என் மலர்tooltip icon

    இந்தியா

    • திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறையில் இருந்து கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று பார்வையிட்டனர்.
    • சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைகின்றனர்.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    ஞாயிற்றுக்கிழமையான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டிருந்தனர். அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

    அதேபோல விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர்.

    அதேபோல் திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறையில் இருந்து கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று பார்வையிட்டனர். மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    தற்போது கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துவதால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைகின்றனர். மேலும் மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுவதால் வெயில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிக ரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • முட்டை வழங்குவது தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
    • அரை மணிநேர தாமத்திற்கு பிறகு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு பல்வேறு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களில் பயணிகளின் வசதிக்காக உணவு தயாரித்து வழங்கும் பெட்டிகள் (பேண்டரி கார்) இணைக்கப்பட்டு இருக்கும்.

    இந்த பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள், ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளிடம் ஆர்டர் பெற்று உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர்.

    இதேபோல் ரெயில்களில் ஏ.சி. பெட்டியில் பயணம் செய்பவர்களுக்கு உதவ ஊழியர்களும் பணியில் உள்ளனர். இவர்கள் கம்பளி, போர்வை ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.

    நேற்று கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகருக்கு மாலை 5.25 மணிக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதில் பணியில் இருந்த உணவக ஊழியர் ஒருவருக்கும், ஏ.சி. பெட்டியில் பணியாற்றும் ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அவர்கள் பயணிகளை பற்றி கவலைப்படாமல் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் ரெயில் 5.40 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கும் சில பயணிகள் ரெயிலில் ஏறினர். அப்போதும் ஊழி யர்கள் மோதல் நின்ற பாடில்லை. இதனை மற்ற ரெயில்வே பணியாளர்கள் யாரும் கண்டு கொள்ள வில்லை.

    தொடர்ந்து நாகர்கோவில் சந்திப்பு நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்டது. ஆனால் சில வினாடிகளில் அந்த ரெயில் நடுவழியில் நின்றது. சந்திப்பு ரெயில் நிலையத்துக்கும், ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட் பகுதிக்கும் இடையே ரெயில் நின்றதால், ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே போலீசாரும் விரைந்து சென்று ரெயில் நின்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது ஓடும் ரெயிலில் மோதலில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஆதரவாக அவர்கள் பணிபுரியும் பிரிவைச் சேர்ந்த மேலும் 2 பேர் வந்ததும், அவர்கள் ஒருவருக்கொருவர் கை கலப்பில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டதாலும் ரெயிலில் பயணம் செய்தவர்களில் சிலர், அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் ரெயில் நின்றது தெரியவந்தது.

    இது தொடர்பாக மோதலில் ஈடுபட்ட ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முட்டை வழங்குவது தொடர்பாக மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஏ.சி. பெட்டியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் திப்ரூ கரை சேர்ந்த தீப் கோகாய் (வயது28), அயன் கோகாய் (28) மற்றும் உணவக பிரிவில் பணியாற்றும் மேற்கு வஙகாளத்தை சேர்ந்த தபான் மொண்டல் (30), பீகாரை சேர்ந்த கைப் (20) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் பின்னர் கைதான 4 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.

    இந்த சம்பவம் காரணமாக சுமார் அரை மணிநேர தாமத்திற்கு பிறகு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. ரெயிலில் பணி யாற்றிய ஊழியர்கள் மோதல் காரணமாக நடு வழியில் ரெயில் நிறுத்தப்பட்ட சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
    • 20 ஆண்டுகளுக்கும் மேலாக இரு பிரிவுகளாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வீ.கே.குருசாமி. மதுரை மாநகராட்சி தி.மு.க. முன்னாள் மண்டல தலைவரான இவருக்கும், அவரது உறவினரும் அ.தி.மு.க. பிரமுகருமான ராஜபாண்டி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட விரோதம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

    இந்த பிரச்சினையில் தற்போதுவரை இருதரப்பை சேர்ந்த 20 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே அரசியிலில் உச்சத்தில் இருந்த வீ.கே.குருசாமி தி.மு.க.வில் இருந்து விலகி தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அங்கும் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்தார்.

