என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • கல்வித்துறையில் இது மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியாகும்.
    • எஸ்.எஸ்.எல்.சி உள்ளிட்ட மற்ற வகுப்புகளுக்கு பழைய முறையே தொடரும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

    மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) விடைத்தாள்களைத் திருத்துவதற்கு ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' எனும் புதிய டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. கல்வித்துறையில் இது மிகப்பெரிய டிஜிட்டல் புரட்சியாகும்.

    இதுவரை ஆசிரியர்கள் மாணவர்கள் பேப்பரில் எழுதிய விடைத்தாள்களைப் பேனா கொண்டு திருத்தி வந்தனர். ஆனால் இனி அப்படி கிடையாது. மாணவர்கள் வழக்கம் போல விடைத்தாள்களில் தேர்வு தேர்வை எழுதினாலும், அந்த விடைத்தாள்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவேற்றப்படும். ஆசிரியர்கள், அதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக மென்பொருள் மூலம் கம்ப்யூட்டர் திரையில் விடைத்தாள்களைப் பார்த்து திருத்தி மதிப்பெண்களை வழங்குவார்கள். இந்த நடைமுறை, தற்போது நடைபெறவுள்ள பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு உடனடியாக அமல்படுத்தப்படுகிறது.

    ஆனால் எஸ்.எஸ்.எல்.சி உள்ளிட்ட மற்ற வகுப்புகளுக்கு பழைய முறையே தொடரும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

    இந்த புதிய முறையில் விடை திருத் தும் பணிக்காக அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் நாளைக்குள் தங்கள் பள்ளி ஆசிரியர்களின் முழு விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆசிரியர்களுக்கு 14 முதல் 16-ந் தேதி வரை ஆசிரியர்களுக்கு இதற்கான ஆன்லைன் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

    • இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்று அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்தார்.
    • முந்தைய அமெரிக்க நிர்வாகம் ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தம் மிகவும் முட்டாள்தனமான ஒப்பந்தம்

    அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஓமனில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்று அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்தார்.

    இந்நிலையில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரான் மீது அமெரிக்கா ராணுவத் தாக்குதலை நடத்தும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    டிரம்ப் கூறியதாவது, "ஒப்பந்தம் செய்துகொள்வதில் ஈரான் ஆர்வம் காட்டி வருகிறது. பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமையும் என்று நம்புகிறோம். அதே நேரத்தில், இப்பகுதியில் அமெரிக்கப் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

    ஈரான் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை என்றால் தாக்குதல் நடத்தப்படும். அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் குறித்து ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும். முந்தைய அமெரிக்க நிர்வாகம் ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தம் மிகவும் முட்டாள்தனமான ஒப்பந்தம்" என்று தெரிவித்தார். 

    கடந்த ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்க ராணுவம் போர் விமானங்கள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஆட்டத்தில் கேப்டன் சூர்யகுமார் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • நமீபியாவுக்கு எதிராக அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடினால் மட்டுமே சாதிக்கலாம்.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

    இந்நிலையில், இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நமீபியாவை இன்று (12-ம் தேதி) எதிர் கொள்கிறது. டெல்லியில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. நமீபியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.

    நமீபியாவுக்கு எதிராக இந்திய அணி அதிரடியாக ஆடி ரன்குவிப்பில் புதிய சாதனை படைக்குமா எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக 297 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். இதைத் தாண்டி புதிய சரித்திரம் படைக்க காத்திருக்கிறது.

    கடந்த ஆட்டத்தில் கேப்டன் சூர்யகுமார் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நமீபியாவுக்கு எதிராக அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடினால் மட்டுமே சாதிக்க முடியும்.

    உடல் தகுதி இல்லாமல் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனார். இன்றைய போட்டியில் அவர் விளையாட வாய்ப்பில்லை . அவர் இடம் பெறவில்லை என்றால் இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் ஆடுவார்.

    காய்ச்சல் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத வேகப்பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுகிறார். முகமது சிராஜ் அல்லது அர்ஷ்தீப் நீக்கப்படலாம். மற்றபடி இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது.

