என் மலர்tooltip icon

    டெல்லி

    • டெல்லி கார் குண்டு சம்பவத்தில் தாக்குதல் நடத்திய நபர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.
    • சக்திவாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    2025-ஆம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம், இந்தியாவின் அண்மைக்கால வரலாற்றில் ஒரு மிக முக்கியமான மற்றும் அதிர்ச்சியளிக்கும் பயங்கரவாதத் தாக்குதலாகும்.

    கடந்த நவம்பர் 10ம் தேதி அன்று மாலை சரியாக 6.52 மணிக்கு பழைய டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் வாசல் எண் 1க்கு அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரைப் பயன்படுத்தி நடந்த தற்கொலைத் தாக்குதல் நாட்டையே அதிரச் செய்தது. 

    இந்த கோரச் சம்பவத்தில் தாக்குதல் நடத்திய நபர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    சம்பந்தப்பட்ட கார், அரியானா மாநிலப் பதிவு எண் கொண்ட வெள்ளை நிற ஹூண்டாய் i20 ஆகும். இதில் அம்மோனியம் நைட்ரேட் உள்ளிட்ட சக்திவாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    குண்டுவெடிப்பின் தாக்கத்தால் அருகில் இருந்த 6 கார்கள், 2 ஈ-ரிக்ஷாக்கள் மற்றும் ஒரு ஆட்டோ ரிக்ஷா என சுமார் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பற்றி எரிந்து நாசமாயின.

    இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை மற்றும் டெல்லி போலீசார் நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்தன.

    அதன்படி, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் உமர் உன்-நபி (Dr. Umar-un-Nabi). இவர் அரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா (Al-Falah) பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று பிற்பகல் 3:19 மணிக்கே செங்கோட்டைப் பகுதிக்கு வந்த உமர், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக வாகன நிறுத்துமிடத்தில் காத்திருந்துள்ளார். திங்கட்கிழமை என்பதால் செங்கோட்டை மூடப்பட்டிருந்தது அவருக்குத் தெரியவில்லை என சந்தேகிக்கப்படுகிறது. 

    இது ஒரு "White-collar terror" (கல்வி கற்றவர்களால் நடத்தப்படும் பயங்கரவாதம்) என பாதுகாப்பு அமைப்புகள் வகைப்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் உமருடன் தொடர்புடைய மேலும் சில மருத்துவர்கள் மற்றும் படித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஃபரிதாபாத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கும்பலுக்கும் இந்த குண்டுவெடிப்புக்கும் நேரடி தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    மத்திய அரசு இச்சம்பவத்தை அதிகாரப்பூர்வமாக ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என அறிவித்தது. உமர் உன்-நபிக்கு உதவியதாக இன்று கைது செய்யப்பட்ட நபருடன் சேர்த்து இதுவரை 9 பேர் கைதாகியுள்ளனர்.

    இச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.
    • அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறலாம் என்றது நிதி ஆயோக் அமைப்பு.

    புதுடெல்லி:

    கேஷியரை என்னை வந்து பாக்கச் சொல்லு என்றபடியே வங்கிக்குள் நுழைந்தார் மேனேஜர் முகுந்த். அவரது அழைப்பை ஏற்று மேனேஜர் ரூமுக்குச் சென்றார் கேஷியர் கண்ணன்.

    என்ன சார் விஷயம் கூப்டீங்களே? என கேட்டார் கேஷியர்.

    பொண்ணு கல்யாண விஷயம் எப்படி போயிட்டிருக்கு. நீங்க லோனுக்கு அப்ளை பண்ணியிருக்கீங்க இல்லையா? என்றார் மேனேஜர்.

    ஆமா சார், அதைதான் நம்பியிருக்கேன். எல்லா ஏற்பாடும் பண்ணிட்டிருக்கேன், சார் என பதில் சொன்னார் கண்ணன்.

