என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெறவேண்டும்.
- இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக சுங்கச்சாவடிகள் உள்ளது.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கவர்னர், அரசுக்கு இடையிலான மோதல் உயர்கல்வியை பாதிக்கக்கூடாது. பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தரின் நீடிக்கப்பட்ட பதவிக்காலம் முடிவடைந்தது. பாரதியார், கல்வியியல், அண்ணா, பெரியார், அழகப்பா, அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஆறுடன் பாரதிதாசன் பல்கலைக்கழகமும் இணைந்து 7 பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. உயர்கல்விதுறையில் உள்ள 13 பல்கலைக்கழகத்தில் 11 பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி காலியாகிவிடும். துணைவேந்தர் கையெழுத்து இல்லாத சான்றிதழ்கள் செல்லதக்கது அல்ல. இந்த நிலை நீடிக்கக்கூடாது. துணைவேந்தர் நியமனம் தொடர்பான வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு பள்ளிகளில் 3,192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய 2023-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணபித்தவர்களுக்கு 2024 தேர்வு நடத்தப்பட்டு மே மாதம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு தேர்வானவர்கள் பட்டியல் ஜூலை மாதம் வெளியிடப்பட்டு இன்று வரை பணிநியமன ஆணை வழங்கவில்லை. இடைநிலை ஆசிரியர்களுக்கும் போட்டி தேர்வு நடத்தப்பட்டு 6 மாதம் கடந்தும் திருத்தம் செய்யவும் அரசு முயற்சிக்கவில்லை. அரசுப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் 50 ஆயிரம் ஆசிரியர்கள் ஒய்வு பெற்ற நிலையில் ஒரு ஆசிரியர்கூட நியமிக்கவில்லை. பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையையும், இடைநிலை ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு முடிவை வெளியிடவேண்டும்.
தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பாராட்டி, தேசிய அளவில் இக்கணக்கெடுப்பு நடத்த எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி வலியிறுத்தியுள்ளார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் தேசிய தலைமை வலியிறுத்த வேண்டும்.
ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெறவேண்டும். ஆன்லைன் ரம்மிக்கு தமிழக அரசு தடைவிதித்தது செல்லாது என உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின் 19 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது. எனவே ஆன்லைன் ரம்மிக்கு தடை பெற அரசு முயற்சிக்க வேண்டும்.
தமிழகத்தில் அடுத்த இரு ஆண்டுகளில் 963 கிமீ நீளத்திற்கு 4 வழிச்சாலைகள் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் சுங்கச்சாவடிகள் 90 ஆக அதிகரிக்கும் என மக்களவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் சுங்கக்கட்டணம் செலுத்த முடியாமல் செல்ல இயலாத நிலை ஏற்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக சுங்கச்சாவடிகள் உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் 658 சிறப்பு டாக்டர்களை நேர்காணல் மூலம் நியமிக்கும் முடிவை அரசு கைவிட்டு போட்டித்தேர்வின் மூலமே நியமிக்க வேண்டும். இப்படி நியமிக்கப்பட்டால் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை 3 ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த ஆசிரியர்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். அரியலூர் மாவட்டம், காடுவெட்டியில் உள்ள காடுவெட்டி குருவின் சிலைக்கு அமைச்சர் சிவசங்கர் மாலை அணிவிக்க சென்றபோது வன்னியர்களுக்கு தி.மு.க. செய்த துரோகத்தை உரக்க சொல்லிய 3 பேரை போலீசார் கைது செய்ததை கண்டிக்கிறோம்.
திருப்பரங்குன்றம் தொடர்பாக நிகழ்வில், அம்மலை யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனை 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. கடந்த காலங்களில் இந்துக்களும், இஸ்லாமியர்களுக்கும் கடைபிடித்த நடைமுறை தொடர்பான அமைதிக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி உடன் இருந்தார்.
- தி.மு.க. அரசின் இந்த அடக்குமுறை கண்டிக்கத்தக்கது.
- தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநாட்டுவதில் இந்த அரசு முழு கவனம் செலுத்த வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் கடந்த ஒன்றாம் தேதி மாவீரன் ஜெ.குருவின் பிறந்தநாள் நிகழ்வு களில் பங்கேற்க அமைச்சர் சிவசங்கர் சென்ற போது, திமுகவின் சமூக அநீதியைக் கண்டித்து முழக்கம் எழுப்பியதற்காக பா.ம.க.வைச் சேர்ந்த அன்புமணி, சிங்கார வேலு, சீனு ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. அரசின் இந்த அடக்குமுறை கண்டிக்கத்தக்கது.
இத்தகைய அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் பா.ம.க.வை முடக்கி விடலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் அவருக்கு ஏமாற்றம் மட்டும் தான் பரிசாகக் கிடைக்கும்.
பா.ம.க.வினர் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதற்கும், பா.ம.க.வினர் மீது வன்மம் காட்டுவதற்கும் பதிலாக, தெலுங்கானாவில் நடத்தப்பட்டது போன்று தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநாட்டுவதில் இந்த அரசு முழு கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கைதான இருவரும் சீர்காழியை சேர்ந்த சதாம் என்பவரிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கி வந்ததா தெரிவித்து உள்ளனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போரூர்:
போரூர் அருகே குன்றத்தூர் சாலையில் உள்ள எம்.எஸ்.நகர் பகுதியில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுப்டனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் பெரிய பையுடன் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் ஏற்கனவே செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருந்தது. விசாரணையில் அவர்கள் அனகாபுத்தூரை சேர்ந்த ரஞ்சித்குமார்(34) மற்றும் பம்மலை சேர்ந்த அங்குராஜ் (37) என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்த மொத்தம் ரூ.28லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான இருவரும் சீர்காழியை சேர்ந்த சதாம் என்பவரிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கி வந்ததா தெரிவித்து உள்ளனர். இந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்தால் ரூ.1 லட்சத்திற்கு ரூ.4 ஆயிரம் வீதம் கமிஷன் தொகை கிடைக்கும் என்பதால் பணத்தை மாற்ற இருவரும் சென்னையில் தங்கி தொடர்ந்து முயற்சி செய்து வந்ததாக தெரிவித்து உள்ளனர்.
அவர்களுடன் தொடர்பில் உள்ள பழை ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- மகாத்மா காந்தி தினசரி சந்தை, வணிக வளாகத்தை திறந்து வைக்கிறார்.
நெல்லை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அங்கிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லைக்கு காரில் புறப்பட்டார். அவருக்கு பாளை கே.டி.சி.நகர் மேம்பாலம் அருகே தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் கங்கைகொண்டான் சிப்காட் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு டாடா பவர் சோலார் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்கி வைத்து, விக்ரம் சோலார் நிறுவனத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் சிப்காட்டில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவை திறந்து வைக்கிறார். தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு அரசினர் சுற்றுலா மாளிகை செல்கிறார்.
பின்னர் பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.40 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி தினசரி சந்தை, காய்கனி சந்தை மற்றும் புதிய வணிக வளாகத்தை திறந்து வைக்கிறார்.
அவர் அங்கிருந்தபடியே காணொலி காட்சி வாயிலாக டவுன் பாரதியார் பள்ளிக்கு அருகில் ரூ.14.97 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு அரங்கத்தையும் திறந்து வைக்கிறார்.
மேலும் நயினார்குளம் தெற்கு பகுதியில் ரூ.11.03 கோடி மதிப்பீட்டிலான மேம்படுத்தப்பட்ட பணி களையும் திறந்து வைக்கிறார்.
அதன்பின்னர் பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரி எதிரே நேருஜி கலையரங்கில் தி.மு.க. நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.
அப்போது நெல்லை மத்திய மற்றும் கிழக்கு மாவட்ட தி.மு.க.வுக்கு உட்பட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பேரூர், நகர செயலாளர்கள், மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வட்ட செயலாளர்கள் என மொத்தம் 155 நிர்வாகிகளை அவர் சந்தித்து கலந்துரையாடுகிறார்.
அப்போது, வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்த லில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசுகிறார்.
