என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹர்மன்பிரீத் கவுர்"

    • உலகக் கோப்பையை வென்ற நாள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாகும்.
    • எனக்கு எல்லாமே கிரிக்கெட் தான். அதனை தவிர்த்து வேறு எதுவும் தெரியாது.

    சமீபத்தில் நடந்த 13-வது பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நவிமும்பையில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. உலகக் கோப்பையை முதல்முறையாக உச்சி முகர்ந்த இந்திய அணியை பிரதமர், ஜனாதிபதி நேரில் பாராட்டி உற்சாகப்படுத்தினர். வீராங்கனைகளுக்கு கோடிக்கணக்கில் பரிசு மழை கொட்டியது.

    உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய பெண்கள் அணியின் கேப்டனான 36 வயது ஹர்மன்பிரீத் கவுர் நேற்று முதல்முறையாக தமிழகம் வந்தார். சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது. சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன், தலைவர் மரிய ஜான்சன் ஆகியோர் ஹர்மன்பிரீத் கவுருக்கு நினைவுப்பரிசு வழங்கினர்.

    விழாவில் தொகுப்பாளர் மற்றும் மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து ஹர்மன்பிரீத் கவுர் பேசுகையில் கூறியதாவது:-

    உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. உலகக் கோப்பையை வென்ற நாள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாகும். கிரிக்கெட்டுக்காகவே நான் பிறந்து இருப்பதாக நினைக்கிறேன். எனக்கு எல்லாமே கிரிக்கெட் தான். அதனை தவிர்த்து வேறு எதுவும் தெரியாது. இந்த வெற்றி பெண்கள் கிரிக்கெட்டுக்கு உத்வேகம் அளிக்கும்.

    நிறைய இளம் வீராங்கனைகள் கிரிக்கெட்டை நோக்கி படையெடுக்க ஊக்கமளிக்கும். அது மட்டுமின்றி இந்த வெற்றி பெண்கள் கிரிக்கெட்டில் நிறைய நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்த தொடங்கி இருக்கிறது. ஒரு வீராங்கனையாக நிறைய போட்டிகளில் விளையாட வாய்ப்பு வேண்டும் என்று கேட்டோம். அது தற்போது நடந்து இருக்கிறது. அதிகமான போட்டிகள் நடக்கும் போது வீராங்கனைகள் மட்டுமின்றி அணியும் வலிமை அடையும்.

    சமூக வலைதள நெருக்கடியை எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள். அணி சரியாக ஆடாத போது பலவாறு விமர்சனங்கள் வரும். ஆனால் உலகக் கோப்பையை வென்ற பிறகு கூட சில வீராங்கனைகள் விமர்சனங்களை சந்தித்து இருக்கிறார்கள். ஆனால் விமர்சனம் என்பது விளையாட்டில் மட்டுமல்ல ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அங்கமாகி விட்டது. அதனை நீங்கள் எப்படி எடுத்து கொள்கிறீர்கள் என்பதில் தான் எல்லாம் உள்ளது. என்னை பொறுத்தமட்டில் அது ஒரு சாதாரண பிரச்சினை தான்.

    2022-ம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் நாங்கள் லீக் சுற்றோடு வெளியேறினோம். அது எங்கள் இதயத்தை நொறுக்கியது. அப்போதைய கேப்டன் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி உள்ளிட்டோர் மிகுந்த வேதனை அடைந்தனர். அப்போது நான், மந்தனா உள்ளிட்ட வீராங்கனைகள் இந்த மூத்த வீராங்கனைகளுக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம். அதனால்தான் உலகக் கோப்பையை வென்றதும், அவர்களது கையில் கொடுத்து கவுரவித்தோம்.

    உலக சாம்பியன் ஆன பிறகு நான் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றேன். அப்போது நடிகர் ரஜினிகாந்த் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வாழ்த்து தெரிவித்தார். சிறுவயதில் டெலிவிஷனில் பார்த்து மகிழ்ந்த நபர் போனில் அழைத்து பேசியது உற்சாகமாக இருந்தது. இறுதிப்போட்டியை நேரில் பார்க்க வரவேண்டும் என்று விரும்பினேன். அப்போது சிங்கப்பூரில் படப்பிடிப்பு இருந்ததால் வர இயலவில்லை. ஆனால் எனது ஒட்டுமொத்த குடும்பமும் போட்டியை பார்க்க வந்து இருந்தது. நமது அணி வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டனர் என்று அவர் என்னிடம் கூறினார்.