    இந்தநிலையில் வீ.கே.குருசாமியின் ஆதரவாளரும், பிரபல ரவுடியுமான காளீஸ்வரன் என்பவர் இன்று அதிகாலை மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அதுபற்றிய விபரம் வரு மாறு:-

    மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 37). இவர் மதுரை தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் உள்ள வெண்கலமூர்த்தி தெருவில் தனது இரண்டா வது மனைவி மீனாட்சி என்பவரது வீட்டில் ஒரு மாதமாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே வந்தவர் இன்று அதிகாலை சுமார் 12.40 மணியளவில் மீண்டும் வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் தனியாக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் தனக்கன்குளம் பகுதியில் வைத்து காளீஸ்வரனை வழிமறித்தனர். இதனை சற்றும் எதிர்பாராத காளீஸ்வரன் அவர்களது பிடியில் இருந்து தப்ப முயன்ற அவரை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இருள் சூழ்ந்த பகுதியாக இருந்ததால் அந்த கும்பல் யார் என்று தெரியவில்லை.

    இதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த காளீஸ்வரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இறந்த காளீஸ்வரன் மீது ஏற்கனவே தெப்பக்குளம், கீரைத்துறை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    வி.கே.குருசாமி தரப்பினருக்கும், வெள்ளைக்காளி தரப்பினருக்கும் ஏற்கனவே பழிவாங்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் வி.கே.குருசாமியின் ஆதரவாளர் காளீஸ்வரனை வெள்ளைக்காளி தரப்பினர் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே கொலை செய்யப்பட்ட காளீஸ்வரன் உடலை கைப்பற்றிய போலீசார் ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றினர். அப்போது அங்கு திரண்டு வந்த அவரது ஆதரவாளர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை அடித்து உடைக்க முயன்றனர்.

    பின்னர் வேகமாக சென்ற அந்த வாகனம் அரசு ஆஸ்பத்திரியை அடைந்தது. அங்கு காளீஸ்வரன் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து அங்கு பதட்ட மான சூழல் நிலவுவதால் அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    சம்பவம் குறித்த தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரையில் இரு பிரிவுகளாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் குருசாமி தரப்பில் 10 பேர், ராஜபாண்டி தரப்பில் 7 பேர் என 20 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். வி.கே.குருசாமி, ராஜ பாண்டி, வெள்ளைக்காளி ஆகியோர் மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    வெள்ளைக்காளி ஒரு வருடத்திற்கு முன்பாக கரிமேடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார். தற்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஜெயிலில் இருந்து வருகிறார். சிறையில் இருந்து கொண்டே அவர் இந்த சதித்திட்டத்தை தீட்டியதாக தெரிகிறது.

    வெள்ளைக்காளி தனது அண்ணனை வீ.கே.குருசாமியின் ஆட்கள் கொலை செய்ததால் அவரது குடும்பம் முழுவதையும் அழிக்கப்போவதாக சபதம் செய்து, அதன் தொடர்ச்சியாக குருசாமி ஆதரவாளர்களை கொலை செய்து வந்தார்.

    வெள்ளைக் காளியைப் பொறுத்தவரை 40-க்கும் மேற்பட்ட கூலிப்படையினரை வைத்துக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் கொலை, கஞ்சா விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    வி.கே. குருசாமி தற்போது தி.மு.க.வில் இருந்து விலகி தனியாகச் செயல்பட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக ராஜபாண்டி இறந்து விட்டார். இதனால், வீ.கே.குருசாமியை பழிவாங்கும் நோக்கில் வெள்ளைக்காளி செயல்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

    • அனிதா வீட்டில் ஈரக்கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது அவரை மின்சாரம் தாக்கியது.
    • மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை எர்ணாவூரில் முகுந்தன் என்பவரின் மகள் அனிதா (14) வீட்டில் ஈரக்கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது அவரை மின்சாரம் தாக்கியது.

    இதையடுத்து அனிதாவை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.
    • அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்.

    ஒட்டன்சத்திரம்:

    நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 -ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முயன்ற ஒருவரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே புதுப்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான நல்லமுத்து என்ற கண்ணன் (வயது 40) மூலம் அந்த நோட்டுகளை பெற்று புதுச்சேரியில் மாற்றியதாக தெரிவித்தார்.

    போலீசார் விசாரணையில் மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நல்லமுத்து தரகராக செயல்பட்டு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை புதுச்சேரியில் மாற்றி கொடுத்துள்ளார். இவருக்கு சேலம் மாவட்டம் சுந்தரம்வரதன் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது.

