என் மலர்
நீங்கள் தேடியது "விடுதலை சிறுத்தை"
- நடப்பு ஆண்டு நாட்டின் சுதந்திர தினம் நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது.
- கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
சென்னை:
நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அரசியல் கட்சி தலைவர்கள், மந்திரிகள், எம்.ல்.ஏ.க்களுக்கு மாநில கவர்னர்கள் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.
இதற்கிடையே, நடப்பு ஆண்டு நாட்டின் சுதந்திர தினம் நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி அரசியல் கட்சி தலைவர்கள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். இந்த தேநீர் விருந்தில் திமுக, அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில் கூறியதாவது:
தமிழ்நாட்டு மக்களுக்கும், மண்ணின் உரிமைக்கும் பதவியேற்ற காலத்திலிருந்தே எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும், மத்திய பாஜக அரசின் தூண்டுதலின் பேரில் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை ஏற்படுத்தும் இந்தியத் தேர்தலை ஆணையத்தை கண்டித்தும்,
முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை வேண்டுமென்றே காலம்தாழ்த்தி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதைக் கண்டித்தும், சுதந்திர தினத்தன்று அவர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் கூறுகையில், வழக்கம்போல் கவர்னர் ஆர்.என்.ரவி சுதந்திரதின விழாவில் பங்கேற்கும்படி வி.சி.க.வுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். வழக்கம்போல் அவ்விழாவில் வி.சி.க. பங்கேற்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்தார்.
- தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கிறோம்.
- காவல்துறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும்.
சென்னை :
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுக்க பா.ஜ.க. முயல்வதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் முதன்மை செயலாளர் உஞ்சை அரசன், துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, ரவிக்குமார் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சிந்தனை செல்வன், ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு, மாவட்ட செயலாளர்கள் இரா.செல்வம், வி.கோ.ஆதவன், ந.செல்லத்துரை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், ம.தி.மு.க. தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, சி.பி.ஐ. (எம்.எல்.) மாநில செயலாளர் பழ.ஆசைதம்பி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தொல்.திருமாவளவன் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் பா.ஜ.க. உள்ளிட்ட சனாதன சக்திகளால் வன்முறை தூண்டப்படுகிறது. சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து தி.மு.க. அரசுக்கு எதிரான ஒரு சூழலை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க. தலைவர்களின் பேச்சுக்கள் வன்முறையை தூண்டும் வகையில்தான் இருக்கின்றன.
தி.மு.க. ஆட்சியில் கி.வீரமணியின் காரை சூழ்ந்து அச்சுறுத்துவதை பார்க்கும் போது தமிழ்நாட்டில் காவல்துறை பா.ஜ.க. கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்று சந்தேகிக்க தோன்றுகிறது. தமிழகத்தில் காவல்துறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும்.
அரசியல் ரீதியாக என்ன பின்னடைவு ஏற்பட்டாலும் பா.ஜ.க., பா.ம.க. இருக்கும் இடத்தில் (கூட்டணியில்) நாங்கள் (வி.சி.க.) இருக்க மாட்டோம். அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை தி.மு.க. ஒருங்கிணைக்க வேண்டும் என்கிறோம். தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கிறோம்.
அண்மையில் நடைபெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஷ்கார் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் வரும் போது வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டது போன்று தமிழகத்திலும் தேர்தல் நெருங்க நெருங்க என்ன செய்யப் போகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. காரணம், அது நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையிடத்தில் இருந்து தான் முடிவு செய்யப்படும்.
இந்த ஆபத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சுட்டிக்காட்டத் தான் நாங்கள் இங்கு (வள்ளுவர்கோட்டம்) கூடி உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பிரசாந்த் கிஷோர், சுனில் போன்றோர் தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்து பெயர் வாங்கி வருகிறார்கள்.
- கூட்டணி அடிப்படையில் ஏதாவது ஒன்றிரண்டு சீட்டுகள்தானே கிடைக்கும்.
ஆட்சியில் இருந்த கட்சிகளும் சரி. ஆட்சியை பிடிக்க மல்லு கட்டும் கட்சிகளும் சரி தேர்தலில் ஜெயிக்க என்னதான் வியூகம் அமைத்தாலும் பல நேரங்களில் பலனற்று போவதால் தேர்தல் வியூகம் வகுப்பதற்காகவே வாடகைக்கு ஆள் பிடிக்கின்றன. இதற்காக கோடிக்கணக்கான பணத்தையும் வாரி கொடுக்கிறார்கள்.
அந்த வகையில் பிரசாந்த் கிஷோர், சுனில் போன்றோர் தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்து பெயர் வாங்கி வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்க ஒருவரை நியமித்து இருக்கிறதாம்.
கூட்டணி அடிப்படையில் ஏதாவது ஒன்றிரண்டு சீட்டுகள்தானே கிடைக்கும். இதற்கு தேர்தல் வியூகம் வகுக்க தனியாக ஆள் நியமித்தது ஏன் என்பதற்கு "எல்லாம் தொலைநோக்கு பார்வை "தான் என்கிறார்கள் தம்பிகள். தோகை விரித்தாடிய மயிலை பார்த்து வான்கோழியும் ஆடியதாம்.
- இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
- தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி எஸ். எஸ். சிவசங்கர் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
திருச்சி:
பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நாளை ( வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு பிரம்மாண்ட மாநாடு நடை பெறுகிறது. அக்கட்சியின் அரசியல் வெள்ளிவிழா, கட்சித் தலைவரின் மணி விழா, இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார். பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி. மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சா ரியார், திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ., தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்மு ருகன் எம்எல்ஏ., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ. ஆர் ஈஸ்வரன் எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில செயலாளர் ஆசை தம்பி, ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், மாநாட்டு பொறு ப்பாளருமான பெரம்பலூர் இரா. கிட்டு உள்பட இந்தியா கூட்டணியில் உள்ள 28 கட்சிகளின் தலைவர்கள் கொள்கிறார்கள்.
