என் மலர்
நீங்கள் தேடியது "Toll Gate"
- தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன.
- 40 சுங்கச்சாவடிகளில் கடந்த மாதம் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது.
சுங்கச்சாவடி கட்டணம் என்பது, நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், வாகன ஓட்டிகளிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணம் ஆகும். இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நிர்ணயிக்கும் இந்த கட்டணங்கள், ஆண்டுதோறும் வாகனங்களின் வகையைப் பொறுத்து உயர்த்தப்படுகின்றன.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டு உள்ளன. இதில் 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ந்தேதியும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதியும் கட்டணம் மாற்றி அமைக்கப்படும்.
சென்னையில் உள்ள வானகரம் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி, சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி, தாம்பரம்-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி, பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் கடந்த மாதம் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் சென்னை அம்பத்தூர் அருகே சூரப்பட்டில் இன்று முதல் சுங்கச்சாவடியில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
* கார், வேன், ஜீப்பிற்கு மாற்றமின்றி ரூ.75 ஆக தொடரும்.
* கார், வேன், ஜீப்பிற்கு ரிட்டர்ன் கட்டணம் ரூ.115-லிருந்து ரூ. 110 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
* பேருந்து, லாரிகளுக்கான கட்டணம் ரூ.255-லிருந்து ரூ.250 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, சுங்கச்சாவடி மீது பயங்கரமாக மோதியது.
- விபத்தில் இன்னோவா கார் ஒன்று சேதம் அடைந்தது.
திருவள்ளூரை அடுத்த பட்டறை பெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி உள்ளது. சென்னை- திருத்தணி இடையிலான இந்த சுங்கச்சவாடி எப்போதும் பரபரப்பானதாக காணப்படும்.
இன்று மதியம் கண்டெய்னர் ஏற்றிச் செல்லும் சரக்கு லாரி, கண்டெய்னர் இல்லாமல் வந்து கொண்டிருந்தது. சுங்கச்சாவடியில் Fastag பதிவிடுவதற்கான சற்று குறைவான வேகத்தில் வந்தது. அப்போது திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து, வசூல் செய்யும் நபர் இருக்கும் கூண்டு மீது பயங்கரமாக மோதியது.
கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஊழியர் வெளியேறியதால் அதிர்ஷ்டவமாக உயிர்தப்பினார். கட்டுப்பாட்டை இழந்த லாரி நின்று கொண்டிருந்த இன்னோவா கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் சேதம் அடைந்தது. இருந்தபோதிலும், காரில் இருந்த 3 பேருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. லாரி மோதியதால் சுங்கச்சாவடி சேவை சிறிது நேரம் பாதித்தது.
- இருசக்கர வாகன ஓட்டுனர்களிடம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி உள்ளன.
- விதிகளின்படி பெரிய வாகனங்களுக்கே கட்டணம் வசூலிக்கப்படும்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய விரைவுச்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருசக்கர வாகன ஓட்டுனர்களிடம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி உள்ளன.
இதனை அறிந்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது. விதிகளின்படி பெரிய வாகனங்களுக்கே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இருசக்கர வாகன ஓட்டுனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ளது.
- சுங்கச்சாவடியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், ராணுவ வீரர் காரில் இருந்து இறங்கிய விசாரித்துள்ளார்.
- அப்போது சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் அவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் மீரட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் ராணுவ வீரர் கட்டிவைத்து தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருபவர் கபில் கவாத். இவர் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீநகரில் பணியாற்றி வருகிறார். இவர் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தார். விடுமுறை முடிந்த நிலையில் டெல்லிக்கு வாகனம் மூலம் சென்று அங்கிருந்து ஸ்ரீநகருக்கு விமானத்தில் செல்ல முடிவு செய்தார்.
தனது உறவினர் உடன் காரில் சென்றபோது, மீரட்டில் உள்ள சுங்கச்சாவடியில் வாகனங்கள் அதிகமாக நின்றுள்ளது. விமான நிலையத்திற்கு செல்ல தாமதம் ஏற்பட்டதால் கபில் கவாத் கீழே இறங்கி சுங்கச்சாவடி ஊழியர்களிடம் பேசியுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒன்று சேர்ந்து அவரை தாக்கினர். அத்துடன் அங்கிருந்து ஒரு கம்பியில் கட்டிவைத்து கடுமையாக அடித்து உதைத்தனர்.
இது தொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச் சாவடிகளுக்கு 276 கோடி ரூபாய் செலுத்தவில்லை.
