என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • ஜி20 உறுப்பு நாடுகள் உட்பட 42 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
    • ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு உள்ளிட்ட புதிய முன்னெடுப்புகளை பிரதமர் மோடி முன்மொழிந்தார்.

    ஆப்பிரிக்க கண்டத்தில் முதல்முறையாக நடைபெறும் G20 உச்சி மாநாட்டில், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான கடன் நிவாரணம், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்ட விவகாரங்கள் பிரதானம் பெறுகின்றன.

    ஜி20 உறுப்பு நாடுகள் உட்பட 42 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் G20 மாநாட்டில் போதைப்பொருள்-பயங்கரவாத தொடர்பை தடுத்தல், சுகாதாரப் பாதுகாப்பு, ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு உள்ளிட்ட புதிய முன்னெடுப்புகளை பிரதமர் மோடி முன்மொழிந்தார்.

    மேலும், அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இந்தியா எப்போதும் ஆப்பிரிக்காவுடன் ஒற்றுமையாக துணை நிற்கும் என்றும் பிரதமர் மோடி உறுதி தெரிவித்தார்.

    • 6.41 கோடி வாக்காளர்களில் தற்போது வரை 6.14 கோடி பேருக்கு விண்ணப்ப விநியோகம் நடைபெற்றுள்ளது.
    • இன்று மதியம் 3 மணிவரை 95.78% விண்ணப்பங்கள் விநியோகம்

    அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று (நவ.22) மதியம் 3 மணிவரை 95.78% SIR விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் தற்போது வரை 6.14 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

    லட்சத்தீவு மற்றும் கோவாவில் 100 சதவீத படிவங்கள் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும், அந்தமான் நிக்கோபர், சத்தீஸ்கர், குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 99% அதிகமான படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  

    ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்களில்  கோடிக்கும் அதிகமான படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50.45 கோடிக்கும் அதிகமான படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் தேர்தலுக்கான பணிகளையும் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட்83 பந்தில் 123 ரன்கள் குவித்தார்.
    • ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து விளையாடும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 52 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.

    இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 39 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 40 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட், கார்ஸ் 3 விக்கெட், ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் போலண்ட் 4 விக்கெட்டும் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த நிலையில் விளையாடிய ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 205 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிராவிஸ் 69 பந்தில் சதம் விளாசி அசத்தினார்.

    இதன் மூலம் 104 ஆண்டுகளுக்குப் பிறகு AUS vs ENG ஆஷஸ் டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவுக்கு வந்துள்ளது.

    இரு நாட்களுக்குள் ஆஷஸ் போட்டி முடிவுக்கு வருவது வரலாற்றில் இது 6-வது முறை மட்டுமே. 1888-ல் 3 முறை, 1890, 1921 ஆண்டுகளில் தலா ஒரு முறை இவ்வாறு நடந்துள்ளன.

    • HDFC வங்கி கிளையில் இருந்து ஒரு வேன் பணத்தை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது.
    • ஏடிஎம் வாகனத்தை கடத்தி ரூ.7.11 கோடி கொள்ளையடித்தனர்.

    பெங்களூருவில் பட்டப்பகலில் ஏடிஎம் வாகனத்தை கடத்தி ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெங்களூரு சவுத் எண்ட் சர்க்கிள் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு பணம் நிரப்ப HDFC வங்கி கிளையில் இருந்து ஒரு வேன் பணத்தை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு டொயோட்டா இன்னோவா கார் இவர்களை திடீரென வழிமறித்து நிறுத்தியது.

    இன்னோவாவில் இருந்த 7 பேர் வங்கி ஊழியர்களை அணுகி, தாங்கள் ரிசர்வ் வங்கியை சேர்ந்தவர்கள் எனக்கூறி ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அப்போது அந்த கும்பல் பணத்தை தங்களது காருக்கு வலுக்கட்டாயமாக மாற்றியுள்ளனர். பின்னர் ஊழியர்களை வேறு ஒரு இடத்தில இறக்கிவிட்டு பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

    இதனையடுத்து, காவல்துறையினர் சிறப்பு குழுக்களை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், 60 மணிநேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கோவிந்தபுரா காவல்நிலைய காவலர், பணம் நிரப்பும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.5.76 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    • நாளை திருமணம் நடக்க உள்ள நிலையில் ஸ்மிருதி மந்தனாவின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் தொடங்கி உள்ளன.
    • பிரதமர் மோடி இரு வீட்டாருக்கும் வாழ்த்து கடிதம் அனுப்பினார்.

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதில் 9 ஆட்டத்தில் ஆடிய மந்தனா ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 434 ரன்கள் குவித்தார்.

