என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழகத்தின் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கி கடந்த 30-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.
- சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் இயல்பான அளவு 406.4 மி.மீ. ஆகும்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளதால் 70 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர். இங்கு மேட்டூர் அணை இருந்தாலும் நேரடி பாசனம் குறைந்த அளவிலேயே உள்ளது. தற்போது சரபங்கா நீரேற்று திட்டம் மூலம் சேலம் மேற்கு மாவட்ட பகுதிகளில் ஒரு பகுதி பாசன வசதி பெற்றுள்ளது. ஆனாலும் ஓமலூர், காடையாம்பட்டி மற்றும் சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளுக்கு மேட்டூர் அணை தண்ணீர் செல்லாததால் இந்த பகுதிகள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தின் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கி கடந்த 30-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அதனை எதிர்பார்த்து விவசாயிகள் உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் இயல்பான அளவு 406.4 மி.மீ. ஆகும். ஆனால் நடப்பாண்டில் 339.2 மி.மீ. மழையே பதிவாகி உள்ளது. இது வழக்கத்தை விட 67.2 மி.மீ. குறைவாகும். இதனால் நடப்பாண்டில் வழக்கத்தை விட 17 சதவீதம் தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் நீர் நிலைகளில் வழக்கத்தை விட குறைந்த அளவே தண்ணீர் இருப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஆனாலும் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பதால் அந்த மழை கூடுதலாக பெய்து தங்களுக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.
- யானைபின் தொடர்ந்து துரத்தி, ராஜேசை தாக்கியது.
- பொதுமக்கள், ராக்வுட் தேயிலை தொழிற்சாலை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா நெலாக்கோட்டை பகுதியில் ராக்வுட் தேயிலைத் தோட்டம் அருகே ஒரு ஆண் யானை கடந்த சில நாட்களாக முகாமிட்டு வந்தது.
கடந்த 30-ந் தேதி இரவு, அங்குள்ள எஸ்டேட் தொழிலாளி ராஜேஷ் (48) என்பவர் தனது மனைவி கங்காவுடன் நெலாக்கோட்டை பஜாரில் பூஜை சாமான்கள் வாங்கிக் கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினார்.
வீட்டிற்கு அருகே வந்தபோது, ரோட்டில் யானை நின்று கொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், அவரது மனைவி, மற்றும் ஆட்டோ டிரைவர் ரமேஷ் ஆகியோர் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடினர். அப்போது யானைபின் தொடர்ந்து துரத்தி, ராஜேசை தாக்கியது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் யானை ஆட்டோவையும் சேதப்படுத்தியது.
வனத்துறையினர் ராஜேஷ் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றபோது, பொதுமக்கள் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி வசந்தகுமார் மற்றும் வனத்துறை அதகாரிகள் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நேற்று காலை மீண்டும் பொதுமக்கள், ராக்வுட் தேயிலை தொழிற்சாலை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்தவரின் மனைவிக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும், மனிதர்களை தாக்கும் யானையை பிடிக்க வேண்டும், கூடுதல் வன ஊழியர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு எம்.எல்.ஏ ஜெயசீலன், ஆர்.டி.ஓ குணசேகரன், டி.எஸ்.பி. வசந்தகுமார், தாசில்தார் சிராஜுநிஷா ஆகியோர் நேரில் வந்து பேச்சு நடத்தினர். மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் மதியம் போராட்டத்தை கைவிட்டனர். அப்பகுதியில் போலீசார் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
- மாத தொடக்க நாளான நேற்று ஒரு சவரன் ரூ.87,600-க்கு விற்பனையானது.
- இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது.
சென்னை:
சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
மாத இறுதி நாளான நேற்றுமுன்தினம் தங்கம் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,880-க்கும் கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,860-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் தொடக்க நாளான நேற்று காலை, மாலை என இருவேளையிலும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,950-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.87,600-க்கும் விற்பனையானது.