- வருகிற 10ஆம் தேதி முதல் அரசு பேருந்துகளுக்கு தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 5 சுங்கச் சாவடிகளில் அரசு பேருந்துகள் சென்று வருவதற்கான கட்டணம் 276 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாக, சுங்கச்சாவடி நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கில் வருகிற 10ஆம் தேதி முதல் 4 சுங்கச் சாவடிகளில் அரசு பேருந்துகள் செல்ல நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
- தேசிய நெஞ்சாலை அமைப்பதன் நோக்கமே தடையற்ற பயணத்திற்காகத்தான்.
- ஆனால் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சுங்க கட்டணம் செலுத்தி நகர்வதற்கு அரைமணி நேரமாகிறது.
மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் எல்லா மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம், அரசியலமைப்பிற்கு எதிரானது. இதனால் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விசாரணையின்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை, "தேசிய நெஞ்சாலை அமைப்பதன் நோக்கமே தடையற்ற பயணத்திற்காகத்தான். ஆனால் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சுங்க கட்டணம் செலுத்தி நகர்வதற்கு அரைமணி நேரமாகிறது. சுங்கச் சாவடிகளில் வீண் தாமதத்தை தடுக்க வேறு வழியில்லையா?" எனக் கேள்வி எழுப்பியது.
அத்துடன் இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.
- கோர்ட்டு உத்தரவு தொடர்பான ஆணை சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.
- கோர்ட்டு உத்தரவுக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மதுரை:
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவில்லை, சாலை நடுவே செடிகள் வைக்கவில்லை, முறையாக சீரமைக்கவில்லை என்பதுடன் கட்டண வசூலை மட்டும் குறிக்கோளாக கொண்டு எலியார்பத்தி சுங்கச்சாவடி செயல்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து எலியார் பத்தி சுங்கச்சாவடி, தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடி நிர்வாகம் சாலையில் உரிய பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வரை கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டுமென தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் சம்பந்தப்பட்ட இரண்டு சங்கசாவடிகளுக்கும் கட்டண வசூலிக்க நேற்று முன்தினம் தடை விதித்தது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவு குறித்து தங்களுக்கு முறையான ஆணை வரவில்லை எனக் கூறி தொடர்ந்து எலியார்பத்தி சுங்கச்சாவடி கட்டண வசூலில் ஈடுபட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து கோர்ட்டு உத்தரவு தொடர்பான ஆணை நேற்றைய தினம் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது. கட்டண வசூலுக்கு தடை வித்த ஆணை கிடைக்கப்பெற்றதால் நள்ளிரவு முதல் எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மதுரை-தூத்துக்குடி சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்கின்றன. கோர்ட்டு உத்தரவுக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
- 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.
- ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படவுள்ள சுங்கக்கட்டணத்தின் அளவு குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.75 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை, இரு கட்டங்களாக, சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படும். ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படவுள்ள சுங்கக்கட்டணத்தின் அளவு குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.75 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது நியாயமற்றதாகும்.
டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் புதிய சுங்கக்கட்டணக் கொள்கை அறிவிக்கப்படும் என்றும், அதில் சாலைகளை பயன்படுத்துவோருக்கு சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
புதிய சுங்கக் கட்டணக் கொள்கை அடுத்த ஒரு வாரத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதில் இடம் பெற்றுள்ள அம்சங்களை அறிந்து கொண்டு சுங்கக்கட்டண மாற்றத்தை செயல்படுத்துவது தான் சரியாக இருக்கும். புதிய சுங்கக்கட்டண கொள்கையை மத்திய அரசு அறிவிக்கும் வரை சுங்கக்கட்டண உயர்வு அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 6 வழிச்சாலை மூலம் மும்பை - நாக்பூர் பயண நேரம் 8 மணி நேரமாக குறைந்து உள்ளது.
- சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மாநில சாலை மேம்பாட்டு கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி.) அறிவித்து உள்ளது.
மும்பை:
மும்பை - நாக்பூர் இடையே ரூ.55 ஆயிரம் கோடி செலவில் 701 கி.மீ. தூரத்துக்கு சம்ருத்தி விரைவு சாலை போடும் திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. தற்போது நாக்பூர் முதல் இகத்பூரி வரை பணிகள் முடிந்து சாலை திறக்கப்பட்டுள்ளது. இகத்பூரில் இருந்து அம்னே (தானே) வரை சாலைத்திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த 6 வழிச்சாலை மூலம் மும்பை - நாக்பூர் பயண நேரம் 8 மணி நேரமாக குறைந்து உள்ளது. சாலைப்பணி முழுமையாக முடிந்த பிறகு பயண நேரம் மேலும் குறையும்.
இந்தநிலையில் வருகிற 1-ந் தேதி முதல் சம்ருத்தி சாலையில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மாநில சாலை மேம்பாட்டு கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி.) அறிவித்து உள்ளது.
