புதுச்சேரி

பிரதமர் மோடி மார்ச் 1-ந்தேதி புதுச்சேரி வருகை: முதல்-அமைச்சர் ரங்கசாமி தகவல்

Published On 2026-02-12 09:54 IST   |   Update On 2026-02-12 09:54:00 IST
  • பிரதமர் தொடங்கி வைக்க வேண்டிய பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகிறது.
  • வில்லியனூரில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம், பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை எப்போது என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் தற்போதைய என்.ஆர். காங்.,-பா.ஜ.க. கூட்டணி தொடர்வது உறுதியாகி உள்ளது. அதையொட்டி தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பிரதமர் மோடியை வரவழைத்து, அரசு விழா நடத்தி மத்திய, மாநில அரசுகள் சார்பில் மெகா திட்டங்களை அறிவிக்க பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்தனர்.

அதன்படி இன்று 12-ந்தேதி பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 14, 16 மற்றும் 21-ந் தேதிகள் அறிவிக்கப்பட்டது. பிரதமர் புதுச்சேரிக்கு வரும் தேதி உறுதி செய்யாத நிலையிலும், பிரதமர் தொடங்கி வைக்க வேண்டிய பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வில்லியனூரில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம், பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை எப்போது என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி புதுச்சேரி வருவார் என தெரிவித்தார்.

பிரதமர் மோடி புதுச்சேரி வருகை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது வருகைக்கு முன்பாக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேசி முடிவு செய்து பிரதமர் பங்கேற்கும் விழா மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களை பங்கேற்க வைப்பதற்கான பணிகளை பா.ஜ.க. மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் துரிதப்படுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News