    மேலும் புதுச்சேரியில் புதிய நோட்டுக்கு பழைய நோட்டு தருவதாக மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த ராமானுஜம் (48), பழைய ரூபாய் நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்ற 20 சதவீதம் கமிஷன் பெற்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம்

    கன்னிவாடி அடுத்து புதுப்பட்டிக்கு வந்த புதுச்சேரி போலீசார் ரெட்டியார்சத்திரம் போலீசார் உதவியுடன் நல்லமுத்து என்ற கண்ணன் குறித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி கோவில் அடிவாரத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

    இதை அடுத்து அங்கு விரைந்து சென்று புதுச்சேரி போலீசார் நல்ல முத்து என்ற கண்ணனை கைது செய்து விசாரணைக்காக புதுச்சேரி அழைத்துச் சென்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நல்லமுத்து என்ற கண்ணன் அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சுதந்திரம் மற்றும் நீதிக்கான அவர்களின் அச்சமற்ற முயற்சி நம் அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது.
    • தீவிர சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சமூக நீதியின் சின்னமாகத் திகழ்ந்த டாக்டர் ராம் மனோகர் லோஹியாவின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன்.

    சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுகதேவ் ஆகியோரின் உன்னத தியாகத்தை நினைவு கூர்வோம். சுதந்திரம் மற்றும் நீதிக்கான அவர்களின் அச்சமற்ற முயற்சி நம் அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது.

    என்று பதிவிட்டுள்ளார்.

    டாக்டர் ராம் மனோகர் லோஹியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர், தீவிர சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சமூக நீதியின் சின்னமாகத் திகழ்ந்த டாக்டர் ராம் மனோகர் லோஹியாவின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன். அவர் தனது வாழ்க்கையை பின்தங்கியவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கும் அர்ப்பணித்தார்.

    என்று பதிவிட்டுள்ளார்.

    • தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
    • பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது.

    பெங்களூரு:

    மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக உருவாகியுள்ள மிதமான சூறாவளி புயல், மேற்கு-வடமேற்கு நோக்கி நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    கர்நாடகவில் நேற்று மாலை பெய்யத் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. பெங்களூரு, குருமதகல், சாபெட்லா, குஞ்சனூர், கண்டகூர், கொங்கல், மற்றும் எம்.டி.பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மழை பெய்தது.

    பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. மழை பெய்யத் தொடங்கியபோது, துளிகளும் பெரிதாக இருந்தன. குறிப்பாக பெங்களூருவில் பல இடங்களில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து சாலைகளில் ஓடியது.

    இதனால் இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் தூங்க முடியவில்லை.

    ஜீவனஹள்ளியில் உள்ள கிழக்கு பூங்கா அருகே மாலையில் பெய்த மழையின் போது, மோட்டார்சைக்கிள் மீது மரம் விழுந்ததில் 3 வயது குழந்தை உயிரிழந்தது. விபத்து நடந்தபோது இறந்த குழந்தை ரஷா தனது தந்தையுடன் மோட்டா ர்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் குழந்தை பலத்த காயமடைந்தது. உடனடியாக பெற்றோர் குழந்தையை பவுரிங் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனளிக்காததால் குழந்தை இறந்தது.

    புலிகேசி நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மழை காரணமாக நகரின் பல பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியு ள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    யெலகங்காவின் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. வடிகால்களில் தண்ணீர் செல்லாமல், சாலையில் தேங்கி நிற்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

    கன மழை காரணமாக பெங்களூவில் இருந்து 10 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. கன மழை காரணமாக பெங்களூரு உட்பட பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.


    கர்நாடக தலைநகரில் பெய்து வரும் கனமழை காரணமாக பெங்களூருவுக்குச் செல்லும் சுமார் 10 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இண்டிகோ நிறுவனம் கூறுகையில், பெங்களூருவில் நிலவும் மோசமான வானிலை விமானப் பயணங்களைப் பாதித்து வருகிறது. பயணிகள் பணத்தைத் திரும்பப் பெறலாம்.

    வானிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், நிலைமைகள் மேம்பட்டவுடன் சீரான மற்றும் சரியான நேரத்தில் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    • ராயசந்திரா பகுதியில் மதுரம்மா கோவில் திருவிழா நடைபெற்றது.
    • காற்றின் வேகம் அதிகரித்ததால், 150 அடி தேர் ஒரு பக்கமாக சாய்ந்தது

    கர்நாடகா தலைநகர் பெங்களூரு அடுத்த ராயசந்திரா பகுதியில் மதுரம்மா கோவில் திருவிழாவின்போது 150 அடி உயர தேர் சாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

    நேற்று மாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காற்றின் வேகம் அதிகரித்ததால், 150 அடி தேர் ஒரு பக்கமாக சாய்ந்தது

    இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • சிறப்பு ரெயில்களை இயக்கவும் ரெயில்வே வாரியம் உத்தர விட்டுள்ளது.
    • 3 பெட்டிகள் வரை கூடுதலாக இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    கோடைகாலம் தொடங்கி உள்ளது. பள்ளி தேர்வுகள் முடிந்து, விடுமுறைவிட்ட பின்னர் பலரும் சொந்த ஊர், சுற்றுலா தலங்களுக்கு செல்வார்கள். இதனால் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    பெரும்பாலான ரெயில்களில் குறிப்பிட்ட நாட்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியலில் எண்ணிக்கை கூடி வருகிறது.

