என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
    • படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சீயான் விக்ரம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    சென்னை:

    பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் 'தங்கலான்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் மாளவிகா மோகனன் ,பார்வதி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பசுபதி வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.

    தங்கலான் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில், தங்கலான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சீயான் விக்ரம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என அறிவித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், நடிகர் டேனியல் கால்டகிரோனின் பிறந்தநாளை முன்னிட்டு தங்கலான் படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • உடற்கூராய்வின் முடிவிலேயே காரணம் தெரிய வரும் என கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
    • கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து டிஜிபி விளக்கம்.

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    அப்பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து 5 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளச்சாராயம் விற்றவர்களை தேடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    இதற்கிடையே, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார்,

    கள்ளச்சாராயத்தை ஒழிக்க மாவட்டம் முழுவதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்ததாக தவறான செய்தியை பரப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், "உடற்கூராய்வின் முடிவிலேயே காரணம் தெரிய வரும் என கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ஏற்கனவே 8 பேர் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 7 பேர் என மொத்தம் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இறந்தவர்களின் உடல்கள் காவல் துறையினரால் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    உயிரிழந்தவர்களுக்கு முதலில் காது கேட்காமல் போனதாகவும், அடுத்து கண் பார்வை பறிபோனதாகவும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறுகின்றனர்.

    அரசு தரப்பில் இணை நோய் காரணமாக உயிரிழப்பு என்று கூறிய நிலையில், சிலருக்கு எந்தவித நோய்களும் இல்லை என உயிரிழந்தவர்களின் உறுவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து டிஜிபி தரப்பில் கூறுகையில்,"கள்ளக்குறீச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து தான் உயிரிழப்பா என்பதை கண்டறிய மூத்த போலீஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    காவல்துறையின் உயர்மட்ட அளவில் தீவிர விசரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் உண்மை தன்மையை ஆராய்ந்த பிறகு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" என்றார்.

    • ஒரு இடத்தில் அதிக அளவில் உள்ள சமுகத்தினர் சார்பான ஆசிரியர் பணியில் அமர்த்தக்கூடாது என்றால் அதை எவ்வாறு செயல்படுத்த முடியும்.
    • ஒரு மெஜாரிட்டி மதத்தினரை குறிவைப்பது போல் நீதிபதி சந்துரு அறிக்கை உள்ளது.

    பள்ளி, கல்லூரிகளில் சாதிய வன்முறைகளை தடுப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பரிந்துரைகளை வழங்கியது. அதில் நெற்றியில் பொட்டு வைக்கக் கூடாது, திலகம் இடக்கூடாது, கையில் கயிறு கட்டக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கு இந்து மதத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் தமிழக அரசு முழுமையாக இந்த பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஹெச். ராஜா கூறியதாவது:-

    சர்ச்சைக்குரியதாகவும், ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக காழ்ப்புணர்வுடன் நடவடிககை எடுப்பது மாதிரியும் அறிக்கையின் பரிந்துரைகள் இருக்கின்றன. அந்த அறிக்கையை முற்றிலுமாக மாநில அரசு நிராகரிக்க வேண்டும்.

    ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என நிர்வாகம் அறிவித்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அணிந்து வர ஆதரவு தெரிவிக்கும் நிலையில் பொட்டு வைக்கக் கூடாது, திலகம் இடக்கூடாது, கையில் கயிறு கட்டக்கூடாது என்பது குறிப்பிட்ட குழுக்களின் பரிந்துரைகள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

    ஒரு இடத்தில் அதிக அளவில் உள்ள சமுகத்தினர் சார்பான ஆசிரியர் பணியில் அமர்த்தக்கூடாது என்றால் அதை எவ்வாறு செயல்படுத்த முடியும். பெரும்பான்மையான சமுகத்தை எப்படி ஒடுக்க முடியும்.

    ஒரு மெஜாரிட்டி மதத்தினரை குறிவைப்பது போல் நீதிபதி சந்த்ரு அறிக்கை உள்ளது. இந்துக்கு எதிராக ஒரு உள்நோக்கத்துடன் அவரது அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

    • அரசுப் பள்ளிகளின் பெயர்களில் ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகள் உள்பட எந்த சாதிய அடையாளங்களும் இருக்கக் கூடாது
    • கைகளில் வண்ணக்கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்

    நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் அவன் குடும்பத்தினர், சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதல்மைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நேற்று சமர்ப்பித்தது.

