, வருகின்ற டிசம்பர் 5-ந் தேதி, காலை முதல் மாலை வரை, தமிழ கத்தினுடைய அனைத்து மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பாக அறவழியிலான தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்துவதென்று வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் முடிவெடுத்திருக்கிறது.

    வன்னியர்களின் தனி ஒதுக்கீட்டிற்கான நியாயத்தை அனைத்துத் தரப்பினருக்கும் தெளிவுபடுத்தவும் நமது முன்னணி தலைவர்கள் 9 பேரைக் கொண்ட போராட்டக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

    நம்முடைய வேண்டுகோளை ஏற்று, தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து, வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை, தேர்தலுக்கு முன்பாகவே வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
    • சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 8 ஆயிரம் கனஅடியாக வந்தது. இன்று காலையும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி 150 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் காலை, மாலை என இருவேளையில் தங்கம் விலை உயர்ந்து சவரன் ரூ.85,120-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,600-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.84,800-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், இன்றும் இரண்டாவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,510-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.84,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 150 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    24-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,800

    23-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120

    22-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.83,440

    21-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,320

    20-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,320

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    24-09-2025- ஒரு கிராம் ரூ.150

    23-09-2025- ஒரு கிராம் ரூ.150

    22-09-2025- ஒரு கிராம் ரூ.148

    21-09-2025- ஒரு கிராம் ரூ.145

    20-09-2025- ஒரு கிராம் ரூ.145

    • சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், கல்வி அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் பாராட்டிச் சிறப்பிக்கப்பட உள்ளனர்.
    • நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சமூகநீதியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு அரசு, கல்வி அனைத்துத் தரப்பினருக்கும் சென்று சேரவேண்டும் என்கிற நோக்கத்தோடு அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு 'புதுமைப் பெண்' என்கிற திட்டத்தின் வாயிலாகவும் மாணவர்களுக்கு 'தமிழ்ப் புதல்வன்' என்கிற திட்டத்தின் மூலமும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது.

    2025-26 கல்வி ஆண்டிற்கான "புதுமைப் பெண் - தமிழ்ப் புதல்வன்" திட்டங்களின் தொடக்க விழா இன்று மாலை 4 மணியளவில் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

    'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்னும் கருப் பொருளில் கொண்டாடும் இவ்விழாவில் தலைமையேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கின்றார்.

    தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டமாக இவ்விழா மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற உள்ளது.

    கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்களையும் சாதனைகளையும் முன்னிலையாக வைத்து இவ்விழா 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

    முதல் பகுதியாக தமிழ்நாட்டு மக்களின் மனதுக்கு நெருக்கமானத் திட்டமான 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" இடம் பெறும். அதனைத் தொடர்ந்து 'நான் முதல்வன்', 'விளையாட்டுச் சாதனையாளர்கள்', 'புதுமைப் பெண்-தமிழ்ப் புதல்வன்' மற்றும் 'அரசுப் பள்ளிகளில் இருந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற சாதனையாளர்கள்' ஆகிய அரங்கங்கள் நடைபெறும்.

    இவ்வரங்கங்களில் இத்திட்டங்களால் பயன்பெற்றவர்கள், இத்திட்டத்தின் மூலம் சாதித்தவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் தங்கள் வாழ்வில் இத்திட்டங்களின் தாக்கத்தையும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.

    இதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி இணைந்து 2025-26-ம் ஆண்டிற்கான "புதுமைப்பெண்-தமிழ்ப் புதல்வன்" திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்கள். இந்த ஆண்டு இத்திட்டத்தின் மூலம் 2.57 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்காற்றி வரும் சமூக சிந்தனையாளர்கள், சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், கல்வி அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் பாராட்டிச் சிறப்பிக்கப்பட உள்ளனர்.