    சென்னை எனக்கு மிகவும் பிடித்தமான இடமாகும். இங்கு வரும்போதெல்லாம் மக்கள் அன்பை பொழிகிறார்கள். இங்குள்ள உணவும் எனக்கு பிடிக்கும். சொந்த ஊரை விட்டு வெளியில் செல்லும்போதெல்லாம் தோசையை விரும்பி சாப்பிடுவேன்.

    நாங்கள் கோப்பையை வெல்ல தலைமை பயிற்சியாளர் அமோல் முஜூம்தாரும் முக்கிய காரணம். அவர் எங்களுக்கு எல்லா வகையிலும் பக்கபலமாக இருந்தார். 'நீங்கள் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள். மற்ற பிரச்சினைகளை எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன்' என்பார். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை வந்த கவுருக்கு பிரமாண்ட மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • கவுர், பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

    13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 52 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி கோப்பையை வென்றது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றிக்கு பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், நடிகர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.

    அந்த வகையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதனால் சென்னை வந்த அவருக்கு மேளதாளங்கள் முழங்க, பிரமாண்ட மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மாணவிகள் இந்திய வீராங்கனைகளின் ஜெர்சியை அணிந்து வந்து ஹர்மன்பிரீத் கவுரிடம் கோப்பையை பெற்றுக்கொண்டனர். அதாவது மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியினர் கோப்பையை வென்று கொண்டாடியதை போன்று அவர்கள் நடித்து காட்டினர்.

    இதனை தொடர்ந்து அவர் பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கவுரிடம் மாணவர் ஒருவர் தோனி, விராட் கோலி இவர்களில் யார் உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் என கேள்வி எழுப்பினார். அதற்கு தோனி என கவுர் பதிலளித்தார். இதனால் அரங்கமே அதிர்ந்தது.

    அதனை தொடர்ந்து தோனி, ஸ்மிருதி மந்தனா இவர்களில் யார் என கேள்வி எழுப்ப மந்தனா என பதிலளித்தார். இதனால் அதிர்ந்த அரங்கம் அமைதியானது. அதனை தொடர்ந்து மந்தனாவா மிதாலி ராஜா என கேள்வி எழுப்ப மீண்டும் ஸ்மிருதி என பதிலளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • மகளிர் உலக கோப்பையை முதல் முறையாக இந்திய அணி கைப்பற்றியது.
    • ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

    சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் முறையாக ஒருநாள் உலக கோப்பையை கைப்பற்றி வராலாறு படைத்தது.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணிக்கு நாடு முழுவதும் பாரட்டுக்கள் குவிந்தன. இந்திய அணியில் விளையாடிய வீராங்கனைகளுக்கு அந்த அந்த மாநில அரசுகள் பரிசுத்தொகை வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் ஒருநாள் உலக கோப்பையில் இந்திய அணியை வழிநடத்திய ஹர்மன்பிரீத் கவுர் சென்னைக்கு வருகை தந்துள்ளார். அவர் பிரபல கல்வி நிறுவனங்களின் அழைப்பை ஏற்று இன்று சென்னைக்கு வந்துள்ளார்.

    அவருக்கு மேலதாளங்கள் முழுங்க பிரம்மாண்ட வரவேற்று வழங்கப்பட்டது. மேலும் ஜூனியர் கிரிக்கெட் வீராங்கனைகள் அவரை நடனமாடியும் வரவேற்றனர். இது தொடர்பான புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 318 ரன்கள் குவித்தது.

    லண்டன்:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கின்றன.

    இந்நிலையில், இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய மகளிர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர்.

    முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில் பிரதிகா ராவல் 26 ரன்னில் அவுட்டானார். 45 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா வெளியேறினார்.