    விலைவாசி எல்லாம் பயங்கரமா ஏறிக்கிட்டு இருக்கே, எப்படி மேனேஜ் பண்ணுறீங்க என உண்மையான அக்கறையுடன் கேட்டார் மேனேஜர்.

    நாம என்ன சார் செய்ய முடியும், ஊரோடு ஒத்துவாழ் என்கிற பழமொழி நமக்குதான் நல்லா பொருந்துது. எனவே வீட்டில கலந்து பேசி தேவையில்லாத செலவை எல்லாம் குறைச்சிட்டோம் என நிலைமையை விளக்கினார்.

    பரவாயில்லையே, இந்திய அரசு மாதிரி பக்காவா பிளான்போட்டு பண்ணுறீங்க போல. இந்திய அரசு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுத்துட்டு வர திட்டங்களால நமது பொருளாதாரம் வலிமையா இருக்குது. அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பொருளாதார சிக்கல்ல மாட்டி சின்னாபின்னமாகி வருகின்றன. ஆனாலும் இந்தியா பொருளாதாரத்தில் உறுதித்தன்மையா செயல்பட்டு வருகிறது. இதனால்தான் வளர்ந்து வரும் பொருளாதாரத்துல நாம் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்துக்கு முன்னேறி இருக்கோம். அடுத்த சில ஆண்டுகளில் மூன்றாவது இடத்துக்கும் வரலாம் என பெருமையுடன் கூறினார் முகுந்த்.


    அப்படியா, அதைப் பத்தி சொல்லுங்களேன் சார், கேட்போம் என்ற கண்ணனுக்கு மேனேஜர் முகுந்த் கூறியதன் சாராம்சம் பின்வருமாறு:

    உலக பொருளாதாரத்தில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி 4-வது பெரிய நாடாக இந்தியா வளர்ந்துள்ளது என நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் கடந்த மே மாதம் அறிவித்தார். இது இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படக் கூடிய விஷயமாக அமைந்துள்ளது.

    அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா என்ற வரிசையில் ஜப்பானின் பொருளாதாரத்தை இந்தியா முந்திவிட்டதால் நான்காம் இடத்திற்கு வந்துவிட்டதாக உலகப் பொருளாதார நிதி நிறுவனத்தின் புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டி இந்த அறிவிப்பை நிதி ஆயோக் அதிகாரி வெளியிட்டார்.

    இதே 6 சதவீத வளர்ச்சி தொடரும் நிலையில் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுக்குள் ஜெர்மனியை முந்திச் சென்று மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா வளர்ந்துவிடும் எனவும் அவர் அறிவித்துள்ளது இந்தியர்களை தலைநிமிரச் செய்வதாகும்.

    மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் இத்தகைய சாதனை நடந்து வருவது பெருமைக்குரிய விஷயமாகும்.

    கடந்த 2014-ம் ஆண்டில் 10-வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த, 2022ல் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது. தற்போது 4-வது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.


    முதலிடத்தில் உள்ள அமெரிக்கா நம்மை விட 8 மடங்கும், சீனா 5 மடங்கும் பெரிய பொருளாதாரமாக இருப்பதால் அந்த நாடுகளை முந்திச் செல்ல இந்தியா இன்னும் வேகமான வளர்ச்சியை பதிவுசெய்ய வேண்டி உள்ளது.

    நாட்டின் பொருளாதார வளர்ச்சி தனிநபர் வருவாயிலும் எதிரொலித்தால் மட்டுமே அது உண்மையான வளர்ச்சி ஆகும்.

    தனிநபர் வருவாயைப் பொறுத்தமட்டில் 181 நாடுகள் பட்டியலில் இந்தியா 122-வது இடத்தில் உள்ளது. கல்வி, வேலைவாய்ப்புக்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் செல்கின்றனர்.

