என் மலர்tooltip icon

    இந்தியா

    • ரபி பயிர் வரத்து அதிகரித்துள்ளதால், பல மாநிலங்களில் வெங்காயம் விலை சரிந்துள்ளது.
    • வெங்காயத்தின் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை திரும்பப்பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    வெங்காயத்தின் ஏற்றுமதி வரியை 40 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு குறைத்தது. அரசின் இந்த முடிவால் வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைத்ததுடன் வெங்காய ஏற்றுமதியும் அதிகரித்தது.

    இந்த நிலையில் ரபி பயிர் வரத்து அதிகரித்துள்ளதால், பல மாநிலங்களில் வெங்காயம் விலை சரிந்துள்ளது. எனவே விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் வெங்காயத்தின் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை ஏப்ரல் 1-ந் தேதி முதல் திரும்பப்பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வருவாய்த்துறை வெளியிட்டுள்ளது

    • வரன் தேடும் இணையதளங்களில் பதிவு செய்து உள்ளவர்களின் சுயவிவரங்களின் உண்மைத்தன்மையை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
    • செல்போனில் ‘வீடியோ' அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகளை தவிர்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    சென்னை:

    திருமண பந்தம் கை கூடுவதற்கு உறுதுணையாக இருக்கும் வரன் தேடும் இணையதளங்களிலும் 'ஆன்லைன்' மோசடி கும்பல் ஊடுருவி உள்ளது. இந்த இணையதளத்தில் புகைப்படம், வேலை, சம்பளம் போன்ற சுய விவரங்களை தவறாக பதிவிட்டு போலி கணக்கை உருவாக்கி பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    தமிழ்நாட்டில் இந்த மோசடி சம்பவம் தொடர்பாக 379 புகார்கள் பதிவாகி உள்ளன.

    இந்த மோசடி எவ்வாறு அரங்கேறுகிறது? இந்த மோசடியில் சிக்காமல் தப்பிப்பது எப்படி? என்பது குறித்து 'சைபர் கிரைம்' போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பு வருமாறு:-

    திருமண தகவல் இணையதளத்தில் போலி கணக்குகளுடன் ஊடுருவி உள்ள மோசடி கும்பலை சேர்ந்தவர்களின் குறியில் சிக்குபவர்களிடம் (மணப்பெண் அல்லது மணமகன்), நான் உங்களை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்று இனிக்க, இனிக்க பேசி வசியப்படுத்துவார்கள். திருமணத்துக்குபின்னர் நாம் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும். ஆன்லைனில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி விடுவார்கள்.

    அதன்பின்னர் அவர்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் போலி முதலீட்டு இணையதள முகவரியை பரிந்துரை செய்வார்கள். மோசடி கும்பலின் மாய வலையில் சிக்கி பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு முதலில் லாபத்தொகையை தருவது போன்று நம்பிக்கையை உருவாக்குவார்கள். பெரிய தொகையை முதலீடு செய்யும் போது 'அபேஸ்' செய்து அனைத்து தொடர்புகளையும் தூண்டித்துவிட்டு திருமண தகவல் இணையதளத்தில் இருந்து வெளியேறி விடுவார்கள்.

    எனவே வரன் தேடும் இணையதளங்களில் பதிவு செய்து உள்ளவர்களின் சுயவிவரங்களின் உண்மைத்தன்மையை முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

    செல்போனில் 'வீடியோ' அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகளை தவிர்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 'ஆன்லைன்' மூலம் அறிமுகமானவரின் ஆலோசனையை ஏற்று ஒரு போதும் பணத்தை முதலீடு செய்ய கூடாது.

    இந்த மோசடி கும்பல் தங்கள் மோசடி திட்டத்துக்கு www.oxgatens.com, www.oxgatens.net, www.cityindexmain.com, www.cityindexlimited.com போன்ற போலி முதலீட்டு இணையதளங்களை பயன்படுத்துகின்றனர். இது போன்ற மோசடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள், சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகளை கண்டறிந்தவர்கள் 'சைபர் கிரைம்' போலீசாரின் 1930 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை உடனடியாக தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம் என்றும் 'சைபர் கிரைம்' போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுத்து குர்பானி கொடுத்தால் அது பக்ரீத் காலம்.
    • ஒரே ஒரு ஆட்டை அறுத்து கொத்துக்கறி போட்டால் அது தேர்தல் காலம்.

    கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.

    அந்த நிகழ்ச்சியில் பேசிய செந்தில் பாலாஜி, "ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுத்து குர்பானி கொடுத்தால் அது பக்ரீத் காலம். அதுவே ஒரே ஒரு ஆட்டை அறுத்து கொத்துக்கறி போட்டால் அது தேர்தல் காலம்

    எத்தனை ஆடுகள் வந்தாலும் பள்ளபட்டிக்கு உள்ளேயும் வரமுடியாது, வந்துவிட்டால் வெளியேயும் செல்ல முடியாது என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறீர்கள். உங்கள் ஆதரவை எங்களுக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • இன்றும் பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன.
    • பௌத்தமும் தமிழ்நாட்டில் பரவலாக பின்பற்றப்பட்டது.

    மும்பை ஆளுநர் மாளிகையில் இங்கிலாந்து வாழ் இந்தியரான சச்சின் நந்தா எழுதிய 'ஹெட்கேவர் - வாழ்க்கை வரலாறு' என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது, "பேரரசர் அசோகர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்திய துணை கண்டத்தை ஒன்றிணைத்தார். கலாசார ரீதியாகவும் பாரம்பரியமாகவும், இந்தியா எப்போதும் ஒரே நாடாகத்தான் இருந்தது. அந்நிய படையெடுப்பாளர்களால் இந்தியாவை பிரித்து அதை ஆள முடிந்தது. சில மாநிலங்களில் இன்றும் பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன.

    ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கே.பி. ஹெட்கேவர் முன்வைத்த ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு பற்றிய சிந்தனைகள் முன் எப்போதையும் விட தற்போது மிகவும் பொருத்தமானவையாகும். ஆர்.எஸ்.எஸ். தனது நீண்ட பயணத்தில் நூற்றுக்கணக்கான தேசபக்தர்களை உருவாக்கியது. அவர்கள் தன்னலமின்றி வாழ்ந்து தேசத்திற்காக இறந்தனர்.

    சமண மதம் தோன்றியபோது, மூன்றில் இரண்டு பங்கு தமிழர்கள் அதைப் பின்பற்றினர். இன்று 40,000 தமிழ் சமணர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். சமண மதம் பரவியபோது, அது தானாகவே பரவியது. பௌத்தமும் தமிழ்நாட்டில் பரவலாக பின்பற்றப்பட்டது.

    தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்டது. எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை. வரலாற்று ரீதியாக, தமிழ்நாடு சேர, சோழ, பாண்டிய, கொங்குநாடு எனப் பிரிக்கப்பட்டது - அவை தனித்தனி ராஜ்ஜியங்களாக இருந்தன. நாம் அதை மேலும் பிரித்துக் கொண்டே போனால், அது ஒரு டவுன் பேருந்தில் ஏறுவது போல, அங்கு நீங்கள் சென்றிடவும், திரும்பி வருவதற்கும் உங்கள் பாஸ்போர்ட்டை காண்பிக்க வேண்டும். அதுதான் அடிப்படை யதார்த்தம்," என்று தெரிவித்தார்.

    • கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் சென்னை வந்திருந்தார்.
    • அண்ணாமலை எங்கள் மாநிலத்தில் வேலை பார்த்தவர். எங்களின் சக்தி குறித்து அவருக்கு தெரியும்.

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் சென்னை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் கறுப்புக்கொடி போராட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த டி.கே.சிவகுமார், "அண்ணாமலை எங்கள் மாநிலத்தில் வேலை பார்த்தவர். எங்களின் சக்தி குறித்து அவருக்கு தெரியும்" என்று கிண்டலாக தெரிவித்தார்.

