என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானை தாக்குதல்"

    • யானைபின் தொடர்ந்து துரத்தி, ராஜேசை தாக்கியது.
    • பொதுமக்கள், ராக்வுட் தேயிலை தொழிற்சாலை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா நெலாக்கோட்டை பகுதியில் ராக்வுட் தேயிலைத் தோட்டம் அருகே ஒரு ஆண் யானை கடந்த சில நாட்களாக முகாமிட்டு வந்தது.

    கடந்த 30-ந் தேதி இரவு, அங்குள்ள எஸ்டேட் தொழிலாளி ராஜேஷ் (48) என்பவர் தனது மனைவி கங்காவுடன் நெலாக்கோட்டை பஜாரில் பூஜை சாமான்கள் வாங்கிக் கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினார்.

    வீட்டிற்கு அருகே வந்தபோது, ரோட்டில் யானை நின்று கொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், அவரது மனைவி, மற்றும் ஆட்டோ டிரைவர் ரமேஷ் ஆகியோர் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடினர். அப்போது யானைபின் தொடர்ந்து துரத்தி, ராஜேசை தாக்கியது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் யானை ஆட்டோவையும் சேதப்படுத்தியது.

    வனத்துறையினர் ராஜேஷ் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றபோது, பொதுமக்கள் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    டி.எஸ்.பி வசந்தகுமார் மற்றும் வனத்துறை அதகாரிகள் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

    சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நேற்று காலை மீண்டும் பொதுமக்கள், ராக்வுட் தேயிலை தொழிற்சாலை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உயிரிழந்தவரின் மனைவிக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும், மனிதர்களை தாக்கும் யானையை பிடிக்க வேண்டும், கூடுதல் வன ஊழியர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு எம்.எல்.ஏ ஜெயசீலன், ஆர்.டி.ஓ குணசேகரன், டி.எஸ்.பி. வசந்தகுமார், தாசில்தார் சிராஜுநிஷா ஆகியோர் நேரில் வந்து பேச்சு நடத்தினர். மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் மதியம் போராட்டத்தை கைவிட்டனர். அப்பகுதியில் போலீசார் மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • யானை தந்தத்தால் அக்பர்அலியின் நெற்றியில் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
    • உடுமலை-மூணாறு சாலையில் இரவு நேரம் யானைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும்

    உடுமலை:

    புதுக்கோட்டையை சேர்ந்த அக்பர்அலி என்பவர் உள்பட 3 பேர் கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா சென்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக அவர்கள் காரில் சென்றனர்.

    நேற்றிரவு உடுமலை வனத்துறைக்குட்பட்ட சின்னார் பகுதியில் செல்லும்போது திடீரென யானை ஒன்று சாலையின் நடுவே வந்து நின்றது. இதைப்பார்த்து பயந்துபோன 3 பேரும் காரில் இருந்து இறங்கி ஓடினர். இதில் அக்பர்அலி யானையின் பிடியில் சிக்கிக்கொண்டார். அப்போது யானை தந்தத்தால் அக்பர்அலியின் நெற்றியில் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் உடுமலை மற்றும் கேரள மாநில வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அக்பர்அலி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடுமலை-மூணாறு சாலையில் இரவு நேரம் யானைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். எனவே வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் , யானைகளை துன்புறுத்தக்கூடாது என்று வனத்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர்.

    இந்தநிலையில் யானை தாக்கி சுற்றுலா பயணி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தொழிலாளி சித்து விறகு எடுக்க காடகநள்ளி என்ற அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றார்.
    • மாலை நீண்ட நேரமாகியும் சித்து வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேடி வனப்பகுதிக்குள் சென்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட கடம்பூர் வனப்பகுதியையொட்டி உள்ள எக்கத்தூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சித்து (55). தொழிலாளி.

    இவர் நேற்று மதியம் விறகு எடுக்க காடகநள்ளி என்ற அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு ஒற்றை யானை சித்துவை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    தொடர்ந்து இறந்துவிட்ட சித்துவின் உடல் அருகே அந்த யானை நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில் மாலை நீண்ட நேரமாகியும் சித்து வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேடி வனப்பகுதிக்குள் சென்றனர்.

    அப்போது அவர் யானை தாக்கி இறந்து கிடப்பதையும் அவரது அருகில் ஒற்றை யானை நிற்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் தீ மூட்டி யானையை விரட்டினர். தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து கடம்பூர் வனச்சரகர் இந்துமதி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து யானை தாக்கி பலியான சித்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • சாந்தன் பாறை பன்னியார் தேயிலை தோட்டத்தில் புகுந்த காட்டு யானையை விரட்டும் பணியில் சக்திவேல் ஈடுபட்டார்.
    • எதிர்பாராதவிதமாக யானை சக்திவேலை தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சாந்தன்பாறை பன்னியர் தோட்டம் அருகே உள்ள அய்யப்பன் குடி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்.

