என் மலர்tooltip icon

    கேரளா

    • ஓட்டலின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொழிலாளி ஜெயராமன் இறங்கினார்.
    • 3 பேரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனாவில் உள்ள ஒரு ஓட்டலின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொழிலாளி ஜெயராமன் இறங்கினார். அவர் உள்ளே சிக்கிக்கொண்டதையடுத்து, உடனடியாக அவரை மீட்க சுந்தரபாண்டியன், மைக்கேல் ஆகியோர் தொட்டியில் இறங்கினர்.

    ஆனால் 3 பேரிடமிருந்தும் எந்த பதிலும் இல்லாததால் சக தொழிலாளர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 3 பேரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இறந்தவர்களில் ஒருவர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், மற்ற 2 பேர் நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

    • ஜூலை 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 200-க்கும் அதிகமானோர் பலியாகினர்.
    • புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக கேரள அரசு மத்திய அரசிடம் ரூ.2,262 கோடி கோரியிருந்தது.

    கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கான மத்திய அரசின் நிதி உதவி குறித்துதகவல் தெரிவித்தார்.

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டின் ஜூலை 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 200-க்கும் அதிகமானோர் பலியாகினர். ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.

    இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு நிவாரணத்திற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த ரூ.260.65 கோடி நிதி உதவி இதுவரை மாநிலத்திற்கு வழங்கப்படவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    நேற்று (செவ்வாய்க்கிழமை) சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் பேசிய அவர், ஆரம்ப மதிப்பீட்டின் அடிப்படையில், புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக கேரள அரசு மத்திய அரசிடம் ரூ.2,262 கோடி கோரியிருந்தது.

    பேரிடருக்கு பிந்தைய தேவைகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில் ரூ.2,221.10 கோடி நிதியுதவியைக் கோரி மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

    இதையடுத்து மத்திய அரசு ரூ.260.65 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால் அந்த தொகையுமே இன்னும் வந்து சேரவில்லை என்று தெரிவித்தார்.

    மேலும் வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி இதில் தலையிட வேண்டும் எனவும் பினராயி விஜயன் வலியுறுத்தினார். 

    • SIR தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) செயல்படுத்துவதற்கான மறைமுக முயற்சியாகும்.
    • தேர்தல் ஆணைய நடவடிக்கைக்குப் பின்னால் தீய நோக்கம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

    கேரள மாநில சட்டசபையில் தேர்தல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (SIR) நடைமுறைக்கு எதிராக ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக தேர்தல் கமிஷன் மீது குற்றம்சாட்டி வருகிறார். இதனால் காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி எம்.எல்.ஏ.-க்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    தீர்மானம் குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறிகையில் "SIR-ஐ செயல்படுத்த தேர்தல் ஆணையம் எடுத்த அவசர நடவடிக்கை மற்றும் அவர்களின் நடவடிக்கைக்குப் பின்னால் தீய நோக்கம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

    SIR நடத்துவதற்கான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்படுத்துவதற்கான மறைமுக முயற்சியாகும்.

    பீகாரில் செயல்படுத்தப்பட்ட SIR வாக்காளர் பட்டியலில் இருந்து மக்களை எந்தவித காரணமும் இல்லாமல் நீக்கப்பட்டது. தேசிய அளவில் அதே முறை பின்பற்றப்படுகிறதா என்ற சந்தேகம் நாடு முழுவதும் உள்ளது.

    இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

    மேலும், பீகார் மாநில SIR தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும்போது, விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மாநிலங்களில் SIRஐ செயல்படுத்த இருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

    • கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்துள்ளனர்.
    • பிரசவம் நடந்தபிறகு ஜெஸ்வீனா திடீரென மயங்கினார்.

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ராசிகுல். இவரது மனைவி ஜெஸ்வீனா (வயது30). இவர்களுக்கு 4 வயதில் ஜோஹிருல் என்ற மகன் இருக்கிறான். ராசிகுல் தனது மனைவி மற்றும் மகனுடன் கேரளாவில் வாழ்ந்து வந்தார். கூலி வேலைகளுக்கு சென்று தனது மனைவி மற்றும் மகனை காப்பாற்றி வந்தார்.

    இந்தநிலையில் ஜெஸ்வீனா மீண்டும் கர்ப்பமானார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராசிகுல் தனது மனைவி மற்றும் மகனுடன் கண்ணூர் மாலோடு பகுதியில் ஒரு வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார். இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த ஜெஸ்வீனாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்துள்ளனர். பிரசவத்தில் அவருக்கு அழகிய குழந்தை பிறந்தது. இந்தநிலையில் பிரசவம் நடந்தபிறகு ஜெஸ்வீனா திடீரென மயங்கினார். சுயநினைவை இழந்த அவரை அவரது குடும்பத்தினர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அங்கு ஜெஸ்வீனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் தலைமறைவாகினர். ஜெஸ்வீனாவுக்கு புதிதாக பிறந்த குழந்தை மற்றும் மகன் ஜோஹிருல் ஆகியோரை தனியாக தவிக்க விட்டுவிட்டு அவர்கள் மாயமாகினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பின்பு ஜெஸ்வீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு புதிதாக பிறந்த குழந்தையை மீட்டு பரியாரத்தில் உள்ள கண்ணூர் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அவரது மகன் ஜோஹிருலை சைல்டு லைன் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவன் அவர்களது பராமரிப்பில் உள்ளான்.