கலந்துரையாடலின்போது நிர்வாகிகளின் கருத்துகளையும் அவர் கேட்கிறார். இதில் கலந்து கொள்ளும் நிர்வாகிகளுக்கு ஏற்கனவே அடையாள அட்டை தி.மு.க. தலைமையில் இருந்து வழங்கப்பட்டு விட்டது.
இந்த சந்திப்பு முடிவடைந்த பின்னர் நேருஜி கலையரங்கம் அருகே உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அப்போது அவர் முன்னிலையில் மாற்றுக்கட்சியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் இணைகின்றனர்.
தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை சுற்றுலா மாளிகையில் வைத்து மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காலை 9.30 மணி அளவில் புறப்பட்டு பாளையங்கோட்டை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்திற்கு செல்கிறார். அங்கு புதிதாக ரூ.78 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 6 மாடி கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
பின்னர் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடைக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கனவு திட்டமான ரூ.1,060 கோடியில் முடிவுற்றுள்ள தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு நதிநீர் இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டம் உள்ளிட்ட முடிவுற்ற 24 திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
மேலும் நெல்லை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஏற்கனவே முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட மேற்கு புறவழிச்சாலை திட்டத்தின் பகுதி-1 திட்டப்பணி உள்ளிட்ட 20 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் விழா மேடையில் எழுச்சியுரை ஆற்றும் அவர், 75 ஆயிரத்து 151 பயனாளிகளுக்கு ரூ.167 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
2 நாட்கள் சுற்றுப் பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் ரூ.9 ஆயிரத்து 368 கோடி மதிப் பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்படும் போது வழி நெடுகிலும் நிர்வாகிகள், பொதுமக்கள், தொண்டர்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
மேலும் வண்ணார்பேட்டையில் தொடங்கி, விழா மேடை வரையிலும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'ரோடு-ஷோ' சென்று பொதுமக்களை சந்திக்கிறார்.
அப்போது பொதுமக்கள் சாலையோரம் அணிவகுத்து நிற்க ஏதுவாக இரும்பு தடுப்புகள் பொருத்தப் பட்டுள்ளது. மேலும் செல்லும் வழியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மேடை களும் அமைக்கப்பட்டுள்ளது.
- துடியலூர்-கோவில்பாளையம் இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டு வரும், குருடம்பாளையம் என்.ஜி.ஓ. காலனி ரெயில்வே மேம்பாலத்திற்கு அவரது பெயர் சூட்டப்படும்.
- அய்யா நாராயணசாமி நாயுடுவின் கனவுகளை நிறைவேற்றத் தொடர்ந்து உழைப்போம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
உழவர் பெருமக்களுக்காகவே வாழ்ந்த உத்தமரான அய்யா நாராயணசாமி நாயுடு நூற்றாண்டில் அவரது தியாகத்தையும் புகழையும் போற்றுவோம்.