    இதைத் தவிர்த்து அந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு தேடி இந்தியாவுக்கு வருமளவுக்கு நமது கல்வித்தரத்தையும், தனிநபர் வருமானத்தையும் உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே மற்ற நாடுகளை முந்திச் சென்று இந்தியா வெற்றிபெற முடியும் என பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர் என தெரிவித்தார்.

    பரவாயில்லையே சார், ஒரு காலத்துல எல்லா நாடும் நம்மை கேலி, கிண்டல் செய்து எதுக்குமே லாயக்கு இல்லாத இந்தியானு நம்மள மட்டம் தட்டிட்டு இருந்ததைப் பார்த்து ரொம்பவே வருத்தப்பட்டு இருக்கேன். ஆனா, இப்போ நெலமையே வேற. பொருளாதார வளர்ச்சில நம்மளோட வளர்ச்சி பெருமையா இருக்கு சார். நானும் வீட்டுக்குக் கிளம்பறேன். போகும்போது காய்கறி வாங்கிட்டு போகனும் சார் என்றபடியே மார்க்கெட்டுக்கு புறப்பட்டான் கண்ணன்.

    • புதிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம்.
    • மசோதா மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கிறது.

    பாராளுமன்ற மக்களவையில் இன்று 100 நாள் வேலை திட்டத்துக்கு மாற்றாக புதிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.

    எதிர்க்கட்சி எம்.பி.க்களின் குற்றச்சாட்டிற்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் விளக்கம் அளித்தார். எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எதிர்ப்புக்கு இடையே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

    இதுகுறித்து பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு திமுக எம்பி கனிமொழி பேசியதாவது:-

    வி.பி.ஜி. ராம் ஜி மசோதா இந்தியாவின் கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது. இது மக்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பறித்துள்ளது. இந்த மசோதா தேவை அடிப்படையிலான மசோதாவாகக் கொண்டுவரப்பட்டது, ஆனால் இன்று, இதை ஒதுக்கீடு அடிப்படையிலான மசோதாவாக மாற்றிவிட்டார்கள்.

    வேலைவாய்ப்பு வழங்குவதா இல்லையா என்பதையும், எந்த மாவட்டம் அல்லது மாநிலத்திற்கு ஒதுக்கீடு கிடைக்கும் அல்லது கிடைக்காது என்பதையும் அரசே முடிவு செய்யும். இந்த மசோதா மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மசோதா நகலை அமைச்சருக்கு எதிரே கிழித்து வீசி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
    • மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் எஞ்சிய 40 சதவீதம் மாநில அரசின் பங்கு என மாறுகிறது.

    பாராளுமன்ற மக்களவையில் இன்று 100 நாள் வேலை திட்டத்துக்கு மாற்றாக புதிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.

    எதிர்க்கட்சி எம்.பி.க்களின் குற்றச்சாட்டிற்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் விளக்கம் அளித்தார். எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எதிர்ப்புக்கு இடையே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

    மக்களவையில் ஜி ராம் ஜி மசோதா நகலை அமைச்சருக்கு எதிரே கிழித்து வீசி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் பெயர் விக்சித் பாரத்-ரோஜ்கர் வாழ்வாதார திட்ட உத்தரவாதம் என மாற்றம் செய்யப்படுகிறது.

    விபி-ஜி ராம் ஜி திட்டத்தின்படி 100 நாள் வேலை உறுதித்திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்பட உள்ளது.புதிய ஜி ராம் ஜி திட்டத்தின் செலவில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் எஞ்சிய 40 சதவீதம் மாநில அரசின் பங்கு என மாறுகிறது.

    மகாதாமா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட செலவில் 10 சதவீதம் மாநில அரசின் பங்காக இருந்த நிலையில் தற்போது 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    முன்னதாக பத்திரங்கள் சந்தை குறியீடு மசோதாவை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தினார்.

    டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு மிக மோசமாக இருக்கிறது. இதுகுறித்து மக்களவையில் இன்று பிற்பகலில் விவாதிக்கப்பட இருந்தது. தற்போது அதற்கான விவாதம் நடத்தப்படமாட்டாது என்று தெரிய வந்துள்ளது.

    • விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சுருக்கமாக VB G RAM G என அழைக்கப்படுகிறது.
    • நேற்று மக்களவையில் இந்த மசோதா குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது. இன்றும் விவாதம் நடைபெற உள்ளது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றம் செய்து புதிய விதிகளை அறிமுகம் செய்யும் புதிய மசோதா மீதான விவாதம் நேற்றிரவு மக்களவையில் நடைபெற்றது.

    மசோதாவின்படி இந்தத் திட்டத்திற்கு விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சுருக்கமாக VB G RAM G என அழைக்கப்படுகிறது.

    மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று மசோதாவைத் தாக்கல் செய்தார்.

    திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேற்று மக்களவையில் இந்த மசோதா குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது. இன்றும் விவாதம் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இன்று காலை பாராளுமன்றத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் மகாத்மா காந்தியின் பெயரை திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே பேரணியாக நடந்து சென்று காங்கிரசின் கார்கே, கேசி வேணுகோபால், பா. சிதம்பரம், திமுகவின் திருச்சி சிவா, கனிமொழி, மற்ற பிற கட்சிகளின் எம்.பிக்கள் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். 

    • பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் எழுத்துபூர்வமாக ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார்.
    • 2019-ஆம் ஆண்டு முதல் இ சிகரெட்டுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கியது. நாளை டிசம்பர் 19 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

    இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி கீர்த்தி ஆசாத் மக்களவையில் அவைக்குள்ளேயே இ-சிகரெட் பிடித்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான வீடியோவையும் பாஜக வெளியிட்டுள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு பாஜக எம்.பி அனுராக் தாக்கூர், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் அவைக்குள்ளேயே இ-சிகரெட் பயன்படுத்துவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்திருந்தார். அப்போது அவர் அந்த உறுப்பினரின் பெயரை குறிப்பிடவில்லை.

    இந்தியாவில் 2019-ஆம் ஆண்டு முதல் இ சிகரெட்டுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அனுராக் தாக்கூர் தனது புகாரில் சுட்டிக்காட்டினார்.

    குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் ஓம் பிர்லா உறுதி அளித்தார்.

    இந்நிலையில் பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், கீர்த்தி ஆசாத் தனது உள்ளங்கைக்குள் இ-சிகரெட்டை மறைத்து வைத்துப் புகைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    அவையின் சிசிடிவி பதிவுகள் மற்றும் வீடியோக்களை ஆய்வு செய்த பிறகு, விதிமுறைகளின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    • காற்று மாசு அங்கு ஆபத்தான அளவை எட்டியுள்ள நிலையில் GRAP stage-4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
    • டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    காற்று மாசு அங்கு ஆபத்தான அளவை எட்டியுள்ள நிலையில் GRAP stage-4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    இதன் ஒரு பகுதியாக இன்று முதல் BS-6 தரமற்ற இயந்திர வாகனங்கள் வியாழக்கிழமை முதல் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கூடுதலாக, மாசு கட்டுப்பாட்டு (PUC) சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் பம்புகளில் எரிபொருள் நிரப்ப கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த தடை அமலுக்கு வந்தது.

    இந்த முடிவு டெல்லியின் எல்லை நகரங்களான குருகிராம், காஜியாபாத், ஃபரிதாபாத் மற்றும் நொய்டாவிலிருந்து தினமும் பயணிக்கும் சுமார் 12 லட்சம் வாகனங்களை நேரடியாகப் பாதிக்கும்.

    இந்த விதிகளை கண்டிப்பாக செயல்படுத்த 126 சோதனைச் சாவடிகளில் 580 காவல்துறையினரையும் 37 அமலாக்கக் குழுக்களையும் அரசாங்கம் நியமித்துள்ளது.

