புதுச்சேரி

புதுச்சேரியில் சொகுசு படகுகள் தயாரிப்பு அந்தமான், மாலத்தீவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது

Published On 2024-05-05 05:09 GMT   |   Update On 2024-05-05 05:09 GMT
  • பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப படகின் விலைகள் உள்ளன.
  • தற்போது அந்தமான், மாலத்தீவு உள்ளிட்ட கடல் சுற்றுலா பகுதிகளில் இந்த படகிற்கான தேவை அதிகளவு உள்ளது.

புதுச்சேரி:

புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்ட கண்டெய்னர்கள் டெலிவரி செய்யும் பணி நடந்து வந்தது.

திடீரென இந்த சேவை நிறுத்தப்பட்டு, இதற்கு பயன்படுத்தப்பட்ட ஹோப்செவன் கப்பல் பயன்பாடின்றி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் துறைமுக வளாகத்தில் பின்புறம் தனியார் நிறுவனம் சொகுசு படகுகளை தயார் செய்து அந்தமான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறது.

அதிகபட்சமாக 'செமி சம்மெரின் பாட்டம் கிளாஸ்' என்ற சொகுசு படகுகளை தயாரிக்கிறது.

நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்தால் எப்படி ஆழ்கடல் அதிசயங்களை காணமுடியுமோ அதே போல் இந்த படகில் கடலில் பயணம் செய்யும் போது படகில் மூழ்கி இருக்கும் கீழ் பகுதியில் பயணிகள் அமர்ந்து கொண்டு ஆழ்கடலை ரசித்தவாறே பயணிக்கலாம்.

இதற்காக படகின் கீழ், பகுதியில் ஏ.சி. வசதியுடன் பயணிகள் அமர்ந்து கொண்டு கண்ணாடி வழியே பார்க்கும் வகையில், இந்த படகு தயார் செய்யப்படுகிறது. 12 மீட்டர் நீளம் 2.9 மீட்டர் அகலத்தில் 16 பேர் பயணம் செய்யும் வகையில் ஒரு படகு தயாரிக்க ரூ.70 லட்சம் ஆகிறது.

பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப படகின் விலைகள் உள்ளன. தற்போது அந்தமான், மாலத்தீவு உள்ளிட்ட கடல் சுற்றுலா பகுதிகளில் இந்த படகிற்கான தேவை அதிகளவு உள்ளது. அதன் காரணமாக புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் அந்தமானிற்கு கொண்டு செல்ல 4 செமிசம்மெரின் பாட்டம் கிளாஸ் படகுகள் வேகமாக தயார் செய்யப்பட்டு வருகிறது.

மாலத்தீவிற்கும் இதே போன்று படகுகள் விரைவில் தயார் செய்து அனுப்பப்படுகிறது. சொகுசு படகுகள் தயார் செய்யும் மையமாக புதுச்சேரி மாறி வருகிறது.

Tags:    

Similar News