    இதை கருத்தில் கொண்டு, தேவை அதிகமுள்ள விரைவு ரெயில்களில் தேவைக்கு ஏற்ப 3 பெட்டிகள் வரை கூடுதலாக இணைத்து இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    பண்டிகை, தொடர் விடுமுறை நாட்களில் வழக்கமாக செல்லும் விரைவு ரெயில்களில் தேவைக்கு ஏற்ப கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். பள்ளி, கல்லூரிகள் தேர்வுகள் முடிந்த பிறகு, கோடை விடுமுறை தொடங்கும்போது பொதுமக்கள் சொந்த ஊர்கள், சுற்றுலா தலங்களுக்கு அதிக அளவில் செல்வார்கள்.

    எனவே, அடுத்த மாதம் முதல் பயணிகளின் வசதிக்காக, சிறப்பு ரெயில்களை இயக்கவும், வழக்கமான ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கவும் ரெயில்வே வாரியம் உத்தர விட்டுள்ளது.

    முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட விரைவு ரெயில்களில் படிப்படியாக கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளன. தேவைக்கு ஏற்ப, முக்கிய வழித்தடங்களில் செல்லும் விரைவு ரெயில்களில் 3 பெட்டிகள் வரை கூடுதலாக இணைத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரெயில்களில் முன்பதிவு, காத்திருப்போர் எண்ணிக்கை பட்டியலை தெற்கு ரெயில்வே தயாரித்து வருகிறது.

    இதன் அடிப்படையில், திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை உட்பட பல்வேறு விரைவு ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சுமார் 1 மணி நேரம் கன மழை பெய்தது.
    • வாகன ஒட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் பொது மக்களை வாட்டி வதைத்தது. பகல் நேரங்களில் கடும் அனல் காற்று வீசியதால் மக்கள் சாலைகளில் நடமாடவே அச்சமடைந்தனர்.

    கடும் வெயில் காரணமாக பகலில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.

    இந்த நிலையில், நேற்று காலை முதல் வானம் மப்பும், மந்தாரமாக காணப் பட்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டது. இதனை தொடர்ந்து மாலையில் மழை லேசாக தூறத் தொடங்கியது. பின்னர் திடீரென மழை பொழியத் தொடங்கியது.

    நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் அதிகரித்து சுமார் 1 மணி நேரம் கன மழை பெய்தது. பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும், ஓசூர் பஸ்நிலையம், ஜி.ஆர்.டி. சர்க்கிள், பாகலூர் ரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனி பஸ் ஸ்டாப், ராயக்கோட்டை ரோடு சர்க்கிள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால், வாகன ஒட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

    மேலும் இந்த பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    இந்த நிலையில், கனமழை பெய்ததையடுத்து வெப்பம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசியதால்மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • 25-ந்தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
    • திருப்பதி கோவிலில் நேற்று 75 ஆயிரத்து 428 பேர் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 25 மற்றும் 30-ந் தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    25-ந்தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. 30-ந்தேதி உகாதி பண்டிகையைக் கொண்டாடும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மற்றும் 29-ந்தேதிகளில் எந்த பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.

    தெலுங்கானா மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து பரிந்துரை கடிதங்கள் இந்த மாதம் 23-ந்தேதி பெறப்பட்டு 24-ந் தேதி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    திருப்பதி கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 75 ஆயிரத்து 428 பேர் சாமி தரிசனம் செய்தனர். 31 ஆயிரத்து 920 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • ரபி பயிர் வரத்து அதிகரித்துள்ளதால், பல மாநிலங்களில் வெங்காயம் விலை சரிந்துள்ளது.
    • வெங்காயத்தின் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை திரும்பப்பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    வெங்காயத்தின் ஏற்றுமதி வரியை 40 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு குறைத்தது. அரசின் இந்த முடிவால் வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைத்ததுடன் வெங்காய ஏற்றுமதியும் அதிகரித்தது.

    இந்த நிலையில் ரபி பயிர் வரத்து அதிகரித்துள்ளதால், பல மாநிலங்களில் வெங்காயம் விலை சரிந்துள்ளது. எனவே விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் வெங்காயத்தின் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை ஏப்ரல் 1-ந் தேதி முதல் திரும்பப்பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வருவாய்த்துறை வெளியிட்டுள்ளது

    ×