    டி 20 போட்டியில் இந்திய அணி நமீபியாவுடன் மோதுவது 2-வது முறையாகும். இதற்கு முன் 2021 உலகக் கோப்பையில் துபாயில் நடந்த ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

    நமீபியா அணி முதல் போட்டியில் நெதர்லாந்திடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    முன்னதாக நாளை காலை 11 மணிக்கு பல்லேகலேவில் நடக்கும் போட்டியில் பி பிரிவில் உள்ள இலங்கை-ஓமன் அணிகள் மோதுகின்றன. மாலை 3 மணிக்கு மும்பையில் நடக்கும் போட்டியில் சி பிரிவில் உள்ள இத்தாலி- நேபாளம் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளில் முதல் வெற்றியை பெறப்போவது யார் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 196 ரன்கள் குவித்தது.

    மும்பை:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 15-வது லீக் போட்டியில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. ரூதர்போர்டு அதிரடியாக ஆடி 42 பந்தில் 76 ரன்கள் குவித்தார். ரோஸ்டன் சேஸ் 34 ரன்னும், ஹோல்டர் 33 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்தின் அடில் ரஷித், ஓவர்டன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஜேக்கப் பெத்தேல் 33 ரன்னும், பிலிப் சால்ட் 31 ரன்னும் எடுத்தனர். கடைசி வரை போராடிய சாம் கர்ரன் 43 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், இங்கிலாந்து 19 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் குடகேஷ் மோடே 3 விக்கெட்டும், ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • சூர்யா - ஜோதிகா இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.
    • என்னால் எப்படி மகனின் காதலுக்கு நோ சொல்ல முடியும் என்று சிவகுமார் தெரிவித்தார்.

    சூர்யா - ஜோதிகா 1999ம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்பத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி உள்ளிட்ட திரைப்படங்களை ஒன்றாக இணைந்து நடித்தனர்.

    இதனையடுத்து சூர்யா - ஜோதிகா இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில், சூர்யா ஜோதிகாவை காதல் திருமணம் செய்து கொண்டதற்கு முக்கிய காரணம் ராதிகா தான் என்று சிவகுமார் பேசியுள்ளார்.

    யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய சிவகுமார், "உயிரிலே கலந்தது' படப்பிடிப்பில் தனியாகவே இருந்த சூர்யாவை ஜோதிகாவிடம் `பேசு பேசு' என சொன்னவர் ராதிகா தான். திரைப்படங்களில் 150 கதாநாயகிகளை லவ் பண்ணுவது போல நடித்துள்ளேன். என்னால் எப்படி மகனின் காதலுக்கு நோ சொல்ல முடியும்'' என்று தெரிவித்தார்.

    • இந்திய தலைவர்கள் யாரிடமிருந்தும் இதுபோன்ற அறிக்கையை நான் கேள்விப்படவில்லை
    • இந்தியா மீது விதித்த கூடுதல் 25 சதவீத வரியை ட்ரம்ப் திரும்பப் பெற்றார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைத் தவிர வேறு யாரும் இந்தியா, ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதாக அறிவிக்கவில்லை என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

    ரஷ்ய நாடாளுமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அவர், "ரஷ்ய எண்ணெய்யை இனி வாங்கப்போவதில்லை என்ற இந்தியாவின் ஒப்பந்தத்தை டொனால்ட் டிரம்ப் அறிவித்ததாக நீங்கள் குறிப்பிட்டீர்கள். பிரதமர் மோடி மற்றும் பிற இந்தியத் தலைவர்கள் உட்பட வேறு யாரிடமிருந்தும் இதுபோன்ற அறிக்கையை நான் கேள்விப்படவில்லை" என்று கூறினார்.

    கடந்த வாரம் இந்தியாவுடன் போடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக அறிவித்த ட்ரம்ப், ரஷ்யாவிலிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது விதித்த கூடுதல் 25 சதவீத வரியையும் ட்ரம்ப் திரும்பப் பெற்றார்.

    ஆனால் தற்போதுவரை இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் நேரடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

    • சென்னையும், வடக்கு தமிழ்நாடும் எப்போதும் திமுகவின் கோட்டை என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
    • இந்தியாவில் எந்தக் கட்சியிலும் இல்லாத கட்டமைப்பு திமுகவில் உள்ளது.

    திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடு இன்று காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்றது. இதில் திமுகவின் 15 மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த BLA2, BLC, BDA, BYA நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வாக்குச்சாவடி முகவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் நிகழ்வில் பேசிய அவர், 

    "சென்னை, விழுப்புரம் மண்டலங்களில் 49 தொகுதிகள் அடங்கியுள்ளது. இங்கு வெற்றியை உறுதி செய்ய நாம் இங்கு கூடியுள்ளோம். சென்னையும், வடக்கு தமிழ்நாடும் எப்போதும் திமுகவின் கோட்டை என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

    தேர்தல் பணி என வந்தால், திமுகவினரை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. நான் மட்டுமல்ல, திமுகவின் எதிரிகளே இதை பல நேரங்களில் சொல்லியிருக்கிறார்கள். அதே ஆற்றல், அதே கவனத்தோடு இந்தமுறையும் உழைக்கவேண்டும். தேர்தல் களத்தில் திமுகதான் ஹீரோ. இந்தியாவில் எந்தக் கட்சியிலும் இல்லாத கட்டமைப்பு திமுகவில் உள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள மொத்த பூத்துகளின் எண்ணிக்கை 75 ஆயிரம். ஒவ்வொரு பூத்திற்கும் நாம் 350 வாக்குகளை டார்கெட் செய்திருக்கிறோம். இதை அடைந்தாலே 2 கோடியே 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நாம் பெறலாம். 2021-ஐவிட தற்போது நமக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலிலேயே அது தெரிந்தது.

    நிச்சயமாக 2026 தேர்தலில் திமுக வெல்லும். தற்போதைய சூழலில் திமுக கூட்டணி தவிர்த்து யாருக்கு வாக்களித்தாலும், வளர்ச்சி அரசியல் மாறி கலவர அரசியல்தான் நடக்கும். வெல்லப்போவது தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்பதை முடிவு செய்யப்போவதுதான் இந்தத் தேர்தல் . 

    அரசியல் விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டை காக்க எல்லோரையும் திமுகவை ஆதரிக்கவேண்டிய தேவையை விளக்கவேண்டும். மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு செய்யக்கூடிய நிதி வஞ்சகத்தையும், அதை எதிர்த்து கேள்விக்கேட்காத அதிமுகவையும் மக்கள்முன் தோல் உரிக்கவேண்டும்.

    பாஜகவின் டப்பா என்ஜின் முன்னால், தமிழ்நாடு திராவிட மாடல் சூப்பர் ஃபாஸ்ட் என்ஜின் என்றும் தலைகுனியாது. இதனை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வாக்காளருக்கும் கொண்டு செல்லவேண்டும். களப்பணி மட்டும்தான் முழுப்பணி. வெறுப்பை விதைத்து, வன்முறையைத் தூண்டி, மக்களை பிளவுப்படுத்தி அதன்மூலம் வெற்றிப் பெறலாம் என துடிக்கும் விஷவிதைகளை தமிழ்நாட்டிற்குள் விடவேக்கூடாது. நாம் போராடுவது திமுகவின் வெற்றிக்காக அல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக.

    எங்கு யார் நின்றாலும், 234 தொகுதிகளிலும் ஸ்டாலின்தான் நிற்கிறேன் என்று நினைத்து பணியாற்றவேண்டும். ஒற்றுமை இல்லாமல் இலக்கை அடையமுடியாது. இந்தியாவில் எந்தக் கட்சியும் இப்படி உழைக்காது. அதனால்தான் திமுக, தமிழ்நாடு நம்பர் ஒன்னாக இருக்கிறது." என தெரிவித்தார். 

    • டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு பதிப்பகத்திற்கு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    • இந்தப் புத்தகத்தில் லடாக் எல்லை விவகாரம் மற்றும் அக்னிவீர் திட்டம் போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எழுதியப் புத்தகம் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி'. இந்தப் புத்தகம்தான் கடந்தவாரம் முழுவதும் நாடாளுமன்றத்தின் பேச்சுப்பொருள். இப்புத்தகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த இந்தியா - சீனா தாக்குதலில், மத்திய அரசு ராணுவத்திற்கு ஒத்துழைக்காதது குறித்து நரவனே எழுதியுள்ளதாக ராகுல் காந்தி மக்களவையில் தெரிவித்திருந்தார்.