    இந்த வீடியோவை அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "சித்தராமையாவை முதல்வர் நார்காலியில் இருந்து அகற்றி கர்நாடக முதல்வராக பாடுபடும் டி.கே.சிவகுமாரின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் முடிந்து கர்நாடகா புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.கே.சிவகுமார், "அண்ணாமலைக்கு ஒன்றுமே தெரியவில்லை.. தன்னுடைய கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறாரே தவிர, தமிழ்நாட்டுக்கு விசுவாசமாக இல்லை" என்று தெரிவித்தார்.

    • தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து உழைக்க, மத்திய அரசு கட்டுப்பட்டுள்ளது.
    • தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா?

    சென்னையில் நடைபெற்ற விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், 

    தமிழகத்தில் இருந்து வரிப்பணம் அதிகம் தருகிறோம். ஒரு ரூபாய் தந்தால், 7 பைசா தான் திரும்புகிறது என்கின்றனர். மற்ற சலுகைகள் எல்லாம் எங்கிருந்து வருகிறது. அனைத்துக்கும் முக்கியத்துவம் தந்து வருகிறோம். ஜனரஞ்சகமாக இவர்கள் விவாதிப்பதே தப்பு என்று கூறி உள்ளார்.

    இதற்கு பதிலடியாக தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை அம்மையார் நிர்மலா சீதாராமன் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா?

    தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்!

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தேசிய கல்வி கொள்கை திட்டத்தில் எந்த இடத்திலும் இந்தி கற்க வேண்டும் என்று இல்லை.
    • தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அரசியல் ஆதாயம தேடுவதற்காக தி.மு.க. மக்களின் உணர்வுகளை தூண்டி விடும் செயல்களில் இறங்கி உள்ளது. பி.எம். ஸ்ரீ திட்டத்தை ஒப்புக்கொண்டு பின்பு கையெழுத்து போட மாட்டோம் என்கிறார்கள். தேசிய கல்வி கொள்கை திட்டத்தில் எந்த இடத்திலும் இந்தி கற்க வேண்டும் என்று இல்லை.

    தாய் வழிக்கல்வியை தான் அது ஊக்குவிக்கிறது. அமித்ஷா கூட, மருத்துவ, என்ஜினீயரிங் படிப்புகளை தமிழ்மொழியில் கற்பிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் இந்த விவகாரத்தை தி.மு.க. வணிக நோக்கத்தில் அணுகுகிறது. உண்மையில் அவர்களுக்கு தமிழ் மொழி மீது அக்கறை இல்லை.

    இவர்கள் மொழி பிரச்சனையை கிளப்புவதற்கு மற்றொரு காரணம், இந்தியா கூட்டணி உடைந்து விட்டது. உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், பீகார் என பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையை ஏற்கவில்லை. கேரளாவும், காங்கிரசை தோற்கடிக்க கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறது.

    பி.எம். ஸ்ரீ திட்டத்தை அனைத்து மாநிலங்களும் அதனை ஏற்று கொண்டு விட்டார்கள். தமிழகம் மட்டும் தான் ஏற்றுக்கொள்ளவில்லை. தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்து விட்டது. டெல்லி நிர்பயா, மேற்கு வங்காளத்தில் ஒரு மருத்துவ மாணவி கொலை ஆகியவை இந்தியா முழுவதும் பேசப்பட்டது. ஆனால் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சம்பவம், இங்கேயே அடக்கப்பட்டு, வெளியில் செல்லாமல் தடுக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்? உங்கள் கட்சியை சேர்ந்தவர் தானா என்பதனை சொல்ல வேண்டும். போதை பொருளில் முக்கிய நபர் சிக்கி உள்ளார். அதேபோல் டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்து உள்ளது. நிச்சயம் நான் சொல்கிறேன், தமிழகத்தில் மத்திய ஏஜென்சிகள் நடத்தும் வழக்குகளில் நிச்சயம் நடவடிக்கை இருக்கும்.

