என் மலர்tooltip icon

    டெல்லி

    • கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்த பிறகு வேட்பாளர்களை டெல்லி மேலிடம் முடிவு செய்யும்.
    • தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய-மந்திரி பியூஸ் கோயல் தமிழ்நாட்டிற்கு அறிமுகமானவர்.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை பா.ஜ.க.- அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சந்திக்கிறது.

    இந்த கூட்டணியில் கூடுதலாக புதிய கட்சிகளை இணைத்து கூட்டணியை வலுப்படுத்துவது பற்றி இரு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்கள். இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது.

    கடந்த 11-ந்தேதி தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

    அதைத் தொடர்ந்து டெல்லி சென்று மத்திய-மந்திரி அமித்ஷா, கட்சி தலைவர் நட்டா ஆகியோரையும் நயினார் நாகேந்திரன் சந்தித்து கூட்டணி நிலவரங்கள் தொடர்பாக விளக்கினார்.

    கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம் நடந்தாலும் இன்னொரு பக்கத்தில் தேர்தலுக்கு பா.ஜ.க.வை முழு அளவில் தயார் செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை பா.ஜ.க. வகுத்துள்ளது. அதன் ஒரு கட்டமாக 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டங்களை தொகுதி வாரியாக நடத்தி வருகிறது. இன்றுடன் இந்த கூட்டம் முடிவடைகிறது.

    ஏற்கனவே வெற்றி வாய்ப்பு உள்ள 70 தொகுதிகள் பட்டியலை பா.ஜ.க. தயாரித்து வைத்துள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கான தகுதியான நபர்கள் பெயர், விவரங்களையும் சேகரித்து உள்ளது. ஒரு தொகுதிக்கு தலா 3 பேர் வீதம் பட்டியல் தயாரித்து மேலிடத்திடம் கொடுத்துள்ளார்கள்.

    கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்த பிறகு வேட்பாளர்களை டெல்லி மேலிடம் முடிவு செய்யும். தமிழக தேர்தல் பொறுப்பாளராக ஏற்கனவே நியமிக்கப்பட்டு இருந்த பைஜெயந்த் பாண்டா தமிழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி கள நிலவரங்களை ஆய்வு செய்து மேலிடத்திற்கு அறிக்கையும் தாக்கல் செய்து இருந்தார்.

    இந்த நிலையில், தற்போது புதிதாக 3 மத்திய மந்திரிகளை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து கட்சி தலைவர் நட்டா அறிவித்துள்ளார். பொறுப்பாளராக மத்திய-மந்திரி பியூஸ் கோயல், இணை பொறுப்பாளர்களாக மத்திய-மந்திரிகள் அர்ஜூன்ராம் மெக்வால், முரளிதர் மோகல் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.

    தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய-மந்திரி பியூஸ் கோயல் தமிழ்நாட்டிற்கு அறிமுகமானவர். கடந்த காலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு திறம்பட பணியாற்றியவர்.

    மத்திய-மந்திரி அமித் ஷாவுக்கு வலது கரம் போல் செயல்படுபவர். கட்சியில் மூத்த நிர்வாக அனுபவம் கொண்டவர்.

    பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடர்புகளை ஒருங்கிணைத்து அடிமட்டத்தில் கட்சியை கட்டமைத்து தேர்தல் பணியை ஒருங்கிணைப்பதில் கைதேர்ந்தவர். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு தெளிவான தரவுகளுடன் பதிலடி கொடுப்பதிலும் கில்லாடி.

    மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் இவரது தேர்தல் வியூகம் பா.ஜ.க.வின் வெற்றிக்கு கைகொடுத்தது. அந்த அடிப்படையில் தமிழகத்திலும் அவரது வியூகம் கூட்டணி வெற்றிக்கு பலன் அளிக்கும் என்று கட்சி மேலிடம் நம்புகிறது.

    ஏற்கனவே கூட்டணியை வலுப்படுத்துவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இவற்றை தீர்ப்பதிலும் பியூஸ்கோயல் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டணி பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும் தேர்தலை சந்திப்பதற்காக பா.ஜ.க. தயாராகி வருகிறது. வருகிற தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டத்துடன் பா.ஜ.க களப்பணியை தீவிரப்படுத்தி வருகிறது.