    இந்த செய்தி நாடாளுமன்றம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தப் புத்தகம் இந்தியா முழுவதும் கவனத்தைப் பெற்றது. இதனிடையே தன்னை வைத்து ஒரு பெரும் அரசியலே நடக்கும்நிலையில் எதுகுறித்தும் வாய்திறக்காமல் இருந்தார் முன்னாள் ஜெனரல் முகுந்த் நரவனே. இந்நிலையில் முதல்முறையாக இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

    அதாவது இப்புத்தகத்தின் பதிப்பகமான பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா இந்த சர்ச்சைகள் தொடர்பாக ஒரு விளக்கம் அளித்தது. அதில், "நாங்கள் இந்தப் புத்தகத்தை எந்த வகையிலும் வெளியிடவில்லை. இந்தப் புத்தகத்தை வெளியிடும் உரிமையும் எங்களிடம்தான் இருக்கிறது" என்று தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இதனை மறுபதிவிட்டு, "இதுதான் புத்தகத்தின் தற்போதைய நிலை" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    இதன்மூலம் தனது புத்தகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதையும், விற்பனைக்கு வரவில்லை என்பதையும் நரவனே உறுதிப்படுத்தியுள்ளார்.  புத்தக வெளியீடு தாமதமாவது குறித்து ஒரு விழாவில் பேசிய அவர், இது "பழைய ஒயின் காலப்போக்கில் அதன் மதிப்புக் கூடுவது போன்றது" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். மேலும் புத்தகம் எழுதுவது மட்டுமே தனது பணி என்றும், அதற்கு பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி பெறுவது பதிப்பகத்தின் பொறுப்பு என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

    இந்தப் புத்தகத்தில் லடாக் எல்லை விவகாரம் மற்றும் அக்னிவீர் திட்டம் போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தப் புத்தகம் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆய்வில் உள்ளது. இதற்கிடையில், புத்தகத்தின் சில பகுதிகள் கசிந்ததாகக் கூறப்படுவது குறித்து டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளியிடப்படாத புத்தகத்தின் சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவியது குறித்து விளக்கம் கோரி, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு பதிப்பகத்திற்கு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


    • குமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

    காரைக்குடி காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றி வருகிறார் நாயகன் கார்த்திக். அதே காவல் நிலையத்திற்கு புதிதாக கான்ஸ்டபிளாக வரும் நாயகி திவ்யா தாமசுக்கும், இவருக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்கிறது. மேலும் இருவரும் புரோமோசனுக்கு போட்டி போட்டு வருகிறார்கள்.

    எலியும் பூனையுமாக சண்டை போட்டு வந்தாலும் இருவரும் உள்ளுக்குள் காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் திவ்யா தாமசுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். அந்த மாப்பிள்ளை மூலம் இருவரும் நிரந்தரமாக பிரிய நேரிடுகிறது. மேலும் திவ்யாவுக்கு எஸ்.ஐ.ஆக புரோமோஷனும் கிடைக்கிறது.

    இறுதியில் கார்த்திக்கும், திவ்யா தாமசும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் கார்த்திக், போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். நடிப்பு தான் பொருந்தவில்லை. சண்டைக் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் திவ்யா தாமஸ், ஓரளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், விஜி சேகர், பெஞ்சமின், ராஜ்குமார், முத்துக்காளை, கிரேன் மனோகர், அம்பானி சங்கர், சஹானா, ஹேமா, சித்தா, தர்ஷன், காந்தராஜ், பிரேம பிரியா, கிளி ராமச்சந்திரன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    காதலை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பத்மராஜா. பல நடிகர்களை நடிக்க வைத்து இருக்கிறார். ஆனால், அழுத்தமான காட்சிகள், காமெடி காட்சிகள் பெரியதாக எடுபட வில்லை. படத்தின் நீளம் குறைத்து, தேவையான காட்சிகளை நீக்கி இருந்தால் ரசித்து இருக்கலாம்.

    இசை

    குமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    ஒளிப்பதிவு

    வெங்கடேஷின் ஒளிப்பதிவு சிறப்பு.

    ரேட்டிங்-1/5 

    • 6 மாத காத்திருப்புக்கு பிறகு தம்பதி விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர்.
    • கொரோனா பரவலுக்கு பிறகு திருமணம், நிச்சயதார்த்தம் போன்றவை காணொலி காட்சி மூலம் நடந்து வருகிறது.