அவரது நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், துடியலூர்-கோவில்பாளையம் இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டு வரும், குருடம்பாளையம் என்.ஜி.ஓ. காலனி ரெயில்வே மேம்பாலத்திற்கு அவரது பெயர் சூட்டப்படும். அவர் பிறந்து வாழ்ந்த வையம்பாளையத்தில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும் ஆகிய அறிவிப்புகளைச் செய்திருக்கிறேன். அய்யா நாராயணசாமி நாயுடுவின் கனவுகளை நிறைவேற்றத் தொடர்ந்து உழைப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கொடூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
- ஊராட்சி செயலாளர் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடூர் ஊராட்சியை பொன்னேரி நகராட்சியுடன் இணைக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு கொடூர் ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் குடியரசு தினத்தன்று கிராமசபை கூட்டம் நடைபெறாததால் மீஞ்சூர் ஒன்றிய பற்றாளர் முத்துலட்சுமி தலைமையில் கொடூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட கிராம மக்கள் ஊராட்சியை பொன்னேரி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரேசன் கார்டு, ஆதார் அட்டையை ஒப்படைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
மேலும் கிராம சபை கூட்டத்தை பார்வையிடுவதற்காக வந்த மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரனை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
இதில்முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பானு பிரசாத், முன்னாள் தலைவர் கஸ்தூரி மகேந்திரன், ஊராட்சி செயலாளர் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரே பொய்யான புகார் அளித்து நாடகமாடிய விவகாரம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள சோமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பிரணிதா. இந்தநிலையில் நேற்று இரவு அவர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது கோவில் நிலத்தில் கட்டுமானம் தொடர்பாக சர்ச்சைக்குரிய புகார் மனு தொடர்பாக விசாரணைக்கு சிலர் வந்திருந்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக சோமநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்டச் செயலாளர் இளைய கவுதமன் மற்றும் சிலரும் வந்திருந்தனர். அவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் பிரணிதாவிடம் புகார் மனு தொடர்பாக கேட்ட போது, நான் தற்போது இந்த மனுவை விசாரணை செய்ய முடியாது, உயர் அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள்க கட்சியினர் சப்-இன்ஸ்பெக்டர் ஒருத்தரப்பினருக்கு சாதகமாக செயல்பட்டு தங்களை அலைய வைப்பதாகவும் நினைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட பிரச்சனையில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரணிதா போலீஸ் நிலையத்திலேயே மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் எதிர்தரப்பினர் கையில் கத்தியால் கீறிவிட்டதாக கூறி காயமடைந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரணிதா, காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபனிடம் கேட்டபோது, பெண் சப்-இன்ஸ்பெக்டர் பிரணிதா சிவகங்கைக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு உள்ளார். ஆனால் அவர் அங்கு செல்ல விருப்பமில்லாமல் கடந்த 10 நாட்களாக சோமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் இருந்து பணி விடுப்பு ஆகாமல் இருந்து வருகிறார்.
நேற்று காரைக்குடி அருகே உள்ள சோமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறியது உண்மையில்லை. அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது எனவும், பொய்யாக புகார் அளித்து நாடகமாடிய சப்-இன்ஸ்பெக்டர் பிரணிதா மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரே பொய்யான புகார் அளித்து நாடகமாடிய விவகாரம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் சமூக வலைதளங்களில் அரசின் மீதும் பலர் குற்றச்சாட்டு கூறுவதற்கு காரணமாக அமைந்துள்ளதால் அவர் மீது கடுமையான நடவடிக்கை தேவை என கருத்து நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
- ரோஜா மலரில் நோய் தாக்கம் ஏற்பட்டு விளைச்சல் குறைந்துள்ளது.
- குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கொய் மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
குன்னூர்:
காதலர் தினம் வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
காதலர் தினத்திற்கு காதலர்கள் தங்கள் காதலிகளுக்கு, ரோஜா மலர்கள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பரிசாக கொடுப்பார்கள். அதிலும் அதிகளவு ரோஜா மலர்களையே வழங்கி தங்கள் காதலை வெளிப்படுத்துவர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விளையக்கூடிய ரோஜா மலரில் நோய் தாக்குதல் மற்றும் விளைச்சல் குறைந்து காணப்படுவதால், நீலகிரி மாவட்டத்தில் விளையும் கொய்மலர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கோத்தகிரி உள்பட பல்வேறு இடங்களிலும் கொய் மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு விளையும் கொய் மலர்கள் பெங்களூரு, சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக காதலர் தினத்திற்கு ரோஜா மலர்களுக்கு தான் அதிகம் கிராக்கி இருக்கும்.
ஆனால் இந்த ஆண்டு நீலகிரி கொய் மலர்களுக்கு அதிகளவில் கிராக்கி ஏற்பட்டுள்ளது. லில்லியம் ஏசியாடிக் மலர் கொத்து (10 மலர்கள்) ரூ.300-க்கும், ஓரியண்டல் கொத்து ரூ.700-க்கும், கார்னேசன் ரூ.200-க்கு விற்பனையாகி வருகிறது. ஜெர்பரா ஒரு மலர் ரூ.4-க்கு விற்கப்படுகிறது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட கொய் மலர்கள் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-
காதலர் தினத்தையொட்டி ரோஜா பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. மேலும் ஓசூரில் விளையும் ரோஜா மலரில் நோய் தாக்கம் ஏற்பட்டு விளைச்சல் குறைந்துள்ளது.