    இவர் தேவிகுளம் வனச்சரக அலுவலகத்தில் வனக்காவலராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதாக புகார் வந்தது.

    இதனை தொடர்ந்து யானைகளை விரட்டும் பணிக்கு சக்திவேல் அனுப்பப்பட்டார். எந்தப் பகுதியில் யானை வந்தாலும் வழக்கமாக அங்கு சக்திவேல் அனுப்பி வைக்கப்படுவாராம்.

    அதன்படி நேற்று காலை சாந்தன் பாறை பன்னியார் தேயிலை தோட்டத்தில் புகுந்த காட்டு யானையை விரட்டும் பணியில் சக்திவேல் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக யானை அவரை தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசியது.

    மேலும் காலடியில் போட்டும் மிதித்தது. இதில் பலத்த காயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று காட்டு யானையை விரட்டி அடித்தனர். பின்னர் சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேவிகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • வீட்டருகே காட்டு யானை தாக்கி மகேஷ்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார்.
    • ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் யானை தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் இடையேயும், பொதுமக்கள் இடையேயும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை ஆனைகட்டி மலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன.

    இந்த யானைகள் உணவு தேடி அவ்வப்போது மலை அடிவார பகுதிகளான மாங்கரை, தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்கு வருவது வழக்கம். கடந்த சில மாதங்களாக ஒற்றை யானை மற்றும் கூட்டமாக வரும் காட்டு யானைகள் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதும், மனிதர்களை தாக்குவதும் தொடர் கதையாகி வருகிறது. யானை நடமாட்டம் காரணமாக மக்களும், விவசாயிகளும் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மாங்கரை பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றி திரிந்தது. அப்போது அந்த பகுதியில் வசித்து வரும் மகேஷ்குமார் (வயது38) என்பவர் சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்தார்.

    அப்போது அந்த பகுதியில் யானை சுற்றி திரிவதை பார்த்ததும் ஓட முயன்றார். ஆனால் அதற்குள் யானை அவரை தாக்கியது.

    மகேஷ்குமாரின் சத்தம் கேட்டு அவரது மனைவி திவ்யா மற்றும் தந்தை பெருமாள் சாமி ஆகியோர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது வீட்டருகே காட்டு யானை தாக்கி மகேஷ்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார். மேலும் யானை அங்கிருந்து நகராமல் அப்படியே நின்று கொண்டிருந்தது.

    சிறிது நேரத்திற்கு பிறகு யானை அந்த பகுதியை விட்டு நகர்ந்து சென்றது. இதன் பின்னர், அவரது மனைவியும், தந்தையும் அருகே சென்று பார்த்தனர். அப்போது மகேஷ்குமார் யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

    அவரது உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மகேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யானை தாக்கி இறந்த மகேஷ்குமார் கோவையில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு சம்பவம்...

    கோவை மாவட்டம் ஆனைகட்டி மலைப்பகுதி துவைபதி மலைகிராமத்தை சேர்ந்தவர் மருதாச்சலம்.

    இவர் இன்று அதிகாலை வீட்டில் இருந்து இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியில் வந்தார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை அவரை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் யானை தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் இடையேயும், பொதுமக்கள் இடையேயும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இயற்கை உபாதை கழிப்பதற்காக வேடி இன்று காலை அங்குள்ள ஏரிக்கு சென்று கொண்டிருந்தார்.
    • யானை விடாமல் துரத்தி வேடியை காலால் வயிற்றில் மிதித்தது.

    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேயுள்ள முக்குலம் பெரிய மொரசுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேடி (வயது55). விவசாயி. இவரது மனைவி குந்தியம்மாள். இவர்களுக்கு வெங்கடாசலம், வேட்ராய் என்கிற 2 மகன்களும், விஜி என்கிற ஒரு மகளும் உள்ளனர்.

    இயற்கை உபாதை கழிப்பதற்காக வேடி இன்று காலை அங்குள்ள ஏரிக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு மாந்தோப்பின் அருகில் சென்றபோது யானை ஒன்று பின்தொடர்ந்து வந்தது. இதனை கவனித்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அங்கிருந்து தப்பியோடி சென்று கொண்டிருந்தார். ஆனால் அந்த யானை விடாமல் துரத்தி வேடியை காலால் வயிற்றில் மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி காரிமங்கலம் போலீசாருக்கும், பாலக்கோடு வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். யானை மிதித்து உயிரிழந்த வேடியின் உடலை பார்வையிட்டனர்.

