புதுச்சேரி

இனி கேரளா அல்ல 'கேரளம்'... மலையாளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி

Published On 2026-02-25 06:43 IST   |   Update On 2026-02-25 06:43:00 IST
  • மலையாளத்தில் மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என்றுதான் உள்ளது.
  • ஆங்கிலத்திலும் இந்திய அரசியலமைப்பிலும் 'கேரளா' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு பினராயி விஜயன் தலைமையிலான கேரள சட்டப்பேரவையில் இந்த பெயர் மாற்றத்திற்கான தீர்மானம் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த மசோதாவிற்கு இன்று நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மலையாளத்தில் மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என்றுதான் உள்ளது. ஆனால், ஆங்கிலத்திலும் இந்திய அரசியலமைப்பிலும் 'கேரளா' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை அனைத்து மொழிகளிலும் 'கேரளம்' என்றே அழைக்க வேண்டும் என அம்மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அமைச்சரவையின் ஒப்புதலை தொடர்ந்து, அரசியலமைப்பின் பிரிவு 3 இன் கீழ் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதன்பின் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்படும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் பெயர் நடைமுறைக்கு வரும்.

இந்நிலையில், 'கேரளா'வை 'கேரளம்' என்று பெயர் மாற்றுவது தொடர்பாக பிரதமர் மோடி மலையாளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவில் கேரளா மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இது கேரள மாநில மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது. இது நமது சிறந்த கலாச்சாரத்துடனான பிணைப்பை வலுப்படுத்துவதற்கான நமது முயற்சிகளின் ஒரு பகுதியாகும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News