இதன் காரணமாக காதலர்கள் நீலகிரியில் விளையும் கொய் மலர்களான லில்லியம், கார்னேஷன், ஜெர்பரா போன்றவற்றை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு குன்னூரில் இருந்து கொய் மலர்கள் தயார் செய்யப்பட்டு, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
காதலர் தினம் நெருங்கும் நேரத்தில் இன்னும் தேவை அதிகரிப்பதுடன், விலையும் கணிசமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கோவை:
நடிகர் அஜித் நடித்து, மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 11-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியாகி இருந்தது. அதற்கு பிறகு 2 ஆண்டுகள் கழித்து இன்று தான் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.
இதனால் இந்த திரைப்படத்தை ஒரு திருவிழா போன்றே அஜித் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் நேற்றிரவே கொண்டாட்டம் களை கட்ட தொடங்கி விட்டது.
கோவை மாநகர், புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி உள்ளது.
இதனையொட்டி அதிகாலை முதலே கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் ரசிகர்கள், ரசிகைகள் குவிந்தனர். சில ரசிகர்கள் அஜித்தின் புகைப்படம் பொறித்த டிசர்ட் அணிந்தும் வந்திருந்தனர்.
படம் வெளியானதையொட்டி தியேட்டர் முன்பு, படத்தின் கட்-அவுட்டுகளும் வைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த அஜித்தின் படத்திற்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தனர். அங்கு நின்றபடி நடனமும் ஆடினர்.
தியேட்டருக்கு வெளியே சாலையில் பட்டாசுகளையும் வெடித்தனர்.
அந்த வழியாக பஸ் மற்றும் வாகனங்களில் சென்றவர்களுக்கு ரசிகர்கள் இனிப்புகளையும் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள தியேட்டர் ஒன்றில் குவிந்த அஜித் ரசிகர்கள் தியேட்டர் வளாகத்தில் ஒன்றாக குவிந்து, மேளதாளங்கள் முழங்க, அஜித்தே. அஜித்தே.. அஜித்தே... என கரகோஷம் எழுப்பி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
அஜித் படத்தின் பாடல்களை இசைக்க விட்டு அதற்கு ஏற்ப நடனமும் ஆடி மகிழ்ந்தனர்.
பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் விடாமுயற்சி படம் வெளியானதையொட்டி அஜித்தின் பிரமாண்ட கட்-அவுட் வைக்கப்பட்டு இருந்தது.
அந்த கட்-அவுட்டிற்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தனர். பூக்களை வாங்கி வந்து, அஜித்தின் புகைப்படத்தின் மீதும் மலர்களை தூவி உற்சாகம் அடைந்தனர். தொடர்ந்து அனைவரும் ஒன்றாக கூடி நின்று நடனமாடினர்.
பின்னர் அனைவரும் தியேட்டருக்குள் சென்றனர். சரியாக 9 மணிக்கு திரைப்படம் திரையிடப்பட்டது. 2 வருடங்களுக்கு பிறகு தங்கள் தலைவரை திரையில் பார்த்த சந்தோஷத்தில் ரசிகர்கள், திரையில் அஜித்தின் பெயர் வரும் காட்சியிலும், அஜித் வரும் காட்சியிலும் விசில் அடித்தும், அஜித் அஜித் என கத்தியும் தியேட்டரையே தெறிக்க விட்டனர்.
சில ரசிகர்கள் திரையின் முன்பு ஏறி நின்று துள்ளல் நடனமும் போட்டனர். படம் தொடங்கியதில் இருந்து, படம் முடியும் வரை தொடர்ந்து கரவொலி எழுப்பி கொண்டே இருந்தனர்.
இதேபோன்று துடியலூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தியேட்டர்களிலும் விடாமுயற்சி படம் வெளியாகியது.
