புதுச்சேரி

கூட்டணியை தேடும் த.வெ.க.- புதுச்சேரியில் விசில் சத்தம் ஒலிக்குமா?

Published On 2026-02-19 10:04 IST   |   Update On 2026-02-19 10:04:00 IST
  • தமிழகத்தில் 1967, 1977-ல் நடந்த மாற்றம் 2026-ல் நடக்கும் என த.வெ.க. தலைவர் விஜய் கூறி வருகிறார்.
  • சிறிய மாநிலமான புதுச்சேரியில் தொகுதி தோறும் மக்கள் செல்வாக்குள்ள பிரபலங்கள் உள்ளனர்.

புதுச்சேரி:

தமிழகத்தில் நடிகர் விஜய்யின் த.வெ.க. கூட்டணிக்காக காத்திருக்கிறது. த.வெ.க.வை காட்டி காங்கிரஸ் தி.மு.க.வுடன் தனது பேரத்தை வலிமைப்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் தனித்து விடப்பட்ட நிலையில் த.வெ.க. உள்ளது.

புதுச்சேரியை பொறுத்தவரை ஆளும் என்.ஆர்.காங்கிரசுக்கும், த.வெ.க.வுக்கும் கூட்டணி ஏற்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு ஏற்ப த.வெ.க. பொதுச்செயலளர் புஸ்சி ஆனந்த் மூலம் முதல்-அமைச்சர் ரங்கசாமி, நடிகர் விஜய் இடையே நட்புறவு இருந்தது.

ஆனாலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மத்திய அரசின் உதவியின்றி நிர்வாகத்தை செயல்படுத்துவது கடினம். இதையெல்லாம் உணர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பா.ஜ.க.வுடன் கூட்டணியை உறுதி செய்துவிட்டார்.

இந்த நிலையில் தமிழகத்தை போல புதுச்சேரியிலும் விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் அளித்துள்ளது. இதையடுத்து புதுவைக்கு 30 பேர் கொண்ட நிர்வாக குழு அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கட்சிகள் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கலாம்.

சிறிய மாநிலமான புதுச்சேரியில் தொகுதி தோறும் மக்கள் செல்வாக்குள்ள பிரபலங்கள் உள்ளனர். புதுச்சேரி மக்களும் அரசியல் கட்சிகளை தாண்டி அவர்களுக்கு வாக்களிப்பது வழக்கம். இதனால் தமிழகத்தை போல புதுச்சேரியில் விஜய்யை மட்டும் முன்னிறுத்தி அரசியல் கட்சியாக த.வெ.க. காலூன்றுவது கடினம்.

தமிழகத்தில் 1967, 1977-ல் நடந்த மாற்றம் 2026-ல் நடக்கும் என த.வெ.க. தலைவர் விஜய் கூறி வருகிறார். தமிழகத்தில் 1967-ல் தி.மு.க. முதலமைச்சராக அண்ணா துரையும், 1977-ல் அ.தி.மு.க. முதலமைச்சராக எம்.ஜி.ஆரும் ஆட்சியில் அமர்ந்தனர். எம்.ஜி.ஆர். தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் முன்பே 1972, 1974 என 2 முறை புதுச்சேரியில் அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்தது.

அதுபோன்ற மாற்றம் ஏற்பட புதுச்சேரியிலும் த.வெ.க. காலூன்ற விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் புதுச்சேரியிலும் விசில் சத்தம் ஒலிக்கும்.

Tags:    

Similar News