    மகாராஷ்டிரத்தை சேர்ந்த 29 வயதான மந்தனா தனது வாழ்க்கையில் 2-வது இன்னிங்சை விரைவில் தொடங்குகிறார். அவரும் பிரபல இந்தி சினிமா இசையமைப்பாளரான பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். அவருடன் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிப்படுத்திய மந்தனா நாளை (23-ந்தேதி) அவரை கரம் பிடிக்கிறார். இவர்களது திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி இரு வீட்டாருக்கும் வாழ்த்து கடிதம் அனுப்பினார்.

    நாளை திருமணம் நடக்க உள்ள நிலையில் ஸ்மிருதி மந்தனாவின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் தொடங்கி உள்ளன. அந்த வகையில் வட இந்திய பாரம்பரியமான திருமணத்துக்கு முந்தைய ஹல்தி நிகழ்ச்சி நேற்று மாலை ஸ்மிருதி மந்தனாவின் வீட்டில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்ட சக வீராங்கனைகள் ரிச்சா கோஷ் , ஷ்ரேயங்கா பாட்டீல், ரேணுகா சிங் , ஷிவாலி ஷிண்டே ,ஷபாலி வர்மா, ராதா யாதவ் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    அனைவரும் மஞ்சள் நிற உடையணிந்து மணமகள் ஸ்மிருதி மந்தனாவுடன் நடனமாடி மகிழ்ந்தனர். ஷபாலி வர்மா, அனைவரும் நடனம் ஆடும் வீடியோவை "லட்கி வாலே" என்ற தலைப்பில் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    • தமிழ்நாட்டின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி!
    • கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதால் தமிழக மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

    சென்னை:

    மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நிராகரித்து விட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனிடையே, கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்களை கொண்டு வருவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எழுதியுள்ள கடிதத்தில்,

    தமிழ்நாட்டின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி!

    கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதால் தமிழக மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

    அதற்குத் துணை நிற்கவுள்ள மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி வழங்க மாண்புமிகு பிரதமர் அவர்கள் உடனடியாகத் தலையிட வேண்டும்!

    அதற்காக அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன்! என்று கூறியுள்ளார். 

    • தான் ஒரு சட்ட மாணவனாக வாழக்கையை தொடங்கி, நீதியின் மாணவனாக வெளியேறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
    • கடைசியாக மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்று அவரின் அமர்வு தெரிவித்தது.

    உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பணியாற்றிய பி.ஆர். கவாய் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார்.

    நேற்று கடைசி வேலை நாளின்போது நடந்த பிரிவு உபசார விழாவில், தான் ஒரு சட்ட மாணவனாக வாழக்கையை தொடங்கி, நீதியின் மாணவனாக வெளியேறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.  உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், தலைமை நீதிபதியாகவும் பி.ஆர்.கவாய் பல்வேறு முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர் ஆவார்.

    அதன்படி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும், முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு செல்லும், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து செய்தது செல்லும், தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து, வக்பு சட்ட திருத்த சரத்துகள் சிலவற்றை நிறுத்தி வைத்த உத்தரவு, அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 3 ஆண்டு தண்டனை விதித்த சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை, புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடிக்க தடை, நீண்டகாலம் சிறையில் இருந்த டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியது, மராத்தா, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து, சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட்டுக்கு ஜாமீன் வழங்கியது உள்ளிட்ட தீர்ப்புகளை வழங்கிய அமர்வுகளில் பிஆர் கவாய் இடம் பெற்றிருந்தார்.

    கடைசியாக மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்று பிஆர் கவாய் தலைமையிலான அமர்வு கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • யோகி பாபு, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
    • இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    'பசங்க' படத்தின் மூலம் அறிமுகமாகி 'களவாணி, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'கலகலப்பு' போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விமல். இவரது நடிப்பில் 'சார்' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெப் தொடர்கள் மற்றும் சில படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

    இதனிடையே, தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் விமல், யோகி பாபு, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'மகாசேனா'. இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    'மகாசேனா' படத்தின் கதை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சில BTS ஸ்டில்களை பார்க்கும்போது கதை வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவையாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், 'மகாசேனா' படம் அடுத்த மாதம் 12-ந்தேதி வெளியாகும் என போஸ்டரை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 



    • தொழிலாளர்களின் உடல்நலம், குடும்ப நேரம், சமூக வாழ்வு இவை அனைத்தையும் காக்கும் மனிதநேய உரிமை பறிக்கப்படுகிறது.
    • தொழிலாளர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட 29 முக்கியமான சட்டங்களை ஒரே அடியில் களைந்து 4 சட்டங்களாகச் சுருக்கும் நடவடிக்கை இது.