    இவ்விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், அமைச்சர்கள் கீதாஜீவன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மதிவேந்தன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியும் கலந்து கொள்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    தெலுங்கானாவில் இருந்து முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சாலை மார்க்கமாகவே சென்னைக்கு வருகை தருவதால் சென்னை புறநகர் பகுதிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    செங்குன்றம், புழல் வழியாக ரேவந்த் ரெட்டி வருகை தர இருப்பதால் அந்த பகுதிகளில் அவர் வரும் போதும் தீவிரமாக கண்காணிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி வரும் பாதைகளிலும் போலீசார் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • திட்டம் குறித்து பல பயணிகளுக்கு இன்றளவும் தெரிவதில்லை.
    • முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் வந்து நிற்கும் இடத்தில் வைத்து பயணிகளுக்கு நேரடியாக உணவு வழங்குகின்றன.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம், ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்து முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக கடந்த 2023-ம் ஆண்டு ரூ.20-க்கு 'சிக்கன உணவு' என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த 'சிக்கன உணவு' திட்டத்தின் நோக்கம் பயணிகளுக்கு சத்தான மற்றும் குறைந்த விலை உணவுகளை வழங்குவதாகும். இத்திட்டம் குறித்து பல பயணிகளுக்கு இன்றளவும் தெரிவதில்லை.

    எனவே, சென்னை சென்டிரல், எழும்பூர், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் சிக்கன உணவு விற்பனை மையங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 27 ரெயில் நிலையங்களில் 64 சிக்கன உணவு கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்கள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் வந்து நிற்கும் இடத்தில் வைத்து பயணிகளுக்கு நேரடியாக உணவு வழங்குகின்றன.

    இந்த கடைகளில் 200 கிராம் எடையுள்ள எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், பருப்பு கிச்சடி மற்றும் பூரி-கிழங்கு போன்ற அரிசி வகை உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம்.
    • நேற்று அரசியல் ரீதியாகவும், மற்ற ரீதியாகவும் யாரையும் சந்திக்கவில்லை.

    அ.தி.மு.க.வில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட செங்கோட்டையன் நேற்று சென்னைக்கு சென்றிருந்தார். அப்போது அவர் டி.டி.வி.தினகரனை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில், சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை என செங்கோட்டையன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று சென்னையில் இருந்து கோபிசெட்டிப்பாளையத்திற்கு திரும்பிய செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    * சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை. சென்னையில் சிகிச்சை பெற்றுவரும் எனது மனைவியை சந்திக்க சென்றிருந்தேன்.

    * சென்னை சென்றவுடன் எனது சொந்த வேலையை பார்த்துவிட்டு இன்று வீட்டிற்கு திரும்பியிருக்கிறேன். நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் யாரையும் சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லை.

    * நேற்று அரசியல் ரீதியாகவும், மற்ற ரீதியாகவும் யாரையும் சந்திக்கவில்லை என்றார்.

    இதனிடையே, ஒருங்கிணைப்பு பணி எந்தளவு உள்ளது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு யார் என்னுடன் பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ். பல்வேறு நண்பர்கள் என்னிடத்தில் பேசுகிறார்கள், ஒருமித்த கருத்துக்கள் அவர்கள் மனதில் இருக்கிறது என கூறினார். 

    • விஜயின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்திற்கான திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
    • 18 சனிக்கிழமைகள் மற்றும் 2 ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுப்பயணம்.

    தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தனது முதல் அரசியல் பிரசாரத்தை கடந்த 13-ந்தேதி திருச்சியில் தொடங்கினார். இதனை தொடர்ந்து தனது அரசியல் பிரசாரத்தை நடத்தி வருகிறார். கட்டுக்கடங்காத ரசிகர்கள், தொண்டர்கள் கூட்டத்தால் குறித்த நேரத்தில் விஜயின் பிரசாரத்தை தொடங்க முடியாமல் காலதாமதத்துடன் நடைபெற்றது. இதனால் அவரை காண வரும் ரசிகர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலையும் ஏற்படுகிறது.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்திற்கான திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, விஜயின் சுற்றுப்பயணம் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    டிசம்பர் 20-ந்தேதி வரை மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை திட்டமிட்டிருந்த நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 18 சனிக்கிழமைகள் மற்றும் 2 ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுப்பயணம் இருக்கும் என கூறப்படுகிறது. 