    பெட்ரோல் பம்புகளில் PUC விதியைக் கண்காணிக்க போக்குவரத்து, நகராட்சி மற்றும் உணவுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    குளிர்காலத்தில் டெல்லியின் மாசுபாட்டிற்கு வாகனங்கள் 25 சதவீதம் வரை பங்களிப்பதாக ஆய்வுகள் காட்டியுள்ளதை அடுத்து, அரசாங்கம் இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளது.

    இதற்கிடையே டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 50 சதவீத அலுவலகத்தில் ஊழியர்களுடன் பணிபுரிய நிறுவனங்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    டெல்லி காற்று மாசு பிரச்சினை குறித்து இன்று மக்களவையில் விவாதம் நடைபெறும் நிலையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் பதிலளிப்பார். 

    • அப்படி எனில், இது ஏன் முஸ்லிம்களுக்கு பொருந்தாது?
    • இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925, பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 ஆகியவை திருத்தப்படும்.

    காலாவதியான 71 சட்டங்களை ரத்து செய்வது மற்றும் திருத்தம் செய்யக் கோரும் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று நிறைவேற்றப்பட்டது.

    'சட்ட ரத்து மற்றும் திருத்த மசோதா, 2025' மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தி, குரல் வாக்கெடுப்பு மூலம் அவையால் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, மக்களவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருந்தது.

    மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்த மேக்வால், "சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு நாங்கள் முன்னுரிமை அளித்து வருகிறோம்.

    1925-ம் ஆண்டு இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் அப்போதைய சென்னை, பம்பாய், கல்கத்தா மாகாணங்களில்  இந்து, பவுத்தர், சீக்கியர், சமணர் அல்லது பார்சி இனத்தவர் உயில் எழுதினால், அது சட்டப்படி உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

    ஆனால், இந்த விதி முஸ்லிம்களுக்குப் பொருந்தாது. சாதி, மதம் மற்றும் பாலின பாகுபாடுகள் அரசியலமைப்பில் தடுக்கப்பட்டுள்ளன. அப்படி எனில், இது ஏன் முஸ்லிம்களுக்கு பொருந்தாது? இந்த சீர்திருத்தங்கள் காலனித்துவ மனநிலையில் இருந்து விடுதலையை நோக்கிய ஒரு படி" என்று தெரிவித்தார்.

    மேலும் இந்த மசோதா சட்டமானால், இந்திய டிராம்வேஸ் சட்டம், 1886, லெவி சர்க்கரை விலை சமநிலை நிதி சட்டம், 1976, மற்றும் பாரத் பெட்ரோல் கார்ப்பரேஷன் லிமிடெட் சட்டம், 1888 உள்ளிட்ட 71 சட்டங்கள் ரத்து செய்யப்படும்.

    மேலும், பொது ஆணைகள் சட்டம் 1897, சிவில் நடைமுறைச் சட்டம் 1908, பதிவு செய்யப்பட்ட அஞ்சல் அமைப்பில் சொற்களஞ்சியத்தைப் புதுப்பித்தல் மற்றும் இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925, பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 ஆகியவை திருத்தப்படும்.   

    • ரெயில் பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டுகளை 2 மாதத்துக்கு முன் முன்பதிவு செய்கின்றனர்.
    • முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் நிலை ரெயில் புறப்படும் 8 மணி நேரத்துக்கு முன் வெளியிடப்படுகிறது.

    புதுடெல்லி:

    ரெயில் பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை 2 மாதத்துக்கு முன்னரே முன்பதிவு செய்யும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. அப்படி முன்பதிவு செய்த டிக்கெட்டுகளின் நிலை ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன் வெளியிடப்பட்டு வருகிறது.

    கடைசி நேரத்தில் காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகள் ரத்தாவதால் பயணத்தை மாற்றி அமைக்க பயணிகள் சிரமப்பட்டனர்.

