என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முதலமைச்சர் தலைமையில் இன்று கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா - தெலுங்கானா முதல்வர் பங்கேற்பு
    X

    முதலமைச்சர் தலைமையில் இன்று 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' விழா - தெலுங்கானா முதல்வர் பங்கேற்பு

    • சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், கல்வி அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் பாராட்டிச் சிறப்பிக்கப்பட உள்ளனர்.
    • நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சமூகநீதியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு அரசு, கல்வி அனைத்துத் தரப்பினருக்கும் சென்று சேரவேண்டும் என்கிற நோக்கத்தோடு அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு 'புதுமைப் பெண்' என்கிற திட்டத்தின் வாயிலாகவும் மாணவர்களுக்கு 'தமிழ்ப் புதல்வன்' என்கிற திட்டத்தின் மூலமும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது.

    2025-26 கல்வி ஆண்டிற்கான "புதுமைப் பெண் - தமிழ்ப் புதல்வன்" திட்டங்களின் தொடக்க விழா இன்று மாலை 4 மணியளவில் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

    'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்னும் கருப் பொருளில் கொண்டாடும் இவ்விழாவில் தலைமையேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கின்றார்.

    தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டமாக இவ்விழா மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற உள்ளது.

    கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்களையும் சாதனைகளையும் முன்னிலையாக வைத்து இவ்விழா 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

    முதல் பகுதியாக தமிழ்நாட்டு மக்களின் மனதுக்கு நெருக்கமானத் திட்டமான 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" இடம் பெறும். அதனைத் தொடர்ந்து 'நான் முதல்வன்', 'விளையாட்டுச் சாதனையாளர்கள்', 'புதுமைப் பெண்-தமிழ்ப் புதல்வன்' மற்றும் 'அரசுப் பள்ளிகளில் இருந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற சாதனையாளர்கள்' ஆகிய அரங்கங்கள் நடைபெறும்.

    இவ்வரங்கங்களில் இத்திட்டங்களால் பயன்பெற்றவர்கள், இத்திட்டத்தின் மூலம் சாதித்தவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் தங்கள் வாழ்வில் இத்திட்டங்களின் தாக்கத்தையும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.

    இதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி இணைந்து 2025-26-ம் ஆண்டிற்கான "புதுமைப்பெண்-தமிழ்ப் புதல்வன்" திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்கள். இந்த ஆண்டு இத்திட்டத்தின் மூலம் 2.57 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்காற்றி வரும் சமூக சிந்தனையாளர்கள், சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், கல்வி அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் பாராட்டிச் சிறப்பிக்கப்பட உள்ளனர்.

    இவ்விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், அமைச்சர்கள் கீதாஜீவன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மதிவேந்தன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியும் கலந்து கொள்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    தெலுங்கானாவில் இருந்து முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சாலை மார்க்கமாகவே சென்னைக்கு வருகை தருவதால் சென்னை புறநகர் பகுதிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    செங்குன்றம், புழல் வழியாக ரேவந்த் ரெட்டி வருகை தர இருப்பதால் அந்த பகுதிகளில் அவர் வரும் போதும் தீவிரமாக கண்காணிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி வரும் பாதைகளிலும் போலீசார் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×