செய்திகள்
துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த இடம்

அமெரிக்காவில் இரவு விருந்தில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி

Published On 2019-10-30 20:00 GMT   |   Update On 2019-10-30 20:00 GMT
அமெரிக்காவில் இரவு விருந்தில் நுழைந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
லாஸ் ஏஞ்சல்ஸ்:

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை பெருகி வருகிறது. துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர கடுமையான சட்ட திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்ற குரல் அங்கு ஓங்கி ஒலித்து வருகிறது.

இந்த நிலையில் அங்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள லாங் பீச் பகுதியில் ஒரு வீட்டில் நேற்று முன்தினம் இரவு ஒரு விருந்து நிகழ்ச்சி நடந்தது.

இந்த விருந்தின்போது அந்த வீட்டுக்குள் நுழைந்த சிலர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அங்கிருந்தவர்கள் வெளியேற முடியாதபடிக்கு சுட்டுத்தள்ளினர்.

இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர். அங்கு துப்பாக்கி குண்டு பாய்ந்து 3 பேர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். 9 பேர் குண்டு பாய்ந்து தரையில் சரிந்து கிடந்தனர். அவர்கள் 9 பேரையும் மீட்பு படையினர் மீட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலியானவர்களும் சரி, துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தவர்களும் சரி அனைவரும் 20 வயது கடந்த வாலிபர்கள் என தகவல்கள் கூறுகின்றன.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்து உடனடியாக தெரிய வரவில்லை. லாங்பீச் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News