    ஹர்லின் தியோல் உடன் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் இணைந்தார். நிதானமாக ஆடி 3வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த நிலையில் ஹர்லின் தியோல் 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கேப்டனுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணைந்து அதிரடியை வெளிப்படுத்தினார். ஜெமிமா 45 பந்தில் அரை சதம் கடந்து ஆட்டமிழந்தார்.

    பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் சதமடித்து அசத்தினார். அவர் 82 பந்துகளில் 102 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    இறுதியில், இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 318 ரன்கள் குவித்தது. ரிச்சா கோஷ் 38 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

    • மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது.
    • இதில் டெல்லியை வீழ்த்திய மும்பை 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    மும்பை:

    மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், கோப்பை வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் கூறியதாவது:

    நாங்கள் கணக்கிட்டு ரிஸ்க் எடுத்தோம். அது எங்களுக்கு உதவியது. 150 (149) என்பது ஒரு நல்ல ஸ்கோர் அல்ல, ஆனால் அது போன்ற போட்டிகளில் அழுத்தமான ஆட்டங்களில், அது எப்போதும் 180 ரன்கள்தான். மேலும் எங்கள் பந்து வீச்சாளர்களுக்குத்தான் பெருமை.

    பவர்பிளேயில் எங்களுக்கு திருப்புமுனைகளைத் தர முடியும் என்ற நம்பிக்கை பந்து வீச்சாளர்களுக்கு இருந்தது. இஸ்மாயில் மற்றும் சீவர் பிரண்ட் எங்களுக்கு அந்த வாய்ப்பை உருவாக்கி ஆட்டத்தை அமைத்துக் கொடுத்தார்கள்.

    இன்று அணியில் அனைவரும் பந்து வீசிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவருக்கும் விஷயங்களை மிகவும் தெளிவுபடுத்தினோம், அவர்களின் பாத்திரங்களை தெளிவுபடுத்த ஒருவருக்கொருவர் சந்திப்புகளை நடத்தினோம்.

    வெற்றிக்கான திறவுகோல் விஷயங்களை எளிமையாக வைத்திருப்பதும், சரியான விஷயங்களை மீண்டும் மீண்டும் செய்வதும் ஆகும். நாங்கள் விஷயங்களை எளிமையாக வைத்திருக்க விரும்பினோம், ஒரு அணியாக, நாங்கள் அதைச் செய்தோம்.

    நான் பேட் செய்ய உள்ளே சென்றபோது அது எளிதானது அல்ல. நான் அங்கேயே இருந்து ஸ்ட்ரைக் செய்துகொண்டே இருந்தால் நாட் சீவர் பிரண்ட் அங்கே இருந்தால் நான் ரிஸ்க் எடுக்கத் தேவையில்லை என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அவரை ஆதரிக்க விரும்பினேன் என தெரிவித்தார்.

    • ஜூனியர் உலகக் கோப்பை போட்டியை பார்த்த பிறகு அவர்களை போல நாமும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை பெற்றுள்ளோம்.
    • ஏலத்திற்கு முன்பாக எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டம் (பாகிஸ்தானுக்கு எதிரான மோதல்) நடக்கிறது.

    மும்பை:

    முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் (டபிள்யூ.பி.எல்.) போட்டி அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதற்கான ஏலம் வருகிற 13-ந்தேதி மும்பையில் நடக்கிறது. வீராங்கனைகள் ஏலம் முதல்முறையாக நடப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு முந்தைய நாள் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது.

    இதனால் கவனச்சிதறல் ஏற்படுமா என்பது குறித்து இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரிடம் கேட்கப்பட்ட போது அவர் கூறியதாவது:-

    ஏலத்திற்கு முன்பாக எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டம் (பாகிஸ்தானுக்கு எதிரான மோதல்) நடக்கிறது. எங்களது கவனம் எல்லாம் அந்த போட்டி மீதே இருக்கும். மற்ற எல்லாவற்றையும் விட உலகக் கோப்பை தொடரே மிகவும் முக்கியமானது. ஒரு வீராங்கனையாக எது நமக்கு முக்கியமானது, கவனச்சிதறல் இல்லாமல் எப்படி அதன் மீது தொடர்ந்து கவனம் செலுத்துவது என்பது தெரியும்.