    இதனால், முன்பதிவு அட்டவணையை 8 மணி நேரத்துக்கு முன் வெளியிட வேண்டும் என பயணிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. அந்தக் கோரிக்கையை ஏற்று அனைத்து மண்டல ரெயில்வேயும் கடந்த ஜூலையில் இருந்து 8 மணி நேரத்துக்கு முன் அட்டவணையை வெளியிட்டு வருகின்றன.

    இந்நிலையில், முன்பதிவு அட்டவணை வெளியிடும் நேரத்தை 10 மணி நேரமாக நீட்டித்துள்ளனர்.

    அதன்படி இனி காலை 5:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை புறப்படும் ரெயில்களுக்கு முந்தைய நாள் இரவு 8:00 மணிக்கு அட்டவணை தயாரிக்கப்பட்டு பயணிகளுக்கு அறிவிப்பு செல்லும்.

    இதர ரெயில்களுக்கு, அவை புறப்படும் நேரத்துக்கு 10 மணி நேரம் முன் முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும். இதை உடனே அமல்படுத்த ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    • பனிமூட்டத்தால் நிலவும் மோசமான வானிலையால் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.
    • பயணிகள் விமான பயண நிலையை சரிபார்க்கும்படி ஏர் இந்தியா நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர்.

    பனி மூட்டத்தால் நிலவும் மோசமான வானிலையால் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    பனிமூட்டம் காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டால் பயணிகளுக்கு அவர்களின் டிக்கெட் கட்டணம் திருப்பி செலுத்தப்படும் என ஏர் இந்தியா விமான நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.

    இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அடுத்த சில நாட்களில், மோசமான தெரிவுநிலையை ஏற்படுத்தும் அடர்த்தியான மூடுபனி நிலைமைகள், டெல்லியில் உள்ள எங்கள் முதன்மை மையத்திலும், வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் உள்ள சில விமான நிலையங்களிலும் விமான நடவடிக்கைகளை பாதிக்கலாம். எங்கள் நெட்வொர்க்கில் உள்ள வேறு சில நகரங்களிலும் இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

    எனவே, பயணிகள் விமானப் பயண நிலையை சரிபார்க்கும்படி ஏர் இந்தியா நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

    பாதிக்கப்பட்ட பயணிகள் தங்கள் விமானப் பயணங்களை மாற்றலாம் அல்லது அபராதம் இல்லாமல் பணத்தைத் திரும்பப் பெறலாம் என பதிவிட்டுள்ளது.

    2025-ல் நடந்த சில முக்கிய பேருந்து விபத்துகள் மற்றும் புள்ளி விவரங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

    2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் பல துரதிர்ஷ்டவசமான பேருந்து விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதிக வேகம், மூடுபனி காரணமாக குறைவான பார்வைத்திறன், தீ விபத்து மற்றும் கவனக்குறைவு ஆகியவை இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

    2025-ல் நடந்த சில முக்கிய பேருந்து விபத்துகள் மற்றும் புள்ளி விவரங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

    ராஜஸ்தான் பேருந்து விபத்து: 2025 அக்டோபர் 14 அன்று ஜெய்சால்மரிலிருந்து ஜோத்பூர் சென்ற ஏசி பேருந்து தீப்பிடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர். 57 பயணிகள் பயணித்த அந்த பேருந்து அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றதே விபத்தின் வீரியத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

    குர்நூல் தீ விபத்து (ஆந்திரப் பிரதேசம்): 2025 அக்டோபர் 24 அன்று அதிகாலையில், ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி தீப்பிடித்தது. இதில் சுமார் 19 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

    அல்லூரி சீதாராமராஜு மாவட்டம் (ஆந்திரா): 2025 டிசம்பர் 12 அன்று ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். கடும் மூடுபனியால் வளைவு தெரியாததே இதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.

    தெலுங்கானா (செவெல்லா): 2025 நவம்பர் மாதத்தில் லாரி ஒன்றும் பேருந்தும் மோதியதில் 19 பேர் பலியாகினர்.