    அதில் உள்ள முக்கிய பரிந்துரைகள்:

    • அரசுப் பள்ளிகளின் பெயர்களில் ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகள் உள்பட எந்த சாதிய அடையாளங்களும் இருக்கக் கூடாது
    • தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும். சாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பிறகே, புதிய பள்ளி தொடங்க அனுமதி அளிக்க வேண்டும்
    • குறிப்பிட்ட சாதி ஆதிக்கமாக உள்ள பகுதிகளில் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களை தலைமை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது
    • ஆசிரியர்களை தேர்வு செய்யும்போது சமூக நீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டை கண்டறிய வேண்டும்
    • கைகளில் வண்ணக்கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்
    • மாணவர்களின் வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் சாதி பெயர் இடம்பெறக் கூடாது. மாணவர்களின் சாதி விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும்.

    இந்நிலையில், தேனி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில், சாதி மோதலுக்கு எதிரான சந்துரு குழுவின் அறிக்கையை கிழித்து பாஜகவை சேந்த ஊராட்சிக் குழு துணைத் தலைவர் ராஜபாண்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    கையில் கயிறு கட்டக்கூடாது என கூறுவது இந்து மாணவர்களுக்கு எதிரானது என்றும் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழுவின் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ராஜபாண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

    • நாடு முழுவதும் உள்ள ஏழை மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தான் நீட் தேர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • நீட் தேர்வில் எத்தகைய குளறுபடி ஏற்பட்டிருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

    சென்னை:

    தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நீட் தேர்வு குளறுபடி தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில்,

    நாடு முழுவதும் உள்ள ஏழை மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தான் நீட் தேர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வில் எத்தகைய குளறுபடி ஏற்பட்டிருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

    நிர்வாக ரீதியான குளறுபடிகள் சரி செய்யப்படும் என்று கூறிய பின்னும் அரசியல் கட்சிகள் பிரச்சனையாக்குவதாகவும், நீட் தேர்வே தேவையில்லை என்ற பிரசாரத்தை அரசியல் கட்சியினர் மேற்கொள்வதாகவும் அவர் குற்றச்சாட்டி உள்ளார்.

    • 10 பேருக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • கள்ளச்சாராயம் விஷ சாராயமாக மாறியதாலேயே அவர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், அதனை மாவட்ட கலெக்டர் மறுத்துள்ளார். 

    கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வந்ததாகவும், அதனை அந்த பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சிலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்பட்டது. கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு வாந்தி, மயக்கம், தலைவலி மற்றும் வயிற்று எரிச்சல் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேருக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே பலியான 5 பேரையும் அவர்களது குடும்பத்தினர் தங்களது வீடுகளுக்கு கொண்டு வந்துள்ளனர். ஒரே தெருவில் உள்ள தங்கள் வீடுகளில் 5 பேரின் சடலங்களையும் வைத்து இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் வருவாய்த்துறையினரும் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    இதற்கிடையே 5 பேரும் கள்ளச்சாராயத்தால் இறந்தனர் என்ற குற்றச்சாட்டை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் மறுத்துள்ளார். அவர்கள் வயிற்றுப் போக்கு, வலிப்பு நோய்களால் இறந்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

    கள்ளச்சாராயம் குடித்ததால் 5 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில், வேறுசில உடல் பாதிப்பால் அவர்கள் உயிரிழந்ததாக கலெக்டர் கூறியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.


    • மதுவையும், கள்ளச்சாராயத்தையும் கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • கல்வராயன் மலைப்பகுதிகளில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு மாவட்டம் முழுவதும் விற்கப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் என்ற இடத்தில் கள்ளச்சாராயம் குடித்த சுரேஷ், பிரவீன், சேகர் ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர்; மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் அனைவரும் விரைவில் நலம் பெற விழைகிறேன்.

    தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுக்கடையில் விற்கப்படும் மது, பார்களிலும், சந்து கடைகளிலும் விற்பனை செய்யப்படும் கலால் வரி செலுத்தப்படாத மது, தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயம் என மூன்று வகையான சாராயங்கள் தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கு கேடு விளைவித்து வருகின்றன. மதுவையும், கள்ளச்சாராயத்தையும் கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத் தான் டாஸ்மாக் மது விற்பனை செய்யப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படு்கிறது. ஆனால், டாஸ்மாக் மதுவுக்கு இணையாக கள்ளச்சாராயமும் விற்பனை செய்யப்படுகிறது. எதையுமே கட்டுப்படுத்த முடியாத செயலற்ற நிலையில் தான் காவல்துறையும், அரசும் முடங்கிக் கிடக்கின்றன.