தற்போது இலகுரக வாகனங்களுக்கு கி.மீ.க்கு ரூ.1.73, வணிக இலகுரக வாகனங்களுக்கு ரூ.2.79, கனரக வாகனங்களுக்கு ரூ.5.85, 3 ஆக்சில் கனரக வாகனங்களுக்கு ரூ.6.83, கட்டுமான கனரக எந்திரங்களுக்கு ரூ.9.18, 7-க்கு மேற்பட்ட ஆக்சில் வாகனங்களுக்கு ரூ.11.07 கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் முறையே ரூ.2.06, ரூ.3.32, ரூ.6.97, ரூ.7.60, ரூ.10.93, ரூ.13.30 ஆக உயர்த்தப்பட்டது.
அதாவது நாக்பூர் - இகத்பூரி இடையே ரூ.1,080 ஆக இருந்த இலகுரக வாகனங்களுக்கான சுங்க கட்டணம் ரூ.1,290 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல மினிபஸ் போன்ற இலகுரக வணிக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.1,745-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 75 ஆகவும், பஸ், லாரி உள்ளிட்ட 2 ஆக்சில் கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்து 655-ல் இருந்து ரூ.4 ஆயிரத்து 750 ஆகவும், கனரக கட்டுமான எந்திரங்களுக்கான கட்டணம் ரூ.5 ஆயிரத்து 740-ல் இருந்து ரூ.6 ஆயிரத்து 830 ஆகவும், 7 ஆக்சில் அல்லது அதற்கு மேற்பட்ட கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.6 ஆயிரத்து 980-ல் இருந்து ரூ.8 ஆயிரத்து 315 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த சுங்க கட்டணம் வரும் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்து 2028-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை அமலில் இருக்கும்.
- தனியார் பஸ்களின் கட்டணமும் உயரும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.
- அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது.
சென்னை :
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த கட்டணத்தை வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வு மூலம் ஒரு காருக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் உயரும் என தெரிகிறது.
சென்னையை பொறுத்தமட்டில் புறநகர் பகுதியில் உள்ள பரணூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.
இதன்மூலம் சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, மதுரை, கோவை போன்ற இடங்களுக்கு கார் போன்ற வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும்போது கூடுதல் செலவு ஏற்படும்.
இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தனியார் பஸ்களின் கட்டணமும் உயரும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது.
இந்த கட்டண உயர்வு குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்றும், அதேவேளையில் ஆண்டுதோறும் உயர்த்தப்படும் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் கூறியதாவது:-
தமிழகத்தில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சுங்கச்சாவடிகளில் 40 சதவீத கட்டணம் குறைக்கப்படும், 60 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் இருக்கும் சுங்கச்சாவடிகள், நகர்ப்பகுதியில் இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின்கட்கரி நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதன்மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது சுங்கச்சாவடிகள் அனைத்தும் பணம் வசூலிக்கும் மையங்களாகவே செயல்பட்டு வருகின்றன. சாலைகளை சீரமைப்பது போன்ற பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படுவது இல்லை. சுங்கச்சாவடி கட்டண உயர்வு என்பது வணிகர்கள், வாகன உரிமையாளர்களை மட்டுமல்லாமல் மக்களையும் கடுமையாக பாதிக்கும். எனவே, சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டால் மதுரவாயல் சுங்கச்சாவடியில் ஏப்ரல் 1-ந்தேதி போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
- தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம் சுங்கச்சாவடி, சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் சுங்கச்சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
சேலம்:
தமிழகத்தை பொறுத்தவரை 46 சுங்கச்சாவடிகள் மூலம், நாள் ஒன்றுக்கு 17 கோடி ரூபாய் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம் சுங்கச்சாவடி, சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் சுங்கச்சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
குறிப்பாக கிருஷ்ணகிரி-தோப்பூர் வரை 62 கி.மீ. சாலை, கிருஷ்ணகிரி முதல் தும்பிபாடி வரையிலான 86 கி.மீட்டர் சாலைக்கு பாளையம் சுங்கச்சாவடிக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.715.86 கோடி கட்டணம் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. இதேபோல் தும்பிபாடியிலிருந்து நாமக்கல் வரை (68.62 கிமீ) செல்லும் வாகனங்களிடமிருந்து ஓமலூர் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கிறது.