அங்கும் ரசிகர்கள் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
- லாரி உரிமையாளர் முருகானந்தத்தின் வீடு மற்றும் கடைகளிலும் சோதனை நடந்தது.
- காவலில் எடுக்கப்பட்ட 5 பேர் இன்று கோர்ட்டில் ஆஜர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜகபர் அலி( வயது 58) அ.தி.மு.க. பிரமுகரும் சமூக ஆர்வலருமான இவர், திருமயம் பகுதியில் கல் குவாரிகளில் நடைபெறும் சட்டவிரோத கனிமவள கொள்ளையை தடுப்பதற்காக போராடி வந்தார்.
மேலும் நீதிமன்றங்களிலும் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கடந்த 17-ம் தேதி அவரை லாரி ஏற்றி கொலை செய்தனர்.
இதுதொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கல்குவாரி உரிமையாளர்கள், ராசு ராமையா, ராசுவின் மகன் தினேஷ், லாரி உரிமையாளர் முருகானந்தம், டிரைவர் காசிநாதன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைதான 5 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, அவர்களை இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர்.
இதற்கிடையே ஜகபர் அலியின் மனைவி மரியம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், சில தினங்களுக்கு முன்பு ஜகபர் அலியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு தாசில்தார் முன்னிலையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று சிபிசிஐடி போலீசார் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் கைதான ராமையா மற்றும் ராசு ஆகியோருக்கு சொந்தமான துளையானூரில் உள்ள அவர்களுக்கு சொந்தமான கல் குவாரிகள், வீடுகள் மற்றும் திருமயத்தில் உள்ள ராசுவுக்கு சொந்தமான நகை அடமானக் கடை ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் திருமயத்தில் உள்ள லாரி உரிமையாளர் முருகானந்தத்தின் வீடு மற்றும் கடைகளிலும் சோதனை நடந்தது.
இதில் குவாரிகள் மற்றும் அவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கனிமவள முறைகேடு தொடர்பாக முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணையை தீவிர படுத்த முடிவு செய்துள்ளனர்.
- ஒரே நேரத்தில் தண்ணீர் குடிக்கக் கூடாது.
- காய்கறிகள், பழங்கள் வாங்கும்போது அதன் கலரை கவனித்து வாங்க வேண்டும்.
சென்னை:
வெயிலின் தாக்கம் இப்போதே அதிகரிக்க தொடங்கி உள்ளது. கோடை காலத்திற்கு இன்னும் 2 மாதங்கள் இருந்தாலும்கூட, காலநிலை மாற்றத்தால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
கோடை காலத்தில் குடிநீர், பழங்கள், குளிர் பானம் ஆகியவற்றை மிக கவனமாக வாங்கி அருந்துங்கள் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
வெயில் காலம் தொடங்க இருப்பதால் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குடிநீர், குளிர்பானம் ஆகியவற்றை அதிகளவில் பயன் படுத்துவதில் கவனம் வேண்டும். தினமும் 2½ லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் தண்ணீர் குடிக்கக் கூடாது. அதனை குறிப்பிட்ட நேர இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். தர்பூசணி, திராட்சை உள்ளிட்ட பழ வகைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

தர்பூசணி பழம் உடலுக்கு மிகவும் நல்லது. பழம் வகைகளை வாங்கி சாப்பிடும் போது அதில் கலப்படம் இருக்கிறதா? என்பதை கவனித்து வாங்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் வாங்கும்போது அதன் கலரை கவனித்து வாங்க வேண்டும்.
காலை வெயில் உடலுக்கு நல்லது. மதியத்திற்கு பிறகு தாக்கும் வெயிலை தவிர்ப்பது நல்லது. இளநீர், பழம் விற்பனையில் ஈடுபடுவோர் பெரிய குடையை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்யக் கூடிய வியாபாரிகள் குடைகளை பயன்படுத்தினால் நல்லது. குடிநீர் பாட்டில்களில் தரமானது எவை என்பதை கவனித்து வாங்கி பயன்படுத்த வேண்டும்.
தண்ணீர் பாட்டில்களில் கலப்படம் வருகிறது. சிறு தொழிலுக்கான சான்றிதழ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட குடிநீர் பாட்டில்களை வாங்கி பயன்படுத்தவும்.