    வீட்டில் பிரசவம் பார்த்ததால் பெண் இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் ஜேஸ்வீனாவின் கணவர் மற்றும் குடும்பத்தினரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நாடு முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • கேரளாவில் சுமார் 30 இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.

    கேரளாவில் நடிகர்கள் பிரித்விராஜ் , துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆபரேஷன் நும்கூர் என்ற பெயரில் நாடு முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கேரளாவில் மட்டும் கொச்சி, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் உள்ளிட்ட சுமார் 30 இடங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.

    பூடான் ராணுவம் பயன்படுத்திய வாகனங்களை ஏலம் எடுத்து இந்தியாவுக்கு கடத்துவதாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடைபெற்றது.

    இந்நிலையில், இந்த சோதனையில் துல்கர் சல்மானின் 2 சொகுசு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

    • சுமார் 30 இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
    • இதுவரை சந்தேகத்திற்கு இடமான எந்த வாகனங்களையும் சுங்கத்துறையினர் கைப்பற்றவில்லை.

    கேரளாவில் நடிகர்கள் பிரித்விராஜ் , துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சொகுசு கார்களை பூட்டன் வழியாக இந்தியாவிற்குள் கடத்தி கொண்டுவரப்பட்டதாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அனால் இதுவரை சந்தேகத்திற்கு இடமான எந்த வாகனங்களையும் சுங்கத்துறையினர் கைப்பற்றவில்லை.

    கேரளாவில் கொச்சி, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் உள்ளிட்ட சுமார் 30 இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதாக பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து எம்புரான் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பிரித்விராஜுக்கும் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பறவை இனங்கள் ஆண்டுதோறும் கணக்கெடுப்பு செய்யப்படுவது வழக்கம்.
    • ஆய்வுக்குழு சிறிய இந்திய புணுகுபூனை, நீர்நாய், இந்திய காட்டுப் பூனை போன்றவற்றை கவனித்து ஆய்வு செய்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் புகழ்பெற்ற பெரியார் புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு 207 பட்டாம் பூச்சிகள், 71 தட்டாம் பூச்சிகள் மற்றும் கேரளத்தின் அதிகாரப்பூர்வ பறவையான கிரேட் ஹார்ன்பில் உள்பட ஏராளமான பறவை இனங்கள் உள்ளன. இங்குள்ள பறவை இனங்கள் ஆண்டுதோறும் கணக்கெடுப்பு செய்யப்படுவது வழக்கம்.

    அதன்படி தற்போது பெரியார் புலிகள் சரணாலயம், கேரள வனத்துறை மற்றும் பெரியார் புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளை ஆகியவை இணைந்து திருவனந்தபுரத்தை தளமாக கொண்ட ஒரு அமைப்பான திருவிதாங்கூர் இயற்கை வரலாற்று சங்கத்தின் ஒத்துழைப்புடன் கடந்த 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை விரிவான கணக்கெடுப்பு பணியை நடத்தின.

    இந்த ஆய்வுக்குழு 40-க்கும் மேற்பட்ட எறும்புகள், 15 ஊர்வன, புலி, சிறுத்தை காட்டு நாய், காட்டெருமை மற்றும் யானை, பழுப்பு நிற கீரி, கோடிட்ட நிர்வாண கீரி, சிறிய இந்திய புணுகுபூனை, நீர்நாய், இந்திய காட்டுப் பூனை போன்றவற்றை கவனித்து ஆய்வு செய்தது. இதனை வெளியிட்டுள்ள பெரியார் கள இயக்குநர் பிரமோத், துணை இயக்குநர் சஜூ, உதவி கள இயக்குநர் லட்சுமி ஆகியோர் இந்த ஆய்வின் போது 12 புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    அதன்படி புதிய பட்டாம் பூச்சிகள் சயாத்ரி புல் மஞ்சள் (வேம்படா பாப்பாத்தி), வெற்று ஆரஞ்சு முனை (உள்ளூர் பெயர்: மஞ்சத்துஞ்சன்), சஹ்யாத்ரி மஞ்சள் பலா மாலுமி (மஞ்ச பொந்த சுட்டான்) , இலங்கை பிளம் ஜூடி (சிலிகான் அட்டக்கா ரன்), வெற்று பட்டாம்பூச்சி, சிறிய ஹெட்ஜ்பெர்யான்னே ஓல், பாம் பாப் மற்றும் இந்திய டார்ட்.