இந்த நிலையில் ஓமலூர் மற்றும் பாளையம் சுங்கச்சாவடிகளில் ஜூன் மாதம் 2010-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ. 133.36 கோடி வருவாய் இழப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு ஏற்படுத்தி இருப்பது சி.ஏ.ஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இதில் பாளையம் சுங்கச்சாவடி ரூ. 73.88 கோடியும், ஓமலூர் சுங்கச்சாவடியில் 54.48 கோடியும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சாலைகள் அமைக்க முன்னணி நிறுவனங்களுடன் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் வருவாய்ப் பகிர்வு ஒப்பந்தத்தில் தும்பிப்பாடி-சேலம் பகுதி மட்டும் சேர்க்கப்பட்டு, சேலம் புறவழிச்சாலை அதிலிருந்து விலக்கப்பட்டுள்ளது. அதுபோல் தொப்பூர்-தொப்பூர் கேட் வரை 7.4 கிலோ மீட்டருக்கான விதி சேர்க்கப்படவில்லை. இப்படி பல்வேறு வகைகளில் இழப்பை ஏற்படுத்துள்ளதை சி.ஏ.ஜி கண்டுபிடித்துள்ளது.
- சுங்கச்சாவடி அமைக்க அந்த பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
- சுங்கச்சாவடி அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுந்தப்பாடி:
ஈரோடு, சித்தோடு, கவுந்தப்படி, கோபிசெட்டி பாளையம் சத்தியமங்கலம், பண்ணாரி, திம்பம், சாம்ராஜ் நகர் வழியாக மைசூர் சாலை அமைந்து உள்ளது. இந்த வழியாக மைசூருக்கு தினமும் கார், வேன், சரக்கு வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு முதல் பண்ணாரி வரை கவுந்தப்பாடி வழியாக 4 வழி சாலை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதையடுத்து கவுந்தபாடி அருகே உள்ள ஓடத்துறை அடுத்த பால பாளையம் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கப்படும் என தகவல் பரவியது.
இதையடுத்து பால பாளையம் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுங்கச்சாவடி அமைப்பதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியது.
இந்த பகுதியில் சுங்கச்சாவடி அமைக்க அந்த பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் பாலப்பாளையம் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை கவுந்தப்பாடி- கோபிசெட்டிபாளையம் ரோடு பாலப்பாளையம் பகுதியில் கவுந்தப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் ஒன்று திரண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்கள், 200 பெண்கள் மற்றும் விவசாயிகள், வாகன ஓட்டுனர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கவுந்தப்பாடி, பாலப்பாளையம், சூரியம்பாளையம், கோவில்பாளையம், ஓடத்துறை, காளிசெட்டிபாளையம், பொம்மநாயக்கன் பாளையம், ஒத்தக் கதிரை மற்றும் சற்று வட்டார பகுதிகளில் 50 மேற்பட்டம் கிராமங்கள் உள்ளனர். இந்த பகுதியை சேர்ந்த பெரும்பாலானவர்கள் விவசாயம் செய்து வருகிறார்கள்.
இந்த பகுதிகளில் சேர்ந்த விவசாயிகள் கவுந்தப்பாடி பாலப்பாளையம் வழியாக இரு சக்கர வாகனங்கள், வேன் மற்றும் சரக்கு வாகனங்களில் கோபி, சத்தியமங்கலம் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு விவசாயவிளை பொருட்களை கொண்டு செல்கிறார்கள்.
மேலும் இந்த பகுதியில் சர்க்கரை மார்க்கெட் அமைந்தள்ளது. இதே போல் 72 சர்க்கரை குடோன்கள் அமைந்துள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கரும்புகளை கொண்டு வந்து வருகிறார்கள். மேலும் பல்வேறு பகுதிகளுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும் கவுந்தப்பாடி பகுதியில் ஓழுங்கு முறை விற்பனை கூடம் அமைந்துள்ளது. இந்த விற்பனை கூடத்துக்கு ஏராளமான விவசாயிகள் தேங்காய் உள்பட பல பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். இதே போல் வியாபாரிகள் பலர் வந்து தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகளை கொள்முதல் செய்து வருகிறார்கள்.
இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தினமும் கார், வேன், சரக்கு வாகனங்களில் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். இதனால் இந்த ரோட்டில் எப்போது வாகன போக்கு வரத்து இருந்து கொண்டே இருக்கும்.
இந்த நிலையில் பாலப்பாளையம் பகுதியில் சுங்கச்சாவடி அமைந்தால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த வழியாக சென்று வர அடிக்கடி சுங்ககட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் விசாயவிளை பொருட்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும்.
எனவே இந்த பகுதியில் சுங்கச்சாவடி அமைக்க கூடாது. சுங்கச்சாவடி அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் விவசாயிகள் பலர் டிராக்டர்களுடன் வந்திருந்தனர். அந்த டிராக்டர்களை ரோட்டோரம் நிறுத்தி சுங்கச்சாவடி அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் கோபிசெட்டிபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், கவுந்தப்பாடி இன்ஸ்பெக்டர் சுபாஷ் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






