புதுச்சேரி

தமிழகத்தில் த.வெ.க.வுடன் என்.ஆர்.காங். கூட்டணி?- ரங்கசாமி முடிவால் பா.ஜ.க. அதிர்ச்சி

Published On 2026-02-18 13:31 IST   |   Update On 2026-02-18 13:31:00 IST
  • கடந்த தேர்தலில் போட்டியிட்ட 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட உள்ளது.
  • புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம்பெறும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

வருகிற சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடர்கிறது. இதை கடந்த 14-ந்தேதி காரைக்காலுக்கு வந்த மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்த பின் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட உள்ளது. ஒரு சில தொகுதிகளை மாற்றம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, புதுவைக்கு பிரதமர் வருகை, தொகுதி பங்கீடு குறித்து புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியை இன்று திலாசுப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார். சுமார் 5 நிமிடங்கள்தான் இந்த சந்திப்பு நடந்தது.

இதன் பின்னர் சுரானா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சந்திப்பின்போது, முதல்-அமைச்சர் ரங்கசாமி, புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம்பெறும். அதேநேரத்தில் தமிழகத்தில் த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கட்சி தலைமையிடம் தகவலை தெரிவிப்பதாக கூறிவிட்டு, நிர்மல் குமார் சுரானா வெளியேறியுள்ளார்.

புதுவையையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு செல்வாக்கு உள்ளது. இந்த பகுதிகளில் ரங்கசாமியின் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

ஏற்கனவே தமிழகத்திலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ் கால் பதிக்கும் என ரங்கசாமி கூறியிருந்தார். அந்த மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அடிக்கடி சந்தித்து வருகின்றனர்.

இதனடிப்படையில் தமிழகத்தில் த.வெ.க.வுடன் கூட்டணி என முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார். ஏற்கனவே மாநிலத்துக்கு, மாநிலம் கம்யூனிஸ்ட்டு கட்சிகள் கூட்டணி அமைப்பார்கள்.

இதுபோல கடந்த 2001 சட்டமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் அதிமுக தலைமையில் காங்கிரஸ், பா.ம.க., கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.

ஆனால் புதுவையில் அ.தி.மு.க., பா.ம.க.வுடன் தனி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. காங்கிரஸ் தனியாக போட்டியிட்டது.

அதுபோல தற்போது புதுவைக்கு ஒரு கூட்டணியும், தமிழகத்துக்கு தனி கூட்டணி என்ற முடிவை ரங்கசாமி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News