புதுச்சேரி அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்: முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
- காலி பணியிடங்கள் அத்தனையும் அரசு நிரப்பி வருகிறது.
- அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.
விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினர். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
பள்ளி கல்வி சிறந்த முறையில் இருக்க வேண்டும் என்றால் ஆசிரியர்கள் அவசியம். அதற்காக காலி பணியிடங்கள் அத்தனையும் அரசு நிரப்பி வருகிறது.
ஏழை மாணவர்களும் மருத்துவக் கல்லூரியில் படிக்க முடியும் என்ற நிலையை புதுச்சேரி அரசு உருவாக்கி அதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டு 37 பேர் மருத்துவ கல்லூரியில் படிக்கின்றனர். இது மட்டுமின்றி என்ஜினீயர், செவிலியர் கல்லூரி என அனைத்து கல்லூரியிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு கல்லூரியில் பட்டப்படிப்பு முடிக்கும் வாய்ப்பை உருவாக்கி உள்ளோம்.
இப்போது மாணவர்கள் புதிய தொழிற்நுட்பம் மூலம் அனைத்தையும் தெரிந்து கொள்ளும் வகையில் 6-ம் வகுப்பில் இருந்து லேப்டாப் கொடுத்தால் எளிதாக இருக்கும் என என்னிடம் கேட்டனர்.
எனவே அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பில் இருந்து மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.