இதனை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 10,880 ரூபாய்க்கும் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 87,040 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
நேற்று மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 163 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி பார் வெள்ளி ஒரு லட்சத்து 63 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
01-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.87,600
30-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,880
29-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,160
28-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120
27-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
01-10-2025- ஒரு கிராம் ரூ.161
30-09-2025- ஒரு கிராம் ரூ.161
29-09-2025- ஒரு கிராம் ரூ.160
28-09-2025- ஒரு கிராம் ரூ.159
27-09-2025- ஒரு கிராம் ரூ.159
- தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதே விபத்திற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
- விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில் சாலை மைய தடுப்பு மற்றும் லாரி மீது மோதி கார் தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை கொளத்தூரில் இருந்து கேரளாவுக்கு காரில் பயணம் செய்த சம்சுதீன், ரிசி, மோகன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த அப்துல் அஜீஸ், தீபக் ஆகிய இருவரும் காயங்களுடன் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் நடத்திய விசாரணையில், தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- ராமநாதபுரத்தில் கள ஆய்வு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
- ராமநாதபுரத்தில் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலைய கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை ஓராண்டுக்கு முன்பே தொடங்கிய முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் மக்களை சென்றடைவதை கண்காணிக்கும் முறையிலும், கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்த சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ராமநாதபுரம் செல்கிறார். ராமநாதபுரத்தில் கள ஆய்வு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்க உள்ளார். பேருந்து நிலையம், அறிவுசார் மையம், சமூக நீதி மையம் உள்ளிட்டவற்றை அவர் திறந்து வைக்கிறார்
ராமநாதபுரம் அருகே புல்லங்குடி பகுதியில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் கலந்து கொண்டு பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ராமநாதபுரத்தில் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலைய கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார்.
முதலமைச்சர் பயணத்தின் எதிரொலியாக இன்றும், நாளையும் அங்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
- ஜெய்ப்பூர் அணியை தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தியது.
சென்னை:
12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் ஆட்டங்கள் சென்னையில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று இரவு நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், யு மும்பை அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய யு மும்பை அணி வீரர்கள் அதிரடியாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.
இறுதியில், யு மும்பை அணி 42-24 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் யு மும்பை அணி 5-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
- வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
- சென்னை, கடலூர் உள்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டது.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று மாலை நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8. 30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது.
இதன் எதிரொலியால், சென்னை, கடலூர், நாகை ஆகிய 3 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது
முன்னதாக, சென்னை, கடலூர் உள்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டது.
குறிப்பாக, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம்.
- அக்டோபர் மாதம் 3-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. குறிப்பிடத்தக்கது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சோக சம்பவம் உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், கரூர் துயரம் போல் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில், அரசியல் கட்சிகளின் 'ரோடு ஷோ' போன்ற நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தினேஷ் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் அக்டோபர் மாதம் 3-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த 45 மாதங்களாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
- ககன்தீப்சிங் குழு 194 அரசு ஊழியர் அமைப்புகளுடன் பேச்சு நடத்தியுள்ளது.
அரசு ஊழியர்களை ஏமாற்றும் கருவியாக ககன்தீப் சிங் குழு பயன்படக்கூடாது: பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் திமுக அரசு எத்தகைய ஏமாற்று வேலையை செய்துவிடக் கூடாது என்று அஞ்சிக் கொண்டிருந்தேனோ, அந்த ஏமாற்று வேலையை ககன்தீப் சிங் குழுவை பயன்படுத்தி சாமர்த்தியமாக செய்திருக்கிறது திமுக அரசு.
பேடி குழுவை அதன் இறுதி அறிக்கைக்கு பதிலாக இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய வைத்திருப்பதன் மூலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளது.
ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்து தான் திமுக ஆட்சியைப் பிடித்தது என்றாலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த 45 மாதங்களாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இந்த விவகாரத்தில் திமுகவின் துரோகத்தை பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தியதாலும், அரசு ஊழியர்கள் தொடர் போராட்டங்களை அறிவித்ததாலும் நிலைமை சமாளிப்பதற்காக பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைப்பதற்காக ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினர்கள் குழுவை கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி அரசு அமைத்தது.
