null
மாநில அந்தஸ்துக்காக சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க தயார் : புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
- தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றார் எதிர்க்கட்சி தலைவர் சிவா.
- மாநில அந்தஸ்து கேட்டு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசை வலியுறுத்துவோம் ரங்கசாமி பேச்சு.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் அரசின் கூடுதல் செலவினங்களுக்கான விவாதம் நடந்தது. அப்போது எதிர்கட்சி தலைவர் சிவா குறுக்கிட்டு, புதுவை எங்கும் போராட்டம் நடக்கிறது.
ஒப்பந்த ஆசிரியர்கள், தற்காலிக பொதுப்பணி ஊழியர்கள், தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் என அனைவரும் போராட்டம் நடத்துகின்றனர்.
இந்த போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டு வரவில்லை. இரட்டை என்ஜின் அரசு என கூறினீர்கள். தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. இலவசங்களை மட்டும் மக்களுக்கு அளித்துள்ளீர்கள். வளர்ச்சிக்கான திட்டங்களான மேம்பால பணி தொடங்கவில்லை. விமான நிலைய விரிவாக்கம் செய்யவில்லை.
மாநில அந்தஸ்துக்காக டெல்லிக்கு அழைத்து செல்வோம் என கூறினீர்கள். ஆனால் செய்யவில்லை. உங்களை நம்பி மக்கள் வாக்களித்தனர். மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிக்க தயாரா? என கேள்வி எழுப்பினார்.
அப்போது முதல்- அமைச்சர் ரங்கசாமி குறுக்கிட்டு, தேர்தலை புறக்கணிக்க நாங்கள் தயாராக உள்ளோம். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தயார்தான். நீங்கள் தயாரா? மாநில அந்தஸ்து கேட்டு மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசை வலியுறுத்தி அனுப்புவோம் என்றார்.
இத்துடன் விவாதம் முடிந்தது. கூட்டத்தின் இறுதியில் எதிர்கட்சி தலைவர் சிவா பேசும்போது, ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து தேர்தலை புறக்கணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து பேசி முடிவு செய்யுங்கள் என கூறினார்.