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • அகரம் மெயின் ரோடு, மப்பேடு சந்திப்பு, பாரதிதாசன் தெரு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (26.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    ரெட் ஹில்ஸ்: சோத்துப்பெரும்பேடு, நாரணம்பேடு, சோழவரம், கோட்டைமேடு, பெரிய காலனி, செம்புலிவரம், ஒரக்காடு சாலை.

    தாம்பரம்: புதுத்தாங்கல் முல்லை நகர், டிஎன்எச்பி, ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர் ரோடு, பழைய தாம்பரம், படேல் நகர், இரும்புலியூர், சாய் நகர், டிடிகே நகர், பையார் நகர், கிருஷ்ணா நகர், குள்ளக்கரை, வைகை நகர், டவுன் தாம்பரம், சிடிஓ காலனி, சக்தி நகர், கன்னடக்கின்டா சாலை தெரு, பாரதி நகர், நல்லெண்ண நகர், வீரலட்சுமி நகர், கண்ணன் அவென்யூ, குறிஞ்சி நகர், அமுதம் நகர், நித்யானந்தா நகர், பெருமாள் தெரு, ஜோதி நகர், காந்தி நகர்.

    மாடம்பாக்கம்: அகரம் மெயின் ரோடு, மப்பேடு சந்திப்பு, பாரதிதாசன் தெரு, செக்ரடேரியட் காலனி, வெங்கடமங்கலம் மெயின் ரோடு, திருவஞ்சேரி.

    ஆயிரம் விளக்கு: அண்ணாசாலை மதர்ஷா பில்டிங் ஃபர்ஸ்ட் பாயிண்ட், கிரீம்ஸ் ரோடு, அலி டவர், எம்ஆர்எஃப், ரங்கூன் ஸ்ட்ரீட் ஃபர்ஸ்ட் பாயின்ட், அண்ணாசாலை, மகிஸ் கார்டன், ஷாபி முகமது சாலை, மெயின் அப்பல்லோ, க்ரீம்ஸ் லேன், ஸ்பென்சர் பிளாசா மால்.

    செம்பியம்: தணிகாசலம் நகர், சக்தி வேல் நகர், பிரபு தெரு, 80 அடி சாலை, சக்தி விநாயகர் கோவில் தெரு, மேரி எலியன் தெரு, அன்னாள் காந்தி தெரு, தட்சிணாமூர்த்தி தெரு, ராமலிங்க காலனி, எம்பிஎம் தெரு, சுப்ரமணி நகர், திருப்பூர் குமரன் தெரு, திரு.வி.க. தெரு, காமராஜ் நகர், ஸ்ரீனிவாஸ் நகர், ஆசீர் தெரு, காமராஜ் நகர், என். காந்திமதி தெரு.

    போரூர்: குன்றத்தூர் ரோடு, காரம்பாக்கம், மதானந்தபுரம், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, கெருகம்பாக்கம், முகலிவாக்கம், ராமாபுரம், சின்ன போரூர், கொளப்பாக்கம்.

    • பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, ‘இன்ஸ்டாகிராமில்’ 15 லட்சம் பேர் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
    • தமிழக அரசியல்வாதிகளில் நான்கு பேருக்கே அதிக பின் தொடர்பவர்கள் உள்ளனர்.

    சென்னை:

    சமூக வலைத்தளங்கள் மக்களின் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கின்றன. அதனால் அரசியல்வாதிகள், நடிகர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் கணக்குகளை வைத்திருக்கின்றனர். அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையிலேயே, அவர்களுக்கான ரசிகர்கள் எவ்வளவு என்பதை கணிக்கலாம். அந்த வகையில், தமிழக அரசியல்வாதிகளில் அதிக பின்தொடர்பவர்களை பெற்றிருப்பவர் தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் ஆவார்.

    விஜய்க்கு, 'இன்ஸ்டாகிராமில்' 1 கோடியே 46 லட்சம், 'பேஸ்புக்'கில் 77 லட்சம், 'எக்ஸ்' தளத்தில் 55 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். ஒரே நபர் 3 தளங்களிலும் பின்தொடர்ந்து இருக்கக்கூடும். எனவே, மூன்றையும் சேர்த்து சராசரியாக பார்த்தால், சுமார் 93 லட்சம் பேர் விஜய்யை பின்தொடர்கிறார்கள்.