    உடனே அவரது உடலை கைப்பற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காட்டுப்பட்டி மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த சடையன் என்பவர் மாடுகள் வளர்த்து வருகிறார்.
    • யானை தாக்கியதில் மாடு அந்த இடத்திலேயே இறந்தது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள தளிஞ்சி, தளிஞ்சிவயல், ஆட்டுமலை, ஈசல்தட்டு, பொருப்பாறு, கோடந்தூர், குருமலை, மாவடப்பு, மஞ்சம்பட்டி, காட்டுப்பட்டி, கீழானவயல், கருமுட்டி, பூச்சகொட்டாம்பாறை, குளிப்பட்டி, முள்ளுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

    இவர்களது பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர்.

    இந்தநிலையில் காட்டுப்பட்டி மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த சடையன் என்பவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் மாடுகளை பட்டியில் அடைத்து வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த யானை ஒன்று, ஒரு மாட்டை தாக்கியது. இதில் மாடு அந்த இடத்திலேயே இறந்தது.

    இதனால் கால்நடை வளர்க்கும் மலைவாழ் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் யானையின் தாக்குதலால் ஏற்பட்ட இழப்பிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • யானை தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்திருப்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
    • வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு யானை ஊருக்குள் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள பல்லவராயன்பட்டியை சேர்ந்தவர் முருகன்(47). இவர் பண்ணைப்புரத்தில் உள்ள செல்லம் என்பவரது தென்னந்தோப்பில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். வழக்கமாக இரவு நேர காவலுக்கு சென்றுவிட்டு காலையில் வீடு திரும்புவது வழக்கம்.

    அதன்படி இன்றுகாலை வெகுநேரமாகியும் முருகன் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்து அவரது குடும்பத்தினர் தோட்டத்திற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது முருகன் பலத்த ரத்தகாயங்களுடன் இறந்துகிடந்துள்ளார்.

    அவரை யானை மிதித்து கொன்றதற்கான தடயங்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கும், கோம்பை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் முருகன் யானை தாக்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து யானையின் கால் தடங்களை வைத்து ஒரு யானை வந்ததா அல்லது 2 யானைகள் வந்ததா என விசாரித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் ஏற்கனவே கடந்த காலங்களில் ஒற்றை யானை, மக்னா யானை ஆகியவை அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதுடன் ஏராளமான உயிர்களையும் காவு வாங்கியது. இதனையடுத்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு மக்னா யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததால் மீண்டும் கும்கி யானைகள் திருப்பி அனுப்பி விடப்பட்டன.

    தற்போது மீண்டும் யானை தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்திருப்பது இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எனவே வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு யானை ஊருக்குள் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உயிரிழந்த முருகனுக்கு பிரியா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    • யானையால் தூக்கி வீசப்பட்ட பெண் எழுந்து சிரித்துக்கொண்டே செல்வது போன்ற காட்சிகள் உள்ளது.
    • வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    தேசிய பூங்காக்கள், அடர்ந்த வனப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்லும் போது அங்கு விலங்குகளை புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு சுற்றுலாப்பயணிகள் அத்துமீறி நடந்து கொள்வதும், அவர்களை வன விலங்குகள் துரத்தும் காட்சிகளும் சமீப காலமாக சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் தற்போது டுவிட்டரில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், யானை ஒன்று இலைகளை சாப்பிட்டு கொண்டிருக்கிறது. அந்த யானைக்கு உணவளிப்பதற்காக இளம்பெண் ஒருவர் அருகில் செல்கிறார்.

    அப்போது ஆவேசம் அடையும் யானை அந்த பெண்ணை தனது துதிக்கையால் தாக்குவதும், அந்த பெண் தூக்கி வீசப்படும் காட்சிகளும் பயனர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணுக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

    யானையால் தூக்கி வீசப்பட்ட அந்த பெண் எழுந்து சிரித்துக்கொண்டே செல்வது போன்ற காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், காட்டு விலங்குகளை தனியாக விடுங்கள் எனவும், மற்றொரு பயனர், வால் அசைக்கும் போது யானையின் அருகில் செல்ல வேண்டாம். அது அச்சுறுத்தலாக உணர்கிறது எனவும் பதிவிட்டுள்ளனர்.

    • யானை வருவதை பார்த்ததும், நாகராஜ் யானையிடம் இருந்து தப்பிக்க ஓடினார்.
    • சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து யானையை விரட்டினர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் மசினகுடி அடுத்த மாயார் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(வயது51). தொழிலாளி.