    புதிய தட்டாம்பூச்சிகள், சஹ்யாத்ரி நீரோட்டப் பருந்து மற்றும் கூர்க் நீரோட்டப் பருந்து. பெரியார் புலிகள் காப்பகத்தில் முதன்முறையாகப் பதிவு செய்யப்பட்ட பறவைகள் கருப்புப் பறவை மற்றும் வெள்ளைத் தொண்டை தரைத் த்ரஷ் ஆகும்.

    • விருது வென்ற மோகன்லாலுக்கு பிரதமர் மோடி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது மலையாளத் திரையுலகிற்கு வருகிறது என்றார்.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. இந்த உயரிய விருது நாளை மறுதினம் வழங்கப்பட உள்ளது.

    விருது வென்ற மோகன்லாலுக்கு பிரதமர் மோடி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், விருது வென்றது குறித்து நடிகர் மோகன்லால் கூறியதாவது:

    20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது மலையாளத் திரையுலகிற்கு வருகிறது. எனவே, இந்த விருதை மலையாள திரைத்துறையுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    மலையாளத் திரைத்துறையில் என்னுடன் பணிபுரியும் அனைத்து சிறந்த கலைஞர்களுடனும் இதைப் பகிர்ந்து கொள்கிறேன். என்னை வடிவமைத்தவர், என்னுள் இருக்கும் கலைஞரை கொண்டு வந்தவர், துறையில் எனது அழகிய நடைக்கு அழகான ஒளியைக் காட்டுபவர். நான் அவர்களுடன் எனது அன்பையும் மரியாதையையும் பகிர்ந்து கொள்கிறேன்.

    நான் விருதைப் பெறுகிறேன் என்று கேள்விப்பட்டபோது, அது என் வாழ்க்கையின் மிகப்பெரிய தருணம்.

    மிகுந்த பெருமை, பணிவு, நன்றியுணர்வு, அன்பு மற்றும் மரியாதையுடன், இந்த சிறந்த விருதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இது என் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்று என்று நினைக்கிறேன்.

    இதைப் பெற்றதைக் கேட்டதும், 'என்ன நடக்கிறது? இது உண்மையா?' என்று நினைத்தேன். இந்தியத் திரைப்படத் துறையில் ஒரு நடிகருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது. எனவே, இது ஒரு சிறந்த தருணம்.

    ஆனால் இந்த சகோதரத்துவத்தில் உள்ள எனது சக உறுப்பினர்கள் அனைவருடனும் நான் இந்த பாராட்டைப் பகிர்ந்து கொள்கிறேன்... அனைத்து கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் படப்பிடிப்புத் தளங்களில் என்னுடன் பணிபுரியும், என்னை நேசிக்கும், என் ரசிகர்களுடனும் நான் மரியாதையைப் பகிர்ந்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • சங்கீத்குமார் முகநூல் பக்கத்தில் கணக்கு வைத்திருக்கும கல்லூரி மாணவிகளின் விவரங்களை முதலில் சேகரிப்பார்.
    • கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் வடக்கஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சங்கீத்குமார்(வயது29). கல்லூரி மாணவிகளின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசார் இவரை கைது செய்தனர்.

    சங்கீத்குமார் முகநூல் பக்கத்தில் கணக்கு வைத்திருக்கும கல்லூரி மாணவிகளின் விவரங்களை முதலில் சேகரிப்பார். பின்பு மாணவிகளின் பக்கத்திற்குள் சென்று அவர்கள் படிக்கும் கல்லூரி, செல்போன் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரித்துக் கொள்வார்.

    அதன்பிறகு மாணவிகளின் செல்போனுக்கு, அவர்கள் படிக்கும் கல்லூரியின் சீனியர் மாணவி என்று கூறி குறுந்தகவல் அனுப்புவார். அவர்களும் சீனியர் மாணவி என்ற அடிப்படையில் குறுந்தகவல் அனுப்பிவிட்டால், அவர்களுடன் நட்பாக பேச ஆரம்பித்து விடுவார்.

    பின்னர் மாணவிகளின் செல்போன்களுக்கு பாலியல் ரீதியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்புவார். இதே போன்று ஏராளமான மாணவிகளுக்கு வாலிபர் சங்கீத்குமார் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி தொல்லை கொடுத்தபடி இருந்துள்ளார்.

    ஆகவே அவரைப்பற்றி சில மாணவிகள் போலீசில் புகார் செய்தனர். அதுகுறித்து கோழிக்கோடு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவாக இருந்த சங்கீத்குமாரை தேடினர். அவரின் இருப்பிடத்தை செல்போன் டவர் மூலமாக கண்டறிந்து சென்று கைது செய்தனர்.