    யமுனா எக்ஸ்பிரஸ்வே (உத்தரப் பிரதேசம்): 2025 டிசம்பர் 16 அன்று அதிகாலை நிலவிய கடும் மூடுபனி காரணமாக, மதுரா அருகே 7 பேருந்துகள் உட்பட பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 25 பேர் காயமடைந்தனர்.

    2025 புள்ளிவிவரங்களின் ஒரு பார்வை

    மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்ட முதற்கட்ட தரவுகளின்படி:

    தேசிய நெடுஞ்சாலைகள்: 2025ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்த விபத்துகளில் சுமார் 26,770 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மொத்த விபத்துகள்: 2025-ல் இந்தியாவில் சுமார் 1.6 லட்சம் முதல் 1.7 லட்சம் வரை சாலை விபத்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 4.3% அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்டவர்கள்: உயிரிழந்தவர்களில் சுமார் 55% பேர் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    விபத்துகளுக்கான முக்கிய காரணங்கள்

    அதிக வேகம்: 70% உயிரிழப்புகளுக்கு அதிவேகமே காரணமாக உள்ளது.

    கடும் மூடுபனி: ஆண்டின் இறுதியில் வட மற்றும் தென் மாநிலங்களில் நிலவிய மூடுபனி பெரும் விபத்துகளை ஏற்படுத்தியது.

    போதிய பராமரிப்பின்மை: தனியார் பேருந்துகளில் தீயணைப்பு கருவிகள் இல்லாமை மற்றும் அவசரக் கால கதவுகள் சரியாக செயல்படாதது உயிரிழப்புகளை அதிகரித்தது.

    தூக்கமின்மை: அதிகாலை நேரங்களில் ஓட்டுநர்கள் தூக்கக் கலக்கத்தில் வாகனத்தை இயக்குவது தொடர்கதையாக உள்ளது.

    மத்திய அரசு தற்போது பேருந்துகளுக்கான பாதுகாப்பு தரங்களை மேம்படுத்த 'Bharat NCAP' போன்ற புதிய விதிகளை அமல்படுத்தி வருகிறது.

    • உச்சி மாநாட்டில் மோடியும், ரஷிய அதிபர் புதினும் காரில் ஒன்றாக பயணம் செய்தனர்.
    • பிரதமர் மோடி ஜோர்டான் நாட்டுக்கு சென்றார்.

    உலக தலைவர்களுடனான பிரதமர் மோடியின் கார் பயணம் பிரபலமாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் மோடியும், ரஷிய அதிபர் புதினும் காரில் ஒன்றாக பயணம் செய்தனர்.

    அதேபோல் சமீபத்தில் புதின் இந்தியா வந்தபோது அவரை பிரதமர் மோடி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.

    அப்போது இரு தலைவர்களும் காரில் ஒன்றாக புறப்பட்டு சென்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலானது.

    இதற்கிடையே நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஜோர்டான் நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது மோடியை ஜோர்டான் பட்டத்து இளவரசர் அல் ஹுசேன் பின் அப்துல்லா காரில் அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்றார்.

    அந்த காரை பட்டத்து இளவரசர் ஓட்டி சென்றார். அதேபோல் ஜோர்டான் பயணத்தை முடித்துக்கொண்டு எத்தி யோப்பியாவுக்கு மோடி சென்றபோது அவரை விமான நிலையத்தில் எத்தியோப்பியா பிரதமர் அபிய் அகமது அலி வரவேற்றார்.

    பின்னர் மோடியை அவர் தங்கும் ஓட்டலுக்கு காரில் எத்தியோப்பியா பிரதமர் அழைத்து சென்றார். இந்த இரு தலைவர்களுடன் மோடி காரில் பயணிக்கும் புகைப்படங்கள் வெளியாகின.

    தற்போது உலக தலைவர்களுடன் மோடி ஒன்றாக காரில் பயணிப்பது பிரபலமாகி வருகிறது.

    ×