    சரியாக ஓராண்டுக்கு முன் தஞ்சாவூரில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்திய இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு நஞ்சு கலக்கப்பட்டிருந்தது தான் உயிரிழப்புக்கு காரணம் என்று தெரியவந்தது. அரசு மதுக்கடையில் விற்பனை செய்யப்பட்ட மதுவில் சயனைடு நஞ்சு எவ்வாறு கலக்கப்பட்டது? என்ற வினாவுக்கு ஓராண்டாக விடை இல்லை. இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு ஆணையிடப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழக அரசின் செயலற்ற தன்மைக்கு இதுவே சாட்சி.

    கடந்த ஆண்டு மரக்காணம் மற்றும் மதுராந்தகம் செய்யூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதிலிருந்து தமிழக அரசு பாடம் கற்றுக் கொண்டு கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், மதுவணிகம் செய்பவர்களுக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருப்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

    கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் உயிரிழந்தவர்களுக்கும், கள்ளச்சாராயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்திருக்கிறார். தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றின் செயலற்ற தன்மையை மூடி மறைப்பதற்கான முயற்சி தான் இது. இதில் உண்மை இல்லை. கல்வராயன் மலைப்பகுதிகளில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு மாவட்டம் முழுவதும் விற்கப்படுகிறது. சாக்லேட் சுவையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் அளவுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத் தொழில் நவீனமடைந்திருக்கிறது. இவற்றையெல்லாம் மூடி மறைத்து விட்டு மாவட்ட ஆட்சியர் சொல்லும் கட்டுக்கதைகளை மக்கள் நம்ப மாட்டார்கள்.

    கள்ளச்சாராயத்தை மட்டுமல்ல... டாஸ்மாக் மதுவை குடித்து விட்டு அட்டகாசம் செய்யும் குடிகாரர்களைக் கூட காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. சில நாட்களுக்கு முன் கரூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் போதையில் ஒரு குடிகாரர் தவறாக நடந்திருக்கிறார். அதுகுறித்து காவல் நிலையத்தில் அந்த பெண்மணி புகார் அளித்தும் குடிகாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, புகார் கொடுத்த பெண்ணை சமாதானப்படுத்தி பேருந்தில் ஏற்றி அனுப்பியுள்ளது.

    கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறிய தமிழக அரசு, அதற்கான தண்டமாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மரக்காணம் நிகழ்வில் வழங்கப்பட்டது போன்று தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 10-க்கும் மேற்பட்டோருக்கு தரமான மருத்துவம் அளிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • தி.மு.க. வேட்பாளரான அன்னியூர் சிவா, விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இன்று காலை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    • நாம் தமிழர் கட்சி வேட்பாளரான டாக்டர் அபிநயா வருகிற 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவை தொடர்ந்து அங்கு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளது.

    இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தி.மு.க.-பா.ம.க. இடையேதான் நேரடி போட்டி நிலவி உள்ளது. இதனால் 2 கட்சிகளை சேர்ந்தவர்களும் வெற்றி பெறுவதற்காக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்கள்.

    தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் உள்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் விக்கிரவாண்டியில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். பா.ம.க. நிர்வாகிகளும் பம்பரமாக சுழன்று ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 14-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளான அன்று 5 சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 7 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர். தி.மு.க. வேட்பாளரான அன்னியூர் சிவா, விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இன்று காலை 11 மணி அளவில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    அவருடன் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களான ஜெகத்ரட்சகன் எம்.பி., அமைச்சர் பொன்முடி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    பின்னர் பேட்டி அளித்த அமைச்சர் பொன்முடி கூறும்போது, கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது, ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றார்.

    'இதைத் தொடர்ந்து பா.ம.க. வேட்பாளரான சி.அன்புமணியும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இருவரும் தங்களது ஆதரவாளர்களோடு ஊர்வலமாக சென்று வேட்புமனுக்களை தாக்கல் செய்ததால் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் களம் இன்று களைகட்டி காணப்பட்டது.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளரான டாக்டர் அபிநயா வருகிற 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

    முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரசாரமும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. நாளை முதல் தி.மு.க. மற்றும் பா.ம.க. கட்சி களை சேர்ந்தவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து ஏற்கனவே அமைச்சர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களான செல்வப்பெருந்தகை, திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பிரசாரம் செய்ய உள்ளனர்.

    பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து டாக்டர் ராமதாஸ், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரும் பிரசாரம் செய்கிறார்கள்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்து சீமானும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

    வருகிற 24-ந்தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற 26-ந்தேதி கடைசி நாளாகும். அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. இதன் பிறகு தேர்தல் களம் மேலும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பாதுகாப்பு ஒத்திகை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது.
    • அகில இந்திய அளவிலும் நடத்தப்பட்டு வருகிறது.