மேலும் தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி எஸ். எஸ். சிவசங்கர் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இதையொட்டி சிறுகனூரில் பிரம்மாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தன. தற்போது அந்தப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மாநாடு நுழைவு வாயில் பகுதி முந்தைய நாடாளுமன்ற கட்டிடத்தின் வடிவில் பிரம்மாண்டமாக அமைத்துள்ளனர். முகப்பில் கட்சித் தலைவர் திருமாவளவனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலமாக திருச்சி வருகை தருகிறார். முன்னதாக சென்னையில் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை 5 மணிக்கு மேல் புறப்பட்டு திருச்சி வருகை தருகிறார். பின்னர் கார் மூலமாக சாலை மார்க்கத்தில் மாநாடு நடைபெறும் சிறுகனூருக்கு செல்கிறார்.
முன்னதாக செல்லும் வழியில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் திறக்கப்பட்ட கலைஞர் சிலையை பார்வையிடுகிறார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், தமிழக முதலமைச்சரின் சிறப்பு பாதுகாப்பு டிஐஜி திருநாவுக்கரசு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் நேற்று கலெக்டர் பிரதீப் குமார் மாநாடு பந்தல் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்பி, பெரம்பலூர் இரா. கிட்டு, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில நிர்வாகி மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- ஒரு புள்ளியை வைத்துவிட்டு பெரிய கோலம் போடமுடியாது.
- அடியெடுத்து வைத்தவுடன் ஆட்சியை கைப்பற்றிவிட முடியாது என்றார்.
திண்டுக்கல்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து ஆயக்குடியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்துகொண்டார். அங்கு அவர் பேசியதாவது:
தேர்தலில் அதிக சீட் வேண்டும் என்பதற்காகவோ, பணம் காசு வேண்டும் என்பதற்காகவோ பழனி மலைக் கோயிலுக்கு வரவில்லை. என் முன்னோர் வாழ்ந்த இடம் என்பதனால் அதனை காண்பதற்காகவே வந்துள்ளேன்.
நான் அரசியல் களத்திலே அடியெடுத்து வைத்தபோது எழுப்பிய முழக்கம், எளிய மக்களை அதிகாரமிக்கவர்களாக மாற்ற வேண்டும் என்பது. அதை அவ்வளவு எளிதில் எட்டிப் பிடித்துவிட முடியாது.
கடந்த 20 ஆண்டுக்கு முன்பு "எனக்கும் முதல்-அமைச்சர் கனவு உண்டு" என்று பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தேன். அதாவது, எளிய மக்களும் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதுதான்.
இன்றைக்கு நாம் முதல் புள்ளியை வைத்திருக்கிறோம். நூற்றுக்கணக்கான புள்ளிகள் வைத்தால்தான் கோலம் போட முடியும். ஒரு புள்ளியை வைத்துவிட்டு பெரிய கோலம் போடமுடியாது.
கட்சியை தொடங்காமலே பலர் ஆட்சிக்கு வர ஆசைப்படுகின்றனர். ஆனால் நாம் அங்குலம், அங்குலமாக வளர்ந்து வருகிறோம்.
தமிழகத்தில் தவிர்க்க முடியாத, அரசியல் விதிகளை திருத்தக்கூடிய கட்சியாக நாம் வலிமை பெற்றுள்ளோம் என தெரிவித்தார்.
- சப்-இன்ஸ்பெக்டர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரே பொய்யான புகார் அளித்து நாடகமாடிய விவகாரம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள சோமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பிரணிதா. இந்தநிலையில் நேற்று இரவு அவர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது கோவில் நிலத்தில் கட்டுமானம் தொடர்பாக சர்ச்சைக்குரிய புகார் மனு தொடர்பாக விசாரணைக்கு சிலர் வந்திருந்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக சோமநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்டச் செயலாளர் இளைய கவுதமன் மற்றும் சிலரும் வந்திருந்தனர். அவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் பிரணிதாவிடம் புகார் மனு தொடர்பாக கேட்ட போது, நான் தற்போது இந்த மனுவை விசாரணை செய்ய முடியாது, உயர் அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள்க கட்சியினர் சப்-இன்ஸ்பெக்டர் ஒருத்தரப்பினருக்கு சாதகமாக செயல்பட்டு தங்களை அலைய வைப்பதாகவும் நினைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட பிரச்சனையில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரணிதா போலீஸ் நிலையத்திலேயே மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் எதிர்தரப்பினர் கையில் கத்தியால் கீறிவிட்டதாக கூறி காயமடைந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரணிதா, காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபனிடம் கேட்டபோது, பெண் சப்-இன்ஸ்பெக்டர் பிரணிதா சிவகங்கைக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு உள்ளார். ஆனால் அவர் அங்கு செல்ல விருப்பமில்லாமல் கடந்த 10 நாட்களாக சோமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் இருந்து பணி விடுப்பு ஆகாமல் இருந்து வருகிறார்.
நேற்று காரைக்குடி அருகே உள்ள சோமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறியது உண்மையில்லை. அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது எனவும், பொய்யாக புகார் அளித்து நாடகமாடிய சப்-இன்ஸ்பெக்டர் பிரணிதா மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரே பொய்யான புகார் அளித்து நாடகமாடிய விவகாரம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் சமூக வலைதளங்களில் அரசின் மீதும் பலர் குற்றச்சாட்டு கூறுவதற்கு காரணமாக அமைந்துள்ளதால் அவர் மீது கடுமையான நடவடிக்கை தேவை என கருத்து நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.