இது தொடர்பாக கடந்த ஆட்சியில் ஏற்கனவே குழு அமைக்கப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டு விட்ட நிலையில், இப்போது மீண்டும் ஒரு குழுவை அமைப்பது ஏமாற்று வேலை; குழுவின் அறிக்கையை பெறுவதை தாமதப்படுத்தி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாமல் ஏமாற்றும் என்று எச்சரித்திருந்தேன். எனது எச்சரிக்கை இப்போது உண்மையாகிருக்கிறது.
தமிழ்நாட்டில் எத்தகைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது குறித்த முழுமையான அறிக்கையை நேற்று தாக்கல் செய்திருக்க வேண்டிய ககன்தீப்சிங் பேடி குழு இடைக்கால அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்திருக்கிறது. அதன் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதுவரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், மத்திய அரசு, சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் ஆகியவற்றுடன் கூடுதல் கலந்தாய்வுகள் நடத்தவேண்டியிருப்பதாலும் கூடுதல் காலக்கெடு தேவைப்படுவதாகவும் ககன்தீப்சிங் குழு கூறியுள்ளது. இறுதி அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது அறிவிக்கப்படவில்லை. இது நிச்சயமாக ஏமாற்று வேலை தான். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ககன்தீப்சிங் குழு 194 அரசு ஊழியர் அமைப்புகளுடன் பேச்சு நடத்தியுள்ளது; அவற்றின் மூலம் ஏராளமான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை.
ஆனால், குழு அமைக்கப்பட்ட பிப்ரவரி 4-ம் தேதியில் தொடங்கி இன்று வரையிலான 8 மாதங்களில் இவை செய்து முடிக்க முடியாத பணிகள் அல்ல. ஆனால், இந்தப் பணிகளை குறித்த காலத்திற்குள் செய்து முடிக்கக் கூடாது என்று அரசும், ககன்தீப்சிங் குழுவும் செய்த கூட்டுச் சதியின் காரணமாகவே இப்போது இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய முடியவில்லை.
ககன்தீப்சிங் குழு கடந்த பிப்ரவரி 4-ம் தேதியே அமைக்கப்பட்டு விட்ட போதிலும், அடுத்த 6 மாதங்களுக்கு அந்தக் குழு துரும்பைக் கூட அசைக்கவில்லை. அதை சுட்டிக்காட்டி கடந்த ஜூன் 22, ஆகஸ்ட் 6 ஆகிய தேதிகளில் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
மேலும், தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் நான் மேற்கொண்டு வரும் நடைபயணத்தின் போதும் ஒவ்வொரு நாளும் இந்த சிக்கல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். அதனால் ஏற்பட்ட அழுத்தங்களின் காரணமாகத் தான் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் ககன்தீப்சிங் குழு அரசு ஊழியர்களிடம் கருத்துக் கேட்கத் தொடங்கியது. இப்பணியை பிப்ரவரி மாதமே தொடங்கியிருந்தால் 3 மாதங்களுக்கு முன்பாகவே முழு அறிக்கையை தாக்கல் செய்திருக்கலாம்.
அவ்வாறு தாக்கல் செய்திருந்தால் அதன் மீது முடிவெடுத்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற அழுத்தங்கள் அரசுக்கு ஏற்பட்டிருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகத் தான் ககன்தீப்சிங் குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்யாமல் தடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் திமுக அரசின் கருவியாக ககன்தீப்சிங் குழு பயன்படுத்தப்பட்டிருக்கிறது; இது திட்டமிட்ட சதி என்று மீண்டும் ஒருமுறை குற்றஞ்சாட்டுகிறேன். இது அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இழைக்கப்படும் பெருந்துரோகமாகும்.
பாட்டாளி மக்கள் கட்சியைப் பொருத்தவரை ககன்தீப்சிங் பேடி குழு அமைக்கப்பட்டதே தேவையற்ற வேலை தான். தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி மூத்த இஆப அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 27-.11.2018-ம் நாள் அதன் அறிக்கையை அன்றைய அரசிடம் தாக்கல் செய்து விட்டது.