    சென்னை:

    மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக புகுந்த தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றினார்கள். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

    "சாகர் கவாச்" என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் இந்த ஒத்திகை பின்னர் அகில இந்திய அளவிலும் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பாதுகாப்பு ஒத்திகை தமிழகம்-புதுவையில் இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு தொடங்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் நடத்தப்படும் இந்த பாதுகாப்பு ஒத்திகையை கடலோர காவல் படையினர், உள்ளூர் போலீசார், கடலோர பாதுகாப்பு படையினர் ஆகியோர் கூட்டாக இணைந்து நடத்தி வருகிறார்கள்.

    இதையொட்டி சென்னை முதல் கன்னியாகுமரி வரை தீவிரவாதிகள் போல மாறுவேடத்தில் ஊடுருவும் நபர் களை உள்ளூர் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் மடக்கி பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவே பாதுகாப்பு ஒத்திகையின் சாராம்சமாகும்.

    இதன்படி தீவிரவாதிகள் போல வேடமிட்டு கடலோர பகுதிகளில் நுழையும் போலீசாரை பாதுகாப்பு படையினர் பல இடங்களில் மடக்கி பிடித்தனர். இந்த பாதுகாப்பு ஒத்திகை வேட்டையின் போது கவனக்குறைவாக செயல்படும் காவலர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை பாயும் என்பதால் மிகுந்த எச்ச ரிக்கையோடு போலீசாரும், பாதுகாப்பு படையினரும் செயல்பட்டு வருகிறார்கள்.

    சென்னை

    சென்னையில் மெரினா உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் சுற்றுலா கடற்கைரை பகுதிகள், காசிமேடு உள்ளிட்ட மீன்பிடி கடற்கரை பகுதிகள் என அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இதனை நாளை மாலை வரை நீட்டிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதே போன்று சென்னையை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகள் அனைத்திலும் அதிகாரிகளும், போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    மாமல்லபுரம்

    மாமல்லபுரம், கல்பாக்கம் கடற்கரை பகுதிகளிலும் தீவிர சோதனை நடந்தது. கல்பாக்கம் அணுமின் நிலையம், மாமல்லபுரம் புராதன சின்னங்கள் பகுதியில் தாக்குதல் நடத்த மீனவர்கள் போன்று வேடமிட்டு வந்த போலீசாரை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர்.

    இதேபோல் கடலோர காவல் படையினர், போலீசார் மீனவர்கள் உதவியுடன் கடலுக்குள் படகில் சென்று சந்தேகப்படும் நபர்கள் படகில் வருகிறார்களா? எனவும் கண்காணித்தனர். கோவளம், திருவிடந்தை, மாமல்லபுரம் புறவழிச் சாலை, பூஞ்சேரி, வெங்கம்பாக்கம், கல்பாக்கம், வாயலூர் பகுதி, கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் சோதனைச் சாவடி அமைத்து வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு ஒத்திகையில் மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியில் 89 போலீசார், 20 கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர்.

    நெல்லை-தூத்துக்குடி

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்த ஒத்திகையில் கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், உவரி, கூடங்குளம் சட்டம்-ஒழுங்கு போலீசார், மீன் வளத்துறை, வருவாய்த்துறை யினரும் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன் மேற்பார்வையில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப் பட்டது.

    நாகை மாட்டம்

    நாகை மாவட்டம், வேதா ரண்யம் கடலோர பகுதி களான ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்ப வனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட மீனவ கிரா மங்களில் டி.எஸ்.பி. சுந்தர் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலோர பாதுகாப்பு படை கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் மேற்பார்வை யில் நடத்தப்படும் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் தமிழக போலீசார் 8,500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஒரே விண்ணப்பம் வழியாக இளம் அறிவியல் மாணவர் சேர்க்கை நடந்தது.
    • 340 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

    வடவள்ளி:

    கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை பிரிவு, அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக இளம் அறிவியல் மாணவர் சேர்க்கை நடந்தது.