    இப்போது தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை கிளப்பி கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே பிரதமர் மோடி யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்று தெரிவித்துவிட்டார். ஆனால் இவர்கள் வேண்டும் என்றே, பிரச்சனையை கிளப்புகிறார்கள். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தென்மாநிலங்கள் பாதிக்கும், வடமாநிலங்கள் பலன் அடைய தானே செய்யும் என்று கேட்கிறீர்கள்.

    மக்கள்தொகை மட்டும் அடிப்படை இல்லை என்பதனை தெளிவாக சொல்கிறேன். அப்படி செய்தால் லடாக் போன்று சிறு சிறு பகுதிகளுக்கு எம்..பி.க்கள். இருக்காது. தொகுதி மறுசீரமைப்புக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன்பின் ஒரு தன்னதிகாரம் பெற்ற குழு அமைக்கப்பட்டு, அவர்கள் ஒவ்வொரு மாநிலமாக சென்று அதன்பின்தான் தொகுதி வரையறையை மேற்கொள்வார்கள். 2026-ம் ஆண்டுக்கு இந்த பணி முடிய சாத்தியமில்லை. எனவே 2026-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு காலக்கெடு முடிந்தாலும், தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படாது.

    ஏற்கனவே ராகுல்காந்தி, மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொகுதி பிரிக்கப்படும் என்று பிரசாரம் செய்தார். இப்போது இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருப்பது வெடகக்கேடானது. இங்கு வந்திருக்கும் கேரள முதல்-மந்திரியிடம் முல்லைப்பெரியாறு நீர் குறித்து கேட்கலாம் அல்லவா? கர்நாடக துணை முதல்-மந்திரியிடம் காவிரி நீர் கேட்கலாம் அல்லவா? அதேபோல் எல்லோரிடமும் நீங்கள் கல்விக்கொள்கையை ஏற்று கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்கலாம்.

    இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் அரசியல் ஆதாயத்திற்காக மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறது. வங்கிகளில் தங்க கடனை திருப்பி விட்டு, பின்பு மீண்டும் தான் வைக்க வேண்டும் என்ற திட்டத்தால் பலரும் பாதிக்கப்படுவதாக கேட்கிறீர்கள்?. இது வங்கிகளின் நலனுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

    அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருக்கிறோம். எனவே விரைவில் தீர்வு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாம்பரத்தில் இருந்து வரும் 28-ந்தேதி மாலை புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
    • திருச்சியில் இருந்து வரும் 29, 30, 31 ஆகிய தேதிகளில் காலை புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில், அதேநாள் மதியம் தாம்பரம் வந்தடையும்.

    சென்னை:

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தாம்பரம்-கன்னியாகுமரி, திருச்சி-தாம்பரம், இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * தாம்பரத்தில் இருந்து வரும் 28-ந்தேதி மாலை 6 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06037), மறுநாள் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து வரும் 31-ந்தேதி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06038), மறுநாள் காலை 8.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    * திருச்சியில் இருந்து வரும் 29, 30, 31 ஆகிய தேதிகளில் காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06048), அதேநாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வரும் 29,30,31 ஆகிய தேதிகளில் மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் சிறப்பு ரெயில் (06047), அதேநாள் இரவு 10.40 மணிக்கு திருச்சி சென்றடையும்.

    இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதலமைச்சர் இல்லத்தில் நடைபெறும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு முஸ்லீம் அமைப்பிற்கு அழைப்பு.
    • நீங்கள் கூறிய உறுதிமொழிகளுக்கு எதிரானது.

    பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் விடுத்த இஃப்தார் அழைப்பை அம்மாநிலத்தின் பிரதான முஸ்லீம் அமைப்பு நிராகரித்துள்ளது. நிதிஷ் குமார் தலைமையிலான அரசு வக்பு வாரிய மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து முஸ்லீம் அமைப்பு இஃப்தார் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தது.