    2020ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறிய 4 தொழிலாளர் சட்டங்கள் நேற்று (நவ.21) முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது.

    அதன்படி, 4 தொழிலாளர் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்தன. 

    இதில், ஏற்கனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஊதியக் குறியீடு, தொழில்துறை குறியீடு, சமூக பாதுகாப்பு குறியீடு, தொழில்துறை பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிச் சூழல் குறியீடு என 4 சட்டங்களாக ஒருங்கிணைத்து, புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

    நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்தது. இவை முற்போக்கான சீர்திருத்தங்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

    இதுகுறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது,நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்தது. புதிய சட்டம் தொழிலாளர்கள் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுத்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு. புதிய தொழிலாளர் சட்டம் விக்சித் பாரதம் 2047 என்ற இலக்கை அடைய புதிய உத்வேகத்தை வழங்கும். அனைத்து தொழிலாளர்களுக்கும் சரியான நேரத்தில் குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதத்தை புதிய தொழிலாளர் சட்டம் அளிக்கும்.

    இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதம், பெண்களுக்கு சம ஊதியம் மற்றும் மரியாதையை புதிய தொழிலாளர் சட்டம் அளிக்கும். 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இலவச வருடாந்திர சுகாதார பரிசோதனை உத்தரவாதம் அளிக்கும்" என்று தெரிவித்தார்.

    அதேநேரம், புதிய சட்டத்தின் மூலம் வணிகங்கள் இப்போது பீடி, சுருட்டு சுற்றுவது உள்ளிட்ட தொழிலாளர்களை 12 மணி நேர ஷிப்டுகளுக்கு வேலைக்கு அமர்த்தலாம். 

    இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட எக்ஸ் பதிவில், "நாடு முழுவதும் கட்டாயமாக அமலாக்கப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர்களின் நலனையும் மனிதநேய உரிமைகளையும் நேரடியாக புறக்கணிக்கும் முடிவாகும். உழைக்கும் மக்களை பலவீனப்படுத்தும் நோக்கத்திலேயே ஒன்றிய அரசு எடுத்திருக்கும் இந்தச் சட்டங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    8 மணி நேர வேலை நேரம் என்பது ஒரு சாதாரண விதிமுறை அல்ல; தலைமுறைகள் கடந்து நடந்த ரத்தத்தும் உயிர்தியாகங்களும் கொண்ட போராட்டங்களின் பயனாக உருவான வரலாற்றுச் சாதனை. தொழிலாளர்களின் உடல்நலம், குடும்ப நேரம், சமூக வாழ்வு இவை அனைத்தையும் காக்கும் மனிதநேய உரிமையாக இதை உறுதி செய்தவர் புரட்சியாளர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர். 'தொழிலாளர் ஒரு மனிதன்; இயந்திரம் அல்ல' என்ற அவரின் உயர்ந்த கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் 8 மணி நேர வேலை நேரம் என்பது சட்டமாக கொண்டுவரப்பட்டது.

    அந்த உரிமையை 12 மணிநேரமாக நீட்டிக்க முயல்வது தொழிலாளரின் ரத்தத்தை உறிஞ்சும் கொடூரமான முடிவு. மேலும், தொழிலாளர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட 29 முக்கியமான சட்டங்களை ஒரே அடியில் களைந்து 4 சட்டங்களாகச் சுருக்கும் நடவடிக்கை, தொழிலாளர் வர்க்கத்தின் குரலையும் பாதுகாப்பையும் பறிக்கும் செயலாகும்.

    இந்த மாற்றங்கள் தொழிலாளர்களுக்காக அல்ல; நாட்டின் பெருஞ்செல்வத்தை தன் வசம் வைத்துள்ள பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்களான அம்பானிக்கும், அதானிக்கும் திட்டமிட்டு கொண்டு வரப்படுகின்றன. உழைப்பால் தேசத்தை வளர்க்கும் மக்களின் சுவாசத்தையும், துன்பத்தையும் இந்த ஒன்றிய அரசு தொழிலாளர் நலனில் மிகவும் அலட்சியமாக உள்ளது.

    இந்த நாள் இந்திய தொழிலாளர் வரலாற்றில் ஒரு கருப்புதினமாகும், தொழிலாளர்களின் நலனையும், உயிர் பாதுகாப்பையும் பறிக்கும் இந்த சட்டங்களை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

    உழைக்கும் மக்களின் வியர்வையை நாட்டின் செல்வமாக மதிக்கும் அரசியல் பண்பாட்டை உருவாக்குவதே எங்கள் உறுதியான நிலைபாடு. இந்த அநீதி நீங்கும் வரை, எங்கள் குரலும், எங்கள் போராட்டமும் தொடர்ந்தும் ஒலிக்கும். தொழிலாளர்களின் உரிமை காக்கப்படும் வரை நாம் ஒருபோதும் இந்த போராட்டத்தில் இருந்து பின்வாங்கமாட்டோம்." என்று தெரிவித்துள்ளார். 