    புதிய பொறுப்பாளர்கள் நியமனத்தை தொடர்ந்து பா.ஜ.க.வில் தேர்தல் பணிகள் சூடுபிடிக்கும் என்று தமிழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்த பைஜெயந்த் பாண்டா அசாம் மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் இணை பொறுப்பாளர்களாக ஜம்மு-காஷ்மீர் மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுனில் குமார் சர்மா எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி தர்ஷனா பென் ஜர்தோஷ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    • கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு பேச்சுவார்த்தை தொடரும்.
    • பேச்சுவார்த்தையில்தான் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகும்.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்வது தொடர்பாக டெல்லியில் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார், மேலிட பார்வையாளர்கள் கிரிஸ்சோடங்கர், சூரஜ் ஹெக்டே, ஆலுவா ஆகியோர் இன்று கூடி ஆலோசித்தனர்.

    இந்த கூட்டத்தில் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் மற்றும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கேட்க வேண்டிய தொகுதிகள் பற்றி விவாதித்துள்ளார்கள். அப்போது 40 தொகுதிகள் கேட்டு வலியுறுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் டெல்லி மேலிட தலைவர்கள் தி.மு.க. மேலிட தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையை அடிப்படையாக வைத்தே காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இந்த ஆலோசனைக்கு பிறகு டெல்லியில் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் முன் தயாரிப்புகள் பற்றி கூட்டத்தில் விவாதித்தோம். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் தான் நீடிக்கிறது. இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்வதே எங்கள் இலக்கு.

    டெல்லியில் நாளை (செவ்வாய்)யும் தொடர்ந்து ஆலோசிக்க இருக்கிறோம். தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு பேச்சுவார்த்தை தொடரும். பேச்சுவார்த்தையில்தான் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகும் என்றார்.

    பேட்டியின்போது ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.

    • டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது.
    • இதில் ராகுல் காந்தி, சோனியா காந்தி பிரியங்கா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் 'வாக்குத் திருடர்களே, பதவியை விட்டு விலகுங்கள்' எனும் தலைப்பில் பேரணி நேற்று நடைபெற்றது. இந்தப் பேரணியில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

    வாக்கு திருட்டு குறித்த எனது குற்றச்சாட்டுகளுக்காக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நடுங்கும் கைகளுடன் தேர்தல் ஆணையத்துக்காக அவர் விளக்கமளித்தார்.

    அவர் ஏன் நடுங்கினார் என சொல்லட்டுமா?. ஏனென்றால் அவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது மட்டுமே தைரியமாக இருக்கிறார்கள்.

    தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படுகிறது. நீங்கள் இந்தியாவின் தேர்தல் ஆணையம், மோடியின் தேர்தல் ஆணையம் அல்ல என்பதை மறந்துவிடாதீர்கள்.

    இந்த மேடையிலிருந்து உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன், உண்மையை நிலைநிறுத்தி, உண்மைக்குப் பின்னால் நின்று, நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஆர்எஸ்எஸ் அரசாங்கத்தை இந்தியாவிலிருந்து அகற்றுவோம் என தெரிவித்தார்.

    • தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
    • நயினார் நாகேந்திரன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசினார்.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள மும்முரம் காட்டி வருகின்றன.

    கடந்த சில நாட்களுக்கு முன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார்.

    தற்போது தலைநகர் டெல்லியில் முகாமிட்டுள்ள நயினார் நாகேந்திரன் நேற்று முன்தினம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார்.

    அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன் என கூறியிருந்தார்.

    இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

    • 'THE H FILES' என்ற தலைப்பில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
    • புகைப்பட ஆதாரங்களையும் ராகுல் காந்தி வெளியிட்டு குற்றம் சாட்டினார்.

    இந்தியாவில் பல்வேறு மாநிங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பகிரங்கமாக ஆதாரங்களுடன் குற்றம்சாட்டினார்.

    கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடக மாநிலம் ஆலந்து தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை நீக்க முயற்சி செய்யப்பட்டது என்பது குறித்து ராகுல் காந்தி அப்போது செய்தியாளர்களை சந்தித்து ஆதாரங்களை வெளியிட்டார்.

    அப்போது, வாக்கு திருட்டு புகாரில் ஆதாரங்கள் உள்ளது. யதார்த்த நிலையை முற்றிலும் அழிக்கப்போகும் ஹைட்ரஜன் குண்டை வெளிப்படுத்த போகிறோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். 

    அதன்படி வாக்குத் திருட்டு பற்றிய ஹைட்ரஜன் குண்டை கடந்த நவம்பர் 5ம் தேதி அன்று ராகுல் காந்தி ஒவ்வொன்றாக வெளியிட்டார். இது தொடர்பாக 'THE H FILES' என்ற தலைப்பில் ராகுல் காந்தி உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துக் கணிப்புகளும் ஹரியானாவில் காங்கிரஸ் தான் வெற்றி பெறும் என்று கூறின. ஹரியானாவின் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக, அஞ்சல் வாக்குகள் உண்மையான வாக்குகளிலிருந்து வேறுபட்டிருந்தன என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன்பு ஹரியானாவில் இது நடந்ததில்லை.

    நீங்கள் பார்க்கப் போகும் இந்தத் தகவலை நான் முதன்முதலில் பார்த்தபோது, அதை நம்ப முடியாமல் அதிர்ச்சி அடைந்தேன். இந்த தகவல்களை நான் பலமுறை சரிபார்த்தேன்.

    ஹரியானாவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை இரண்டு கோடி. அதில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்ட வாக்குகள் ஆகும். அதாவது எட்டு வாக்காளர்களில் ஒரு வாக்காளர் போலி வாக்காளராக இருந்திருக்கிறார்.

    5 லட்சத்து 21 ஆயிரத்து 619 போலி வாக்காளர்கள் 93 ஆயிரத்து 174 வாக்குகள் போலியான முகவரியை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

    பாஜக நிர்வாகியான உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரகலாத் என்பவர் மதுரா தொகுதியில் வாக்களித்திருக்கிறார், பிறகு ஹரியானாவின் நோத்தல் சட்டமன்ற தொகுதியிலும் வாக்களித்திருக்கிறார்.

    பாஜகவின் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் தலைவர்கள் ஹரியானாவிலும் வாக்களித்திருக்கிறார்கள், உத்தரபிரதேசத்திலும் வாக்களித்திருக்கிறார்கள் எனக் கூறி அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் ராகுல் காந்தி வெளியிட்டு குற்றம் சாட்டினார்.

    மேலும் அவர், அரியானா தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக முதல்வர் வேட்பாளராக இருந்த நயாப் சிங் சைனி பாஜக கண்டிப்பாக ஆட்சியைப் பிடிக்கும் அதற்கான வேலைகளை செய்து விட்டோம் என சிரித்தபடியே கூறுகிறார் அந்த சிரிப்பின் பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது.

    நாட்டின் இளைஞர்கள் குறிப்பாக gen z தலைமுறையினர் நான் சொல்வதை கவனமாக கேளுங்கள் ஏனென்றால் உங்களது எதிர்காலத்தை பற்றி தான் நான் தற்பொழுது பேசுகிறேன். உங்களது வாக்குரிமையை நிலைநாட்டுவதற்காக தான் பேசுகிறேன்.

    பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் வாக்கு செலுத்தி இருக்கிறார். ஷிமா, ஸ்வீட்டி, சரஸ்வதி, விமலா என வெவ்வேறு பெயர்களில் இந்த பெண்மணி ஹரியானாவின் ஒரு தொகுதியில் 10 வெவ்வேறு வாக்குச்சாவடி மையங்களில் இருந்து 22 வாக்குகளை செலுத்தி இருக்கிறார்.