    இவர் இன்று அதிகாலை 4.30 மணிக்கு வீட்டு அருகே உள்ள தோட்டத்திற்கு காவலுக்கு சென்றார். இதற்காக அவர் தனது வீட்டில் இருந்து அந்த வழியாக நடந்து சென்றார்.

    அப்போது அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை திடீரென வெளியில் வந்தது. யானை வருவதை பார்த்ததும், நாகராஜ் யானையிடம் இருந்து தப்பிக்க ஓடினார்.

    ஆனால் யானை விடாமல் துரத்தி வந்து, அவரை துதிக்கையால் தூக்கி கீழே போட்டது. பின்னர் காலால் மிதித்தது. இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

    அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் யானையை அங்கிருந்து விரட்டினர். மேலும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தேவர்சோலை சர்க்கார் மூலை பகுதியை சேர்ந்தவர் மகாதேவ். இவர் அந்த பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இன்று அதிகாலை பணி முடிந்து, தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். தேவர்சோலை பகுதியில் வந்த போது அவரை ஒற்றை யானை வழிமறித்தது.

    யானை நிற்பதை பார்த்ததும், அங்கிருந்து தப்பியோட அவர் முயற்சித்தார். ஆனால் அதற்குள்ளாகவே அவரை யானை தாக்கி தூக்கி வீசியது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து யானையை விரட்டினர்.

    பின்னர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி மகாதேவ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

    நீலகிரியில் ஒரே நாளில் 2 பேர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அதனை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தகவல் அறிந்து தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி சாந்தி, இன்ஸ்பெக்டர் தவமணி, தளி செயலாளர் திவாகர் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • நாராணயப்பாவின் உடலை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே கடந்த சில தினங்களாக கரடிகல், சூளகுண்டா பகுதியில், ஒற்றை யானை ஒன்று உணவு தண்ணீர் தேடி கிராம பகுதியில் சுற்றி வந்துள்ளது.

    இதை கண்ட விவசாயிகள் யானையை விரட்ட வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, சூளகுண்டா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாராயணப்பா (71), அருகில் உள்ள தனது நிலத்திற்கு சென்றுள்ளார். ஆனால், இரவு வீடு திரும்பவில்லை. இதனால், குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. நேற்று காலை, அருகில் உள்ள விவசாய நிலத்தில் நாராயணப்பா யானை மிதித்து இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜவளகிரி வனச்சரக அலுவலர் அறிவழகன் தலைமையில் வனத்துறையினர், தளி எஸ்.ஐ சந்துரு மற்றும் போலீசார் உடலை மீட்க சென்றனர்.

    அப்போது கிராம மக்கள், அவரது உடலை எடுக்க விடாமல் தடுத்தனர். தகவல் அறிந்து தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி சாந்தி, இன்ஸ்பெக்டர் தவமணி, தளி செயலாளர் திவாகர் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கிராம பகுதியில் யானைகள் புகாதவாறு ரோப்வயர் பென்ஸ் அமைக்க வேண்டும், இறந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வனப்பகுதியை ஒட்டியுள்ள புதர்களை அகற்றி சாலை பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் சமரசத்தை ஏற்று, அனைவரும் கலைந்து சென்றனர்.

    பின்னர், நாராணயப்பாவின் உடலை தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில், நாராயணப்பா குடும்பத்தினரை மருத்துவமனையில் சந்தித்து, வனத்துறை சார்பில், நாராயணப்பா குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.

    • அப்பைய்யா யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது.
    • தேன்கனிக்கோட்டை பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானையை கர்நாடகா மாநில வனப்பகுதியில் விரட்டியக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மேடுமுத்துகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்பைய்யா (வயது55). விவசாயியான இவருக்கு நாகம்மா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் அப்பைய்யா இன்று அதிகாலை வழக்கம்போல் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்றில் மின்மோட்டாரை ஆன் செய்வதற்காக சென்றார்.

    அப்போது அங்கு மறைந்து இருந்த ஒற்றை யானை ஒன்று வேகமாக வந்து அப்பைய்யாவை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சத்தம் போட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த ஒற்றை யானையை விரட்டினர்.

    பின்னர் காயமடைந்த அப்பைய்யாவை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.

    இதற்கிடையே அப்பைய்யா யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன் ஆகியோர் யானை தாக்கி உயிரிழந்த அப்பைய்யாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சாந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, ஜவளகிரி வனச்சரகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து அப்பைய்யாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை யானையை கர்நாடகா மாநில வனப்பகுதியில் விரட்டியக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×