என் மலர்
நீங்கள் தேடியது "Security Dead"
- தமிழகத்தில் நடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் விசாரணைக்கு சென்றவர்களில் 24 பேர் (லாக்கப் மரணம்) இறந்து உள்ளனர்.
- தொடரும் போலீஸ் நிலைய மரணங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர் எனவும் நீதிபதிகளிடம் தெரிவித்தனர்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக அஜித்குமார் என்பவர் பணியாற்றினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நகை மாயமானதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவலாளி அஜித்குமார் உள்ளிட்ட சிலரை தனிப்படை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மற்றவர்களை விடுவித்துவிட்டு அஜித்குமாரிடம் மட்டும் தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர்.
இந்தநிலையில் அவர் திடீரென உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். அவரது சாவில் மர்மம் உள்ளது என்றும் போலீசார் தாக்கியதில் தான் அவர் இறந்துவிட்டார் என்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்ய வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே இந்த விவகாரம் சம்பந்தமாக 6 குற்றப்பிரிவு போலீஸ்காரர்களை சஸ்பெண்டு செய்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேற்று உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் குறித்து மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு இன்று காலையில் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ராஜராஜன், மாரீஸ் குமார், மற்றும் வக்கீல் அருண் சுவாமிநாதன் ஆகியோர் முறையிட்டனர்.
அப்போது வக்கீல்கள் கூறுகையில், போலீசார் கடுமையாக தாக்கியதில் தான் காவலாளி அஜித்கு மார் பரிதாபமாக இறந்துள்ளார். தமிழகத்தில் நடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் விசாரணைக்கு சென்றவர்களில் 24 பேர் (லாக்கப் மரணம்) இறந்து உள்ளனர். தொடரும் போலீஸ் நிலைய மரணங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர் எனவும் நீதிபதிகளிடம் தெரிவித்தனர்.
அப்போது நீதிபதிகள், போலீஸ் நிலையங்களில் சில ஆண்டுகளில் 24 சந்தேக மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து தங்களது தரப்பு பதில் என்ன என அரசு வக்கீலிடம் கேள்வி எழுப்பினர். அது மட்டுமில்லாமல் இறந்த நபர் தீவிரவாதியா? அவர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று கொல்லப்பட்டாரா? சாதாரண வழக்கில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச்செல்லப்பட்ட அவரை கடுமையாக தாக்கியது ஏன்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக பதில் அளிக்க அரசு வக்கீல் உரிய அவகாசம் கோரினார். பின்னர் இந்த விவகாரம் சம்பந்தமாக மனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
- பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குமாரசாமியை சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.
- சம்பவம் குறித்து மணலி புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவொற்றியூர்:
மணலி புதுநகரை அடுத்த வெள்ளிவாயல் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 64). இவர் விச்சூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். கடந்த 14ஆம் தேதி காலை 9 மணியளவில் கம்பெனியின் மெயின் கேட்டை மூடும்போது எதிர்பாராத விதமாக கேட் அடியோடு சரிந்து குமாரசாமி மேல் விழுந்தது.
இதைப்பார்த்த அருகில் இருந்த தொழிலாளர்கள் ஓடி வந்து கேட்டுக்குள் சிக்கிய குமாரசாமியை வெளியே எடுத்தனர். இதில் கால், மார்பு பகுதியில் அடிபட்டு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குமாரசாமியை சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த குமாரசாமி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மணலி புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- யானை தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்திருப்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
- வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு யானை ஊருக்குள் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள பல்லவராயன்பட்டியை சேர்ந்தவர் முருகன்(47). இவர் பண்ணைப்புரத்தில் உள்ள செல்லம் என்பவரது தென்னந்தோப்பில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். வழக்கமாக இரவு நேர காவலுக்கு சென்றுவிட்டு காலையில் வீடு திரும்புவது வழக்கம்.
அதன்படி இன்றுகாலை வெகுநேரமாகியும் முருகன் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்து அவரது குடும்பத்தினர் தோட்டத்திற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது முருகன் பலத்த ரத்தகாயங்களுடன் இறந்துகிடந்துள்ளார்.
அவரை யானை மிதித்து கொன்றதற்கான தடயங்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கும், கோம்பை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் முருகன் யானை தாக்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து யானையின் கால் தடங்களை வைத்து ஒரு யானை வந்ததா அல்லது 2 யானைகள் வந்ததா என விசாரித்து வருகின்றனர்.
இப்பகுதியில் ஏற்கனவே கடந்த காலங்களில் ஒற்றை யானை, மக்னா யானை ஆகியவை அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதுடன் ஏராளமான உயிர்களையும் காவு வாங்கியது. இதனையடுத்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு மக்னா யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததால் மீண்டும் கும்கி யானைகள் திருப்பி அனுப்பி விடப்பட்டன.
தற்போது மீண்டும் யானை தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்திருப்பது இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எனவே வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு யானை ஊருக்குள் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயிரிழந்த முருகனுக்கு பிரியா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.