    பெண்மணி ஒருவர் இரண்டு வாக்குப்பதிவு மையங்களில் 223 முறை தனித்தனியாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். இந்தப் பெண்மணி நினைத்தால் ஒவ்வொரு வாக்குப் பதிவு மையங்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாக்களித்திருக்கலாம் அதனால்தான் வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி காட்சிகளை வெளிவிடாமல் தேர்தல் ஆணையம் அளித்திருக்கிறது.

    இதுபோல ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடி மையங்களில் இலட்சக்கணக்கான போலி வாக்குகள் பதிவாகி இருக்கிறது. ஒரே நபர்கள் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு வயதுகளின் வெவ்வேறு அடையாள அட்டைகளை வெவ்வேறு முகவரிகளில் இருந்து வாக்களித்திருக்கிறார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக ராகுல் காந்தி வெளியிட்டார்.

    ஹரியானாவில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 3.5 லட்சம் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது . இவர்கள் அனைவரும் முந்தைய நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தவர்கள். ஆனால் பாஜக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இத்தனை பேரையும் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.

    ஹரியானாவின் ஹோடல் தொகுதியில் ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் வசிப்பதாகக் கூறி மாபெரும் மோசடி செய்துள்ளனர்.

    ராய் தொகுதியில் ஒரே வீட்டில் 108 வாக்காளர்கள், பாஜக நிர்வாகி வீட்டில் 66 வாக்குகள் உள்ளதாக மோசடி செய்துள்ளனர் என்று ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றம் சாட்டினார்.

    ஹரியானாவை தொடர்ந்து தரவுகளை பார்த்த பிறகு மத்தியபிரதேசம், மராட்டியம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் வாக்கு திருட்டு நடைபெற்றதாக ராகுல் காந்தி தெரிவித்தார். 

    மேலும் அவர், "பா.ஜ.க மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து வாக்குகளை திருடுகிறார்கள். வாக்கு திருட்டு தொடர்பாக எங்களிடம் கூடுதல் ஆதாரங்கள் உள்ளன. அவற்றை படிப்படியாக வழங்குவோம். இப்போது கொஞ்சம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

    ஆனால் எனது பிரச்சினை என்னவென்றால் ஜனநாயகம் தாக்கப்படுகிறது. அம்பேத்கரின் அரசியலமைப்பு தாக்கப்படுகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆகியோர் கூட்டு கூட்டாண்மையை உருவாக்கி இதை நேரடியாக செய்கிறார்கள்.

    இதன் காரணமாக நாடு அதிகமான துன்பங்களை அனுபவித்து வருகிறது. பாரத மாதாவுக்கு தீங்கு விளைவிக்கப்படுகிறது. பாரத மாதா சேதப்படுத்தப்படுகிறது.

    வாக்கு திருட்டு என்பது முக்கிய பிரச்சினை. தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துடன் (எஸ்.ஐ.ஆர்) இணைத்து மறைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

    எங்கள் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு மோடி, அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையத்திடம் எந்தப் பதிலும் இல்லை. ஏனெனில் உண்மை இப்போது மக்களுக்கு முன்னால் வந்துவிட்டது. 

    பிரதமரும் அமித் ஷாவும் அவர்கள் விரும்பிய இடத்திற்குச் செல்லலாம். ஆனால் அவர்கள் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்காக இறுதியில் பிடிபடுவார்கள்.

    பீகாரில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முதல்வா் நிதீஷ் குமாருக்கு விருப்பமில்லை.

    பிரதமரும், உள்துறை அமைச்சரும், தேர்தல் ஆணையமும் வாக்குகளைத் திருடுகிறார்கள். பீகார் மக்கள் விழிப்புடன் இருந்து ஒன்றுகூடி வாக்குத் திருட்டை தடுத்து நிறுத்தினால் இந்தியா கூட்டணி 100 சதவீதம் ஆட்சியமைப்பது நிச்சயம்" என்று ராகுல் காந்தி கூறினார்.

    • போண்டி கடற்கரையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.
    • தாக்குதல் நடத்திய 2 பேர் மக்கள் மீது 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

    ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற போண்டி (Bondi) கடற்கரையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.