அதன் அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்க முடியும். ஆனால், அதை செய்யாமல் புதிய குழுவை திமுக அரசு அமைத்ததன் நோக்கமே அரசு ஊழியர்களை ஏமாற்றுவது தான். அது இப்போது உறுதியாகியிருக்கிறது.
ககன்தீப்சிங் குழுவின் இறுதி அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது தெரியாத நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்துமா? என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தமிழக அரசு நினைத்திருந்தால், எப்போதோ பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தியிருக்க முடியும்.
அதற்கு நிதிநிலை ஒரு தடையல்ல. இந்தியாவில் இராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கர், பஞ்சாப், கர்நாடகம், இமாலயப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த எந்தத் தடையும் கிடையாது.
எனவே, ககன்தீப்சிங் பேடி குழு இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்று காரணங்களைத் தேடிக் கொண்டிருக்காமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை.
- கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சோக சம்பவம் உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், தவெக பரப்புரை பேருந்து கேமராவில் பதிவான காட்சிகளை ஒப்படைக்கக கோரி ஆதவ் அர்ஜுனாவுக்கு காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அதேபோல், தவெக துணைப் பொதுச் செயலர் நிர்மல் குமாருக்கும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பரப்புரை தொடர்பான காட்சிகளை ஒப்படைக்க கோரி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
- அக்டோபர் மாதம் தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
- இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை இரண்டாவது முறை உயர்ந்துள்ளது.
சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
மாத இறுதி நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,880-க்கும் கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,860-க்கும் விற்பனையானது.
இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,890-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.87,120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை இரண்டாவது முறை உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு காலை ரூ.30, மாலை ரூ.60 என ஒரே நாளில் ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,950க்கு விற்பனையாகிறது.
அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.87,600க்கு விற்பனையாகிறது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, 1,921 குற்றங்கள் பதிவாகியுள்ளன.
- திமுக ஆட்சியில் சுமார் 50% அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது.
பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில், பட்டியல் சமூக மக்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் மிகவும் அதிகரித்திருப்பதாக, NCRB அறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக, கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும், 201 முதியவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது, நாட்டிலேயே மிக அதிகம். மேலும், வயது முதியவர்களுக்கு எதிராக 2,104 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு, நாட்டில் நான்காவது இடத்தில் இருக்கிறது.
இது தவிர, திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, கடந்த 2020 ஆம் ஆண்டு, பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக நடந்த குற்றங்களின் எண்ணிக்கை 1,294. தற்போது வெளியாகியுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, 1,921 குற்றங்கள் பதிவாகியுள்ளன.
பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்கள், திமுக ஆட்சியில் சுமார் 50% அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது. மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் திமுக ஆட்சியில் மிகவும் அதிகரித்திருக்கிறது. இவை அனைத்தும் பதிவான குற்றங்களின் எண்ணிக்கை மட்டுமே.
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு நிலைமை இத்தனை மோசமாக இருக்கும் நிலையில், எதிர்க்கட்சியினரைப் பழிவாங்கவும், திமுக ஆட்சி மீது விமர்சனம் வைப்பவர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கவும் மட்டுமே, காவல்துறையைப் பயன்படுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளை, திமுக நிர்வாகிகள் போலப் பயன்படுத்தி, அரசுத் துறைகள் அனைத்தையுமே செயலிழக்கச் செய்து விட்டார்கள். இதன் விளைவுதான், சீரழிந்து போன சட்டம் ஒழுங்கும், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்களும்.
ஐந்து ஆண்டுக் கால திமுக ஆட்சியில், தமிழகம் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது என்பதுதான் உண்மை நிலை. ஆடிக் கொள்ளுங்கள் இன்னும் ஆறு மாத காலம். உங்கள் அராஜகத்திற்குத் தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