    • ஜி20 நிகழ்ச்சி நிரலில் இந்தியாவின் கருத்துகளை பிரதமர் மோடி முன்வைப்பார்.
    • மாநாட்டுக்கு இடையே பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துகிறார்.

    ஜி20 நாட்டு தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

    இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.

    இந்நிலையில், தென்னாப்பிரிக்காவிற்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் அங்கு பாரம்பரிய முறைப்படி நிகழ்ச்சிக் குழுவினர் வரவேற்பு அளித்தனர். அந்நாட்டில் வெண்டா மொழி பேசும் மக்களின் பாரம்பரியத்தின் படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    உச்சி மாநாட்டின் 3 அமர்வுகளிலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். குறிப்பாக ஜி20 நிகழ்ச்சி நிரலில் இந்தியாவின் கருத்துகளை பிரதமர் மோடி முன்வைப்பார் என வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து உள்ளது.

    மேலும் இந்த மாநாட்டுக்கு இடையே பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துகிறார்.

    அத்துடன் இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா தலைவர்களின் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்பார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    • கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே பதிலளித்தார்.
    • மாநாட்டில் ஸ்டார்ட்-அப்களுக்கு சுமார் ரூ.400 கோடி வரை முதலீடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    பெங்களூரு நகர போக்குவரத்தில் பயணம் செய்வது விண்வெளியில் பயணிப்பதை விட மிகவும் கடினம் என்று இந்திய விண்வெளி வீரர் குழு கேப்டன் சுபான்ஷு சுக்லா நகைச்சுவையான கருத்தை தெரிவித்துள்ளார்.

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுழைந்த முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற வரலாற்றை ஜூலை மாதம் சுபான்ஷு சுக்லா படைத்தார். இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

    இந்நிலையில் நேற்று பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பேசிய சுக்லா, "நகரத்தின் மறுபக்கத்தில் உள்ள மராத்தஹள்ளியில் (பெங்களூருவில் இருந்து 34 கி.மீ. தொலைவில்) இருந்து மாநாடு நடைபெறும் இங்கு வருகிறேன். வழக்கமாக இந்த தொலைவை கடக்க ஒரு மணி நேரம் ஆகும்.

    ஆனால் உங்கள் முன் எனது உரையை வழங்க எடுக்கும் நேரத்தை விட மூன்று மடங்கு அதிக நேரத்தை நான் இங்கு பயணித்து செலவிட்டேன். எனது மனஉறுதியை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூற அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

    அவருக்கு பின் நிகழ்வில் பேசிய கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே,"விண்வெளியில் இருந்து பெங்களூரை அடைவது எளிது, ஆனால் மாரத்தஹள்ளியிலிருந்து வருவது கடினம் என சுபான்ஷு சுக்லா கூறினார். எதிர்காலத்தில் இதுபோன்ற தாமதங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்" என தெரிவித்தார்.

    பெங்களூருவில் போக்குவரத்து பிரச்சனை மோசமடைந்து வரும் நிலையில், சுக்லாவின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

    அரசாங்க தரவுகளின்படி, கடந்த ஆண்டை விட சராசரி பயண நேரம் 54 நிமிடங்களிலிருந்து 63 நிமிடங்களாக அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெற்ற 28வது பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு இன்று நிறைவடைந்தது.

    இந்த மாநாட்டில் சுமார் 56 நாடுகளைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மாநாட்டில் சுமார் 46,300 க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

    இந்த உச்சிமாநாட்டில் ஏஐ, தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், விண்வெளி, ஸ்டார்ட் அப் உள்ளிட்ட பிரிவுகளில் 1,015 பேரின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. மாநாட்டில் ஸ்டார்ட்-அப்களுக்கு சுமார் ரூ.400 கோடி வரை முதலீடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

    ஜனநாயகன் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

    விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.

    அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான "தளபதி கச்சேரி" வெளியாகி அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு.

    படத்தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் இது சார்ந்த ஒரு வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

    அதில் மலேசியாவின் ட்வின் டவர்ஸ் இடம்பெற்றுள்ளது. இதனால் படத்தின் இசை வெளியீட்டு விழா அங்கு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில், ஜனநாயகனின் இசை வெளியீட்டு விழா குறித்து முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    அதன்படி, விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×