    துப்பாக்கிச் சூடு இன்று பிற்பகல் 2.17 மணியளவில் நடந்தது. தாக்குதல் நடத்திய 2 பேர் மக்கள் மீது 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியா கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அப்போது,"பயங்கரவாத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸஅ தள பதிவி் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியாவின் போன்டி கடற்கரையில் யூதர்களை குறிவைத்து கொடூரமாக நடந்த பயங்கர தாக்குதலை கண்டிக்கிறேன்.

    தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த துயரமான நேரத்தில் ஆஸ்திரேலியா மக்களுக்கு நாங்கள் துணையாக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • டெல்லியில் உள்ள இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நயினார் சந்திக்கிறார்.
    • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார்.

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார். டெல்லியில் உள்ள இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை குறித்து அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    முன்னதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, யாத்திரையின்போது மக்களிடம் இருந்துபெறப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை நிர்மலா சீதாராமனிடம் நயினார் நாகேந்திரன் வழங்கினார்.

    யாத்திரையின்போது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நிதி அமைச்சகத்தைச் சார்ந்த மனுக்களை வழங்கியதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    • அனுராதா கணவர் கடந்த ஆண்டு இறந்த நிலையில் அவரது மகன்களுக்கும் வேலை இல்லாததால் குடும்பம் பண கஷ்டத்தில் இருந்துள்ளது.
    • காவல்துறை மற்றும் சட்ட அலுவலக அதிகாரிகள்வந்தபோது ​​வீடு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது.

    மாத வாடகை செலுத்த முடியாமல் வீட்டை விட்டு விரட்டப்படும் சூழலில் குடும்பம் ஒன்று தற்கொலை செய்த சோக சம்பவம் தலைநகர் டெல்லியில் அரங்கேறி உள்ளது.

    டெல்லியின் கல்காஜியில் ஒரு தாய் மற்றும் அவரது இஒரண்டு குழந்தைகளின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டன.

    இந்தக் குடும்பம் இங்கு ஒரு வீட்டில் ரூ.40,000 மாத வாடகைக்கு அனுராதா கபூர் (52), அவரது மகன்கள் ஆஷிஷ் கபூர் (32) மற்றும் சைதன்யா கபூர் (27) வசித்து வந்தனர்.

    அனுராதா கணவர் கடந்த ஆண்டு இறந்த நிலையில் அவரது மகன்களுக்கும் வேலை இல்லாததால் குடும்பம் பண கஷ்டத்தில் இருந்துள்ளது. கட்டுமானத் துறையில் பணிபுரிந்த கணவர், குடும்பத்திற்கு மிகப்பெரிய கடன் சுமையை ஏற்படுத்தியிருந்தார்.

    இந்த வீட்டின் மூன்றாவது மாடியை டிசம்பர் 2023 இல் குடும்பத்தினர் வாடகைக்கு எடுத்தனர். ஆனால் அவர்கள் வாடகை செலுத்தவில்லை.

    கடந்த ஆண்டு கணவரும் இறந்த பிறகு, வீட்டை காலி செய்ய வீட்டு உரிமையாளர் நீதிமன்றத்தை அணுகினார் .

    கடுமையான மன அழுத்தத்தில் இருந்த மகன்கள் கடந்த மாதம் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். வாடகை தொடர்பாக வீட்டு உரிமையாளருடன் அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்து வந்தன.

    வீட்டு உரிமையாளரின் புகாரைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி வீட்டை காலி செய்ய காவல்துறை மற்றும் சட்ட அலுவலக அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை வந்தபோது, வீடு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது.

    வீட்டு உரிமையாளர் அழைத்தபோது திறக்காததால், போலி சாவியைப் பயன்படுத்தி கதவைத் திறந்தபோது, தாயும் அவரது இரண்டு மகன்களும் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர்.

    உடல்களுக்கு அருகில் ஒரு தற்கொலைக் குறிப்பு கண்டெடுக்கப்பட்டதாகவும், அதில் பண நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர் .

    இறந்தவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், உடல்கள் பிரேத பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.  

    • பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • பிஎஸ்-3 பெட்ரோல் வாகனங்கள் மற்றம் பிஎஸ்-4 டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது

    தலைநகர் டெல்லியின் சராசரி காற்றின் தரக் குறியீடு '450' என்ற மோசமான அளவை தாண்டியுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் காற்று மாசு மோசமான நிலையில் எட்டியுள்ளதால் நான்காம் கட்ட 'கிராப்' கட்டுப்பாடுகள் அமலாகின்றன.

    அதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 50 சதவீதம் பேரை வீட்டில் இருந்தே பணியாற்ற டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஏற்கெனவே, கட்டுமானப் பணிகளுக்கும், பிஎஸ்-3 பெட்ரோல் வாகனங்கள் மற்றம் பிஎஸ்-4 டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாவுக்கு வேறு சில வலுவான காரணங்கள் இருந்திருக்கலாம் என பேச்சுகள் எழுந்தன.
    • தன்கர் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டார் என்றும் செய்தி பரவியது.

    இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே, கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி அன்று திடீரென ராஜினாமா செய்தது தேசிய அரசியலில் பெரும் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.

    அவரது ராஜினாமா கடிதத்தில் "உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக" தான் விலகுவதாகக் குறிப்பிட்டிருந்தார். எனினும், அவரது திடீர் முடிவு பல ஊகங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் வழிவகுத்தது.

    ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாவுக்கு அவரது உடல்நலக்குறைவைத் தாண்டி, வேறு சில வலுவான காரணங்கள் இருந்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் பேசப்பட்டது.

    அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்க தீர்மான நோட்டீஸை எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் தன்கரிடம் சமர்ப்பித்தன.

    இதனை ஜெகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தது ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்தது. ஊழல் ஒழிப்பு குறித்து அரசு வேறு வழியில் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், தன்கரின் இந்த நடவடிக்கை, அரசுடன் அவருக்கு பிளவு ஏற்பட்டதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

    இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஆளும் கட்சி தன்கர் மீது அவநம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரத் தயாரானதாகக் கூறப்பட்டது. இதிலிருந்து தப்பிக்கவே அவர் ராஜினாமா முடிவை எடுத்ததாகவும் பரவலாக பேசப்பட்டது.

    ராஜினாமா செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த மாநிலங்களவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முக்கிய மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்கவில்லை. இது தன்கரை அவமதிக்கும் விதமாக இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    பீகார் முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமாரை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வந்து அவருக்குத் துணை ஜனாதிபதி பதவியை அளிக்கும் திட்டம் ஆளும் கட்சிக்கு இருந்தது என்றும், அதற்காகவே தன்கர் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டார் என்றும் செய்தி பரவியது.

    இதற்கிடையே, ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    துணை ஜனாதிபதிக்கான தேர்தல்:

    தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், முன்னாள் மக்களவை உறுப்பினர் மற்றும் மகாராஷ்டிரா ஆளுநர் ஆவார்.

    இவருக்கு எதிராக, இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான பி.சுதர்சன் ரெட்டி போட்டியிட்டார். இதில், சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    ஜூலை 21 அன்று ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த பிறகு, செப்டம்பர் 12 அன்று சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவியேற்றார்.

    சர்ச்சைக்கிடமாக ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கரும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு, சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

    சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்றதன் மூலம், இந்தியாவின் இரண்டாவது உயர் அரசியலமைப்புப் பதவியான மாநிலங்களவைத் தலைவர் பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

    • டெல்லி புறப்பட்டுச் சென்ற நயினார் நாகேந்திரன் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.
    • யாத்திரையின்போது மக்களிடம் இருந்துபெறப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய கடிதம் வழங்கியுள்ளார்.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார்.

    இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்ற நயினார் நாகேந்திரன் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.

    யாத்திரையின்போது மக்களிடம் இருந்துபெறப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை நிர்மலா சீதாராமனிடம் நயினார் நாகேந்திரன் வழங்கினார்.