    நாங்கள் எல்லோரும் ஓரளவு முதிர்ச்சியானவர்கள். எது முக்கியம் என்பதை அறிவோம். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியை பார்த்த பிறகு அவர்களை போல (இந்திய ஜூனியர்) நாமும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை பெற்றுள்ளோம்.

    பெண்கள் ஐ.பி.எல். என்று அழைக்கப்படும் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிக்காக நாங்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கிறோம். அது விரைவில் நடக்கப்போகிறது. அடுத்த 2-3 மாதங்கள் பெண்கள் கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். பெண்கள் பிக்பாஷ் (ஆஸ்திரேலியா) மற்றும் தி ஹன்ட்ரட் (இங்கிலாந்து) ஆகிய போட்டிகள் அவர்களது நாட்டில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உதவிகரமாக இருக்கிறது என்பதை பார்த்து இருக்கிறோம்.

    இதே போல் நமது நாட்டிலும் நடக்கும் என்று நம்புகிறேன். இந்த போட்டியின் மூலம் இந்திய இளம் வீராங்கனைகளுக்கு சர்வதேச நட்சத்திரங்களுடன் இணைந்து விளையாடும் அனுபவம் கிடைக்கும். நமது நாட்டில் பெண்கள் கிரிக்கெட்டின் மேம்பாட்டுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்.

    இவ்வாறு ஹர்மன்பிரீத் கவுர் கூறினார்.

    • மகளிர் கிரிக்கெட்டில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சுசி பேட்ஸ் 143 போட்டிகளில் விளையாடி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
    • இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிகபட்சமாக 148 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 8வது தொடர் தென்னாப்பிரிக்காவில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி, வருகின்ற 26 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளும், பி பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. விதிகளின்படி லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.

    இந்திய மகளிர் அணி இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்து மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இதில், இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும். எனவே, இந்த போட்டி இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாக இருக்கும்.

    இந்தநிலையில், இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், இன்று நடைபெறும் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதன் மூலம் டி20 போட்டிகளில் முக்கிய உலக சாதனையை படைக்க இருக்கிறார்.

    கடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கவுர் தனது 149-வது போட்டியில் களமிறங்கினார். தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிகபட்சமாக 148 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இன்றைய அயர்லாந்து அணிக்கு எதிராக கவுர், தனது 150வது டி20 போட்டியில் களமிறங்குகிறார். இதன்மூலம், ஒட்டுமொத்த ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் 150 டி20 போட்டிகளில் விளையாடும் முதல் வீராங்கனை என்ற பெருமையை படைக்க இருக்கிறார்.

    மகளிர் கிரிக்கெட்டில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சுசி பேட்ஸ் 143 போட்டிகளில் விளையாடி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

    2023 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. கடந்த சனிக்கிழமை இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி களமிறங்கி தனது முதல் தோல்வியை சந்தித்தது.

    இதையடுத்து, அயர்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றிபெற்றால் நிச்சயம் அரையிறுதிக்கு தகுதிபெறும். அதற்காக, கவுர் தலைமையிலான இந்திய அணி நிச்சயம் போராடும். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு க்கெபெர்ஹா ,செயின்ட் ஜார்ஜ் பூங்கா மைதானத்தில் நடைபெறுகிறது.

    • இந்திய வீராங்கனைகளான புனியா 7, யாஷிகா 15, ஸ்மிருதி மந்தனா 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
    • கவூர் 80 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக வெளியேறினார்.

    மிர்புர்:

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 20 ஓவர் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை வசப்படுத்திய இந்திய அணி கடைசி ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.

    இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் இடையே மிர்புரில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் வங்காளதேச அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை சாய்த்தது.

    இந்த நிலையில் இந்தியா - வங்காளதேசம் மோதும் 2-வது ஒருநாள் போட்டி மிர்புரில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    தொடக்க வீராங்கனைகளாக புனியா 7, யாஷிகா 15, ஸ்மிருதி மந்தனா 36 என ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கேப்டன் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.