    அவரிடமிருந்து மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்ப பயன்படுத்திய செல்போன் மற்றும் சிம் கார்டை போலீசார் பறிமுதல் செய்தனர். சங்கீத்குமார் மீது இதேபோல் மேலும் சில போலீஸ் நிலையங்களிலும் வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • வயநாடு தொகுதிக்கு கடந்தமாதம் (நவம்பர்) 13-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
    • காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிட்டார்.

    கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனால் வயநாடு தொகுதிக்கு கடந்தமாதம் (நவம்பர்) 13-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிட்டார். அவர் 6,22,338 வாக்குகள் பெற்று 4 லட்சத்துக்கு அதிகான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், பிரியங்கா காந்தி வயநாடு மாவட்ட ஆட்சியர், மாவட்ட வன அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை நிர்வாகப் பொறியாளர்களுடன் கொட்டியம்வயலில் முன்மொழியப்பட்ட படிஞ்சரத்தாரா-பூழித்தோடு சாலைப் பகுதியைப் பார்வையிட்டார்.

    பின்னர் நிலம்பூர் வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரை நேரில் சென்று அவர்களின் பிரச்னைகளை பிரியங்கா காந்தி கேட்டறிந்தார்.

    • சம்பவத்தன்று சிறுவன் வீட்டில் தனியாக இருந்தான்.
    • சிறுவன் கூறிய தகவல்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர் கோடு மாவட்டத்தை சேர்ந்த 14 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன், தனது தாயின் செல்போன் மூலமாக சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்திருக்கிறான். அப்போது அந்த சிறுவனுக்கு "டேட்டிங் செயலி" மூலமாக சிலருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

    அதில் சில நபர்கள், அந்த சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவரம் அவரது தாய் மூலமாகத்தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

    சம்பவத்தன்று சிறுவன் வீட்டில் தனியாக இருந்தான். அப்போது வெளியே சென்றிருந்த அவனது தாய் திடீரென வீட்டுக்கு வந்துவிட்டார். அவர் வந்ததும் சம்பந்தமில்லாத ஒரு நபர் வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடினார். அது யார்? என்று கேட்டபோது சிறுவன் சரியாக பதில் கூறவில்லை.

    இதையடுத்து அவன் பயன்படுத்திய தனது செல்போனை சிறுவனின் தாய் சோதனை செய்தார். அப்போது சில வித்தியாசமான செயலிகள் தனது செல்போனில் இருப்பதை அவர் பார்த்தார். இதனால் சந்தேகமடைந்த அவர், போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சைல்டு லைன் அதிகாரிகள் முன்னிலையில் சிறுவன் ஆஜர்படுத்தப்பட்டான். அவர்களிடம் தான், சிறுவன் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய விவரத்தை தெரிவித்திருக்கிறான். சிறுவன் கூறிய தகவல்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    அப்போது சிறுவன் 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதும், சிறுவனை தவறாக பயன்படுத்திய நபர்களை பற்றிய தகவல்களும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 14 பேர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.

    அவர்களில் படன்னக்காடு சைனுதீன்(வயது52), வெள்ளச்சல் சுகேஷ்(30), வடக்கக்கொவ்வல் ரைஸ்(40), கலோலாடு அப்துல் ரகுமான்(55), சந்தேரா பகுதியை சேர்ந்த அப்சல்(23), சித்தராஜ்(48) உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களில் சைனுதீன் என்பவர் பேக்கல் பகுதியில் உள்ள கல்வி அலுவலகத்தில் மாவட்ட துணைக்கல்வி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் உள்பட இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் சிறுவனை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 5 போலீஸ் நிலையங்களில் 14 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் 7 பேரும் விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தலைமறைவாக உள்ள சிராஜ் என்பவர் உள்பட மேலும் 7 பேரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை பிடிக்க 5 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக் கின்றன. அவர்கள் தலைமறைவு நபர்களை பல்வேறு இடங்களுக்கு சென்று தேடி வருகின்றனர்.

    இந்தநிலையில் சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் கல்வி அதிகாரி சைனுதீன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்தார்.

    சிறுவன் பாலியல் வன்கொடுமை வழக்கில் கல்வி அதிகாரி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெரியாரின் இடைவிடாத போராட்டம் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுகிறது.
    • முற்போக்கான சமூகத்திற்கான நமது போராட்டத்திற்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன.

    தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்படுகிறது.

    தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி கேரள முதலமமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து பினராயி விஜயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பெரியார் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறோம். சாதிய ஒடுக்குமுறை மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான அவரது இடைவிடாத போராட்டம் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுகிறது.

    பெரியாரின் பகுத்தறிவு, சமத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகிய கொள்கைகள், நீதி மற்றும் முற்போக்கான சமூகத்திற்கான நமது போராட்டத்திற்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×