search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6 வழிச்சாலை"

    • சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியிலும் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • புதிய 6 வழிச் சாலைக்கான டெண்டர்களை தமிழ்நாடு ரோடு கட்டமைப்பு வளர்ச்சி கழகம் வெளியிட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதேபோல சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய நகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், தனியார் கம்பெனிகள் அதிகளவில் புறநகர் பகுதிகளில் இருப்பதால் கார், இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கனரக வாகனங்கள் அதிகளவில் செல்கிறது.

    இதனால் சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியிலும் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    நகர எல்லைக்குள் கனரக வாகனமோ, கார், வேன் போன்ற வாகனமோ செல்லாமல் சுற்று வட்டச் சாலையை பயன்படுத்தி கடந்து செல்ல ஏதுவாக தமிழ்நாடு சாலை கட்டமைப்பு முன்னேற்ற கழகம் சார்பாக வெளிவட்ட சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை வெளிவட்ட சுற்று சாலை திட்டத்திற்கான திட்ட அறிக்கை 2017-ல் சமர்பிக்கப்பட்டது. இந்திய ரோடு காங்கிரஸ் வழிகாட்டுதலின்படி அது புதுப்பிக்கப்பட வேண்டும்.

    ஸ்ரீபெரும்புதூர்- சிங்கபெருமாள் கோவில் இரண்டு வழிச்சாலையில் இருந்து 6 வழிச்சாலையும், ஒரகடம், தொழில்துறை வழித்தடத் திட்டத்தின் கீழ் சர்வீஸ் சாலை அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    133 கி.மீ. நீளமுள்ள சென்னை வெளிவட்ட சுற்று சாலை மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி சந்திப்பில் தொடங்கி சிங்கபெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம் தச்சூர் மற்றும் காட்டுப் பள்ளி துறைமுகம் வழியாக எண்ணூர் துறைமுகம் வரை ரூ.15,626 கோடியில் அமைகிறது. 5 பிரிவுகளாக திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    முதற்கட்டமாக எண்ணூர் துறைமுகத்தில் இருந்து தச்சூர் வரையிலான 25.50 கி.மீ. தூரமும், தேசிய நெடுஞ்சாலை 5-ல் உள்ள தச்சசூரில் இருந்து திருவள்ளூர் புறவழிச் சாலை தொடங்கும் வரை 26.25 கி.மீ. மூன்றாவதாக 29.55 கி.மீ. தொலைவில் திருவள்ளூர் புறவழிச் சாலையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரையும் அமைகிறது. ஸ்ரீபெரும்புதூ ரில் இருந்து சிங்க பெருமாள் கோவில் வரை உள்ள 24.85 கி.மீ. தூரத்திற்கு 4-வது பிரிவு அமைகிறது. 5-வது பிரிவு சிங்க பெருமாள் கோவிலில் இருந்து மகாபலிபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலையில் 27.50 கி.மீ. தூரம் இருக்கும். ஸ்ரீபெரும்புதூர் -சிங்க பெருமாள் கோவில் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கையை புதுப்பிக்க ஒரு ஆலோகரை நியமிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர்- சிங்கபெருமாள் கோவில் பகுதியில் 6 வழிச்சாலை அமைக்கப் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் பிரிவு பணிகளின் ஒரு பகுதியாக திருவள்ளூர் பைபாஸ்- வெங்கத்தூர் மற்றும் வெங்கத்தூர் செங்காடு வரையிலான புதிய 6 வழிச்சாலைக்கான டெண்டர் களை தமிழ்நாடு ரோடு கட்டமைப்பு வளர்ச்சி கழகம் வெளியிட்டு உள்ளது.

    முந்தைய டெண்டர் ரத்து செய்யப்பட்ட பின்னர் நீட்டிப்புகளுக்கான புதிய டெண்டர் அமைக்கப்பட்டுள்ளன என்று அத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • கட்டிடங்கள் அகற்றப்பட்ட இடங்களில் சாலையோரம் உள்ள மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மார்கள் அகற்றப்பட உள்ளது.
    • கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச்சாலையாக விரிவு படுத்தப்பட உள்ளது.

    வேளச்சேரி:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை 6 வழி சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    இதில் திருவான்மியூரில் இருந்து அக்கரை வரையிலான கிழக்கு கடற்கரை சாலையை (இ.சி.ஆர்.) அகலப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி சாலையோரம் இருந்த ஏராளமான வீடுகள், கடைகள், கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

    இதே போல் கொட்டிவாக்கம், பாலவாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் சாலையேரங்களில் உள்ள கட்டிடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி வருகிறார்கள்.

    கட்டிடங்கள் அகற்றப்பட்ட இடங்களில் சாலையோரம் உள்ள மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மார்கள் அகற்றப்பட உள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு உள்ளது. இந்த டெண்டர் ஒதுக்கியதும் 3 மாதத்தில் இந்த பணி முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச்சாலையாக விரிவு படுத்தப்பட உள்ளது. இதற்கு நிலம் கையகப்படுத்துவது நீண்ட காலமாக நீடித்தது. ஏனெனில் அதிக நிலங்கள் கையகப்படுத்த வேண்டி இருந்தது.

    கட்டிடங்கள் அகற்றப்பட்டதும் ஒப்பந்ததாரர்கள் மூலம் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். தற்போது கட்டிடங்கள் அகற்றப்பட்ட இடங்களில் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகின்றன. சாலையோரத்தில் உள்ள மரங்களும் அகற்றப்படும்.

    கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணி முதலில் முடிக்கப்படும் என்றார்.

    • கிராமங்கள் வழியாக 6 வழிச்சாலை அமைக்ககூடாது என்று கிராம பொதுமக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
    • பெரியபாளையம் அருகே உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் ஆறு வழிச்சாலைக்காக விளைநிலத்தை சமன் செய்யும் பணி தொடங்கியது

    பெரியபாளையம்:

    பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ.3200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த சாலை கண்ணிகை பேர், பெரியபாளையம், தண்டலம்,பாலவாக்கம், சென்னங்காரணி, பருத்தி மேனிகுப்பம், பனப்பாக்கம், பெரண்டூர், போந்தவாக்கம், வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது.

    இந்த சாலை அமைக்க பூர்வாங்க பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் 800-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக அமைந்துள்ள ஆயிரத்து 300 ஏக்கர் நஞ்சை நிலம் பாதிப்படையும். மேலும் 15-க்கும் மேற்பட்ட ஏரிகள், 30-க்கும் மேற்பட்ட குளங்கள் அழியும் அபாயம் உள்ளது. ஏழு கோவில்கள், 200 வீடுகள், இரண்டு அரசு பள்ளி கட்டிடங்களை இடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு தங்கள் கிராமங்கள் வழியாக 6 வழிச்சாலை அமைக்ககூடாது என்று கிராம பொதுமக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆயினும் அதிகாரிகள் சாலை அமைக்கும் பூர்வாங்க பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை பெரியபாளையம் அருகே உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் ஆறு வழிச்சாலைக்காக விளைநிலத்தை சமன் செய்யும் பணி தொடங்கியது. இது பற்றி அறிந்த ஊத்துக்கோட்டை வட்ட நஞ்சை விவசாயிகள் சங்கத்தினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர்.

    அவர்கள் பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி. சாரதி தலைமையில் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் 6 வழிச்சாலையை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து விவசாயிகள் அனைவரும் விளைநிலத்தில் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் 10 கிராம விவசாயிகள் பங்கேற்று உள்ளனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    ×