    கேப்டன் கவுர் 48 ரன்கள் எடுத்த நிலையில் 1 ரன் எடுக்க முயற்சித்த போது பேட் ஸ்லிப்பாகி கீழே விழுந்தார். இதனால் வலியால் துடித்த அவர் சிறிது நேரத்தில் களத்தில் இருந்து வெளியேறினார். அவர் 80 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்தார். காயத்தை பொறுத்து அவர் மீண்டும் களத்தில் இருங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டி20 மகளிர் உலக கோப்பை நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி அவர் 2 ரன்கள் எடுக்க கிரிசை நோக்கி பேட்டை ஊன்றிய போது எதிர்பாரதவிதமாக பேட் தரையில் சிக்கி கொண்டது. அதனால் அவர் ரன் அவுட் முறையில் வெளியேறினார். அதேபோல இந்த முறையும் நடந்துள்ளது.

    • இந்திய கேப்டனின் செயல்பாடுகள் ஏற்கத்தக்க ஒன்றாக இல்லை.
    • அவர் நடந்து கொண்ட விதம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது.

    வங்கதேசத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து ஆடிய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

    இந்நிலையில் 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் செயல் கிரிக்கெட்டில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அவர் அவுட் ஆனதும், கோபத்தில் ஸ்டம்புகளை பேட்-ஆல் அடித்து அம்பயர்களை கடுமையாக சாடினார்.

    இதனை சமூக வலைதளங்களில் சரி என்று ஒருதருப்பும், தவறு என்று மறு தரப்பும் மாறி மாறி கருத்துக்களை பரிமாறி வருகிறது.

    இந்நிலையில் உடனுக்குடன் கோபம் அடைவது ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் இந்திய மகளிர் அணியின் கேப்டன் டியானா எடுல்ஜி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

     

    இந்திய கேப்டனின் செயல்பாடுகள் ஏற்கத்தக்க ஒன்றாக இல்லை. அவர் நடந்து கொண்ட விதம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. நீங்கள் தான் கேப்டன். நீங்கள் தான் அணியை வழிநடத்தி சென்று, அடுத்து வர இருக்கும் ஜூனியர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும். அவர்கள் உங்களின் நடத்தையை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களும் இதே போன்ற செயல்பட வாய்ப்புகள் உண்டு.

    உடனுக்குடன் கோபம் அடைவது ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் ஐ.சி.சி. விதிகளின் கீழ் விளையாடி வருகின்றீர்கள். அதிர்ஷ்டவசமாக அது சீரிசின் கடைசி போட்டியாக அமைந்தது. பி.சி.சி.ஐ. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். முதலில் 90 முதல் 100 சதவீதம் வரை போட்டிக்கு பங்களிப்பை கொடுங்கள். போட்டிகளில் வெற்றி பெற்றாலே, அளவுக்கு அதிகமாகவே நட்சத்திர அந்தஸ்து தானாக கிடைத்து விடும்.

    எல்லோரும் வெற்றி பெற வேண்டும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன், ஆனால் அம்பயரிங் போட்டியின் ஒருபங்கு மட்டும் தான். சில சமயங்களில் அது சாதகமாக இருக்கும், சில சமயங்களில் அது இருக்காது. ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருப்பது அவசியம் ஆகும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோபத்தில் ஸ்டம்புகளை பேட்டால் அடித்து உடைத்ததுடன், அம்பயர்களையும் பகிரங்கமாக விமர்சனம் செய்தார்.
    • ஹர்மன்பிரீத் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஐசிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    வங்காளதேச அணியுடனான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நடந்துகொண்ட விதம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அவர் அவுட் ஆனதும், கோபத்தில் ஸ்டம்புகளை பேட்டால் அடித்து உடைத்ததுடன், அம்பயர்களையும் பகிரங்கமாக விமர்சனம் செய்தார். 