    யாத்திரையின்போது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நிதி அமைச்சகத்தைச் சார்ந்த மனுக்களை வழங்கியதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    • சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்தனர்.
    • அங்கு ஆராய்ச்சி பணிகள் நிறைவடைந்ததும் ஜூலை 15-ம் தேதி பூமி திரும்பினர்.

    புதுடெல்லி:

    வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர் வேதா. அவர் பாடத்தை எளிமையாக புரியும்படி நடத்துவதால் மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தின் மீது தனி மரியாதை.

    அவர் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் அறிவியல் துறை சார்ந்த வேலைகளுக்கு தான் முன்னுரிமை கொடுப்போம் என அவரிடம் தெரிவித்திருந்தனர்.

    அன்று முதல் வகுப்பு அறிவியல்.வேதா சார் வழக்கம்போல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, சார் உள்ளே வரலாமா என பாண்டியன் கேட்டான்.

    ஏண்டா லேட் என கேட்ட வேதா சார், சரி உள்ளே வந்து பாடத்தைக் கவனி என்றார்.

    அன்றைய பாடத்தில் விண்வெளி பயணம் குறித்த செய்தி வெளியானதைப் பற்றி மாணவர்கள் அவரிடம் கேட்டனர்.

    அப்போது விண்வெளி துறையில் இந்தியா செய்துள்ள சாதனைகள் பற்றி விரிவாகக் கூறிய வேதா சார், விண்வெளி பயணம் பற்றியும் எடுத்துரைத்தார். சமீபத்தில் லக்னோவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம் மேற்கொண்டதையும் விளக்கினார்.

    வேதா சார் சொன்னதன் சாராம்சம் இதுதான்:


    இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (39). இவர் கடந்த ஜூன் 25-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார்.

    அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்சியம் ஸ்பேஸ் எனும் தனியார் நிறுவனத்தின் 'ஆக்சியம்-4' திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயணத்தில் சுக்லாவுடன் பெக்கி விட்சன், திபோர் கபு மற்றும் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி ஆகியோரும் இணைந்து கொண்டனர்.

    அவர்கள் 4 பேரும் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள்வரை தங்கி, பயிர்கள் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டனர். ஆராய்ச்சி பணிகள் நிறைவடைந்ததும் கடந்த ஜூலை 15-ம் தேதி பூமி திரும்பினர்.

    சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களும் பயணித்த விண்கலம் வடஅமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி உள்ள கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

    இதன்மூலம் 41 ஆண்டுகளில் தனியார் விண்வெளிப் பயணத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று திரும்பிய முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார்.

    விண்வெளி சென்று திரும்பிய சுபான்ஷு சுக்லா அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையம் வந்த சுக்லாவை அவரது குடும்பத்தினர் மற்றும் மத்திய மந்திரிகள், டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா உள்பட பலர் வரவேற்றனர்.

    சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது சுக்லா, விண்வெளியில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து விவரித்தார்.


    மேலும், சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியதை வரவேற்று மத்திய மந்திரிசபை தீர்மானம் நிறைவேற்றி பாராட்டு தெரிவித்தது.

    உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைப் பூர்வீகமாகக் கொண்ட சுபான்ஷு சுக்லா, இந்திய விமானப்படை அதிகாரி மற்றும் இஸ்ரோவின் 'ககன்யான்' திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆசிரியரின் விளக்கத்தைக் கேட்ட மாணவர்கள், சார் அப்போ நாமும் வருங்காலத்தில் விண்வெளிக்கு சுற்றுப்பயணம் செய்யலாமா என ஆவலுடன் கேட்டனர்.

    கண்டிப்பாக, விண்வெளி பயணம் விரைவில் சாத்தியமாகி விடும் என பதிலளித்தார் வேதா சார். அத்துடன் அவரது வகுப்பும் முடிந்தது.

    மாணவர்கள் அனைவரும், டேய் இன்னும் ஒரு 10 வருஷத்துலே நாம் விண்வெளியில மீட் பண்ணுவோம்டா என அடுத்த வகுப்புக்கு தயாராகினர்.

    ×