    இமாரத் ஷரியா என்ற முஸ்லீம் அமைப்பு பீகார், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா முழுக்க ஆதரவாளர்களை கொண்டிருக்கிறது. இன்று (ஞாயிற்றுக் கிழமை) முதலமைச்சர் இல்லத்தில் நடைபெறும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இமாரத் ஷரியா அமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த அழைப்புக்கு பதிலளித்த இமாரத் ஷரியா, "மார்ச் 23ம் தேதி நடைபெறும் அரசு இஃப்தாரில் கலந்து கொள்ள வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்களின் பொருளாதார மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய நிலைக்கு தள்ளும் வக்பு வாரிய மசோதாவுக்கு நீங்கள் அளித்த ஆதரவை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது."

    "சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் ஒரு மதச்சார்பற்ற (தர்ம-நிரபெக்ஷ்) ஆட்சியை உறுதியளித்து நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள். ஆனால் பாஜகவுடனான உங்கள் கூட்டணியும், அரசியலமைப்பிற்கு விரோதமான மற்றும் நியாயமற்ற ஒரு சட்டத்திற்கு உங்கள் ஆதரவும், நீங்கள் கூறிய உறுதிமொழிகளுக்கு எதிரானது," என தெரிவித்துள்ளது.

    • போலீசார் பறிமுதல் செய்த பணத்தின் மதிப்பு ரூ.15 கோடி என கூறப்படுகிறது.
    • இந்த குழுவினர் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் விரிவான விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது.

    புதுடெல்லி:

    டெல்லி ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகளில் ஒருவரான யஷ்வந்த் வர்மாவின் டெல்லி வீட்டில் கடந்த 14-ந் தேதி இரவு திடீரென தீப்பிடித்தது.

    இது குறித்து தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு படையினர் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர். அப்போது அந்த வீட்டின் ஒரு அறையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.

    போலீசார் பறிமுதல் செய்த அந்த பணத்தின் மதிப்பு ரூ.15 கோடி என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அதேநேரம் ஐகோர்ட்டு நீதிபதி ஒருவரின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் நீதித்துறையினர் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் இந்த பிரச்சனை நாடாளுமன்றத்திலும் பலமாக எதிரொலித்தது. குறிப்பாக மாநிலங்களவையில் இந்த பிரச்சனையை காங்கிரஸ் கட்சி எழுப்பி கவலை தெரிவித்து இருந்தது.

    இதற்கிடையே ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது.

    பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கொலீஜியம் உத்தரவிட்டது.

    அதன்படி டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி.கே.உபத்யாய் விசாரணை நடத்தினார். குறிப்பாக பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் விசாரணை நடந்தது.

    பின்னர் இது தொடர்பாக விரிவான அறிக்கையை நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அவர் சமர்ப்பித்தார்.

    அதன் அடிப்படையில், பணம் சிக்கிய விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை அமைத்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நேற்று உத்தரவிட்டார்.

    அதன்படி பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாசல பிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சந்தவாலியா, கர்நாடகா ஐகோர்ட்டு நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த குழுவினர் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் விரிவான விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது.

    மேலும் தற்போதைய நிலையில் ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு சட்டப்பணிகள் எதையும் ஒதுக்கக்கூடாது என டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதியையும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சமர்ப்பித்த விசாரணை அறிக்கையும், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பதில் உள்ளிட்ட ஆவணங்களையும் சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் பதிவேற்றி இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • விருத்தாச்சலத்தில் ரெயில் பயணிகளிடம் நகை பறித்த சம்பவத்தில் சக்திவேல் போலீசாரிடம் சிக்கினார்.
    • 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    திண்டுக்கல்:

    மதுரை பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் சங்கரி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருந்து மதுரைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றார். அப்போது திண்டுக்கல்லை அடுத்த அம்பாத்துரை பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்றது. இதனால் ரெயில் அந்த பகுதியில் மெதுவாக சென்றது. அதை பயன்படுத்திக் கொண்ட ஒரு வாலிபர் சங்கரி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட சங்கரி சங்கிலியை பிடித்து கொண்டு சத்தம் போட்டார்.