முறையான பரிசோதனை இல்லாமல் பாட்டில்களில் தண்ணீரை அடைத்து விற்பதையும், அதை வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும். குழந்தைகளுக்கு கலர் கலராக இருக்கும் குளிர்பானங்களை வாங்கி கொடுக்காதீர்கள்.
தரமற்ற குடிநீர், குளிர் பானங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகலாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் சட்டத்திற்கு விரோதமாக உணவுப் பொருட்களை தயாரித்து விற்பவர்கள் மீது ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
எனவே கோடை காலம் தொடங்க இருக்கிற நிலையில் பொதுமக்கள் தரமான சுகாதாரமான குடிநீர், குளிர்பானம், பழச்சாறு ஆகியவற்றை வாங்கி குடிக்க வேண்டும்.
போலி மற்றும் சுகாதாரமற்றவைகளை தவிர்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 12 பெட்டிகளை கொண்ட இந்த ‘குளுகுளு’ ரெயிலில் 1,320 இருக்கைகள் உள்ளன.
- ரெயில் சேவை தொடங்கப்படும் போது கட்டண விவரங்கள் முழுமையாக அறிவிக்கப்படும்.
சென்னை:
சென்னை ஐ.சி.எப். ஆலையில் வந்தே பாரத் ரெயில்கள் மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரெயில் பெட்டிகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, தெற்கு ரெயில்வேயில் சென்னை கோட்டத்துக்கு 'குளுகுளு' வசதி கொண்ட 2 குளிர்சாதன மின்சார ரெயில்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த 'குளுகுளு' மின்சார ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த 'குளுகுளு' மின்சார ரெயில் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் இன்னும் 2 வாரத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது. அதன் பிறகு இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் தொடங்கும். சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதும் அடுத்த மாதம் முதல் இந்த 'குளுகுளு' ரெயில் சென்னை பயணிகளுக்காக இயக்கப்படும்.
இந்த ரெயில் ஒரு நாளைக்கு எத்தனை முறை இயக்கப்படும் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்பட உள்ளது. 12 பெட்டிகளை கொண்ட இந்த 'குளுகுளு' ரெயிலில் 1,320 இருக்கைகள் உள்ளன. ஒரே நேரத்தில் இந்த ரெயிலில் 5,700 பேர் பயணம் செய்வதற்கான இடவசதி உள்ளது.
சென்னை கோட்டத்தில் முதல் கட்டமாக 2 'குளுகுளு' மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் வர இருக்கிற கோடை வெயிலில் இருந்து ரெயில் பயணிகள் தப்பிக்க முடியும்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே அடுத்த மாதம் 'குளுகுளு' மின்சார ரெயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ரெயில் தயாரிப்புக்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ரெயிலில் நவீன மோட்டார்கள் இடம்பெற்றுள்ளதால் அதிக பயணிகளை ஏற்றி செல்லும் திறன் கொண்டது. இந்த ரெயில் பெட்டிகள் விரைவில் தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
சோதனை ஓட்டம் முடிவடைந்ததும் ரெயில் உடனடியாக இயக்கப்படும். எனவே வர இருக்கிற கோடை வெயிலை ரெயில் பயணிகள் எளிதாக சமாளிக்க முடியும். இந்த ரெயில் பயணத்துக்கான கட்டணம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
மேற்கு ரெயில்வேயில் 'குளுகுளு' ரெயில்களுக்கு கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 9 கி.மீ. தூரத்துக்கு ரூ.35, 15 கி.மீ. தூரத்துக்கு ரூ.50, 24 கி.மீ. தூரத்துக்கு ரூ.70, 34 கி.மீ. தூரத்துக்கு ரூ.95 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி 'குளுகுளு' மின்சார ரெயிலில் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையேயான 28.6 கி.மீ. தூரத்துக்கான கட்டணம் ரூ.95 ஆக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த ரெயில் சேவை தொடங்கப்படும் போது கட்டண விவரங்கள் முழுமையாக அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