    நடப்பு கல்வியாண்டில் வேளாண் பல்கலையில் 14 இளம் அறிவியல் பாடப்பிரிவு, 4 பட்டயப்படிப்புகளில் 5,361 இடங்களுக்கும், மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 6 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் மற்றும் மூன்று தொழில் முறை பாடப்பிரிவில் 371 இடங்களும், அண்ணாமலை பல்கலைக்கழத்தில் இளம் அறிவியல் (வேளாண்மை) மற்றும் இளம் அறிவியல் (தோட்டக்கலை) பாடப்பிரிவுகளில் உள்ள 340 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

    இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் கடந்த மே 7-ந் தேதி முதல் ஜூன் 12-ந் தேதி வரை பெறப்பட்டது. அதன்படி மொத்தம் 33,973 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 11,447 மாணவர்கள், 18,522 மாணவிகள் என29 ஆயிரத்து 969 பேரின் விண்ணப்பங்கள் தகுதியானவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    இதையடுத்து மாணவர்களின் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதனை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் கீதாலட்சுமி வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நடப்பாண்டில் பிளஸ்-2 வில் அறிவியல் பிரிவு படித்த மாணவர்கள் 27,300 பேர் மற்றும் தொழில்முறையில் வேளாண்மை படித்த மாணவர்கள் 1,900 பேர் என மொத்தம் 29,969 மாணவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவர்களுக்கான தரவரிசை பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில் 200-க்கு 200 மதிப்பெண்களை 4 பேரும், 199.5 மதிப்பெண் 8 பேரும், 199 மதிப்பெண்களை 10 பேரும் பெற்று உள்ளனர். மேலும், இன்று (19-ந் தேதி) மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இவர்களுக்கு இன்று அட்மிஷன் நடத்தப்படும். இதனை தொடர்ந்து ஆன்லைன் முறையில் கலந்தாய்வு வரும் ஜூன் 22, 23, 24 கலந்தாய்வு நடைபெறும்.

    இந்த கலந்தாய்வின் போது மாணவர்கள் தேர்வு செய்த கல்லூரி மற்றும் துறைகளில் மாற்றங்கள் செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். மேலும், நடப்பாண்டில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி வழக்கம் போல் திறக்காமல் புதுமையான முறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் ஆகஸ்டு முதல் வாரத்தில் அழைத்து அவர்களுக்கு வேளாண்மை குறித்து கள நிலவரம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும். இந்த பயிற்சி மூலம் மாணவர்களுக்கு வேளாண் படிப்பு குறித்த புரிதல் ஏற்படும். இதனை தொடர்ந்து முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி திறக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த, திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது.
    • உயிர்கள் இழப்பிற்குப் பொறுப்பான மதுவிலக்குத் துறை அமைச்சர் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.

    சென்னை:

    கள்ளச்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்திற்கு மதுவிலக்குத் துறை அமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பான எக்ஸ் தள பதிவில் அவர், கள்ளக்குறிச்சியில் மீண்டும் 5 பேர், கள்ளச்சாராயத்துக்குப் பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. 10 பேருக்கும் மேல், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்கள் என்று தெரிகிறது.

    மரக்காணம், மதுராந்தகம் பகுதிகளில், கள்ளச்சாராயத்துக்கு 23 உயிர்களைப் பறிகொடுத்து ஒரு ஆண்டே ஆன நிலையில், கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த, திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது.

    கள்ளச்சாராய வியாபாரிகளுடன், திமுக அமைச்சர் மஸ்தான் நெருங்கிய தொடர்பில் இருந்த விவரம் கடந்த ஆண்டே தெரியவந்தும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கண்துடைப்புக்காக நாடகமாடி, மீண்டும் 5 உயிர்களைப் பறித்திருக்கும் திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகம் முழுவதும் ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் திறனில்லாமல் தொடர்ந்து உயிர்கள் இழப்பிற்குப் பொறுப்பான மதுவிலக்குத் துறை அமைச்சர் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.

    கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர் மஸ்தான் மற்றும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காத துறை அமைச்சர் முத்துசாமி ஆகிய இருவரையும் உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • நீட்டை நடத்தியே தீருவேன் என்னும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம்.
    • ஆரம்பம் முதலே நீட் தேர்வை எதிர்த்த ஒரே இயக்கம் தி.மு.க. தான்.

    சென்னை:

    நாடு முழுவதும் கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் மறுதேர்வை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே நீட்டை ரத்து செய்யக்கோரி தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    இந்நிலையில், நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து வருகிற 24-ந்தேதி தி.மு.க. மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    குளறுபடிகள் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. நீட்டை நடத்தியே தீருவேன் என்னும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம். ஆரம்பம் முதலே நீட் தேர்வை எதிர்த்த ஒரே இயக்கம் தி.மு.க. தான்.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமை தாங்குகிறார். ஆர்ப்பாட்டத்தில் மாணவரணியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    முன்னதாக, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வரும் 21-ந்தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×