    இருந்த போதும் பாதி அறுந்த சங்கிலியுடன் அந்த வாலிபர் ரெயிலில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டார். அதேபோல் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த செல்வி (வயது 55) 3 ஆண்டுகளுக்கு முன்பு வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுரைக்கு சென்றார். அந்த ரெயில் அம்பாதுரை அருகே மெதுவாக சென்றபோது அவர் அணிந்து இருந்த 6 பவுன் சங்கிலியை ஒரு வாலிபர் பறித்து கொண்டு தப்பி சென்றார். இந்த சம்பவங்கள் தொடர்பாக இருவரும் கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இந்த 2 சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த சக்திவேல் பயணிகளிடம் நகை பறித்தது தெரியவந்தது. எனவே அவரை போலீசார் தேடிவந்தனர்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருத்தாச்சலத்தில் ரெயில் பயணிகளிடம் நகை பறித்த சம்பவத்தில் சக்திவேல் போலீசாரிடம் சிக்கினார். பின்னர் அவர் அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தலைமறைவானார். இதையடுத்து திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் அருணோதயம் ஆகியோர் சக்திவேலை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர் மீண்டும் அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.இதன் மூலம் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • 6 வழிச்சாலை மூலம் மும்பை - நாக்பூர் பயண நேரம் 8 மணி நேரமாக குறைந்து உள்ளது.
    • சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மாநில சாலை மேம்பாட்டு கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி.) அறிவித்து உள்ளது.

    மும்பை:

    மும்பை - நாக்பூர் இடையே ரூ.55 ஆயிரம் கோடி செலவில் 701 கி.மீ. தூரத்துக்கு சம்ருத்தி விரைவு சாலை போடும் திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. தற்போது நாக்பூர் முதல் இகத்பூரி வரை பணிகள் முடிந்து சாலை திறக்கப்பட்டுள்ளது. இகத்பூரில் இருந்து அம்னே (தானே) வரை சாலைத்திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த 6 வழிச்சாலை மூலம் மும்பை - நாக்பூர் பயண நேரம் 8 மணி நேரமாக குறைந்து உள்ளது. சாலைப்பணி முழுமையாக முடிந்த பிறகு பயண நேரம் மேலும் குறையும்.

    இந்தநிலையில் வருகிற 1-ந் தேதி முதல் சம்ருத்தி சாலையில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மாநில சாலை மேம்பாட்டு கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி.) அறிவித்து உள்ளது.

    தற்போது இலகுரக வாகனங்களுக்கு கி.மீ.க்கு ரூ.1.73, வணிக இலகுரக வாகனங்களுக்கு ரூ.2.79, கனரக வாகனங்களுக்கு ரூ.5.85, 3 ஆக்சில் கனரக வாகனங்களுக்கு ரூ.6.83, கட்டுமான கனரக எந்திரங்களுக்கு ரூ.9.18, 7-க்கு மேற்பட்ட ஆக்சில் வாகனங்களுக்கு ரூ.11.07 கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் முறையே ரூ.2.06, ரூ.3.32, ரூ.6.97, ரூ.7.60, ரூ.10.93, ரூ.13.30 ஆக உயர்த்தப்பட்டது.

    அதாவது நாக்பூர் - இகத்பூரி இடையே ரூ.1,080 ஆக இருந்த இலகுரக வாகனங்களுக்கான சுங்க கட்டணம் ரூ.1,290 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல மினிபஸ் போன்ற இலகுரக வணிக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.1,745-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 75 ஆகவும், பஸ், லாரி உள்ளிட்ட 2 ஆக்சில் கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்து 655-ல் இருந்து ரூ.4 ஆயிரத்து 750 ஆகவும், கனரக கட்டுமான எந்திரங்களுக்கான கட்டணம் ரூ.5 ஆயிரத்து 740-ல் இருந்து ரூ.6 ஆயிரத்து 830 ஆகவும், 7 ஆக்சில் அல்லது அதற்கு மேற்பட்ட கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.6 ஆயிரத்து 980-ல் இருந்து ரூ.8 ஆயிரத்து 315 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

    இந்த சுங்க கட்டணம் வரும் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்து 2028-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

    ×