     

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'இன்ஸ்டாகிராமில்' 18 லட்சம், 'பேஸ்புக்'கில் 31 லட்சம், 'எக்ஸ்' தளத்தில் 40 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். சராசரியாக 30 லட்சம் பேர் அவரை பின்தொடர்கிறார்கள்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, இன்ஸ்டாகிராமில் 63 ஆயிரம், 'பேஸ்புக்'கில் 1.68 லட்சம், 'எக்ஸ்' தளத்தில் 6.55 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். சராசரியாக 2.95 லட்சம் பேர் இருக்கிறார்கள்.

    பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, 'இன்ஸ்டாகிராமில்' 15 லட்சம், 'பேஸ்புக்'கில் 5.77 லட்சம், 'எக்ஸ்' தளத்தில் 10 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். சராசரியாக 10.25 லட்சம் பேர் இருக்கிறார்கள்.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, 'இன்ஸ்டாகிராமில்' 98 ஆயிரம், 'பேஸ்புக்'கில் 11 லட்சம், 'எக்ஸ்' தளத்தில் 37 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். சராசரியாக 16.25 லட்சம் பேர் அவரை பின்தொடர்கிறார்கள்.

    தமிழக அரசியல்வாதிகளில் இந்த நான்கு பேருக்கே அதிக பின் தொடர்பவர்கள் உள்ளனர். மற்ற தலைவர்களுக்கு மிகக் குறைந்த அளவே இருக்கிறது.

    விஜய்யை பொறுத்தவரை, அவர் ஏற்கனவே சினிமா பிரபலம் என்பதால், தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவரை பின்தொடர்கிறார்கள். இதனால், அவருக்கான பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இயற்கையாகவே அதிகமாக இருக்கிறது. அதேபோல் மற்ற கட்சியினர் கூட விஜயை ஒரு நடிகராக பின்தொடர்வார்கள்.

    எனவே விஜய்யின் இந்த எண்ணிக்கையை ஓட்டு எண்ணிக்கையாகக் கருதக்கூடாது. எடுத்துக்காட்டாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு 'இன்ஸ்டாகிராமில்' 9 கோடியே 75 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். ஆனால் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அதைவிட அதிகமாக 27 கோடியே 30 லட்சம் பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள். காரணம், உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் இருப்பதே. அதேபோல், விஜய்க்கும் திரை உலக பிரபலம் என்பதால் அதிக பின்தொடர்பவர்கள் இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது என்று சமூகவலைதள ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    • டிக்கெட்டுகளை ரத்து செய்ய முடியாது.
    • டிக்கெட்டுகள் எடுத்த அடுத்த 3 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் பஸ், மெட்ரோ ரெயில், புறநகர் மின்சார ரெயில் மற்றும் வாடகை ஆட்டோ, கார் ஆகிய அனைத்து போக்குவரத்தையும் ஒன்றிணைக்கும் வகையில் ஒரே கியூ-ஆர் பயணச்சீட்டு மூலம் பயணம் செய்ய சென்னை ஒன்று என்ற புதிய செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 22-ந்தேதி அறிமுகம் செய்து வைத்தார்.

    இந்த செயலியில், புறநகர் மின்சார ரெயிலில் டிக்கெட் எடுத்து பயணிக்கலாம். ஏற்கனவே உள்ள யூ.டி.எஸ்., செயலி இருப்பது போல், இந்த செயலியையும் பயணியர் பயன்படுத்தலாம். புறநகர் ரெயில் கட்டணத்தில் மாற்றம் இல்லை. 'ஏ.சி.' மின்சார ரெயில் டிக்கெட் எடுக்க முடியாது. டிக்கெட் பரிசோதனையின்போது, பயணியர் 'அசல் ரெயில் டிக்கெட்டைக் காட்டு' பக்கத்தின் வாயிலாக, டிக்கெட்டுகளைக் காண்பிக்க வேண்டும். டிக்கெட்டுகளை ரத்து செய்ய முடியாது. இந்த டிக்கெட்டுகள் எடுத்த அடுத்த 3 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×