    அவரது இந்த செயல்பாடுகள் ஐசிசி விதிகளை மீறும் செயல் என்பதால் அவர் அடுத்த இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டி சம்பளத்தில் 75 சதவீதத்தை அபராதமாக செலுத்தவும் ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

    ஹர்மன்பிரீத் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஐசிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    "இந்திய கேப்டன் குற்றங்களை ஒப்புக்கொண்டதுடன், எமிரேட்ஸ் ஐசிசி சர்வதேச போட்டி நடுவர்கள் குழுவின் அக்தர் அகமது முன்மொழிந்த தடைகளை ஏற்க ஒப்புக்கொண்டார். எனவே அவர் மீது முறையான விசாரணை தேவையில்லை, தண்டனைகள் உடனடியாக செயல்படுத்தப்பட்டன" என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

    • பெண்கள் கிரிக்கெட்டில் இதை நாம் அடிக்கடி பார்க்க முடியாது.
    • கிரிக்கெட்டில் நீங்கள் ஆக்ரோஷமாக செயல்படலாம். ஆனால், அந்த ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

    லாகூர்:

    வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஐசிசியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையால், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது.

    மேலும், அவரது போட்டி கட்டணத்தில் 75% அபராதம் விதிக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த தண்டனையால் ஹர்மன்பிரீத் கவுரால் ஆசிய விளையாட்டு போட்டிகளில் சில போட்டிகளை விளையாட முடியாமல் போகும்.

    இந்நிலையில், ஹர்மன்பிரீத் செயலை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரீடி விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இது இந்தியாவுக்கு மட்டுமல்ல. கடந்த காலங்களிலும் நாம் இவற்றைப் பார்த்திருக்கிறோம். இருப்பினும், பெண்கள் கிரிக்கெட்டில் இதை நாம் அடிக்கடி பார்க்க முடியாது. களத்தில் அவரது செயல்பாடு அதிகமாகவே இருந்தது. ஐசிசியின் கீழ் இது ஒரு பெரிய நிகழ்வு. நீங்கள் எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். அவ்வாறு இருக்கையில் உங்கள் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது. கிரிக்கெட்டில் நீங்கள் ஆக்ரோஷமாக செயல்படலாம். ஆனால், அந்த ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடக்கிறது.
    • இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோற்ற நிலையில் இங்கிலாந்து அணி இந்த தொடரில் களம் இறங்குகிறது.

    மும்பை:

    ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி கடந்த செப்டம்பரில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பிறகு பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோற்ற நிலையில் இங்கிலாந்து அணி இந்த தொடரில் களம் இறங்குகிறது.

    இந்திய அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, ஷபாலி வர்மாவும், பந்து வீச்சில் தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், புதுமுக வீராங்கனைகள் ஸ்ரேயங்கா பட்டீல், சைகா இஷாக்கும் வலு சேர்க்கிறார்கள். இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் நாட் சிவெர் புருன்ட், டேனி வியாட், கேப்டன் ஹீதர் நைட்டும், பந்து வீச்சில் சோபி எக்லெஸ்டன், சாரா கிளெனும் மிரட்டுவார்கள்.

    இங்கிலாந்துக்கு எதிராக 27 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கும் இந்திய அணி இதுவரை 7 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த அணிக்கு எதிராக உள்ளூரில் 9 ஆட்டங்களில் ஆடியதில் 2-ல் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. எனவே இங்கிலாந்துக்கு எதிரான தங்களது முந்தைய மோசமான நிலையை மாற்ற இந்தியா எல்லா வகையிலும் முயற்சிக்கும். அதேநேரத்தில் தங்களது ஆதிக்கத்தை தொடர இங்கிலாந்து தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட் கூறுகையில், '20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு கடைசியில் வங்காளதேசத்தில் நடக்க இருக்கிறது. அதுபோன்ற சீதோஷ்ண நிலை இங்கு நிலவுவதால் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராக இந்த தொடர் முக்கியமானதாகும். அதனை நாங்கள் சரியாக பயன்படுத்தி கொள்வோம்' என்றார்.

    இந்திய பெண்கள் அணியின் புதிய பயிற்சியாளர் அமோல் முஜூம்தார் கூறுகையில், 'நாங்கள் உலகக் கோப்பையை நோக்கி பயணிக்கிறோம். அதனால் ஒவ்வொரு தொடரும் முக்கியமானது. வீராங்கனைகளும் சாதிக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நாம் அச்சமின்றி விளையாட வேண்டியது அவசியமாகும். பீல்டிங் மற்றும் உடல்தகுதிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறோம். இவற்றில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த தொடருக்கு பிறகு நிறைய பயிற்சி முகாம் நடத்த உள்ளோம்' என்றார்.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.

    ×