    கனடாவில் வேலை பார்க்கும் தம்பதிக்கு கடந்த 2022-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம் மிரா ரோட்டில் திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் அவர்களின் குடும்ப வாழ்க்கை இனிமையாக சென்றது. இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள், 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி முதல் கனடாவில் வெவ்வேறு பகுதியில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    எனவே பிரிந்து வாழும் 31 வயது கணவர், 24 வயது மனைவி விவாகரத்து கேட்டு தானே குடும்பநல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். 2 பேரும் வெளிநாட்டில் இருப்பதால் காணொலி காட்சி மூலம் விவாகரத்து வழக்கு மீதான விசாரணை நடந்தது. 6 மாத காத்திருப்புக்கு பிறகு தம்பதி விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர்.

    இதையடுத்து கோர்ட்டு தம்பதிக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. இதுகுறித்து நீதிபதி ஆர்.எஸ்.பகரே அவரது தீர்ப்பில், "பயிற்சி பெற்ற மத்தியஸ்தரால் பேச்சுவார்த்தை நடந்த போதிலும் தம்பதி இணைந்து வாழ ஆர்வம் காட்டவில்லை. மனுதாரர்கள் பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம், நிகழ்கால, எதிர்கால பிரச்சனைகள் குறித்து பரஸ்பரம் தீர்வு கண்டுள்ளனர். அவர்களுக்கு இடையேயான அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுள்ளன" என கூறியுள்ளார்.

    கொரோனா பரவலுக்கு பிறகு திருமணம், நிச்சயதார்த்தம் போன்றவை காணொலி காட்சி மூலம் நடந்து வருகிறது. இந்தநிலையில் குடும்ப நல கோர்ட்டு வெளிநாட்டில் வாழும் தம்பதிக்கு காணொலி காட்சி மூலம் விவாகரத்து வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அமீரக கிரிக்கெட் வாரியம் உத்தரவின் பேரில் உடனடியாக நாடு திரும்பினார்.
    • பாகிஸ்தான் வம்சாவளியான 27 வயதான முகமது சோகைப் கடந்த ஆண்டு 20 ஓவர் போட்டியில் அறிமுகமானார்.

    20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்காக ஐக்கிய அரபு அமீரக அணியில் இடம் பிடித்து இருந்த பேட்ஸ்மேன் முகமது சோகைப். இவர் சென்னையில் நேற்று நடந்த தங்களது முதலாவது லீக் ஆட்டத்துக்கு முன்னதாக ஒழுங்கீன செயல்பாடு காரணமாக அணியில் இருந்து திடீரென விடுவிக்கப்பட்டார்.

    அமீரக கிரிக்கெட் வாரியம் உத்தரவின் பேரில் உடனடியாக நாடு திரும்பினார். வீரர்களின் நடத்தை விதிமுறையை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் அவர் என்ன தவறு செய்தார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்பட்டவில்லை. பாகிஸ்தான் வம்சாவளியான 27 வயதான முகமது சோகைப் கடந்த ஆண்டு 20 ஓவர் போட்டியில் அறிமுகமானார். அவர் இதுவரை 16 சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஆடி ஒரு அரைசதம் உள்பட 303 ரன்கள் எடுத்துள்ளார்.

    • கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் ரூ.8,404 கோடியாக இருந்தது.
    • புதிய மேம்பாலங்கள், மழைநீர் வடிகால் பணி, பெண்களுக்கான புதிய திட்டங்கள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் வருகிற 18-ந்தேதி ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அப்போது, சென்னை மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. 20-ந்தேதி பட்ஜெட்டின் மீதான விவாதம் நடைபெறுகிறது. விவாதத்திற்கு பின்னர் பட்ஜெட் மீது ஒப்புதல் அளிக்கப்படும். பின்னர், தீர்மானங்களாக நிறைவேற்ற வேண்டிய பொருட்கள் எடுத்துக்கொள்ளப்படும்.

    கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் ரூ.8,404 கோடியாக இருந்தது. இதேபோல, 300 பூங்காக்கள் சீரமைப்பு, அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி, பெண்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட 62 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

    சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புதிய மேம்பாலங்கள், மழைநீர் வடிகால் பணி, பெண்களுக்கான புதிய திட்டங்கள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்புள்ளது. கல்வி, சாலை வசதி, போக்குவரத்து, மழை நீர் வடிகால் உள்ளிட்ட பணிகளுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளித்து கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.

    ×